புதன், 21 பிப்ரவரி, 2018

தேவதாசி வரலாறு

தேவதாசி வரலாறு -19
அருள் சத்தியநாதன்
இ ந்தியாவிலேயே விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயமாகும். இந்தக் கோவிலில் மட்டும் குறிப்பிட்ட சில பூஜைகளை பெண்கள்தான் செய்ய வேண்டும். பூரி ஜெகந்நாதருக்கு செய்யப்படும் 36 வகை பூஜைகளில் பெண்கள் பங்கேற்காமல் அந்த பூஜைகளைச் செய்யக்கூடாது என்பது மன்னர் காலத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஏனெனில் அவர்கள் கடவுளின் மனைவிகள். விசேஷ நாட்களில் இரவு நேரத்தில் கடவுள் உறங்கப் போகும்போது நடனமாடி பாட்டுப் பாடுவதும் தேவதாசிகளின் முக்கிய பணியாகும். திருமணமாகாத கன்னிப் பெண்கள்தான் இதைச் செய்ய வேண்டுமென்பதால் மன்னர்கள் காலத்தில் இந்த தேவதாசி முறை தோன்றியது. கடவுளுக்குச் சேவை செய்வதை பெரும் பாக்கியமாகக் கருதியவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை இங்கு கொண்டுவந்துவிட்டனர்.
இந்தியாவின் பிற பகுதிகளில் தேவதாசிகளைப் பற்றி தவறான எண்ணம் இருந்தாலும் பூரியைப் பொறுத்தவரை அவர்கள் கடவுளின் மனைவிகள். அவர்களுக்கு என தனி மரியாதையும் மதிப்பும் உண்டு. திருமணமான பெண்கள், இவர்கள் நிரந்தரமான சுமங்கலிகள் என்பதால் இவர்களிடம் வந்து ஆசி வாங்குவதுண்டு. விழாக் காலங்களிலும் தினசரி பூஜையின்போதும், பூரி ரத யாத்திரையின்போதும், பதினான்கு ஆண்டுகளுக்கொருமுறை மரத்தினால் வடிவமைக்கப்பட்ட கடவுள் சிலைகளை மாற்றி புதிய சிலைகள் அமைக்கும் போதும், இவர்கள் பக்திப் பாடல்களைப் பாடி ஆடி மகிழ்விப்பதுண்டு. கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினத்திற்குப் பின் நடக்கும் நந்தா உற்சவத்தின்போது, தன் வளர்ப்பு பெற்றோர்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருவதாக ஓர் ஐதீகம். அந்த சமயத்தில் தேவதாசிகளின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். அரச குடும்பத்தினரின் மேற்பார்வையில் கோவில் நிர்வாகம் இருந்தவரை தேவதாசிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவந்தனர். பின்னர் படிப்படியாக கடவுளை மணக்கும் பெண்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
தகவல் அறியும் உரிமைப்படி நூறாண்டுகளுக்கு முன்பு பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் 25 தேவதாசிகள் இருந்ததாகவும், 1956 ஆம் ஆண்டு ஒடிசா கெஸட் பதிவின்படி ஒன்பது பேராகவும், 1980 ஆம் ஆண்டில் ஹரிப்ரியா, கோகிலா பிரவா, பராஸ்மணி, சஷிமணி ஆகிய நால்வர் மட்டுமே இருப்பதாகவும் தெரிய வந்தது. அவர்களில் சஷிமணி தேவி (89) பராஸ்மணி தேவி (78) ஆகிய இருவர் மட்டுமே 2012ம் ஆண்டில் உயிரோடிருந்தனர்.
பூரி ஜெகந்நாதர் இன்றும் எங்களுடன் வாழ்ந்து வருகிறார் என்று கூறும் இவர்கள் இருவரும் கடவுளின் கடைசி மனைவியாக கருதப்படுகின்றனர். இவர்களில் சஷிமணி தேவி, தன் பெற்றோர்கள் முகமே மறந்துவிட்டது என்கிறார்.
"எனக்கு மூன்று வயதாகும்போது பெற்றோர்கள் என்னை தேவதாசி லாவண்யா தேவியிடம் ஒப்படைத்ததாகக் கேள்விப்பட்டேன். அவரது கண்காணிப்பில் பயிற்சி பெற்றேன். நாம் பூரி ஜெகந்நாதருக்காகவே பிறந்தவர் என்று கூறி எட்டு வயதில் என்னை அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு 'சாரி பந்தா' என்று பெயர். சிறுவயதிலிருந்தே கோவில் பணிகளில் ஈடுபட்டு வந்தேன். ஒருமுறை என் கனவில் வந்த ஜெகந்நாதர், 'நம்முடைய உறவு மற்ற திருமணங்களைப் போன்றதல்ல. நாம் இருவரும் அழிவற்ற அன்பால் இணைக்கப்பட்டிருக்கிறோம்…' என்று சொன்னது இன்னமும் என் நினைவில் உள்ளது…" என்கிறார்.
கடவுளின் கடைசி
இரண்டு'மனைவி'கள்'
பராஸ்மணி தேவி
சஷிமணி தேவி
TUESDAY, MARCH 29, 2016
மேலும் வாசிக்க.. »
Posted by Mani Srikanthan at 8:26 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -18
அருள் சத்தியநாதன்
'அ சடர், அவலர், அவகுணர், பேய் நீருணிகள், அற்பர், ஆசைக்காரிகள், இடும்பிகள், ஊத்தை நாறிகள், கசுமாலர், கபடிகள், கீலிகள், குருட்டு மட்டைகள், கொடியவர்கள், சவலைகள், சூதுகாரிகள், குறைகாரிகள், நாணவீணிகள், நீலிகள், பழிகாரிகள், பாவிகள், மாயக்காரிகள், மிண்டிகள், முகடிகள், மோசக்காரிகள், மோக விகாரிகள், வஞ்சியர், வன்கணர், மூதேவிகள்…'
அருணகிரிநாதர் பழித்த பரத்தையர்
SUNDAY, MARCH 6, 2016
மேலும் வாசிக்க.. »
Posted by Mani Srikanthan at 8:26 PM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -17
அருள் சத்தியநாதன்
த மிழ் நாட்டில் 1920களில் எல்லாம் தேவதாசி முறைக்கு பரந்த அளவில் ஆதரவு இருந்தது. அக்கால கட்டத்தில் கேரளா, கர்னாடகம் என்பனவெல்லாம் 'மதராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரிலான அகண்ட மாநிலமாக இருந்தது. இந்த மதராஸ் மாநிலத்துக்கு ஒரு கவர்னரும் இருந்தார். இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு தென்னிந்தியத் தொழிலாளர்கள் தேவையாக இருந்தபோது மதராஸ் பிரசிடென்ஸி கவர்னரிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே தொழிலாளர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய ஆங்கிலேயே ஆட்சியில், தேவதாசி விவகாரம் இந்து மதத்துடன் தொடர்புபட்டதென்று கருதிய மதராஸ் கவர்னர், அந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டார். எனவே அக்காலம் தேவதாசிகளுக்கு சாதகமான காலம். முன்னர் பார்த்தபடி, நரஹரி என்ற நீதிபதி தனது உத்தியோகபூர்வ வாகனத்தில் தன் பரிவாரங்களுடன் பெங்களுர் நாகரத்தினம்மாவின் வீட்டுக்கு போய் வந்தார். இப்படி அவர் போய் வருவதை உயர் அரச அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் நீதிபதி நரஹரியிடம் சொன்னார்கள். அரசு இலட்சணை பொறிக்கப்பட்ட வாகனத்தை அங்கே செல்லும்போது பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவுரையாகும். நாகரத்தினம்மாளின் நடனம், இசை அறிவு, உபசரிப்பு என்பனவற்றில் கிறங்கிப் போய்க் கிடந்த நீதிபதி நரஹரி, மலைப்பாங்கான ஓரிடத்தில் தனி பங்களாவை அமைத்து அங்கே நாகரத்தினத்தை குடியமர்த்தவும் செய்தார்.
இவ்வாறு பிரச்சினை இல்லாமல் தேவதாசியர் வாழ்ந்து வருகையில்தான் முத்துலட்சுமி ரெட்டியின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. 1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழக சட்டசபை மேலவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதன் நியமன உறுப்பினராகவும் துணைத் தலைவருமாக இருந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறையை எதிர்த்து சபையில் உரை நிகழ்த்தினார். பெண்களை சிறுமைப்படுத்தும் இம்முறை தமிழகத்தில் முற்றாகவே ஒழித்துக்கட்டப்பட வேண்டுமென்று ரெட்டி ஆவேசமாகக் குரல் கொடுத்தார். இதுவொன்றும் அவர் திடீரெனப் பேசிய ஒன்றல்ல. அவர் ஏற்கனவே தேவதாசி முறைக்கு எதிராக எழுதியும் பேசியும் வந்தவர். இதனால் உயர்குலத்து ஆண்களும் தமிழ் அரசியல்வாதிகளும் முத்துலட்சுமி மீது ஆத்திரத்தில் இருந்தனர். தமது உரிமைகளில் கை வைப்பதாகக் கருதினர். அன்றைய காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தி தேவதாசி முறை நீடிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்கள் இம்முறை ஒழிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த மசோதா சட்டசபை அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது சத்தியமூர்த்தி இதை எதிர்த்துப் பேசினார், இந்த ஆண்களின் எதிர்ப்பை ஒடுக்கும்முகமாக முத்துலட்சுமி ரெட்டி காரணங்களை முன்வைத்துப் பேசினார். அவர்கள் மசிவதாக இல்லை. இறுதியாக தன் இறுதி அஸ்திரத்தை பிரயோகித்தார்.
சரி, இம்மசோதாவை எதிர்ப்பவர்களை நோக்கி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். இதை எதிர்ப்பவர்கள் தமது ஒரு மகளுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு தேவதாசியாக நேர்ந்துவிடத் தயாரா? ஏனைய பெண்கள் பொட்டுக்கட்டி விடப்பட வேண்டுமென விரும்புகிறவர்கள் தமது மகளுக்கும் அதைச் செய்யத் தயாரா? என்று சட்டசபையில் அவர் கேட்ட கேள்வியே எதிர்ப்பாளர்களின் வாயை அடைத்தது. மசோதா, சட்டமாக சட்டசபையில் நிறைவேறியது.
முத்துலட்சுமி ரெட்டிக்கு தேவதாசிகளின் அவல வாழ்க்கை தொடர்பாக நேரடி சான்றுகளை அளித்து இந்தமுறை ஒழிக்கப்பட்டால்தான் ஏராளமான பெண்களைக் காப்பாற்றி கரைசேர்க்க முடியும் என்பதை எடுத்துக்கூறியவர்தான் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்.
இராமாமிர்தம் அம்மையார் பெரியாரின் சீடர். சுயமரியாதை மேடைகளில் பெண் விடுதலைக்காகவும் தாழ்த்தப்பட்டோரின் எழுச்சிக்காகவும் இடைவிடாது போராடிய ஒரு பெண்மணி.
இவர் இசைவேளாளர் குலத்தில் பிறந்தவர். இசை வேளாளர்குலம் என்பது தமிழகத்தில் இசை வளர்த்த குலம். பிற்படுத்தப்பட்ட சாதியினர் ஆலயங்களில் சேவையாற்றுவது, இசை நடனம் என்பனவற்றை தொழிலாகச் செய்வது இவர்களது சாதி சார்ந்த கடமை. அரசர் காலத்தில் மதிப்பு மரியாதையுடனிருந்த இவர்கள், அந்நியராட்சிக் காலத்தில் தமது செல்வாக்கை இழந்து, சின்னாபின்னமாகினர். இக்குலத்துப் பெண்களே கோவில்களுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்டனர். இப்போது உங்களுக்கு இசைவேளாளர் குலம் பற்றி தெரிந்திருக்கும். வெள்ளையரின் காலனி ஆட்சியில் ஜமீன்தார்கள் மற்றும் பண்ணையர்கள் தமது காமக் கிழத்திகளாக கோவில் பெண்களை வைத்திருந்தனர். இதை இசை வேளாளர்களில் சிலர் எதிர்க்கவும் செய்தனர். சில பெண்கள் தாசியாக வாழ்வதற்கு மறுப்பும் தெரிவித்தனர். ஆனால் சாதித் தொழில், மதக் கட்டுப்பாடு என்பனவற்றை சுட்டிக்காட்டி இதில் இருந்து விலகிச் செல்வது குற்றம் என்றும் மரபாகாது என்றும் சொல்லிச் சொல்லியே தொடர்ந்தும் இப்பெண்களை தேவதாசிகளாக வைத்திருக்கும் கொடுமை தொடர்ந்து கொண்டாடியிருந்தது. எனவே இசைவேளாளர் குலத்தை இந்த இழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில் இராமிர்தம் அம்மையார் உறுதியாக இருந்ததில் ஆச்சரியமிருக்க முடியாது.
இராமிர்தம், 1883ம் ஆண்டு திருவாரூரில் பிறந்தார். பிறந்தது திருவாரூர் ஆனாலும் இவர் வளர்ந்தது எல்லாம் மாயவரத்துக்கு அருகே உள்ள மூவலூர் கிராமத்தில். இதனால் மூவலூர் இராமமிர்தம் என அறியப்பட்டார். சிறுவயது முதல் கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ், ஆங்கிலம், வடமொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்ததோடு பேச்சாற்றல் கொண்டவராகவும் விளங்கினார். சிறுவயதிலேயே சுதந்திரமாக சிந்திக்கப் பழகியிருந்த இவர், தன்னைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்களை வேதனையும் ஆத்திரமுமாக அவதானித்து வந்தார்.
அது தேச விடுதலை போராட்டம் நடந்து கொண்டிருந்த காலம். படித்த பெண்கள் தேச விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டிருந்தனர். இராமாமிர்தத்தையும் விடுதலை வேட்டை விட்டு வைக்கவில்லை. ஆனால் தேச விடுதலையை விட தான் சார்ந்த குலத்தை அடிமைத்தனத்தில் இருந்தும் இழிநிலையில் இருந்தும் மீட்பதே முதல் பணியாக இருக்க வேண்டும் என அவர் எண்ணினார்.
இதைச் செயல்படுத்துவதற்கு அவருக்கு ஒரு அரசியல் பின்புலம் தேவைப்பட்டது. எனவே தன்னைக் காங்கிரஸில் இணைத்துக்கொண்டார். அன்றைய காங்கிரஸில் ஈ.வே.ரா. பெரியார், இராஜாஜி ஆகியோர் தமிழக காங்கிரஸ் பிரமுகர்களாக இருந்தனர். தாசி குல ஒழிப்புக்கு பெரியார் முழு ஆதரவு தந்ததால் ராமாமிர்தத்துக்கு அது பேருதவியாக இருந்தது. அவர் காங்கிரஸ் மேடைகளில் இசைவேளாளர் குலத்துப் பெண்களின் இழிநிலை பற்றி எடுத்துச் சொன்னார். அப்பெண்கள் பலாத்காரமாக பொட்டுக்கட்டி விடப்படுவதையும், குடும்பமும் குடித்தனமுமாக வாழ வேண்டிய பெண்கள் விலைமாதர்களாக மாற்றப்படும் அவலம் சாதி, சமூக நடைமுறை மற்றும் மதத்தின் பெயரால் நடைபெறுவதாக எடுத்துச்சொல்லி மக்கள் மத்தியில் இது தொடர்பாக ஒரு வழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
1925ம் ஆண்டு மயிலாடு துறையில் அம்மையார் இசைவேளாளர் மாநாடொன்றைக் கூட்டினார். இது ஒரு திருப்புமுனை மாநாடாக அமைந்தது. தமிழறிஞர் திரு. வி. க., தந்தை பெரியார் போன்ற முக்கிய பிரமுகர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இதே சமயம் மென்மையான போக்குக் கொண்ட இசைவேளாளர்களை இராமாமிர்தத்தின் இலட்சியத்தின்பால் ஒன்று திரட்டுவது எளிதான பணியாகவும் இருக்கவில்லை.
இம்மாநாட்டின் வெற்றியானது, முத்துலட்சுமி ரெட்டியின் கவனத்தை ஈர்த்தது. பின்னர், தேவதாசி முறையை சட்டரீதியாக ஒழித்துக்கட்டுவதற்கான மன உறுதியை இம்மாநாடே அவருக்கு அளித்தது என்று சொன்னால் மிகையாகாது. இதே சமயம் காஞ்சிபுர காங்கிரஸ் மாநாட்டின் பின்னர் தந்தை பெரியாருக்கும் காங்கிரசுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட, பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார். பெண் விடுதலைக்கு பெரியாரின் தலைமையே மிகப் பொருத்தமானது என்பதை உணர்ந்த இராமாமிர்தம், பெரியாருடன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்.
தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்ட இராமாமிர்தம் அம்மையார் Image
ராமாமிர்தம்
FRIDAY, FEBRUARY 19, 2016
மேலும் வாசிக்க.. »
Posted by Mani Srikanthan at 6:53 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -16
அருள் சத்தியநாதன்
ஒ ரு கால கட்டத்தில், அக்காலத் தேவைகளுக்காக, இந்தியாவின் தென்னகத்தில் கோவில் தேவதாசிகள் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கலாசாரம் இது. இந்த தேவதாசிகள் இரண்டு விதமாக சமூகத்துக்கு காட்சியளித்தார்கள். முதலாவது, சமூகத்தின் கலை பொக்கிஷங்களாக. அரசவை கலைஞர்களுக்கு அப்பால் நர்த்தகிகளாக, இசைக்கலைஞர்களாக, சாஸ்திரிய இசை தெரிந்தவர்களாக இவர்கள் விளங்கினார்கள். இதில் எவருக்கும் எந்த ஆட்சேபணையும் கிடையாது. தேவதாசிகள், கடவுளுக்கு மட்டும் சேவையாற்றும் தாசிகளாக இருந்திருந்தால் அதில் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் திருமணம் செய்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த இந்தப் பெண்களை அவர்கள் பணியாற்றும் கோவிலைச் சேர்ந்தவர்களும், ஊர்ப் பெரியவர்களும், தனவந்தர்களும் தமது காமப் பசிக்கு இவர்களை இரையாக்கிக் கொண்டார்கள்.
எனவே, தேவதாசி ஒழுக்கங்களில் இதுவும் ஒன்றாயிற்று. ஆண்டவனுக்கு என ஒப்படைக்கப்படும் பணம், சொத்துக்கள் என்பனவற்றை எவர் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்ற எண்ணம் இங்கிருந்தே ஊற்றெடுத்திருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவெங்கும் உள்ள பெருங்கோவில்களுக்கான சொத்துகளில் பெரும்பாலானவை வெளியாரினால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆண்டு அனுபவிக்கப்பட்டு வருவதே வழமையாக இருக்கிறது. இப்படித்தான் இந்தப் பெண்களையும், கோவில் சொத்து என்பதால், அவரவர் அனுபவிக்கத் தொடங்கி, விலை மகளிர் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டனர்.
கோவில் பெண்கள் தாசியாகவும் விளங்கியதை அன்றைய தென்னிந்திய சமூகம் ஏற்றுக் கொண்டது. பெண்களும் ஏற்றுக்கொண்டார்கள். கண்ணகி காப்பியத்தை எடுத்துக் கொண்டால் கண்ணகி எரித்திருக்க வேண்டியது தனக்கு போட்டியாக வந்த மாதவியை. ஒரு மனைவியாகவும், இல்லத்தரசியாகவும் விளங்கிய தன்னில் நிறைவுபெறாமல் ஒரு தாசியிடம் புகலிடம் தேடி அங்கேயே விழுந்து கிடந்த கோவலனை எரித்திருக்க வேண்டும். அல்லது தன்னைத்தானே எரித்திருக்க வேண்டும். ஆனால் கண்ணகி அவர்களை குற்றம் சாட்டுகிறாள் இல்லை. அறம் பிழைத்ததற்காக மன்னனைக் குற்றஞ் சாட்டி நீதி கேட்க, மன்னனும் மகாராணியும் அறம் பிழைத்ததற்காக மடிகின்றனர். அதன்பின் மதுரையை எரிக்கிறாள் கண்ணகி. விலை மகளிரிடமும், தேவதாசியினரிடமும் ஆண்கள் சென்று வருவது அன்றைய ஒப்புக்கொள்ளப்பட்ட கலாசாரம் என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
எனவே, இன்றைக்கு 'ரெட் லைட் ஏரியா' இருப்பது போல அன்றைக்கும் 'ரெட் லைட் ஏரியா'க்கள் இருந்திருக்கின்றன. அரசர்களும் சமூகமும் அதை ஆட்சேபிக்கவில்லை. கோவில்களுக்கு பக்கத்திலேயே தேவதாசி குடியிருப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வணிகர்களும், செல்வந்தர்களும் செல்வாக்கு பெற்றவர்களும் அங்கே சென்று வந்தனர். கோவலன் அப்படித்தான் மாதவியிடம் சென்றான். தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் பேசியபோது பிரபல காங்கிரஸ் தலைவரான தீரர் சத்தியமூர்த்தி உட்பட அன்றைய சட்டசபை உறுப்பினர்கள் இதைக் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். இந்து சமய கலாசாரத்தின் ஒரு பகுதியான தேவதாசி முறை தொடர்ந்தும் நீடிக்க வேண்டும் என்றும், இம்முறை ஒழிக்கப்பட்டால் தேவதாசி குலம் தெருவுக்கு வரும் என்றும், ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
அன்றைய தமிழக சட்ட சபையிலும் சரி, டெல்லி பாராளுமன்றத்திலும் சரி படித்த உயர் வகுப்பு உறுப்பினர்களே அங்கம் வகித்தனர். இன்று தலித்துகள் என அறியப்படும் சாதிரீயாக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அரிதாகவே அரசியல் சபைகளில் அங்கம் வகித்தனர். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் எனக் குரல் எழுப்பி, தாழ்த்தப்பட்டவர்களை ஹரியின் (கடவுளின்) சனங்கள் எனப் பொருள்படும்படியான 'ஹரிஜன்' என்ற நாமத்தை வழங்கிய மகாத்மாகாந்தியடிகள் கூட குஜராத் பனியா வகுப்பைச் சேர்ந்தவர். இது வர்த்தக சமூகத்தைக் குறிக்கும் சொல். செல்வந்த குடும்பத்தில் இருந்து வந்தவராக இருந்ததால்தான் அவரால் லண்டனுக்கு சென்று 'பெரிஸ்டர்' பட்டம் பெற முடிந்தது. ஆக, உயர் குடியினர் மட்டுமே அல்லது அவர்களின் குரல்கள் மட்டுமே ஓங்கி ஒலித்த சட்டசபைகளில், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி ஒழிப்பு மசோதா எள்ளலுக்கு ஆளானதில் ஆச்சரியமிருக்க முடியாது.
1929ம் ஆண்டு பெப்ரவரி மாதம் தமிழக சட்டமன்ற மேலவை (செனட்) கூட்டத்தில் அதன் நியமன உறுப்பினராகவும் துணைத் தலைவருமான மருத்துவர் முத்துலட்சுமி அம்மாள் தேவதாசி முறை பெண்களுக்கே இழுக்கு என்றும் அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் பேசினார். ஆனால் அவருக்கு ஆதரவு கிட்டவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் அவரைக் கடுமையாக எதிர்த்துப் பேசினர். அச்சமயத்தில் அவருக்கு திரு. வி. க. தந்தை பெரியார் போன்றவர்களே வெளியில் இருந்து தமது ஆதரவை வழங்கி வந்தனர். உயர்குடி தமிழர்கள், தேவதாசி ஒழிப்பு என்பது ஆண்களின் கௌரவத்துக்கும் சுதந்திரத்துக்கும் ஒரு இழுக்கு என்றே கருதினர்.
ஏனெனில், ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டபடி, 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்புச் சட்டத்துக்கான பிரேரனையை தாக்கல் செய்யும் யோசனை இந்த உயர்குடி மக்களவை உறுப்பினர்களால் முடிந்தவரை தாமதப்படுத்தப்பட்டு, 1947ம் ஆண்டு நவம்பர் 27ம் திகதியே சென்னை சட்டசபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது. கோவிலுக்கு பெண்களை அர்ப்பணிப்பதும் கோவில்களில் தேவதாசிகளினால் கும்ப ஆராத்தி எடுப்பதும் தடை செய்யப்படுவதாக அந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் 1927ம் ஆண்டில் இருந்து தேவதாசி முறையை எதிர்க்கும் இயக்கம் தோன்றி படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தது. 1934 இல் பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் முறைக்குத் தடைவிதித்து மும்பை சட்டசபை சட்டம் இயற்றியது. 1937 இல் சென்னை மாகாண சட்ட சபையிலும் தேவதாசி தடை செய்யும் மசோதா அறிமுகமானது. 1939இல் இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பமானதால் இம்மசோதா கிடப்பில் போடப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சட்டசபையில் பிரேரணை கொண்டுவரப்பட்ட போதிலும், மத சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை என்று அன்றைய ஆங்கில அரசு எடுத்த முடிவின் பிரகாரம் மேல் நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
ஏற்கனவே 1909 ஆம் ஆண்டு மைசூர் அரசு, தனக்குக் கீழ் இருந்த கோவில்களில் தேவதாசிகளைப் பணியமர்த்தும் வழக்கத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கையை எடுத்தது. டில்லி மத்திய சட்டசபையில் தேவதாசி முறை பற்றிய விவாதம் நடந்தபோது சென்னைப் பிரதிநிதியாரை வி. ராமதாஸ் பந்துலு, வயதுக்கு வராத பெண்களை பொட்டுக் கட்டும் வழக்கம் தடை செய்யப்பட வேண்டும் என்றும் ஆனால், கோவில் நிலங்களை அரசு எடுத்துக் கொண்டு தேவதாசிகளின் சேவைகளுக்காக அவர்களுக்கு கோவில் நிலங்களை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அளித்தால் தேவதாசிகள் கோவில் பணிகளை நிறுத்திவிட்டு நிலங்களில் பாடுபடப் போய்விடுவார்கள் என்றும் பரிந்துரை செய்தார். அதாவது எப்படியாவது தேவதாசிகள் முறை தொடர வேண்டும் என்பதே உயர் சாதியினரின் விருப்பமாக இருந்தது. அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த எஸ். ஆர். தாஸ், வயதுக்கு வராத சிறுமியரை கோவில்களுக்குக் கொடுப்பதை இந்திய அரசு தடுக்கும் என்றும் ஆனால் தேவதாசி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக இல்லை என்றும் பதிலளித்தார்.
இதுதான் அன்றைய ஆண் அரசியல்வாதிகளின் மனநிலை.
இந்தப் பின்னணியில்தான் 1926 இல் சென்னை சட்ட மன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி நியமன அங்கத்தவரானார். ஒரு பெண் சென்னை சட்டசபையில் அங்கத்தவராவது அதுவே முதல் தடவை. இவர் ஒரு தேவதாசியின் மகள் என்பது பிரபலம் அடையாத ஒரு உண்மை. இந்திய மத்திய அரசு தேவதாசி விடயத்தில் கை கழுவிய பின்னர், பெண்களை கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கத்துக்கு சென்னை மாநிலத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் தீர்மானித்தார். முத்துலட்சுமி ரெட்டி இவ்வழக்கத்தை ஒழிக்கத் தீர்மானித்திருக்கிறார் என்பது தெரிந்ததும் தேவதாசிகள் ஒன்றிணைந்தனர். வீணை தனம்மாள் வீட்டிலும் வேறு சில இடங்களிலும் ஆலோசனைகள் நடந்தன. இம்முயற்சிகளுக்கு செல்வாக்கு மிக்க தேவதாசியான நாகரத்தினம் அம்மாளே தலைமை வகித்தார்.
தேவதாசி வழக்கத்தை ஒழித்துக்கட்டிய
முத்துலட்சுமி ரெட்டி
இளமையில்
முத்துலட்சுமி ரெட்டி
WEDNESDAY, JANUARY 20, 2016
மேலும் வாசிக்க.. »
Posted by Mani Srikanthan at 6:31 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -15
அருள் சத்தியநாதன்
இ ன்று வீணை என்ற இசைக்கருவி, தெய்வீகத்தன்மை கொண்ட வாத்தியமாகவும் அதை இசைப்போர் கௌரவத்துக்குரியவராகவும் மதிக்கப்படுவதற்கு வீணை தனம்மாளே காரணம் என்பது பலரும் அறியாதது.
வீணை தமிழரின் பாரம்பரிய இசை வடிவம். பழைமையான தமிழ் இசைக்கருவியான யாழின் இன்னொரு பரிமாணமே வீணை. சாதாரணமாக, 10ம் நூற்றாண்டின் பின்னரேயே வீணை இன்றைய வடிவத்தைப் பெற்றது. அதன் பின்னரே கலைகளின் வடிவமாகக் கருதப்பட்ட வீணை, சரஸ்வதியின் கைகளில் தவழ்வதாக ஓவியங்கள் மற்றும் சிற்பங்களில் இடம்பிடித்தது. வீணைக்கு இப்படி ஒரு மரியாதை இருந்தாலும் அக்காலத்தில் வீணையை இசைப்பவர்கள் தேவதாசிகளாகவே இருந்தனர். அவர்களிடமே கலைகள் வசப்பட்டிருந்தன. பின்னர் பரதமாக மாற்றம் பெற்ற சதிராட்டம் தேவதாசிகளின் நடனம். வாய்ப்பாட்டும் அவர்களினாலேயே பேணப்பட்டு வந்தது. கோவில்களில் ஆடும்போது அது சின்ன மேளம் எனவும் திருமண வைபவங்களில் ஆடும்போது சதிராட்டம் எனவும் இந்நடனம் அழைக்கப்பட்டது. தேவதாசி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் குரல் வலுவடையத் தொடங்கிய போது தேவதாசிகளின் சதிராட்டம் பரதநாட்டியமாக உருப்பெறத் தொடங்கியது.
சதிராட்டத்தை பரதமாக மாற்றிய ருக்மணி அருண்டேல்
MONDAY, NOVEMBER 30, 2015
Posted by Mani Srikanthan at 7:08 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -14
பொ ட்டுக் கட்டும் சடங்கை வீட்டிலேயே நடத்த விரும்பும் குடும்பத்தினர் முதலில் ஒரு நல்ல நாளைத் தெரிவு செய்வார்கள். அன்றைய தினம் வீட்டைக் கழுவி அலங்கரிப்பார்கள். ஒரு திரிசூலத்தை எடுத்து அதற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து அலங்கரித்து தாலியையும் திரிசூலத்திலேயே தொங்க விட்டுவிடுவார்கள். இந்தத் திரிசூலம்தான் மணமகன். அதாவது தெய்வத்தின் சார்பாக தாலி கட்டும் மணமகன். சடங்கு ஆரம்பமானதும் சாமி கும்பிடுதல், பெரியோரை வணங்குதல் போன்ற சம்பிரதாய சடங்குகள் முடிவடைந்ததும் அக்குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் தாலியை எடுத்து அக்குடும்பத்தின் முக்கியமான ஒரு பெண்மணியிடம் அளிப்பார். அப்பெண் தெய்வத்தின் சார்ப்பாக அச்சிறுமியின் கழுத்தில் அணிவிப்பார்.
இத்துடன் பொட்டுக்கட்டும் சடங்கு நிறைவு பெறும். அக்குடும்பம் தனது பிள்ளைகளில் ஒருவரை இறை பணிக்காக கோவிலுக்கு அர்ப்பணித்து விட்டதாக ஊராருக்கு இதன்மூலம் அறிவிக்கிறது என்று இச்சடங்கை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு ஊருக்கு தமது பெண் பிள்ளை பற்றி அறிவிக்கும் இன்னொரு சடங்காக, சிறுமியர் வயதுக்கு வந்ததும் எடுக்கப்படும் பூப்புனித நீராட்டு விழாவையும் குறிப்பிடலாம்.
'எங்கள் வீட்டில் பிள்ளைத்தாச்சியாக ஆகக்கூடிய ஒரு பெண் இருக்கிறாள்' என்பதை ஊருக்கு சொல்வதே இச்சடங்கின் அடிப்படை அம்சமாகும். அன்றைய கால கட்டத்தில் சந்ததி விருத்தி ஒரு முக்கிய விடயமாக இருந்தது. பெண்ணுக்கான முதல் கடமை பிள்ளைகளைப் பெற்று வளர்ப்பதாக இருந்தது. எப்போது வேண்டுமானாலும் யுத்தம் நடக்கலாம் என்ற காலம் அது. தமிழ்நாட்டில் அரசர்கள் எப்போதும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.
குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் எப்போதும் சண்டை செய்து வந்தார்கள். உலக வங்கியோ, சர்வதேச நாணய சபையோ அல்லது வங்கிகளோ இல்லாத காலம் அது. அன்று நிலவிய பொருளாதாரம் வேறு வகையானது. அதை யுத்த பொருளாதாரம் என்றே அழைக்க வேண்டும். ஒரு நாட்டு மன்னன் இன்னொரு நாட்டு மன்னன் மீது போர்ப் பிரகடனம் விடுத்து போருக்குச் செல்வான். போரில் வெற்றி கொண்ட மன்னன் அந்நாட்டின் கஜானாவை சூறையாடுவான். கால் நடைகளையும், குதிரைகளையும் அங்கே சேர்த்து வைக்கப்பட்டிருந்த தானியங்களையும் கைப்பற்றித் தனது நாட்டுக்குக் கொண்டு வருவான். திடகாத்திரமான ஆண்கள் அடிமைகளாக்கப்படுவார்கள். பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழகிய, எடுப்பான பெண்கள் அரசரின் அந்தப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஏனைய பெண்களில் பலர் சேனாதிபதிகளின் இச்சைக் கிழத்திகைளாக்கப்படுவார்கள். ஏனையோர் அடிமைப் பெண்களாக வென்ற தேசத்துக்கு இட்டுச் செல்லப்படுவார்கள்.
இதுதான் அன்றைய யுத்தப் பொருளாதாரம். அண்டை நாடுகளைச் சூறையாடுவதன் மூலம் தமது நாட்டை வளம் கொழிக்கச் செய்வதே யுத்தப் பொருளாதாரம். இதனால் தமிழகமெங்கும், இந்திய பெரு நிலப்பரப்பெங்கும் ஓயாத யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. யுத்தம் மகிமைப்படுத்தப்பட்டது. யுத்தத்தில் வெல்வதே வீரம் எனப் பேசப்பட்டது. யுத்தத்தில் போராடுவதற்கென சமூகங்கள் உருவாக்கப்பட்டன. 'வீர மறவர்கள்' என்று தமிழில் அழைப்பார்கள். சங்கப் பாடல்களை எடுத்தோமானால் இந்த யுத்தம் எப்படி எல்லாம் மகிமைப் படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். களத்தில் வீழ்ந்தவன் நெஞ்சில் காயப்பட்டவனாக இருந்தால் அவன் வீரனாம். முதுகில் காயம் பட்டவனாக வீழ்ந்திருந்தால் அதைப் பார்க்க நேர்ந்தால், இந்தக் கோழையையா நான் பெற்றெடுத்தேன்? என்று கலங்கும் தாய், தனக்கேற்பட்ட களங்கம் போக்குவதற்காக தன் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவாளாம்!
நம் நாட்டில் உள்நாட்டுப் போர் நிகழ்ந்தபோது சிங்கள மக்களையும் சிங்களத் தாய்மார்களையும் யுத்தத்தின்பால் ஈடுபாடு கொள்ளவும் படைக்கு ஆள் திரட்டவும் அன்றைய அரசுகள் பல விளம்பர உத்திகளைக் கையாண்டன. சங்கப் பாடல்களில் காணப்படும் போர் மகிமைப்படுத்தல்களுடன் ஒப்பிடும்போது இந்த உத்திகள் வெறும் தூசு என்றுதான் சொல்ல வேண்டும். இதே சமயம் இந்த சங்ககால கதைகளை எல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலிகளால் சுலபமாக உசுப்பேற்ற முடிந்ததையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
பெரும் படுகொலைகளும், சமூக, பொருளாதார அழிப்புகளும் யுத்த தர்மம் என்ற பெயரிலும், அது ஒரு பொருளாதாரமாகவும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இவ்விதமே அறியப்பட்டது. இதனால்தான் உலகெங்கும் கிரேக்க, ரோம, அராபிய பேரரசுகள் எழ முடிந்தது.
இந்த யுத்தம் காதலுடன் தொடர்புபடுகிறது. இதனால்தான் சங்க இலக்கியங்கள் போருடன் காதலையும் மகிமைப்படுத்தின. போரையும் காதலையும் மகிமைப்படுத்தாத பௌத்தமும் சமணமும் உலகப் பெரு சமயங்களாக வளர முடியவில்லை என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். கள்ளக் காதலும் களவொழுக்கமாக அங்கீகாரம் பெற்றது. ஏனெனில், பெண்கள் வயதுக்கு வந்ததும் ஆணுடன் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. பிறக்கும் பிள்ளைகளில் ஆண் விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு அனுப்பப்பட்டான். போருக்கான மற்றும் விவசாயத்துக்கான தளவாடங்களை செய்தல் இன்னொரு முக்கிய பணி. போர் வரும்போது படையில் சேர்ந்து ஆண்கள் போரிடச் சென்றார்கள். போர் ஒரு அறமாக சொல்லி வளர்க்கப்பட்டதால் ஆண்கள் போர்களில் உற்சாகமாகவே கலந்து கொண்டிருக்க வேண்டும். இப்போதும் கூட சண்டையிடுவது ஒரு அறமாகவே போதிக்கப்படுகிறது. உதாரணத்துக்கு இந்தத் தற்கொலைப் போராளிகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாயைகளை உருவாக்கி அவற்றுக்காகத் தாராளமாக உயிர்விடலாம் என்று கோட்பாடுகள் இந்த அரசியல் இயக்கங்களாலும் மதங்களாலும் உலவவிடப்படுவதும் அவற்றின் பேரில் ஈசல்களாக இளைஞர்கள் உயிர்விடுவதும் இந்த இணய யுகத்திலும் நடக்கின்றபோது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எவ்வளவு சாத்தியமானதாக இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பூப்புனித நீராட்டு விழாவுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் இப்பின்னணியில் இருந்தே பார்க்கப்பட வேண்டும். அக்காலத்தில் வயதுக்கு வந்த பெண்கள் இருபது, இருபத்துரெண்டு வயதுவரையெல்லாம் கல்யாணத்துக்காகக் காத்திருக்கவில்லை. பெண்கள் சிறுமி பருவத்திலேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. குடும்ப மற்றும் கிராம பொருளாதாரத்தைக் காப்பாற்றும் வகையிலும் சாதி அமைப்பை பேணும் வகையிலும் சொந்த மாமன், மகனுக்கே பெண்கள் திருமணம் செய்து வைக்கப்படுவது இந்தியாவில் பரவலாக பின்பற்றப்படும் ஒரு பண்பு. இது இன்றைக்கும் நடைமுறையில் இருக்கிறது. எனவே, பெண் வயதுக்கு வந்ததை அறிவிக்க வேண்டிய அவசியம் எழுந்தது, தந்தி, தொலைபேசி இல்லாத அந்தக் காலத்தில்.
சிறுமி பருவத்தில் பெண்கள் குழந்தை பெற ஆரம்பித்து விடுவார்கள். பத்து, 12 குழந்தைகள் பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணம். நிலத்தில் வேலை செய்ய மனித சக்தி தேவையாக இருந்தது. பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் உயிர் பிழைத்து வாழும் என்று சொல்வதற்கில்லை. நோய்களால் மரணம் ஏற்படுவது சகஜம். கொள்ளை, அம்மை நோய்கள் கிளம்பி வந்தால் கிராமங்கள் ஒட்டுமொத்தமாக மடிந்து விடும். பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும் இலங்கையிலும் காலூன்றிய பின்னரேயே நவீன மருத்துவ முறைகளின் காரணமாக சராசரி மனிதரின் ஆயுட்காலம் வளர்ச்சி கண்டது. குடும்பங்கள் சுருங்கின.
பிள்ளை பெற்றுக் கொள்ளும் பெண்கள் சுமார் 25, 28 வயதாகும் போது குழந்தை வளர்ப்பில் இருந்து விடுதலைப் பெற்றவர்களாகி விடுவார்கள். அவர்களாலும் நிலத்தில் தமது பங்களிப்பைச் செய்ய முடிந்தது.
ஒரு பெண் ருதுவாகி, குழந்தை பெற்றுக் கொள்வதற்குத் தயாராகிவிட்டாள் என்பதை வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இருந்ததைப் போலவே,
எங்கள் வீட்டுப் பெண் பிள்ளையை நாங்கள் கோவிலுக்கு காணிக்கையாக்கி விட்டோம் என்று ஊருக்குச் சொல்ல வேண்டிய தேவை அன்றைய இந்திய சமூகத்தில் இருந்தது. ஏனெனில் பொட்டுக்கட்டப்பட்ட பெண்ணை எவரும் திருமணம் செய்யத் துணியமாட்டார்கள். பொட்டுக் கட்டி விடப்பட்ட பெண் தினமும் கோவிலுக்குச் சென்று அவளுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.
கல்வியறிவு உயர்குடி மக்கள் மத்தியில் மட்டுமே நிலவி வந்ததால், கல்வியுடன் சம்பந்தப்பட்ட கலைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களை உருவாக்கவும் அக்கலைகளை வளர்க்கவும் வேண்டிய தேவை இருந்தது. உயர்குடி பெண்கள் கலைகளை பயிலவும், நிகழ்த்தவும் மாட்டார்கள். ரசித்து ஆதரவு தருவதே அவர்கள் செய்யக்கூடிய தொண்டு. எனவே கல்வியறிவு பெற்ற உயர்குடி மக்களுக்கு அடுத்த நிலையில் கலைத் தேர்ச்சி பெற்ற தேவதாசியர் திகழ்ந்ததில் வியப்பில்லை. கலைகளில் சிறந்த, ஆடவும், பாடவும், அபிநயிக்கவும் தெரிந்த - தம்மை நன்கு அலங்கரிக்கவும், அன்புடன் உரையாடவும் கற்றிருந்த இந்த தேவதாசிப் பெண்களிடம் உயர்குடி மக்களான வர்த்தகர்கள், அரசு அலுவலர்கள், சேனாதிபதிகள் என்போர் மயங்கியதில் வியப்பு இருக்க முடியாது. அன்றைக்கு அதுதான் தர்மம்.
ராஜராஜசோழன் காலத்திலேயே தேவதாசிகள் தமிழகத்தில் அறிமுகமானார்கள் என்று ஏற்கனவே பார்த்திருக்கிறோம். தஞ்சை பெரிய கோவிலில் நடனமாடுவதற்கு 400 பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தஞ்சையில் இவ்வளவு பெண்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டு நடனம் பயிற்றுவிக்கப்பட்டது.
இப்பெண்களுக்கு தேவையான சகல வசதிகளையும் மன்னர் செய்து கொடுத்தார். இதற்கென தஞ்சை பெரிய கோவிலுக்கு அருகே மூன்று வீதிகளை ஏற்படுத்தி வீடுகளை அமைத்தார். வடக்கில் இருந்த தெரு வடக்கு தளிச்சேரி என்றும், தெற்கில் இருந்த தெரு தெற்குத் தளிச்சேரி என்றும் அழைக்கப்பட்டன. வடக்கு தளிச்சேரியில் 96 வீடுகளும், தெற்கில் 96 வீடுகளும், மூன்றாவது வீதியில் 18 வீடுகளும் இருந்தனவாம். இவர்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கல்வெட்டாக பொறிக்கப்பட்டன.
தமிழக வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையில் தேவரடியார்கள் நியமிக்கப்பட்ட ஒரே கோவில் தஞ்சை பெரிய கோவில் மட்டுமே.
சேரமங்கை, எடுத்த பாதம், குந்தவை, நகரத்தாள், இளங்கோயில், ஆடவல்லாள், சீருடையாள், அறிவாட்டி, பொன்னாலமந்தாள், பூங்காலி, தில்லைக்கரசு - இவை எல்லாம் இப்பெருங்கோவிலில் நடனமாடிய பெண்களின் பெயர்கள்!
FRIDAY, NOVEMBER 6, 2015
மேலும் வாசிக்க.. »
Posted by Mani Srikanthan at 8:50 PM 1 comment:
Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -13
அருள் சத்தியநாதன்
தேவரடியார் மரபு சட்ட ரீதியாக இந்தியாவெங்கும் தடைசெய்யப்பட்டிருந்தாலும் கர்னாடகாவிலும் ஆந்திராவிலும் இன்றைக்கும் பெண்குழந்தைகளை கோவில்களுக்கு நேர்ந்து விடும் வழக்கம் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் தேவரடியார் மரபு தமிழகத்தில் முற்றிலும் அகற்றப்பட்டிருக்கிறது. ஆனால் வறுமை மற்றும் அறியாமை காரணமாக பெண் குழந்தைகளை அவர்கள் பருவம் எய்துவதற்கு முன்னரேயே கோவிலுக்கு நேர்ந்து விடும் சம்பவங்கள் தமிழகக் கிராமங்களிலும் எப்போதாவது நிகழ்வதுண்டு. அவ்வாறான ஒரு சம்பவத்தையே கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் அவ்வாறு ஒரு சம்பவம் நிகழும்போது ஊடகங்கள் மூலம் அது தெரிய வருமானால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதையும் கடந்த இதழில் பார்த்தோம். கிருஷ்ணவேணியை மாவட்ட ஆட்சியர் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதோடு ~பொட்டு| தாலியையும் அறுத்தெறிந்திருக்கிறார். தமிழகத்தில் இவ்வாறு தேவரடியார் மரபு அல்லது சிறுமியர் பொட்டுக் கட்டப்படும் வழக்கம் ஒழித்துக் கட்டப்படுவதற்கு பலரும் உழைத்திருக்கிறார்கள். அவர்களில் வட அயர்லாந்தைச் சேர்ந்த அமிகம்மிகாயேல் என்ற கிறிஸ்தவ பெண் போதகரும் ஒருவர். 1867 டிசெம்பர் 16ம் திகதி வட அயர்லாந்து மிலிஸ்லே என்ற ஊரில் பிறந்த அமி> 1895ம் ஆண்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு> இந்தியாவில் நிலவிய தேவரடியார் மரபு பெரும் அதிர்ச்சியை அளித்தது. தமக்கு என்ன நடக்கிறது என்பதை அறியாத வயதிலேயே ஏழைச் சிறுமியர்களை கோவில்களுக்கு நேர்ந்து ~கடவுளின் குழந்தை|யாக விடப்படுவதை வன்மையாக எதிர்த்த அவர்> அவ்வாறான சிறுமியரைக் காப்பாற்றி தத்தெடுத்து காப்பகங்களில் சேர்த்து பராமரித்தார். ஒரு சமயத்தில் அவரது காப்பகத்தில் சுமார் 700 சிறுமியர் வரை இருந்தனராம். பல நூல்களை இவர் எழுதியுள்ளார். தேவரடியார் மரபுக்கு எதிராக இவர் எழுதிய எதிர்ப்புக் குரல் அன்றைய ஆங்கில அரசின் காதுகளில் ஒலித்தது. அமியைப் போல வேறு பல ஐரோப்பியர் மற்றும் ஆங்கிலேயர்களும் பெண்களை தேவதாசிகளாக்கும் முறைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினர். தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி என்ற மருத்துவர்> இம்மரபை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராடி> அதில் வெற்றி பெறவும் செய்தார். இவருக்கு பெரியார் ஈ.வே.ரா முழு ஆதரவு தந்தார். தமிழகத்தில் இம்மரபை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் பெரியாரின் பகுத்தறிவு பிரசாரமும்> பெண்ணுரிமை தொடர்பாக அவர் கொண்டிருந்த புரட்சிகரமான கருத்துகளும் காரணமாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முத்துலட்சுமியும் சரி> பெரியாரும் சரி இத்தேவரடியார் மரபை பெண் சுதந்திரத்துக்கு எதிரானதாகவும்> பலாத்கார விபசாரமாகவுமே பார்த்தார்கள். எதிர்த்தார்கள்.
இத்தொடரைப் படித்துவரும் சில வாசகர்கள் பொட்டுக் கட்டுதல் என்று குறிப்பிடப்படுவதை சுட்டிக்காட்டி> பொட்டுக்கட்டுதல் என்றால் என்னவென்று கேட்டிருக்கிறார்கள். எனவே பொட்டுக் கட்டுதல் என்றால் என்ன என்பதைப் பற்றி விரிவாக இந்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
சிறுமியர்க்கு தாலி அணிவிக்கும் சடங்கே பொட்டுக்கட்டுதல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தாலி அணிவிக்கப்பட்டதும் அச்சிறுமி கடவுளைத் திருமணம் செய்து கொண்டதாக கருதப்படுவார். எனவே> அச்சிறுமியால் அல்லது வளர்ந்த பின்னர் அப்பெண்ணால் ஒரு ஆடவனைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனெனில் ஏற்கனவே கடவுளுடன் அவளுக்குத் திருமணம் நடைபெற்று விட்டதே!
முன்னர் இப்பெண்கள் நடனத்தில் தேர்ச்சி அடைந்த பின்னரேயே பொட்டுக் கட்டும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும். எனினும் எந்த வயதில் பொட்டுக் கட்டப்பட வேண்டும் என்பது ஊருக்கு ஊர்> கோவிலுக்கு கோவில் மாறுபடும். அக்காலத்தில் அதாவது தடைச்சட்டம் வருவதற்கு முன்னர்> சிதம்பரம்> திருவாரூர் திருவிடைமருதூர் போன்ற ஊர்களில் ஐந்தில் இருந்து எட்டு வயதுக்குள் பொட்டுக் கட்டுதல் நிகழ்ந்து விடுமாம். தஞ்சையில்> பெண் வயதுக்கு வந்தபின்னர் அதற்குரிய சடங்குகளை செய்து விட்டு அதன் பின்னர் பொட்டுக் கட்டும் சடங்கை நடத்துவார்களாம். எட்டு வயதில் நடனத்தில் தேர்ச்சி பெற முடியுமா? இதனால் பொட்டு கட்டுதலை முடித்துவிட்டு அதன்பின்னர் நடனம் வாய்ப்பாட்டு என்பனவற்றை சொல்லிக் கொடுப்பார்களாம்.
எனவே> தாலியை அணிவிப்பதுதான் பொட்டுக் கட்டுதல்.
பொட்டுக் கட்டுதலுக்கு ஒரு புராண கதை காரணமாகக் கூறப்படுகின்ற போதிலும். அதற்கு அப்பால் யதார்த்த ரீதியான காரணங்களையே தேடிப் பார்க்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்படும்போது> பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால்> ~நல்ல படியாக பிரசவம் நிகழுமானால் பிறக்கும் குழந்தையை கோவிலுக்கு அர்ப்பணித்து விடுகிறோம்| என்று நேர்ந்து கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அடுத்தது வறுமை. வறுமையில் வாடும் குடும்பத்தில் பெண் குழந்தை என்பது பெற்றோருக்கு சகிக்க முடியாத சுமை. எனவே> கோவிலுக்கு குழந்தையை காணிக்கையாக்கி விடுவார்கள்.
திருக்குறுங்குடி என்ற ஊரில் பொட்டுக்கட்டி விடப்பட்ட காந்திமதி என்ற தேவதாசி> தான் எப்படி தேவதாசியானேன் என்பதை விளக்குகிறார்.
~~என் தந்தை கோவிலில் வேலை பார்ப்பவர். வறுமையால் அவதிப்பட்டார். அப்போது நான் பிறந்தேன். ஒரு பெண் குழந்தை பிறந்ததைப் பார்த்த கோயிலைச் சேர்ந்தவர்கள்> ~காந்திமதியை பொட்டுக் கட்டி விட்டு விடு@ படிப்புச் செலவை கோயில் பார்த்துக் கொள்ளும்| என தந்தையிடம் சொன்னார்கள். இதை ஏற்று எனக்கு பெற்றோர் பொட்டுக் கட்டி கோவில் திருப்பணிக்காக அர்ப்பணித்தார்கள்|| என்று அவர் தான் தேவதாசியானது எப்படி என்பதை விளக்கியிருக்கிறார்.
இச்சடங்கு இரண்டு விதமாக நடக்கும். ஒன்று கோவிலில் இறைவனுக்கு முன்பாக நடத்தப்படும் பொட்டுக்கட்டுதல். இரண்டாவது வீட்டிலேயே நடத்தப்படும் சடங்கு. குருக்கள் வீட்டுக்கு வந்து சடங்கை நடத்திக் கொடுப்பார்.
அமிகெமிக்காயெல்
தான் தத்தெடுத்த இரு பொட்டு
கட்டிய சிறுமியருடன்
காந்தியம்மாள்-திருக்குறுங்குடி
2001ம்-ஆண்டில் 86 வயது
பொட்டு கட்டுவதற்கு
பயன்படும் திரிசூலம்
SUNDAY, SEPTEMBER 20, 2015
Posted by Mani Srikanthan at 7:28 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -12
அருள் சத்தியநாதன்
தமிழகத்திலும் இந்திய மாநிலங்களிலும் தேவதாசி முறையும், சிறுமியர் பொட்டுக்கட்டி விடப்படுவதும் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தாலும், தமிழகத்தின் சில பகுதிகளில் அம்மனுக்கு நேர்ந்து சிறுமியருக்கு பொட்டு கட்டி விடும் வழக்கம் இருந்து வருவதாகத் தெரிகிறது.
2007 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் சு.கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற சிறுமிக்கு பொட்டுகட்டப்பட்டதாக செய்தி வெளியாகியிருந்தது. இதையடுத்து ரவிக்குமார் என்பவர் இது தொடர்பாக கள ஆய்வு செய்து 2008 ஜனவரி காலச்சுவடு இதழில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதன் சில பகுதிகள் இங்கே பிரசுரமாகின்றன.
சிறுமியருக்கு ஏன் இன்றைக்கும் பொட்டு கட்டி விடப்படுகிறது என்பதையும் பின்னணிக் காரணங்களையும் இக்கட்டுரை விளக்குவதாக உள்ளது.
சு. கொல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கு ஏழு பிள்ளைகள். மூன்று ஆண்கள், நான்கு பெண்கள். பெரிய பெண் திருமணமாகி மூன்று வருடம் ஆவதற்குள் விதவையாகிவிட்டார். குடும்பத்திலும் கஷ்டம். ராமகிருஷ்ணன் அரங்கண்டநல்லூரில் உள்ள சிவில் சப்ளை களஞ்சிய சாலையில் மூட்டை தூக்கிச் சம்பாதிக்கும் சொற்ப வருமானம் குடும்பத்துக்குப் போதவில்லை. குடும்பக் கஷ்டத்துக்குக் காரணம் என்ன என்று அருள்வாக்குச் சொல்லும் தனது தம்பி மகனிடம் குறிகேட்டபோது, கடந்த இரண்டு தலைமுறைக்கு முன் உனது குடும்பத்தில் இருந்த பொட்டுக்கட்டும் வழக்கத்தை நீ மறந்துவிட்டாய், அதனால்தான் இவ்வளவு சங்கடங்கள். கஷ்டங்கள் தீர வேண்டுமானால் உனது மகள் ஒருத்தரைச் சாமிக்கு நேர்ந்துவிட வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார். தனது குடும்பத்தில் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் கடைசி மகள் கிருஷ்ணவேணிதான் பூப்பெய்தாத பெண் என்பதால் அவருக்குப் பொட்டுக்கட்டிவிட ராமகிருஷ்ணனின் குடும்பத்தினர் தீர்மானித்திருக்கிறார்கள். ஊரைக்கூட்டித் தடபுடலாக அந்தச் சடங்கைச் செய்திருக்கிறார்கள். அதைப் பார்த்த சிலர் போலீசுக்குத் தகவல் சொல்லியுள்ளனர். போலீஸ் வருவதற்குள் பொட்டுக்கட்டி முடித்துவிட்டார்கள்.
தமிழ்நாட்டில் கோயிலுக்குப் பெண்களை விற்கும் வழக்கம் இருந்த தகவல்களைச் சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர்கள் தளிச்சேரிப் பெண்கள், பதியிலார், தேவரடியார், நாடகக் கணிகையர் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டுப் பாலியல் ரீதியாகச் சுரண்டப்பட்டுள்ளனர். அத்தகைய பெண்கள் பலரைத் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து தஞ்சை ராஜராஜேசுவரத்தைச் சூழ்ந்துள்ள தெருக்களில் முதலாம் ராஜராஜ சோழன் குடியேற்றினான். அவ்வாறு தேவரடியார்களாக ஆக்கப்பட்டவர்கள் உடம்பில் திரிசூல முத்திரை பொறிக்கப்பட்டது என்றும் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
1947க்குப் பிறகு பல மாநில அரசுகளும் தேவதாசி முறையை ஒழித்துச் சட்டம் இயற்றியுள்ளன. ஆனால், ''இப்போதுங்கூடச் சில மாநிலங்களில் அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி மகாராஷ்டிரா, கர்நாடக எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பெண்கள் தேவதாசிகளாகக் கோயில்களுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கின்றனர்" என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் பத்து மாவட்டங்களிலும் ஆந்திராவின் பதினான்கு மாவட்டங்களிலும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளதாக அதன் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சோழர்காலத் தமிழகத்தில் வழக்கிலிருந்த தேவதாசி முறையும் இப்போது கர்நாடகா, ஆந்திரா முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் எல்லம்மா வழிபாடும் அடிப்படையில் வேறுபாடு கொண்டவை. தேவதாசிமுறை துல்லியமாக வரையறுக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், எல்லம்மா வழிபாடு பெரும்பாலும் பக்தியை அடிப்படையாகக் கொண்ட வெகுசன நம்பிக்கை என்னும் நிலையிலேயே செயல்படுகிறது. இதை நேரடியாகப் பாலியல் தொழிலோடு தொடர்புபடுத்தி வெளிவந்துள்ள ஆய்வுகள் முன்முடிவும் மனச்சாய்வும் கொண்டவையாக இருக்கின்றன என்பதே உண்மை.
தேவதாசி வழக்கமும் பொட்டுக்கட்டுவதும் ஒரேவிதமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன எனினும் இது வேறுவிதமான நம்பிக்கையிலிருந்து வருகிறது.
'செடல்' நாவலில் இந்த நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கும் ஐதீகம் ஒன்றை நாவலாசிரியர் இமையம் விவரித்திருக்கிறார். தேவர்கள் ஒருபுறமும் வாலி, சுக்ரீவன் மறுபுறமுமாக நின்று அமுதத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது, அமிர்தப் பானையிலிருந்து சிந்திய துளிகளிலிருந்து மூதேவி, லட்சுமி, பார்வதி, செல்லியம்மன் மற்றும் தாரை ஆகியோர் பிறந்ததாகவும் அதில் செல்லியம்மனை வாலி, சுக்ரீவன் இருவரையும் மணக்குமாறு ஈஸ்வரன் பணித்தபோது, இரண்டு ஆண்களை மணக்கச் சம்மதிக்காமல் கோபங்கொண்டு தேவலோகத்தை விட்டு வெளியேறிப் பூலோகத்துக்கு அவர் வந்துவிட்டதாகவும் அவரைச் சமாதானப்படுத்துவதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகளை ஈஸ்வரன் செய்ததாகவும் அவற்றில் ஒன்றுதான் செல்லியம்மனுக்கென்று ஒரு கன்னிப் பெண்ணைச் சிப்பந்தி ஆளாக நியமிக்கும் வழக்கம எனவும் அந்த ஐதீகம் கூறுகிறது.
சு.கொல்லூர் கிராமத்துக்குச் சென்று விசாரித்த போது, அங்கேயுள்ள மக்களுக்கு இந்த ஐதீகமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. பொட்டுக்கட்டப்படும் பெண் கூத்தாடிக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவோ மற்றவர்களின் வற்புறுத்தலால் பொட்டுக்கட்டிக் கொண்டவராகவோ இல்லை. அங்கிருக்கும் கோயிலுங்கூடச் செல்லியம்மன் கோயில் அல்ல. பொட்டுக்கட்டி விடப்படும் பெண்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். அம்மனைத் திருமணம் செய்துகொண்ட பெண் என்பதால் அப்படி ஒரு வழக்கம். கர்நாடகாவிலோ ஆந்திராவிலோ இருப்பது போலக் கோயில் பூசாரி இங்கே தாலி கட்டுவதில்லை. பொட்டுக்கட்டப்படும் சிறுமியின் உறவுக்காரக் குடும்பத்திலிருந்து ஒரு சிறுமியைத் தேர்ந்தெடுத்து அவரைக் கொண்டு தாலி கட்டப்படுகிறது. பொட்டுக்கட்டப்பட்ட பெண்கள் பெரும்பாலும் தனது முறைமாமனோடு குடும்பமாகத்தான் வாழ்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான பாலியல் சுரண்டலுக்கும் ஆளாவதாகவும் தெரியவில்லை. பொட்டுக்கட்டிவிடப்படும் பெண்ணுக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்கு அவரது தாய்வீட்டுச் சொத்தில் சமபங்கு கொடுக்க வேண்டுமாம். எனவே அவரை வைத்துக் காப்பாற்ற அவரது 'கணவர்' தயங்குவதில்லை.
ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தை இல்லாவிட்டாலோ வறுமை அதிகமாக இருந்தாலோ இப்படிக் கோவிலுக்கு ஒரு சிறுமியை நேர்ந்துவிட்டுவிடுவார்களாம். ஆனால், தேவதாசிகளைப் போல அவர்கள் பொது மகளிராக இருப்பதில்லை. பக்தி சார்ந்த ஒரு நம்பிக்கையாக மட்டுமே அந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. சு. கொல்லூரில் மட்டுமன்றி விழுப்புரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் இந்த வழக்கம் உள்ளது எனத் தெரிந்தது.
பின்னர் விழுப்புரம் சென்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து இந்த விஷயம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளைக் கேட்டேன். விழுப்புரத்தில் அபயம் என்னும் காப்பகத்தில் சிறுமி கிருஷ்ணவேணியைத் தங்கவைத்திருப்பதாக ஆட்சியர் சொன்னார். அந்தப் பெண்ணுக்குக் கட்டப்பட்ட தாலியைக் கழற்றி விடுமாறு சொல்லிவிட்டதாகவும் அந்தச் சிறுமியை வேறு பள்ளியில் சேர்த்துப் படிக்கவைக்கப் போவதாகவும் கூறினார். விதவையாகிவிட்ட ராமகிருஷ்ணனின் பெண்ணுக்குச் சத்துணவுச் சமையலர் வேலையை முன்னுரிமை அடிப்படையில் வழங்குமாறு அவரிடம் நான் கோரியபோது பரிசீலிப்பதாகச் சொன்னார்.
அபயம் இல்லத்தில் இருந்த கிருஷ்ணவேணியையும் அவரது அம்மா அஞ்சலையையும் பார்த்துப் பேசினேன். சாமி குத்தம் ஆகிவிடாமல் தனது மகளுக்குக் கட்டப்பட்ட தாலியை மீண்டும் அணிவித்துவிட வேண்டும் என்பதில் அஞ்சலை குறியாக இருந்தார். எங்களை ஊருக்கு அனுப்பச் சொல்லுங்கள் என்று மீண்டும் மீண்டும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். தற்போது சிறுமி கிருஷ்ணவேணியை விடுதி வசதியோடு கூடிய நல்லதொரு பள்ளியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சேர்த்து விட்டிருக்கிறார். எதிர்காலத்தில் 'டீச்சர்' ஆக வேண்டும் என்ற அந்தச் சிறுமியின் ஆசை நிறைவேறும் என்னும் நம்பிக்கை நமக்கு ஏற்பட்டுள்ளது.
கிருஸ்ணவேணி
பொட்டு கட்டப்பட்ட கொல்லூர்
முத்துமாரியம்மன் கோவில்
TUESDAY, AUGUST 11, 2015
Posted by Mani Srikanthan at 10:00 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -11
அருள் சத்தியநாதன்
'தேவதாசி முறை நம்முடைய நாகரிகத்துக்கும் கலைப் பெருமைக்கும் பெருங்களங்கமாய் இருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாய் நடத்தப்படுகின்றனர். விபசாரத்துக்கென்றே ஒரு பெண் சமூகத்தை சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலக மனப்பான்மையை என்னவென்பது?'
இ ந்து சனாதன மரபு, பெண் ஒடுக்குமுறையைக் கருத்தியல் ரீதியிலும் யதார்த்த சமூகக் கட்டமைப்பிலும் தீவிரமாகச் செயற்படுத்தி வந்திருக்கிறது. இந்து சமூக அமைப்பில் பேணப்பட்டு வந்த தேவதாசி முறை இந்தப் பெண் ஒடுக்குமுறையின் கொடூர வடிவமாகும். தமிழ்நாட்டுக் கோயில்களில் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நடன மங்கையர்களை தேவதாசிகள் என்று வழங்குவர். பொது வழக்கில், இவர்கள் தாசிகள், விபச்சாரிகள் என்றே கூறப்பட்டார்கள். புகழ் வாய்ந்த ஒவ்வொரு கோயிலிலும் இத்தகைய தேவமாதர்களின் படை ஒன்றிருந்தது.
"சமய சாஸ்திரங்களின் பேராலும், கடவுளின் பேராலும் பகிரங்கமாய் விபசாரம் செய்யும் பெண் சமூகம் 'புண்ணியபூமி' என்று போற்றப்படும் இந்நாட்டில்தான் உண்டு. இதைப்போல் உலகில் வேறெங்கும் காண முடியாது என்றே நம்புகிறேன். தேவதாசிமுறை நம்முடைய நாகரிகத்திற்கும் கலைப்பெருமைக்கும் பெருங்களமாய் இருக்கிறது. இந்நாட்டில் பெண்களின் பெருமைகளைப் பற்றி வானளாவப் பேசப்படுகிறது. ஆனால், நடைமுறை வேறுவிதமாயிருக்கிறது. பெண்கள் விலங்குகளிலும் இழிவாக நடத்தப்படுகின்றனர். விபசாரத்திற்கென்றே ஒரு பெண் சமூகத்தைச் சிருஷ்டித்துக்கொண்டு வாழ்ந்த - வாழும் எமது ஆணுலகத்தின் மனப்பான்மையை என்னவென்பது?" என்று மூவலூர் ஆ.ராமாமிர்தத்தம்மாளின் 'தாஸிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற நாவலின் முன்னுரையில் கூறுகிறார் செ. வெள்ளைத்துரைச்சி நாச்சியார்.
"தேவதாசிகள் என்று ஒரு கூட்டமே, ஆரிய பார்ப்பனர்களிடமிருந்துதான் உற்பத்தியாகி இருக்க வேண்டுமென்று நூலாசிரியர் ஓரிடத்தில் சுட்டிக்காட்டியிருப்பது மிகவும் சிந்திக்க வேண்டிய உண்மையாகும். ஆரிய பார்ப்பனரது ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள 'நியோய விவாக' முறையைச் சிறிது ஆராய்ந்தால், இந்நாட்டில் தங்கள் கூட்டத்தைப் பெருக்குவதற்காக மறைமுகமான பல விபசாரமுறைகளை ஆரியர் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள் என்பது வெள்ளிடைமலைபோல் விளங்கா நிற்கும்" என்று இந்நாவலின் புகழுரையில் குறிப்பிடுகிறார் திருமதி. குருசாமி குஞ்சிதம் அவர்கள்.
"ஓர் இலக்கிய சிருஷ்டி என்ற வகையில் 'தாசிகள் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்' என்ற இந்த நாவல் பெரும் கணிப்பிற்குரியதல்ல. எனினும், தாசியாகவே வாழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதால், ஒரு சமூக ஆவணம் என்ற வகையில் இது பெரும் அக்கறைக்குரிய ஒன்றாகும்" என்கிறார் அறிஞர் கமில் ஸ்வலபில். இழிவுபடுத்தப்பட்ட இந்தக் கணிகையர் குலத்திலிருந்து எழுந்த இலக்கிய வெளிப்பாடுகள் இன்று ஆழ்ந்த ஆராய்வுக்குள்ளாகியுள்ளன. இதன் அற்புத வெளிப்பாடாக, தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னனான பிரதாப சிம்மனின் அரசவையில் பெண் புலவராகவும் நடனக் கணிகையாகவும் இசைஞானமிக்கவராகவும் பிரபலம் பெற்றிருந்த முத்துப்பழனி (1730 - 1790) இயற்றிய 'ராதிகா சாந்தவனம்' என்ற சிருங்கார ரசம் ததும்பும் தெலுங்குக் காவியம் அற்புதமான காதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது.
'எதுவும் வழிந்து ஒழுகிவிடாமல், விளிம்பிலே ததும்பிக்கொண்டிருக்கும் வகையில் நவரசங்களின் அற்புதமான கலவையில் உருவான இலக்கியம்' என்று மதிப்பிடுகிறார், இக்காவியத்தை மறுமதிப்புச் செய்த கணிகை பெங்களுர் நாகரத்தினம்மாள்.
ஆண் புலவர்கள் தமது சிருஷ்டிகளை ஒரு பெண் கவிக்குச் சமர்ப்பணம் செய்வது வழக்கில்லையாயினும், அக்காலத்தில் பல்வேறு ஆண் கலைஞர்கள் தமது படைப்புகளை முத்துப்பழனிக்குச் சமர்ப்பணம் செய்துள்ளமை அவரது மேதைமையைப் புலப்படுத்துவதாகவே உள்ளது. ஆனால், ஆந்திராவின் சமூக மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், தெலுங்கின் முன்னோடி நாவலாசிரியருமான கந்துகூரி வீரேசலிங்கம் (1848 - 1919) மிகக் கடுமையான வார்த்தைகளில் முத்துப்பழனியின் 'ராதிகா சாந்தவனத்தை' நிராகரித்தார்.
'இந்த முத்துப்பழனி ஒரு பரத்தை' என்றும், 'இந்நூலின் பல பகுதிகள் ஒரு பெண்ணின் வாயிலிருந்து வந்தது ஒருபுறமிருக்க, அவற்றை ஒரு பெண் தனது செவிகளாலேயே கேட்கக் கூட உகந்தது அல்ல, சிருங்கார ரசம் என்ற போர்வையில், ஒரு வெட்கமும் இல்லாமல், பாலியல் பற்றிய பச்சையான வர்ணனைகளால் தனது கவிதைகளை நிறைத்திருக்கிறார்' என்றும் அவர் எழுதினார். 'ஒரு விபசார தாசிகுலத்தில் பிறந்த ஒருவரிடமிருந்து இம்மாதிரிக் கவிதைகள் வருவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை' என்றும் இந்த உன்னதக் கவிமேதையின் மீது தீர்ப்பெழுதினார் அவர்.
முத்துப்பழனியின் சிருங்காரப் பிரபந்தமான 'ராதிகா சாந்தவனத்தின்' கவித்துவ மேன்மையை நிலைநிறுத்த பெங்களுர் நாகரத்தினம்மாள் முன்வைத்த வாதங்கள் ஆணித்தரமானவை. ஆங்கிலேயர் ஆட்சியில் முத்துப்பழனியின் காவியத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீண்ட போராட்டத்தின் பின்னரே 1947 இல் நீக்கப்பட்டது.
முத்துப்பழனியின் ஒரு கவிதை இது:
இதழ்களில் ஈரமிடு
அவளின் இதழ்களை
உன் நாவின் முனையால்
ஈரமிடு
அழுந்தக் கடித்து
அவளை அச்சுறுத்தி விடாதே
அவளின் கன்னங்களில்
மோஹனமாய் முத்தமிடு
உனது கூர்மையான
நகங்களால் அவளைக்
கீறிவிடாதே
மெதுவாய் மிருதுவாய்
சம்போகம் செய்
பலவந்தப்படுத்தி
அவளைப் பயமுறுத்திவிடாதே
இதெல்லாவற்றையும் உனக்குச் சொல்ல
நான் ஒரு முட்டாள்
அவளைச் சந்தித்து
அவளோடு நீ காதல் போர்
நிகழ்த்தும் போது
நான் சொன்னவற்றையா
நினைத்துப்பார்க்கப்போகிறாய்
என் அன்பே!
இந்துப் பாரம்பரியத்தில் கல்வியை மேற்கொள்ளவும், நடனம், இசை போன்ற லலித கலைகளைப் பயிலவும், இலக்கியம் பயிலவும் சாதாரண பெண்களுக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில், கணிகையர் குலத்துப் பெண்களுக்கே இந்த வாய்ப்புகள் இருந்தன. மேட்டுக்குடியினரின் சிருங்கார சுகானுபவங்களுக்கு விருந்தளிக்கப் பிறந்த இவர்கள் லலித கலைகளைக் கற்றுத் தேர்ந்தவர்களாக விளங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிறந்த பெண் எழுத்துக்கள் இந்தக் கணிகையர் குலத்திலிருந்தே உற்பவித்துள்ளன.
அஞ்சுகம் அம்மையாரின் கதாசாரத்திரட்டை எடுத்துக் கொண்டால், இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றி ஏற்றுக்கொண்டு விட்ட அஞ்சுகம்,
கணவன் - நாயகன் இறந்ததும் அவரோடு அவரது பத்தினியும் உடன்கட்டை ஏறுவதே உத்தம பத்தினிக்கு அழகு என்றும், அதனைக் கணிகைக்குலமும் கைகொண்டொழுக வேண்டும் என்றும் பல இடங்களிலே வலியுறுத்துகிறார்.
'காதலரி றப்பிற் கனையெரிபொத்தி
யூதுலைக்குருகி னுயிர்த்தகத்தடங்கா
தின்னுயிரீவ ரீயாராயி
னன்னீர்ப் பொய்கையி னளியெரிபுகுவர்
னளியெரி புகா அராயினன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர்
பத்தினிப் பெண்டிர்'
என்பது மணிமேகலை.
மேற்கூறிய இலக்கணங்கொண்டு ஒழுகாத மகளிர் சுவாலித்தெரிகின்ற கொடு நரகடைந்து துன்புறுவதென்க. அல்லதூ உம் தீயொழுக்குடையராகிய மகளர் நாய், நரி, பேய், புலி, கூகை, பன்றி, மலப்புழு ஆகிய இழிந்த பிறப்புகளை எய்துவரென நீதிநூல்கள் வலியுறுத்திக் கூறுகின்றன.
"அஃதன்றி, உத்தம இலக்கணமுடையராகிய கற்புடை மாதர் நாயகனிறந்தவப் யமதூதரினின்றும் நீங்கி, கணவனோடு சுவர்க்கலோகப் பிராப்தி பெறுவரென்றும், நாயகன் மகாபாதகனாயினும் அவனோடு உடன்கட்டை ஏறினவள் கற்புடையாளெனக் கண்டவிடத்து, யமன் அவனை விடுத்தோடுவன் எனவும் கூறுகின்றன" என்று அஞ்சுகம் மிகத் தீர்க்கமாகக் கூறுகிறார்.
கணவனுடன் அக்கினிப்பிரவேசம் செய்யாதுவிட்டால், ஏற்படக்கூடிய இழிபிறப்புகள் பயமுறுத்தக்கூடியதாயும், உடன்கட்டை ஏறிவிட்டால் சொர்க்கலோகம் போகலாம் என்று கூறுவது நியாயமற்ற வஞ்சக ஆசைவலை போன்றுமே தோன்றுகிறது.
இந்து சனாதனப் புராணப்புனைவுகளை மெய்யென்று நம்பிவிட்ட பாங்கு இந்நூலின் அனைத்துப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது.
"இப்பிரபு (க.சின்னையாபிள்ளை) என்னை அபிமான ஸ்திரீயாய் மதியாது, சொந்தப் பாரியாகவே மதித்து வந்தமையால், யான் அவருக்கு முன் இவ்வுலக வாழ்க்கை விட்டு நீங்க வேண்டுமென்னும் பேரவாப் பூண்டிருந்தேன். சிவபெருமான் அப்பிரபுவையே முன்னர் தமது திருவடியிற் சேர்த்துக்கொண்டார்" என்று எழுதும் அஞ்சுகம், அப்பிரபு இறந்ததும், அதிர்ஷ்டவசமாக உடன் கட்டை ஏறிவிடாமல் நிதானித்து,
'ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந்தான் முந்துறும்'
என்ற திருக்குறள்வழி அமைதிகண்டமை நமது நற்பேறாகும்.
தேவதாசி மரபை இல்லாதொழிக்கும் புரட்சிக் குரல்கள் தமிழகத்தில் பின்னாளில் வேகம் பெற்று, அம்மரபு சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
ஆனால், வலிமை வாய்ந்த இந்து சனாதன மரபிற்குப் பலியாகிப்போன அஞ்சுகத்தின் தமிழ்ப் புலமை வரலாற்றில் அவருக்குத் தனித்துவமான இடத்தைத் தேடிக் கொடுத்திருக்கிறது.
இன்று புத்தெழுச்சி பெற்றுவரும் மலையக இலக்கியப் பாரம்பரியத்தின் மூத்த தலைமகளாக அன்னை அஞ்சுகம் நிலைபெறுகிறார். விளிம்புநிலை சமூகத்தின் ஆறு தலைமுறை வரலாற்றை எழுதிவைத்துவிட்டுச் சென்ற இம்மாதரசி, வாயிழந்துபோன மலையகச் சமுதாயத்தின் உயரிய அங்கீகாரத்திற்கரிய மகத்தான இலக்கிய ஆளுமை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
TUESDAY, AUGUST 4, 2015
Posted by Mani Srikanthan at 6:41 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -10
அருள் சத்தியநாதன்
க மலாம்பிகை தமது புதல்வியருடன் கொழும்பிலேயே வசிக்கலானார் பின்னர், கமலாம்பிகைக்குக் குழந்தைவேல் என்ற ஆண்மகவும், அஞ்சுகமும் என்ற பெண்மகவும் பிறந்தனர். கமலாம்பிகை தனது 73 ஆவது வயதில் மரணமடைந்த பின்னர், கொழும்பு பொன்னம்பலவாணேசர் ஆலயத்தின் ஆதீனகர்த்தாவாகத் திகழ்ந்த பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் அஞ்சுகத்தை ஆலயப் பணிகளில் ஈடுபடுத்தி, உதவிவந்தார்.
இந்த அஞ்சுகம்தான் தங்கள் கணிகையர் குல வரலாற்றையும், அபிஷேக வல்லியின் தலைமுறையிலிருந்து தங்களின் குலவரலாற்றையும் எழுத்தில் பதித்த அறிஞராவார்.
கமலாம்பிகையின் ஐந்தாவது புத்திரியான அஞ்சுகம், மாயூரம் பரத சாஸ்திர வித்துவான் கந்தசாமி நட்டுவனாரிடம் ஆடல் பாடல்களைக் கற்றுச் சிறந்த நர்த்தகியாகத் திகழ்ந்தார். அஞ்சுகம் 12 ஆவது வயதில் ஸ்ரீபொன்னம்பலவாணேசுரர் சந்நிதியில் திருப்பொட்டுத்தாரணஞ் செய்து வைக்கப்பட்டார்.
பின்னர், யாழ்ப்பாண சங்கீத வித்துவான் ஸ்ரீ நாகலிங்கம் அவர்களிடம் இந்துஸ்தானி இசையையும், மைசூர் சமஸ்தான வித்துவான் கிருஷ்ணசாமி முதலியார், திருசிரபுரம் அழகிரிசாமி செட்டியார் ஆகியோரிடம் வாய்ப்பாட்டையும், திருநெல்வேலி சீதாராம் பாகவதரிடம் வீணையையும் பயின்றார்.
சிலகாலம் சென்றபின், கொழும்பிலுள்ள பிரபல வர்த்தகர் க. சின்னையா பிள்ளை அவர்களின் அபிமான ஸ்திரீயாயினார். அதன்பின் அஞ்சுகம் தனது 16ஆவது வயதில் வேதாரணியம் சொ. சுந்தரேசக் குருக்களிடம் சிவதீட்சை பெற்று, பின் யாழ்ப்பாணம் குழந்தைவேற்பிள்ளை உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கியமும் கற்றுத் திகழ்ந்தார்.
'சிறியேன் 25 வருடம் மேற்கூறிய கணவான் அவர்களின் (க. சின்னையா பிள்ளை) அபிமான ஸ்திரீயாயிருந்து வாழ்ந்த செல்வவாழ்க்கையின் அருமை பெருமையும் மனமகிழ்ச்சியும் இத்துணையதென எடுத்துச் சொல்லுந்தரத்தவன்று' என்று அஞ்சுகம் குறிக்கிறார்.
அஞ்சுகம் இயற்றிய 'உருத்திர சணிகையர் கதாசாரத்திரட்டு' என்ற நூல் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஈழத்துத் தமிழ் அறிஞர்களின் கொடுமுடிகள் எனக் கருதத்தக்க அனைத்துப் புலமையாளர்களினதும் பாராட்டைப் பெற்றமை அஞ்சுகத்தின் பெருந்தமிழ்ப் புலமைக்கு சாட்சியமாகும்.
'கருவி நூலுணர்வும், உருக்கிடும் இசைத்தமிழ் உணர்வும், சிறந்த நாடக நூலுணர்ச்சியுங்கொண்டு, தேவநற் தொண்டினில் சிறந்தே திகழும் அஞ்சுகமாது பத்திமெய் யன்புக்கருளுவார் சிவபெருமானே'என்று சிறப்புப்பாயிரம் வழங்குகிறார் மகா வித்துவான் மாதகல் சு. ஏரம்பையர் அவர்கள்.
கல்வியின் மிக்குள கவிஞர் புகழு
நல்லிசைப் புலமை நன்கு வாய்ந்துள்ள
கிஞ்சுக மலர்பொரூஉங் கேழ்நிறச் செவ்வா
யஞ்சுக மெனும்பெய ரடைந்தமெல் லியலே!
என்று வாழ்த்துகிறார் பிரம்மஸ்ரீ சி. கணேசையர் அவர்கள்.
யாழ்ப்பாணம் நீர்வேலி சிவ. சங். சிவப்பிரகாச பண்டிதர், மயிலிட்டி பிரசித்த நொத்தாரிஸ் க. மயில்வாகனப்பிள்ளை, மகாவித்துவான் உ.ப.வே. திரு.ஸா. இராகவாசாரியார், நாகபட்டினம் வித்துவான் ஜி. சதாசிவம்பிள்ளை, யாழ் சி.மா. தியாகராச பண்டிதர் போன்ற தமிழ்ப் புலமை மரபினர் அஞ்சுகப் பண்டிதையின் இலக்கியப் பணியை மெச்சியுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வசனநடை வரலாற்றில் 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' நூலின் வசனநடையின் மேன்மை விதந்து குறிப்பிடத்தக்கதொன்றாகும். புராண வரலாறுகளைச் செய்யுள் மூலத்தில் ஆய்ந்து, தெளிந்து சுவையான சிறப்புமிக்க உரைநடையில் வார்த்துத் தந்திருக்கும் அஞ்சுகத்தின் பணி மெச்சத்தக்கதாகும்.
தமிழகத்தின் குளிக்கரையைச் சேர்ந்த அஞ்சுகம், யாழ்ப்பாணம் கைதடியில் வளர்ந்து, கொழும்பு சிவனாலயத்தில் 'பொட்டுக்கட்டிய' தேவதாசியாகத் திகழ்ந்து, க. சின்னையாபிள்ளை என்ற வர்த்தகரின் அபிமான ஸ்திரீயாக வாழ்ந்து, 'உருத்திர கணிகையர் கதாசாரத்திரட்டு' என்னும் அரிய இலக்கிய நூலினை ஆக்கி, தனது குலகோத்திரத்தின் சரித்திரத்தைப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியையாகக் கௌரவம் பெறுகிறார்.
எனினும், உருத்திர கணிகையர் மரபினை முற்றுமுழுவதாக ஏற்றுக்கொண்ட அஞ்சுகம், தமது குலத்தினர் இம்மரபைத் தொடர்ந்து பேணிவர வேண்டுமென்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்.
"நம் குலக்கன்னிகை எப்பொழுது திருப்பொட்டணியப் பெற்றாளோ அப்பொழுதே 'தேவதாசி'யெனவும், 'தேவர் அடியாள்' எனவும் பெயர் பெறுகின்றாள். ஒரு நாயகனால் திருமாங்கல்யம் கட்டப்பட்ட ஒரு நாயகி, அவனிடத்தில் எவ்வகைத் தொடர்புடையவளாகின்றாளோ, அவ்வகைத் தொடர்பை, இவள் ஈசுவரனிடத்திற் கொண்டவளாகின்றாள். ஆகவே, இவள் சிவகைங்கர்யத்திற்குரியாளென்பதையே அத்திருப்பொட்டு விளக்கி நிற்கிறது. அல்லாது, பிறிதொரு விஷயத்தில் பெருநிதி சம்பாதிக்கலாம் என்பதைக் குறித்து நிற்கவில்லை.
"அங்ஙனந் திருப்பொட்டணிந்த பின், நாணமென்பதை விட்டவளாகிச் சந்நிதானங்களிலே பலசன சமூகத்தில் பாடவும் ஆடவும் தக்கவளாகின்றாள். அவ்வாறானபோது, தான் கற்ற ஆடல் பாடலாகிய வித்தையைக் கொண்டு செல்வப் பொருளைத் தேடுவதும், அப்பொருளைக் கொண்டு தானதருமங்கள் செய்வதும் ஈசுரத்தியானம் செய்வதுமாகிய விஷயங்களிற் பொழுது போக்குவதன்றோ கல்வியறிவுக்கு அழகாகும்?
'தந்தை - தாயார், ஆண் குழந்தைகளை இளமையிலேயே கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாக்கிச் செல்வப் பொருள்கள் தேடும் வழியைக் கற்பிக்கின்றார்கள். அவ்வாறே, கணிகைக் கன்னியர்க்கும் இளமை தொட்டு நீதி நூல்களையும், ஆடல் பாடலையும் நன்கு கற்பித்து வைத்தால், அவை வாயிலாகப் பொருளையும் சம்பாதித்துக் கீர்த்தியையும் பெற்று நல்வாழ்வடைவரன்றோ! செந்தமிழ்க் கல்வியிலும் ஆடல் பாடலாகிய குலவித்தையிலும் சிறந்தவர்களாகிய அஞ்சனாட்சி, சோமி, சண்முகவடிவு முதலானோர் எவ்வளவு பெருமையையும் பெருவாழ்வையும் பெருங்கீர்த்தியையும் பெற்றிருக்கின்றார்கள். இவர்களின் நிலைமையை எய்தும்படி கற்பித்து வைக்கின்ற பெற்றோரல்லவோ நற்பெற்றோர். இவர்களல்லவோ பிள்ளைகளிடத்து உள்ளீடான மெய்யன்புள்ளவர்கள். இவர்களையன்றோ நாம் என்றும் முன்னிருத்திப் போற்றி வழிபட வேண்டும்' என்று இந்நூலின் முடிப்புரையில் அஞ்சுகம் அம்மையார் தெரிவித்திருக்கும் கருத்துகள் கணிகையர் குலமரபைப் பேணும் அவரது தீர்க்கமான வாதத்தை வெளிப்படுத்துவனவாகும்.
இந்து சனாதன மரபை எவ்விதக் கேள்வியுமின்றிப் பரிபூரணமாக விசுவசித்து, அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டுவிட்ட தன்மையை அஞ்சுகம் அம்மையார் இக்கணிகையர் கதாசாரத்திரட்டிலே வெளிப்படுத்துகிறார்.
(தொடரும்)
SATURDAY, JULY 25, 2015
Posted by Mani Srikanthan at 6:26 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -9
அருள் சத்தியநாதன்
கடந்த இதழ்களில் நாகரத்தினம் அம்மாளை மையப்படுத்தி இந்திய தேவதாசிகள் பற்றிப் பார்த்து வந்தோம். தேவதாசிகள் ஆரம்பத்தில் மன்னர்கள், பிரபுகள், மந்திரி பிரதானிகளுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர். இத்தேவதாசிகள் அனைவருமே கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பைப் பெற்றவர்கள். இரண்டாவதாக, சிருங்காரம் கல்வியுடன் தொடர்பு கொண்டது. தேவதாசிகள் பாடவும், நடனமாடவும் வேண்டும். இவற்றை அவர்கள் முறைப்படி கற்க வேண்டும். எனவே உயர் குடியினருக்கு அடுத்ததாகக் கல்வி அறிவைப் பெறும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்தது. மேலும் தனவந்தர் தொடர்பு, ஆடல்பாடல்களில் தேர்ச்சி மற்றும் கல்வி கேள்வியில் தேர்ச்சி ஆகிய மூன்றும் இவர்களை சமூக கௌரவம் கொண்டவர்களாகவும் வசதியான வாழ்க்கை கொண்டவர்களாகவும் வைத்திருந்தது.
ஆங்கிலேயர் காலப்பகுதியில், ஆங்கில மொழியறிவு காரணமாக மக்கள் மத்தியில் பரந்துபட்ட அளவில் கல்வியறிவு வளர்ச்சி கண்டது. உலக அறிவு, கிறிஸ்தவ சமய செல்வாக்கு என்பன காலங்காலமாக சமூகத்தில் இருந்து வந்த நம்பிக்கைகளை கேள்விக் குறியாக்கியதோடு விவாத பொருளாகவும் ஆக்கின. இப்படித்தான் உடன்கட்டை ஏறும் பழக்கம் விவாதத்துக்கு ஆட்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டது. அடுத்ததாக தேவதாசி முறையும் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. இது ஒரு புறமிருக்க, இதே ஆங்கிலேய ஆட்சியின் கீழ் தேவதாசியினரும் படிப்பறிவில் தேர்ச்சி பெறும் வாய்ப்பைப் பெற்றனர். நூல்களை எழுதி வெளியிட்டனர்.
1815 ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் ஆங்கிலேயரிடம் வீழ்ந்ததோடு முழு இலங்கையும் பிரிட்டிஷ் வசமானது. அடுத்ததாக பெருந்தோட்டங்கள் திறக்கப்பட்டன. தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர் இத்தோட்டங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். கூடவே, நாவிதர், சலவையாளர், துப்புரவு செய்வோர், வர்த்தகர்கள், தொழில் முயற்சியாளர்கள், பண்டாரங்கள், இசைக்கலைஞர்கள், சமையல்காரர்கள் என்று பலதரப்பட்டவர்களும் தென்னிந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். இக்காலப்பகுதியில் ஆங்கிலேய மிஷனரி தயவால் வடபுலத்தோர் கல்வியில் தேர்ச்சி பெற்ற சமூகமாக மாறியிருந்தனர்.
எனவே, இலங்கை வாழ் தமிழ் சமூகத்துக்கு தேவையாகவிருந்த சிருங்கார ரசத்தைத் தருவதற்கு பலரும் இங்கு வரவேண்டியதாயிற்று.
இது தொடர்பாக பல தகவல்களை லண்டனில் வசிக்கும் மலையகத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மு. நித்தியானந்தன் தனது கூலித் தமிழ் நூலில் தந்திருக்கிறார். அத்தகவல்களை இனிப் பார்ப்போம்.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை நோக்கிப் புலம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தில் தேவதாசிகளும் இசை, நடனக் கலைஞர்களும் இடம்பெற்றுள்ள கதை சுவாரஸ்யமானது. யாழ்ப்பாணத்தைச் சார்ந்த புரவலர்களினதும், கோயில் ஆதீனகர்த்தாக்களினதும் அழைப்பின்பேரில் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலுமாக தேவதாசிகள் இறைப்பணி புரிந்துவந்துள்ளனர்.
அந்தப் பாரம்பரியத்தில் 'கொழும்பு நகரிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமியம்பிகா சமேத பொன்னம்பலவாணேசுரர் திருவடிகளுக்கடிமை பூண்ட மாது ஸ்ரீ கா. கமலாம்பிகையார் புத்திரி க. அஞ்சுகம் இயற்றிய, 'உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு' என்ற நூல் மலையக இலக்கியத்தின் உன்னதமான முன்னோடிப் பெண் ஆளுமையை வெளிப்படுத்தி நிற்கிறது.
'வரலாற்று நாயகி தாசி அஞ்சுகம்' என்று இந்நூல் பற்றிய கட்டுரை ஒன்றை சோ. சிவபாதசுந்தரம் 'நாழிகை' இதழில் எழுதியிருக்கிறார்.
'யாழ்ப்பாணக் கலாசாரத்தின் சென்ற நூற்றாண்டு வடிவத்தின் ஓர் அம்சத்தை' இந்நூலில் காணலாம் என்று சிவபாதசுந்தரம் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
ஆகம, புராண இதிகாசங்களிலிருந்து தேவதாசிகள் எனப்படும் உருத்திர கணிகையர் வரலாற்றைத் தொகுத்துக்கூறும் இந்நூலில் அன்னை அஞ்சுகம் தனது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தி நிற்கிறார்.
'திருக்கைலாச மலையிலே உமாதேவியாருக்குச் சேடியராயிருந்த கமலினியின் அவதாரமாயுள்ளவரும், அரிபிரமேந்திராதி தேவர்களாலும் அறிதற்கரிய பரம்பொருளாகிய தியாககேசப்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டுத் தூதராகி எழுந்தருளும் பேறுபெற்றவருமாகிய பரவையாரும், சோமசுந்தரப் பெருமான் இரசவாதம் செய்யும்பொருட்டு எழுந்தருளும் பேறு பெற்ற பொன்னணையாரும் இவர் போன்ற பிறரும் திருவதாரஞ் செய்த 'உருத்திர கணிகையர்' கோத்திரச் சிறப்பை சிற்றறிவுடையளாகிய யானோ எடுத்துச் சொல்லவல்லேன்' என்று அஞ்சுகம் தனது முகவுரையில் கூறுகிறார். பரவையார், பொன்னணையார், மாணிக்கவல்லி, மானந்தை, மாணிக்கநாச்சியார், ஞானவல்லி, அருணகிரிப் பெருந்தொகையாரின் தாயார், சோமி, வெள்ளையம்மாள், கூத்தாள், மாதவி, சித்திராபதி, மணிமேகலை ஆகிய கணிகையரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் ஆழமாக எழுதிச் செல்கிறார்.
இந்த உருத்திர கணிகையரின் வரலாற்றை எழுதுவதற்கு இவர் எடுத்தாண்டிருக்கும் இலக்கிய நூல்களின் பட்டியல் பிரமிப்பூட்டுவதாகும். சிவஞான தீபம், சிவஞான சித்தியார், சித்தாந்த சிகமாணி, இறையனராகப் பொருள், ஆசௌசதீபிகை, திருவருட்பா ஆகிய வைதீக சித்தாந்த நூல்கள் அனைத்தையும் அஞ்சுகம் ஆளுமையோடு கையாண்டிருக்கிறார்.
அஞ்சுகம் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் தனது ஆழ்ந்த சைவசித்தாந்த ஞானத்தை வெளிப்படுத்திச் செல்கிறார். இந்நூலாக்கத்திற்கு அஞ்சுகம் எடுத்தாண்ட 44 இலக்கிய நூல்களின் விபரம் அவரது தமிழ்ப் புலமைக்கு அரும்பெரும் சான்றாகும்.
சங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், புராணங்கள், இராமாயண, பாரத இதிகாசங்கள் அனைத்தையும் நுணுகி ஆராய்ந்து உருத்திர கணிகையர் கதாசாரத்தை அஞ்சுகம் திரட்டித் தந்திருக்கிறார். 'இலங்கையின் தலைநகரான கொழும்பிலே திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிவகாமி அம்மையார் சமேத கொழும்பு பொன்னம்பலவாணேசுரப் பெருமானுக்கு அடிமை பூண்ட கமலாம்பிகை என்னும் எனது தாயார் எனக்குப் புத்திரப்பேறின்மையால் தமது பெண்வழிச் சந்ததி என்னோடு நின்றுவிடுமென்பதை நன்குணர்ந்து, தம் கோத்திர வரலாற்றை ஒரு புத்தகரூபமாய்ப் பிரசுரித்து வெளிப்படுத்தும்படி எனக்குப் பன்முறையுங் கட்டளையிட்டு வந்தார்' என்று அஞ்சுகம் இந்நூலின் முகவுரையில் குறிப்பிடுகிறார்.
திருக்கண்ணமங்கை என்னும் திருப்பதியைச் சேர்ந்த அபிஷேகவல்லி என்னும் தேவதாசி மரபில் எதித்த ஆறு தலைமுறையினரின் வரலாற்றை அஞ்சுகம் இந்நூலில் விரிவாக எழுதுகிறார். அபிஷேகவல்லி தேன்மொழி, வடமொழி, தெலுங்கு முதலிய மொழிகளைக் கற்றும், பரத சாஸ்திரத்தைப் பயின்றும், இசை பாடியும் நடனமாடியும் சிறப்புப் பெற்று 'மகாவித்துவவசி' என்ற பட்டமும் பெற்றவர். அவரது கோத்திரத்தில் உதித்த வெள்ளையம்மாள் என்பாரும் கல்வியிற் சிறந்தவராய்த் திகழ்ந்து பர்வதம் என்ற புத்திரியையும், காந்தப்பர் என்ற புத்திரனையும் பெற்றார். பர்வதத்திற்குப் பிறந்த காமாட்சி என்னும் தேவதாசியே அஞ்சுகத்தின் பாட்டியாவார். காமாட்சி தனது மகளான கமலாம்பிகைக்குப் பத்து வயதில் திருப்பொட்டுத்தாரணம் என்னும் பொட்டுக்கட்டும் சடங்கை நிகழ்த்தினார். காமாட்சியார் தனது மகள் கமலாம்பிகைக்குச் சிறப்பான தமிழ்க் கல்வியையும் கற்பித்து, திருவாரூர் பரத சாஸ்திர வித்துவானாகிய மருதப்ப நட்டுவனாரிடம் ஆடற்கலையையும் பயிற்றுவித்தார்.
1850 இல் யாழ்ப்பாணம் கைதடியைச் சேர்ந்த விக்கினேசுராலய தருமகர்த்தாவான காசிநாத முதலியாரின் மகன் வேலப்ப முதலியார், தமிழகத்திலுள்ள குளிக்கரைக்கு சிவஷேத்திர தரிசனம் செய்யச் சென்ற வேளையில், கமலாம்பிகையின் நடனச் சிறப்பைப் பார்த்து, தமது திருக்கோயில் உற்சத்துவத்துக்காகக் காமாட்சியையும் அவரது பதினொரு வயது மகள் கமலாம்பிகையையும் கைதடிக்குச் கொண்டுவருகிறார்.
கமலாம்பிகையும் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கி, அவரது கீர்த்தி யாழ்ப்பாணம் முழுவதும் பரவியது. அப்போது கொழும்பில் பிரபலம் பெற்றுத் திகழ்ந்த பொன்னம்பல முதலியாரின் திருமண வைபவத்தில் நடனமாடக் கமலாம்பிகை அழைக்கப்பட்டு, அவர் அங்கு சென்று, நடனமாடிக் கீர்த்தி பெற்றார். பின்னர், கமலாம்பிகை பிரசவத்திற்காக, தமிழ்நாட்டில் குளிக்கரைக்குத் தன் தாயாருடன் சென்று, அங்கு சந்தானவல்லி என்ற பெண் குழந்தையைப் பெற்றார். கமலாம்பிகையின் தாயார் காமாட்சியாரும் சில காலத்தின் பின் மரணமுற்றார்.
இந்நிலையில், கைதடி ஆதீனகர்த்தாக்கள் குளிக்கரையிலிருந்து மீண்டும் கமலாம்பிகையையும் அவரது மகள் சந்தானவல்லியையும் கைதடிக்கு அழைத்து வந்து, கோவில் பணிகளில் ஈடுபடுத்தினர். அங்கு வாழும் காலத்தில், கமலாம்பிகை அன்னம்மாள் என்ற இரண்டாவது மகவைப் பெற்றார்.
கமலாம்பிகையின் மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு ஆடல் பாடல்களைக் கற்பிப்பதற்கு, கமலாம்பிகையின் மைத்துனரும், பாட்டு, நட்டுவாங்கம், மிருதங்கம், தவில் முதலியவற்றிலே கீர்த்தி பெற்றவருமாகிய புன்னைவனம் நட்டுவனார் அவர்களைத் தமிழகத்தின் திருப்புகலூரினின்றும் அழைப்பித்திருந்தார். இவரது தவில் வாசிக்கும் திறமையை வியந்து, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின், தமையனாரும், சிறந்த வித்துவானும் சங்கீதத்தில் வல்லுநருமாகிய ஸ்ரீலஸ்ரீ பரமானந்தப் புலவர் அவர்கள் சிங்கமுகச் சீலையும் வெள்ளிக் கழியும் பரிசளித்தார்கள்.
இக்காலத்தில், கொழும்பில் சிவாலயப் பிரதிஷ்டா கும்பாபிஷேகத்திற்கு வருமாறு பொன்னம்பல முதலியார் வேண்டியதை அடுத்து, கமலாம்பிகை தமது இரு புதல்வியர்களோடும், பரத சாஸ்திர வித்துவான் புன்னைவனம் நட்டுவனாரோடும் கொழும்பு வந்தார். கொழும்பு சிவாலயத்திலே கணிகையராகத் திகழுமாறு பொன்னம்பல முதலியார் கேட்க, அதற்கிணங்க, கமலாம்பிகை தனது மூத்த புதல்வி சந்தானவல்லிக்கு பொட்டுகட்டி அவ்வாலயத்தின் கணிகையாக்கினார்.
(தொடரும்)
இலங்கையில் தேவதாசிகள்
SATURDAY, JULY 18, 2015
Posted by Mani Srikanthan at 8:58 PM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -8
அருள் சத்தியநாதன்
நாகரத்தினம் அம்மாள் ஒரு தேவதாசியானாலும் தன் இசை, நடன திறமையால் அன்றைய மெட்ராஸ் மாநிலத்தில் மக்கள் மத்தியில் கௌரவமான இடத்தை அவரால் பெற முடிந்திருந்தது. அவருக்கு சென்னை சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், தனவந்தர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. மெட்ராஸ் மாநிலத்து உயர் குடியினர் அவரை கௌரவமாக நடத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் தேவதாசி முறை இந்து சமயத்தின் ஒரு அங்கம் என்றும் தேவ சேவைக்கு பெண்களை அர்ப்பணித்தல் என்பது சமயக் கடமை என்றும் கருதியதாகவே அறிய முடிகிறது. இந்த நம்பிக்கைக்கு அப்பால் பெண்களை இழிவுபடுத்தல், அடிமைப்படுத்தல், விபசாரத்துக்கு உட்படுத்தல், நவீன காலத்துக்கு ஒவ்வாத தன்மை இதில் இருப்பது போன்ற அம்சங்கள் பற்றி சிந்திக்கும் திறன் பலரிடம் இருக்கவில்லை. தேவதாசி முறை ஒழிப்பு என்பது இந்து கலாசாரத்தில் உள்ள ஒரு பண்பை அழித்தொழிப்பதாகும் என்றே தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் கருதினர்.
முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்பட வேண்டும் என்ற தன் கருத்தை வெளியிட்டது 1926 ஆம் ஆண்டு. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியதால் 1947 ஆம் ஆண்டிலேயே மெட்ராஸ் சட்டசபையில் இதை சட்டமாகக் கொண்டுவர முடிந்தது என்பதில் இருந்தே தேவதாசி முறையை ஒழிக்க சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் எவ்வளவு தூரம் தயங்கினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணக்கரு 1926 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பிரசவித்துவிட்டது. இதை ஒழிக்கப்பாடுபட்ட முத்துலட்சுமி ரெட்டியும் கூட தேவதாசி மரபில் வந்த பெண்மணியே. 1900 முதல் எழுந்திருந்த எதிர்ப்பு அலைகளை உள்வாங்கிக் கொண்டதாலேயே, இம்முறையை ஒழித்தேயாக வேண்டும் என்ற உறுதியை இறுதிவரை அவரால் கொண்டிருக்க முடிந்தது. இந்த தொடர்ச்சியான எதிர்ப்பலைகள் காரணமாக கோவில்களில் தேவதாசியரை அமர்த்துவதில் கோவில் நிர்வாகங்கள் அசட்டையாக இருக்கத் தொடங்கின. தேவதாசியர் குலத்தில் வந்த பெண்கள் கோவில்களில் சேவையாற்ற வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தவில்லை. 1920 ஆம் ஆண்டளவில் பெருமளவிலான தேவதாசியர் கோவில் பணியாற்றுவதில் இருந்து விலகியிருந்தனர். தேவதாசியர் தொடர்பான விவகாரம் சர்ச்சையாக மாறியிருந்ததே இதற்குப் பிரதான காரணம்.
தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்படாமல் இருப்பதற்காக நாகரத்தினம் அம்மாள் பல முயற்சிகள் மேற்கொண்டார். முடிந்தவரை போராடினார். சட்டம் வருவதை தாமதிக்கச் செய்தார். ஆனால், தேவதாசி முறைக்கும் தேவதாசி குலத்துக்கும் சாவுமணி அடிக்கப்படப் போவதை அவர் நன்குணர்ந்திருந்தார். அதனால்தான் அவர்தன் வழிமுறைகளை மாற்றி அமைத்துக் கொண்டு, மேடைக் கச்சேரிகள், பக்தி மார்க்கம் என நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.
தேவதாசியர் தமது காலத்தில் ஆடிய ஆட்டம் சதிர் என அழைக்கப்பட்டது. இந்த சதிராட்டமே பின்னர் பரத நாட்டியம் எனப் பெயர் பெற்றது. ஆனால் இவர்கள், தாம் ஆடிய சதிர் ஆட்டம் பிற்காலத்தில் பரத நாட்டிடியம் எனப் பெயர்பெறும் என்பதை அறிந்திருக்கவில்லை. தேவதாசியர்களே தமிழுக்கு பரத நாட்டியத்தை அளித்தவர்கள் என்பது பிற்காலத்தில் மூடி மறைக்கப்பட்டது. பரத முனிவர் அருளிய நடன வடிவமே பரத நாட்டியம் என்ற உருவாக்கம் பின்னர் எழுந்ததோடு, பரத நாட்டியம் பயில்வோருக்கு அப்படியே சொல்லப்பட்டது. தேவதாசியரின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டு, பரத நாட்டியத்துக்கு தெய்வீக முலாம் பூசப்பட்டது. தேவதாசியர் முறை ஒழிக்கப்பட்டபோது, அவர்கள் ஆடிய நடன வடிவத்தை உயர் குடியைச் சேர்ந்தவர்கள் எடுத்துக்கொண்டு அதை வளப்படுத்திக் கொண்டனர். சதிராட்டம் கேவலமான நடன வடிவம் என்றும் பரதநாட்டியம் தெய்வீகக்கலை என்றும் பிரித்து கற்பிக்கப்பட்டு அதுவே உண்மை போலக் காட்டப்பட்டது. ஏனெனில் தேவதாசியரின் சதிராட்டமே பரத நாட்டியம் என்பதை ஒப்புக் கொள்வது, இதை ஆடும் உயர்குல நடன மணிகளுக்கு இழுக்காக அமையும் என்பதே இதற்கான காரணமாகும். எனினும் பிற்காலத்தில் பரத நாட்டியத்தின் தொன்மை குறித்து ஆராய்ந்த நேர்மையான ஆய்வாளர்கள், உண்மையை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வெளிக்கொண்டுவந்தனர்.
எனவே, யாருக்கு பெருமை போய்ச்சேர வேண்டுமோ அவர்களுக்கு அதை வழங்குவதே சரியானது. ஏனெனில் தமிழர்களுக்கென ஒரு நாட்டியத்தை உருவாக்கி அதைக்காப்பாற்றி வந்தவர்கள் தேவதாசி குலத்தினரே. கர்நாடக சங்கீதத்தையும் பரத நாட்டியத்தையும் தந்தவர்கள் இவர்களே என்பதை மூடி மறைப்பது எவ்வகையிலும் நேர்மையாக அமையாது.
'எனவே இக்கலையின் தமிழ் வேர்களையும், அதைக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படிச் சொல்வது யாராக இருந்த போதிலும் அதை நாம் வரவேற்க வேண்டும். இன்றைய பரதநிகழ் வடிவத்தை (format) அமைத்துத் தந்தவர்கள் தஞ்சை நால்வர் எனும் இசை வேளாளர் மரபினர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டபக் கூரையில் இந்த நால்வர் நட்டுவாங்கம் செய்ய ஒரு தேவதாசி மங்கை நடனமாடும் ஓவியம் உள்ளது' என்று குறிப்பிடுகிறார் அ. மார்க்ஸ் தனது 'தேவதாசி முறையும் பரதநாட்டியமும்' என்ற கட்டுரையில்.
தமிழகத்தில் தேவரடியார் மரபு என்ற நூலை கலாநிதி நர்மதா எழுதியுள்ளார். தற்போது அவர், பரத நாட்டியத்தில் தேவரடியார் மரபு பற்றி ஒரு நூலை எழுதி வெளியிடவுள்ளார். பி.எம். சுந்தரம் என்பவர் தேவரடியார் பற்றி ஒரு நூலை எழுதியிருக்கிறார். லஷ்மி விஸ்வநாதன் WOMEN OF PRIDE THE DEVADASI HERITAGE என்றொரு நூலை எழுதியுள்ளார். நடனமணி பாலசரஸ்வதி குறித்த ஒரு ஆவணப்படத்தை 'பாலா' என்ற பெயரில் சத்யஜித்ரே எடுத்துள்ளார்.
'சொர்ணமால்யா தனது பிச். எச்.டி. ஆய்வுக்காக 'ரகுநாத அபுதவமு' என்ற நாட்டியம் குறித்து ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில், பரத நாட்டியம் என இன்று அறியப்படும் நடனத்தில் பாரசீக நடனத்தின் பாதிப்புக் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. சொர்ணமால்யாவின் ஆய்வு நேர்முகத் தேர்வின்போது உயர்சாதி அறிவுஜீவிகளும் கல்வியாளர்களும் இதற்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றனர். அதாவது அவர்களால் போற்றப்படும் நாட்டிய மரபில் பாரசீக அல்லது முஸ்லிம் பண்பாட்டுத்தாக்கம் உள்ளது என்ற உண்மையை அவர்கள் ஏற்கத் தயாரில்லை என்பதையே இது வெளிப்படுத்தியது. மேலும் பரத நாட்டியத்தில் தேவதாசியரின் பங்களிப்பு குறித்து சொர்ணமால்யா கொடுக்கும் அதிக அழுத்தமும் இந்த உயர்குடி அறிவு ஜீவிகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதை 'யாதும்' என்ற ஆவணப்படத்தைத் தயாரித்த கோம்பை அன்வர் சுட்டிக்காட்டுகிறார். குடந்தை கோவில் சிற்பமொன்று எல்லோரும் கருதுவதுபோல கிருஷ்ணனல்ல என்றும் அது தமிழ் கடவுளான முருகனுடையது என்றும் சொர்ணமால்யா ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை பரதநாட்டியத் தாரகையான பத்மா சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்திருந்தாராம்.
இத்தகவல்களை எல்லாம் அ.மார்க்ஸ் தனது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.




தேவதாசி வரலாறு -7
அருள் சத்தியநாதன்
தேவதாசி முறையை ஒழித்துக் கட்டுவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்ட மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியாலும் முதல் முயற்சியில் இப்பிரேரணையை மதராஸ் சட்ட சபையில் நிறைவேற்ற முடியாமல் போனது. பல ஆண்டுகளின் பின் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதியே சென்னை சட்ட சபையில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரேயே 1927 முதல் தேவதாசி முறைக்கு எதிரான கிளர்ச்சி படிப்படியாக வலுப்பெற ஆரம்பித்து விட்டது. 'தேவதாசிகள் இந்து சமயம் என்ற போர்வைக்குள் இருந்து செயல்படும் விபசாரிகள் மட்டுமே' என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாக உருப்பெற ஆரம்பித்து விட்டது. இதனால் இந்து மக்கள் மத்தியில் தேவதாசியருக்கு இருந்த மரியாதை சுத்தமாக அடிபட்டுப் போனது. இதற்கு கிறிஸ்தவ சமூக மறுமலர்ச்சி இயக்கத்தினரின் தீவிர பிரசாரமும் ஒரு காரணம். இக்காலகட்டத்தில் சமூக கௌரவம் கொண்டவராகவும் பெரும் பணக்காரராகவும் விளங்கிய தேவதாசி நாகரத்தினத்தை வீழ்த்த வேண்டும் எனச் சிலர் குறிவைத்துத் தாக்கி வந்தனர். இவர்களும் தேவதாசி முறைக்கு எதிராகக் கடுமையாகக் போராடினர். ஆங்கிலக் கல்வி கற்று பெரிய பதவிகளில் அமர்ந்திருந்தவர்களும் இதை ஒரு சமூக இழுக்காகக் கருதி இதன் முடிவுக்காக தீவிரமாகச் செயல்பட்டனர். ஆங்கிலத்தில் துண்டுப் பிரசுரங்களும் நூல்களும் வெளியிடப்பட்டன. இப்பிரசுரங்களில் தேவதாசி என்ற பதத்துக்கு பதிலாகக் 'கடவுளின் விபசாரிகள்' என்ற பதமே பிரயோகிக்கப்பட்டது.
தேவதாசி முறை படிப்படியாக செத்து மடிந்து வருவதைக் கண்டு கொண்ட நாகரத்தினம், அதற்கு முன்பாகவே தன் வழிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டார். நடன நிகழ்ச்சிகளை நடத்துவது, இசைக்கச்சேரிகளை அரங்கேற்றுவது, வானொலி பாட்டுக் கச்சேரிகளை நடத்துவது என வருமானத்துக்கு வேறு வழிகளை அவர் தேடிக் கொண்டிருந்தார்.
1929 இல் மதராஸ் மாநகராட்சி அக்காலத்தில் புதிதாக அறிமுகமாயிருந்த வானொலி சேவையை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தது. தமிழ் மக்களின் பிரதான பொழுதுபோக்கு சாதனமாக வானொலி நிகழ்ச்சி மாறியிருந்தது. மெரினா கடற்கரை, பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டு வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மாலை 5.30 முதல் 7.30 வரை இசைக்கச்சேரிகள் ஒலிபரப்பப்பட்டன. இதைக் கேட்பதற்காக பொது இடங்களில் மக்கள் பெருமளவில் கூடினர். முசிறி சுப்பிரமணிய ஐயா, டைகர் வரதாச்சாரியார், ஹரிகதை சி. சரஸ்வதி பாய், எல். முத்தையா பாகவதர், 'வித்யா சுந்தரி, கானகலா விசாரத்' பெங்களுரு நாகரத்தினம்மா ஆகியோரின் வானொலி கச்சேரிகள் அக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்தன. நாகரத்தினம்மாவின் பெயர் வானொலி அறிவிப்பாளரினால் உச்சரிக்கப்படும்போது இப்பட்டங்களுடனேயே உச்சரிக்கப்பட்டது என்பது, அவருக்கிருந்த சமூக கௌரவத்தை புலப்படுத்துகிறது. அதாவது தேவதாசி என்ற 'இழிநிலை'யில் இருந்து மீண்டு இன்னொரு பரிமாணத்தை அவர் எட்டியிருந்தார். இதன் உச்ச நிலைதான் தியாகராஜ சுவாமிகளின் சமாதிநிலை அழிவில் இருந்து மீட்டு ஒரு இசைக் கோவிலாக அதை மாற்றி அமைத்த அவரது திருத்தொண்டாகும்.
தியாகராஜ சுவாமிகளை எடுத்துக் கொண்டால் அவர் தேவதாசிகள் பேரில் என்றைக்குமே நல்லபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. தேவதாசிகளை வெறுத்து ஒதுக்கியவராகவே தியாகராஜ சுவாமிகள் அறியப்படுகிறார். ஆனால் திருவையாற்றில் கவனிப்பாரற்றுக் கிடந்த சுவாமிகளின் கல்லறையை புதுப்பித்து மண்டபம் கட்டி அக்கல்லறை அமைந்த காணியையும் வாங்கி பாதுகாத்தவர் ஒரு தேவதாசி என்பதை தியாகப்பிரம்மம் அறிவாரானால், இந்த முரண்பாடு பற்றிய அவரது உணர்வுகள் எப்படி இருந்திருக்குமோ? எழுத்தாளர் மாலன் ஒரு முறை எழுதிய வரிகள் இங்கே மிகவும் பொருத்தமுடையதாக இருக்கும்.
அரசர்கள் இவனைப் போற்றினார்கள்
வித்வான்கள் இவனை விற்றுப் பிழைத்தார்கள்.
ஆனால் ஒரு தாசி அல்லவோ
இவனுக்கு கோவில் கட்டினாள்!
நாகரத்தினம்மா மிகுந்த செல்வம் மற்றும் செல்வாக்கோடு வாழ்ந்தவர். ஆனால் தேவதாசி யுகம் முடிவுக்கு வந்த பின்னர் அவர் சென்னையிலும் வேறு இடங்களிலும் தமக்கிருந்த சொத்துகளை விற்று தியாகையரின் சமாதி அமைந்திருக்கும் பகுதிக்கே குடிபெயர்ந்தார். தன் இறுதிக் காலத்தை அங்கேயே, தியாகப் பிரம்மத்தின் வழிபாட்டில் கழித்தார். இந்த வகையில் தேவதாசி வரலாற்றில் பிரபலம் பெற்ற தேவதாசிமார்களின் வரிசையில் இவரும் இடம்பெறுகிறார். நாகரத்தினம்மா சென்னை ஜோர்ஜ் டவுனில் எவ்வளவு ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பதை மருத்துவர் கே. என். கேசரி இவ்வாறு விவரிக்கிறார். சென்னையில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் விளையாட்டு விழாவுக்கு நாகரத்தினம் வருகை தந்தபோது....
'பிரதான வாயிலில் யாரையோ பார்க்க மக்கள் ஒடுவதைப் பார்த்து நானும் அங்கு சென்றேன். பெங்களுரு நாகரத்தினம்மா வருவதாகச் சொன்னார்கள். அவர் தன் பரிவாரங்களுடன் வந்த காட்சி அப்படியே என் நினைவில் உள்ளது. அவருக்கு முன்னால் ஒரு பணிப்பெண் வெள்ளிக் கூஜாவில் கோப்பியுடன் சென்றாள். மற்றொருத்தி வெண்ணீருடனும் இன்னொருத்தி வெற்றிலைப் பெட்டியுடனும் சென்றார்கள். ஒரு பணிப்பெண் ஆலை விசிறியால் எஜமானிக்கு விசிறிக் கொண்டே சென்றாள். அவர்கள் அனைவருமே சர்வலங்கார பூஜிதைகளாக இருந்தனர். நாகரத்தினம்மா பட்டுப் புடவை அணிந்து, வைரங்கள் பளபளக்க ஒளிக்கதிர்போல நளினமாக நடந்து சென்றாள். அனைவரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அவர் யார் என்று நான் விசாரித்தபோது, அவர் மிகவும் படித்தவர், ஒரு பண்டிதை என்று சொன்னார்கள். அன்றிலிருந்து நான் தவறாமல் அவரது கச்சேரிகளுக்கு சென்றுவர ஆரம்பித்தேன்.
தேவதாசி என்பதைவிட இசைஞானம் மிக்க சிறந்த பாடகி என்பதற்காகவே அவர் பலராலும் மதிக்கப்பட்டார்.
நடனமாடும் தேவதாசியர், ஆரம்பகால இந்திய சினமாவில் நடிக்கவும், நடனமாடவும் தேவதாசி குலப் பெண்களே முன்வந்தனர். கச்சேரிகளில் பாடல்கள் பாடி, இசைக்கருவிகளை இசைத்ததும் இக்குலத்தினரே பாடுவது மற்றும் பரதநாட்டியம் என்பன சமூக அந்தஸ்து பெற்றதுமே பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் இத்துறைகளுக்கு வந்தனர்.
(தொடரும்)
தேவதாசி என்ற பெயரை துறந்து
தியாகராஜரின் அடிபணிந்த நாகரத்தினம்மா
வயதான தேவதாசி
முத்துக்கண்ணம்மாள்
அன்றைய பரத நாட்டிய உடைகளோடு
இரு தேவதாசிமார் தமது குழுவினரோடு
FRIDAY, MARCH 27, 2015
Posted by Mani Srikanthan at 10:05 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -6
அருள் சத்தியநாதன்
இ ந்துமதம் சாதியை ஒரு தூணாகக் கொண்டது. மனிதர்கள் தொழில் அடிப்படையில் சாதிகளாக வகுக்கப்பட்டனர். ஆண்களுக்கு இன்பத்தையும் ஓய்வு - அமைதியையும் அளிக்கும் கடமை இவ்வகையில் பரத்தையர் குலத்துக்கு விதிக்கப்பட்டது. ஆண்களுக்கு இன்பம் அளிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வாழ்தலே இவர்களுக்கு விதிக்கப்பட்ட தர்மம். அதனால், அன்றைய இந்திய சமூகத்தின் சிருங்காரச் சுவையை பேணி வளர்க்கும் பொறுப்பு இவர்களிடம் வந்து சேர்ந்தது. பிற்காலத்தில் வெகுஜன கலை என்பது நாடகமாகவும், சினமாவாகவும் மாறிப்போனது. பண்டைய இந்தியச் சூழலில் பத்து, இருபது பேர் அமர்ந்து ஒரு கணிகைப் பெண் ஆடும் சிருங்கார நடனத்தைப் பார்த்து பரவசப்பட்டு மகிழ்ந்தார்கள். இன்றைக்கு அதே சுவையை இன்றைய காலச் சூழல்கள் விருப்பங்களுக்கு ஏற்ப சினமாவும் இசை நிகழ்ச்சிகளும் தருகின்றன. பழைய கள் புதிய மொந்தையில் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்.
கோவில் உற்சவங்களில் பெண்கள் இன்றைக்கு நடனமாடுவதில்லை. அது தடை செய்யப்பட்ட ஒன்று. ஆனால் அதன் இன்னொரு வடிவம் பரத நாட்டியமாக கோவிலுக்கு வெளியே அரங்கேறுகிறது காதலனை நினைத்து பெண் விரகதாபம் மேலிட உருகுவது போன்ற சிருங்கார அம்சங்களைக் கொண்ட நாட்டியங்களே இன்றைக்கும் அரங்கேறி வருகின்றன. கண்ணன் - ராதை, கண்ணன் கோகுல மங்கையர், ரதி - மன்மதன், ராமனை எண்ணி சீதை உருகுதல் போன்ற நடனக் கதைகளின் மூலமே நளினமான, சிருங்கார சுவை மிக்க நடன மற்றும் அங்க அசைவுகளை பார்வையாளர்களை சொக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்த முடிகிறது. தமிழ்ப் படங்களை எடுத்துக் கொண்டாலும், காதலைத்தான் திரும்பத் திரும்ப தீவிரமாகவும், மிகையாகவும், மெல்லியதாகவும் எதிர்மறையாகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏனெனில் சிருங்காரச் சுவை என்பது மனிதனைப் பொறுத்தவரை நகமும் சதையும் போன்றது. மனிதனுக்கு அது ஊக்குவிப்பு டொனிக். மனிதனின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும் இயங்கு சக்தியாகவும் சிருங்காரம் திகழ்கின்றது. சிருங்காரத்தை மறுதலிக்க முயன்ற எந்த சமய, கோட்பாடும் நிலைத்ததும் இல்லை, மக்கள் அபிமானத்தைப் பெற்றதும் கிடையாது. அவை பின்னர் தமது நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டதே வரலாறு.
தமது பிறப்பு உறுப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆடை கண்டு பிடிக்கப்பட்டது. ஆண்களும் பெண்களும் முதலில் தமது பிறப்புறுப்புகளைத்தான் மறைத்துக் கொண்டார்கள். மிக நீண்ட காலமாக பெண் மார்பகங்கள் ஆண்களினால் கவர்ச்சி உறுப்புகளாகப் பார்க்கப்படவில்லை. மிகப் பிற்காலத்தில்தான் மார்பகங்களைப் பெண்கள் மறைத்துக் கொண்டார்கள். பெண்களை வர்த்தகமயப்படுத்தும் சூழல் ஏற்பட்ட பின்னரேயே, மார்பகங்கள் கவர்ச்சிப் பொருளாகின.
இந்திய கலாசாரம் பெண்களை சிருங்காரத்தின் அடையாளமாகப் பார்த்தது உண்மையென்றாலும் பெண்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கவும் தயங்கவில்லை. ஆணும் பெண்ணும் சமம் என்பதை அர்த்த நாரீஸ்வர கோட்பாடு புகட்டுவதாக உள்ளது. பெண் தெய்வங்களுக்கு உரிய இடம் வழங்கப்பட்டது. பெண், சக்தியின் வடிவமாகப் பார்க்கப்பட்டாள். பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையின் ஆரம்ப கட்டத்தை எடுத்துக் கொண்டால் அதன் நோக்கம், பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. பெண்களைப் பாதுகாக்காவிட்டால், இனப்பெருக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட முடியும் என்பதே அக்கட்டுப்பாடுகளுக்கான ஆதார அம்சமாக விளங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எனினும் பிற்காலத்தில் இக்கட்டுப்பாடுகள் ஆண்களினால் பெண் அடக்குமுறைக்கு பயன்படுத்தப்பட்டமை ஒரு சோக வரலாறு.
தேவதாசியர் வரலாற்றில் இறுதியாக புகழ்பெற்று விளங்கி மறைந்தவராக நாம் நாகரத்தினம் அம்மாளைக் குறிப்பிட முடியும். வெங்கட கிருஷ்ணன் ஸ்ரீராம் என்பவர் ஆங்கிலத்தில் நாகரத்தினம் அம்மாளைப் பற்றி DEVADASI AND THE SAINT என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்நூல் பத்மா நாராயணனால் தமிழ்ப்படுத்தப்பட்டு தேவதாசியும் மகானும் என்ற பெயரில் காலச் சுவடு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. ஒரு தேவதாசியின் மகளாக 1878 ஆம் ஆண்டு நவம்பர் மூன்றாம் திகதி இவர் கர்நாடகம் தேவண்ண கோத்தா என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய அம்மாவின் பெயர் புட்ட லக்ஷம்மா வைஷ்ணவி.
புட்ட லக்ஷம்மா இவரை வளர்த்து ஆளாக்குவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். சிறுவயதில் இருந்தே பாட்டு, நடனம், வயலின், ஆங்கிலம், தெலுங்கு, தமிழ் என பல வித்தை வேண்டும் என்பதே புட்ட லக்ஷம்மாவின் இலட்சியமாக இருந்தது. நாகரத்தினம் தேவதாசியின் மகள் என்பதால், அழைப்பதற்கு அவருக்கு அப்பா இல்லை. தேவதாசி மகள், மகன்மார் எப்போதும் தாய் வழியாகவே அறியப்படுவர். நாகரத்தினத்தின் அப்பா மைசூரைச் சேர்ந்த சுப்பண்ணா என்ற பிரபலமான பிராமணர் என்று அறிய முடிகிறது. அக்காலத்தில் புட்ட லக்ஷம்மாவை ஆதரித்து வந்தவர் சுப்பாராவ் என்ற ஒரு பிரபலமான சட்டத்தரணி.
புட்ட லக்ஷம்மா காசநோய் கண்டு மரணமடைந்தார். அச்சமயத்தில் பல்மொழித் தேர்ச்சியும், ஆடல் பாடல்களில் சிறப்புப் பெற்றவராகவும் நாகரத்தினம்மா திகழ்ந்தார். அப்போது நாகரத்தினம் பெரிய அழகி அல்ல. நடு உயரம். சிவந்த மேனி. பருமனான உடல். ஆனால் சருமம் மாசுமருவின்றி பளபளப்பாகக் காட்சியளித்தது. சுருண்ட கரிய கூந்தல். அழகிய வசீகரிக்கும் கண்கள் அவளது பெரும் சொத்தாக விளங்கியதோடு வெகு புத்திசாலியாகவும் திகழ்ந்தார். இவற்றையெல்லாம் அனுமானித்த அந்தத் தாய் இவள் இனி தனியாகவே பிழைத்துக் கொள்வாள் என்ற நிம்மதியுடன் உயிரைவிட்டாள்.
வரலாற்றில் பல புகழ்பெற்ற தேவதாசிமார் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நாகரத்தினம்மாள் புகழ் பூத்த கடைசி தேவதாசி என்று நிச்சயமாகக் கூற முடியும்.
அவர் தன் வாழ்நாளில் தன்னை ஒரு தேவதாசி என்பதை என்றைக்கும் மறைக்க முனையவில்லை. அவர் காலத்தில் அவர் கண்முன்பாகவே தேவதாசி முறை படிப்படையாக சமூக அந்தஸ்தை இழக்க ஆரம்பித்தது. இந்தியாவை ஆண்ட வெள்ளையர்களுக்கும், திருமணமாகாத பெண்களை கடவுளுக்கு நேர்ந்து விடுதல் என்ற சமூக நடைமுறை வியர்வையும் முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. கிறிஸ்தவ பாதிரிமார் இந்து சமயத்துக்கு எதிரான தமது பிரசாரங்களுக்கு, பெண்களை நேர்ந்து விடும் இம்முறையை, ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
1927இல் கெதரின் மேயோ என்ற அமெரிக்க பத்திரிகையாளர் இம்முறையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவ்வழக்கம் குறித்து ஆய்வு செய்து 'மதர் இன்டியா' என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். பல இந்து பழக்க வழக்கங்களைக் கண்டித்து எழுதிய அவர், ஏன் அரசாங்கம் இவற்றைத் தடை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று வியப்பும் தெரிவித்திருந்தார். தேவதாசி முறையை தடை செய்யும்படி விக்டோரியா மகா ராணியாருக்கும் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் காலணி நாடுகளில் காணப்படும் மத, கலாசார விடயங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையை லண்டன் கடைப்பிடித்து வந்ததால் இம்மனு நிராகரிக்கப்பட்டது. டில்லியை மையமாகக் கொண்ட ஆங்கிலேய அரசின் ஆட்சியாளர் வைஸ்ராயுக்கும் சென்னை மாகாண கவர்னருக்கும் சமர்ப்பிக்கப்பட்ட தேவதாசி ஒழிப்பு மனுக்களும் இதே காரணத்தின் அடிப்படையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.


to: Posts (Atom)
SATURDAY, MARCH 7, 2015
Posted by Mani Srikanthan at 12:00 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -5
அருள் சத்தியநாதன்
கோவில்களை இன்று நாம் இறைவனை வணங்கும் இடம் என்று மட்டுமே அறிகின்றோம். பண்டைய கோவில்கள் என்றால், வணங்குவதற்கு மட்டுமின்றி அதன் கலையம்சங்களுக்காகவும் பலர் அங்கே சென்று வருகின்றனர். தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற பண்டைய கோவில்கள் வசீகரிப்பதற்கு, அவை கலைக்கோவில்களாக விளங்குவதே காரணம்.
பண்டைய காலத்தில் கோவில்களை அரசர்கள் தாம் வணங்குவதற்காக மட்டும் அமைக்கவில்லை. ஒரு கோவிலை அமைப்பது என்பது செலவுமிக்கக் காரியம். பல வருடங்கள் பிடிக்கும். ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வேலை செய்வதன்மூலமே ஒரு பெருங்கோவிலை அமைக்க முடியும். இவ்வளவு காலத்தையும், பொருளையும் விழுங்கும் ஒரு கோவிலை அமைப்பதற்கு அரசனின் கடவுள் பக்தி மட்டுமே காரணமாக இருக்க முடியாது. தான் அமைக்கும் கோவில் தன் சிறப்புகளைச் சொல்வதாக, தன் ஆட்சியின் மேன்மையை பேசுவதாக இருக்க வேண்டும் என அரசன் விரும்பினான். இதனால்தான் சிற்பங்களையும் வேலைப்பாடுகளையும் கொண்டதாக இக்கோவில்கள் அமைந்தன.
ஆயிரம் வருடங்களுக்கு முன் தஞ்சையில் ஒரு பிரமாண்டமான கோவிலை இராஜராஜ சோழனால் அமைக்க முடிந்தது என்றால், அதற்கு அவன் பேரரசனாக விளங்கியதே காரணம். பல நாடுகளையும் வென்று அதன்மூலம் பொன்னும், மணியும், அடிமைகளையும், தொழில்திறன் கொண்டவர்களையும் அவனால் தஞ்சைக்குக் கொண்டுவர முடிந்தது. எனவே, அவன் தன் நாட்டின் வளத்தையும், தன் கீர்த்தியையும் ஒரு பிரமாண்டமான கோவில் அமைப்பதன் மூலம் வெளிப்படுத்தினான். அழகிய, நேர்த்தியான, கலை நுணுக்கங்கள் கொண்ட ஒரு கோவிலை ஒரு அரசனால் அமைக்க முடிகிறது என்பதன் பொருள், அந்த அரசன் செல்வச் செழிப்பான வீரம் நிறைந்த நாடுடையவன் என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.
இது அன்றைய மன்னர் கலாசாரம். இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலக நாடுகளுக்கும் பொதுவானது.
மேலும் அன்றைய கோவில்கள், வங்கிகள் போன்று செயற்பட்டுள்ளன. அரண்மனை கஜானாவில் தன் செல்வத்தை வைத்திருப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதால் அரசர்கள் செல்வத்தின் ஒரு பகுதியை கோவில்களில் வைத்திருந்தனர். மூலவர் அலங்காரமாகவும் அரச செல்வம் வைக்கப்பட்டிருந்தது. மூல மூர்த்தி பொன்னாலும், உயர் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டதோடு பொன் மற்றும் இரத்தினங்களினால் கோவில் சுவர்களும், உத்திரங்களும் அதன் மேற்புறமும் அலங்கரிக்கப்பட்டன. மன்னனின் கீர்த்தியை இவை வெளிப்படுத்தின.
கோவில் கிடங்குகளில் உணவுப் பண்டங்கள், குறிப்பாகத் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. அரச வருவாயின் ஒரு பகுதி இன்று ஏழை மக்களின் வறுமையைப் போக்கும் உதவித் திட்டங்களாக செயற்படுத்தப்படுவதைப் போலவே அன்று, கோவில்கள் ஊடாக ஏழைகளுக்கு தானியங்கள் வழங்கப்பட்டன. அன்னதானம் நடைபெற்றது. கோவில் மண்டபங்கள் வழிப்போக்கர் தங்கும் இடமாகவும் விளங்கியது. மொத்தத்தில் கோவில் என்பது பல் நோக்கங்களைக் கொண்டதாகவும் குறிப்பாக அரசின், அரசனின் கீர்த்தியை எடுத்துக் காட்டுவதாகவும் விளங்கின.
இக்கோவில்களில் ஆடல் மகளிர்கள் நியமிக்கப்பட்டதும் இவ்வகையில்தான். ஒரு நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்கு ஒரு முக்கிய பிரமுகர் விஜயம் செய்கிறார் என்றால் அவரை விமான நிலையத்திலோ அல்லது வைபவமொன்றிலோ வரவேற்கும்போது ஆடல் பாடல்களுடன் வரவேற்கும் பண்பு இன்றும் வழக்கில் உள்ளது. அந்தந்த மண்ணுக்குரிய பண்புகள் இப்பாடல்களிலும் நடன அசைவுகளிலும் வெளிப்படுவது வழக்கம். பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்றாலும் இதே பண்பைக் காண முடியும். அரசவைகளிலும் அரசனையும், மந்திரி பிரதானிகளையும், விருந்தினர்களையும் மகிழ்ச்சிப்படுத்த நடன மணியினர் இருந்தனர். ஒரு பிரமுகரை வரவேற்று அவரை சிறப்பு அதிதியாகப் போற்றும்போது அங்கே ஆடலும் பாடலும் அவசியமாகிறது. நிச்சயமாக இது அப்பிரமுகரை மகிழ்ச்சிப்படுத்தும், கௌரவப்படுத்தும்.
கோவில்களில் ஆடல் மகளிர் நியமிக்கும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, தன்னை மகிழ்ச்சியாகவும் பிரச்சினைகளை தற்காலிகமாக மறந்திருக்கவும் எப்படி அரசவை ஆடல் பாடல்கள் மன்னனுக்கு உதவுகின்றனவோ அவ்வாறே தான் அமைத்த கோவில்களிலும் கடவுளை மகிழ்ச்சிப்படுத்தவும், அவன் திருவருளைப் பெறவும், வழிபாட்டு முறைகள் அலங்கார ரூபத்துடன் நடத்தப்படுவதற்கும் உதவும் வகையில் ஆடல் மகளிர்மாரை அரசர்கள் கோவில்களில் பணிபுரிய அமர்த்தினர் என்பதே பொருத்தமான பதிலாகும்.
ஆரம்ப காலத்தில் இப்பணியைச் செய்வதற்கு அரசவை நடன மணிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் இவர்கள் கோவில்களில் மட்டுமே ஆடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கோவில் மகளிர் தேவதாசியர் என வழங்கப்பட்ட அதே சமயம், அரசவை ஆடல் மகளிர், இராஜதாசியர் என அழைக்கப்பட்டனர். இராஜதாசியர் கோவில்களில் நடனமாடுவதில்லை. எனினும் அரசன் கோவிலுக்கு வரும்போது அவனுடன் வரும் வழக்கம் இருந்தது.
இது தவிர, மன்னன் போர்களில் வெற்றிபெற்று நாடு திரும்பும்போது வெற்றி கொண்ட நாட்டின் செல்வங்களை தனது நாட்டுக்கு கொண்டு வந்தான். இது, போர் பொருளாதாரம். இச்செல்வங்களில் அடிமைகளாக்கப்பட்ட பெண்களும் அடக்கம். கொல்லப்பட்ட எதிரி நாட்டு வீரர்களின், மந்திரி பிரதானிகளின் மனைவியர், மகள்மாரும் அடிமைகளாக அழைத்துவரப்பட்டு அந்தபுரங்களில் தங்க வைக்கப்பட்டனர். அரசன் தான் எடுத்துக்கொண்ட பெண்கள் போக ஏனைய பெண்களில் சிலரை கோவில் பெண்களாகக் கோவில்களுக்கு அளித்தான். ஏனைய பெண்கள் படைத்தளபதிகள் மத்தியில் பகிரப்படுவது வழக்கம். அன்றைக்கு பெண்களுக்கு இருந்த மதிப்பு இவ்வளவுதான்! இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெண்கள் நீண்ட இருள் சூழ்ந்த பாதையைக் கடந்து வந்திருப்பது தெரியும்.
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகராழ்வார் தன் மகள் நீலாதேவியை திருவரங்கக் கடவுளுக்கு தேவதாசியாக அர்ப்பணித்ததை (வரலாற்றில் தேவதாசியர் நூல் பக். 105 - ஆதாரம்: திருவாங்கூர் தொல்லியல் வரிசை ப. பக். 102 - 114) உறையூர் மன்னன் தந்த சோழன் மகள் சோழவல்லி தன்னைத்தானே இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டதையும், இங்கே தனிப்பட்ட ரீதியாகவும் இத்தொண்டுக்கு பெண்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை ஆதாரமாகக் காட்ட முடியும். சிலர் தமக்கு மகள் பிறப்பாள் என எதிர்பார்த்திருந்து மகள் பேறு கிடைக்காத நிலையில் ஏழைப்பெண்களை வாங்கி கோவில்களுக்கு அர்ப்பணிக்கும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது.
இராஜராஜசோழன் காலத்தில் ஒருவர் 700 காசுகளுக்கு நான்கு பெண்களை வாங்கி திருவாலங்காட்டு கோவிலுக்கு தேவரடியாராக அர்ப்பணித்ததாக ஒரு கல்வெட்டு செய்தி உள்ளது.
வறுமை காரணமாக ஆண்கள் தம்மை அடிமைகளாக விற்றுக்கொள்வதும் பெண்கள் வறுமை காரணமாக செல்வந்தர், கோவில்கள் மற்றும் மடங்களுக்கு தம்மை விற்றுக்கொண்டு தொண்டு செய்வதும் பண்டைய தமிழகத்தில் இடம்பெற்று வந்த ஒன்றுதான். மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் நிலவிய கொடிய பஞ்சத்தின்போது வறுமை தாங்க முடியாத சில குடும்பங்கள் தம்மை குடும்பத்தோடு கோவிலுக்கு விற்றுக்கொண்டதாகவும் இவர்களில் தேவரடியார் பணிக்கு பெண்களும் ஏனைய கோவில் பணிகளுக்கு ஏனையோரும் நியமிக்கப்பட்டதாகவும் பண்டைய செய்திகள் உள்ளன. எனவே, இக்கல்வெட்டு செய்திகளின் ஊடாக சோழர் ஆட்சிக் காலத்தில் தேவதாசியர் அடிமைமுறை மற்றும் விற்பனை முறை நடைமுறையில் இருந்ததை அறிய முடிகிறது.
இத்தேவதாசியினருக்கு இலச்சினை இடும் வழக்கமும் சோழர் காலத்தில் இருந்திருக்கிறது. சைவ, வைணவ தேவதாசியரை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் சைவாலய தேவதாசியினருக்கு சூல சின்னமும் வைணவ தேவதாசியினருக்கு சக்கரச்சின்னமும் பொறிக்கப்பட்டது.
சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள் கோவில் பணி செய்ய முன்வந்ததால், இவர்கள் அனைவரும் தேவரடியார் குலத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இக்காலத்தை தேவரடியார் மரபு உருவாகிக்கொண்டிருந்த பருவம் என்றும் கொள்ளலாம். தேவதாசி மரபுக்கு வெளியில் இருந்து பெண்கள் கோவில்களுக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடாது என்பதாலும், தேவதாசி குலத்தினரிடையே பொட்டு கட்டி விடும் வழக்கமும் தமது குழந்தைகளை தாய் வழியாக அறியும் வழக்கமும் தோற்றம் பெற்றிருக்கலாம். தேவதாசியர் தாம் பெற்றெடுக்கும் பெண் குழந்தைகளை பாட்டு, நடனம் என்பனவற்றில் பயிற்றுவித்து அவர்கள் வயதுக்கு வந்ததும் பொட்டு கட்டும் சடங்கை நடத்தி கோவிலுக்கு அர்ப்பணித்து விடுவார்கள். இதன்மூலம் தமது சந்ததியினர் தொடர்ந்தும் கோவில் பணி செய்வதன் மூலம் அந்த இடத்தை வெளியார் பிடித்து விடக்கூடிய ஆபத்தைத் தவிர்த்துக் கொண்டார்கள். கோவில் காணியிலேயே கோவில் அளித்த வீடுகளில் அவர்களால் தொடர்ந்து தங்கியிருக்க முடிந்ததோடு கோவில்களில் இருந்து கிடைக்கக் கூடிய பணம், உடைகள், உணவு என்பனவற்றைத் தொடர்ந்து அனுபவித்து வரவும் முடிந்தது.
(தொடரும்)
பெருங்கோவில்களை அரசர்கள் ஏன் அமைத்தார்கள்?
THURSDAY, FEBRUARY 19, 2015
Posted by Mani Srikanthan at 7:20 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -4
அருள் சத்தியநாதன்
சமூகத்தில் பரத்தன்மை, மிகப் பண்டைய கால முதலே இருந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து ஒருவருக்கு ஒருவராக வாழ வேண்டும் என்ற கோட்பாடு மிகப் பிற்காலத்திலேயே வழக்கத்துக்கு வந்தது. கிறிஸ்தவ மதம் பரவிய பின்னர் வந்த சிந்தனை என்றும் சொல்லலாம். ஏனெனில், பாலியல் தொடர்பு சம்பந்தமாக அம்மதம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பாவத்துக்கு பெண்ணே காரணம் என்று போதித்தது. பிரம்மச்சரியத்தை ஊக்குவித்தது. காமம் சாத்தானின் வேலை எனப் போதித்தது.
எனினும் ஒரு ஆணுடன் அல்லது பெண்ணுடன் மாத்திரமே காலம் முழுவதும் கழிக்க வேண்டும் என்ற விதி, உண்மையில் மனித இயல்புடன் ஒத்துப்போவதாக இருக்கவில்லை. எனவே களவொழுக்கம் பிறந்தது. மனைவி இருக்கையில் அவள் அறியாமல் பிற பெண்களுடன் ஆண் தொடர்பு வைத்துக் கொண்டான். காலப் போக்கில் அதற்கு சமூக அங்கீகாரமும், கௌரவமும் கிடைத்தது. ஆண்களுக்கு இந்த 'சேவை'யை ஆற்ற ஒரு தனிக்குலமும் தோன்றியது. பிற்காலத்தில் இதை ஒரு கலையாகவும் சிருங்கார சுவையுடனும் முன்னெடுத்துச் செல்ல இன்னொரு சமூகப் பிரிவு கடவுள் பெயரால் உருவானது. அதுதான் தேவதாசி குலம்.
இங்கே இன்னொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும்.
ஒரு பெண் போதாது என ஆண் வெளியே சென்றது போலவே திருமணமான பெண்ணும் பிற ஆண்களை நாடிச் சென்றாள். ஆனால் இது குடும்ப மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் தோற்றுவித்தது. இறுதிவரை சமூக அங்கீகாரம் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. நாகரிக முதிர்ச்சியும் சுதந்திரமும் கொண்ட மேற்கத்திய சமூகங்களினாலும், இன்றைக்கும்கூட பெண் கணவன் அல்லாத பிற ஆணுடன் பாலியல் தொடர்பு கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான எளிமையான காரணம், ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண் கணவனுக்கு 'துரோகம்' செய்ய அனுமதி கிடையாது என்பதுதான்.
ஒரு பெண் கணவனுடன் மாத்திரமே பாலியல் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற சமூகக் கட்டுப்பாட்டுக்கு எதிராகக் கிளம்பிய பெண்ணின் சமூகக் குரலே தேவதாசி குலம் இந்தியாவில் தோன்றுவதற்குக் காரணம் என்ற உளவியல் காரணத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் தேவதாசி குடும்ப வரையறைக்குள் வரமாட்டாள். அவள் திருமணம் செய்வதில்லை. ஆனால் எவரை வேண்டுமானாலும் கணவரைப் போல கருதி வாழ முடியும். குழந்தைகள் பெற்றுக்கொள்ள முடியும். அக்குழந்தைகள் தாய் வழியாகவே அறியப்பட்டார்களே தவிர, தந்தை வழியாக அல்ல. பரத நாட்டியத்தை பரத முனிவர் தோற்றுவித்தார் என்றும் அது தெய்வீகக் கலை என்றும் வர்ணிக்கப்பட்டாலும் இவை ஆதாரமற்ற கட்டுக்கதைகளே. விநாயகர் தந்தத்தை ஒடித்து பாரதக்கதை எழுதினார் என்றும் பாற்கடலைக் கடைந்து அமுது எடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுவதில் எவ்வளவு உண்மை இருக்க முடியுமோ அவ்வளவு உண்மையே, பரதம் தெய்வீகக் கலை என்பதிலும் உள்ளது. பரத்தையர் ஆடிய நடனம் என்பதாலேயே அதற்கு பரத நாட்டியம் என்ற பெயர் வந்தது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் காலத்தில் தேவதாசி முறை உச்சத்தில் இருந்தது எனக் கூறப்படுகின்ற போதிலும் அதற்கு முன்னர் பல்லவர் காலத்திலும் இம்முறை பரவலாக நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
தஞ்சை பெரிய கோவிலுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் இறை சேவைக்காக தானமாக வழங்கப்பட்டனர். திருப்பள்ளி எழுச்சி முதல் இரவு நடை சாத்தப்படுவது வரையிலான கோவில் காரியங்களில் இக்கோவில் மகளிர் பங்கெடுத்துக் கொண்டனர்.
இப்பெண்கள் ஆடிய நடனம் ஒரு ஒழுங்குமுறை கொண்டதாக இருக்கவில்லை. இன்றைய பரத நாட்டிய நடனமணிகள் அணியும் ஆடைகளைப் போன்ற ஆடைகளை அவர்கள் அணியவில்லை. அரசனையும், கோவிலுக்கு வரும் பிரதானிகளையும் பக்தர்களையும் மகிழ்விக்கும் வகையில் ஆட வேண்டியிருந்தது.
ஆண்டவனுக்கு அளிக்கப்படும் எதுவும் மாசு மறுவற்றதாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு அர்ச்சிக்கப்படும் பூக்கள், பறவைகள் பறப்பதற்கு முன்னர் பறிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதாவது பனிப்புஷ்பயங்களாக. நெருப்பு வடிவில் மோசேசுக்கு காட்சிதரும் கடவுள், 'உன் காலணிகளைக் கழற்றிவிட்டு வா' என்று கூறியதாக பைபிளில் உள்ளது. இந்த வகையிலேயே பூப்பெய்திய பெண்களை 'புது மலர்களாக' அரசர் காலத்தில் 'ஆண்டவன் சேவை'க்காக அர்ப்பணிக்கப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். விலை மகளிர் என்ற பதம் பரத்தையர்களைக் குறிப்பது போலவே தேவதாசியர் ஆடல் மகளிர் என அழைக்கப்பட்டனர்.
தென்னாட்டு கோவில் வரலாற்றில் தேவதாசியர் கோவில்களில் நடனமாடுவது நீண்ட கால பாரம்பரியம் கொண்ட வழக்கம். இன்றைக்கும் திரைப்படங்களில் கவர்ச்சியாக மட்டுமே நடிகைகளைப் பயன்படுத்துவதும், குத்து நடனத்துக்காக பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. திறப்பு விழாக்கள், வைபவங்கள், விளம்பரங்களில் பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். எந்த மனநிலையில் ஆண்கள் அல்லது ஆதிக்க சக்தியினர் பெண்களைப் பயன்படுத்துகிறார்களோ அவ்வாறே அன்றும் பெண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த மனநிலையை புரிந்து கொண்டால் தேவதாசி மரபு எப்படி, ஏன் உருவாகியிருக்க வேண்டும் என்பதை எளிதாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.
தென்னாட்டை எடுத்துக் கொண்டால் சங்க காலத்தில் இருந்து ஆடல் மகளிரை சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கான சான்றுகள் உள்ளன. இவ்வழக்கம் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்திருக்கிறது. அஸாமில் 'நாடிஸ்' என்றும், மகாராஷ்புரத்தில் 'பாசவி' என்றும், உத்தர பிரதேசத்தில் 'பாவினி' என்றும் ஒரிசாவில் 'மகிரி' என்றும், கர்நாடகத்தில் 'சூலி' என்றும், ஆந்திராவில், 'விலாசினி', 'மாதங்கி', 'கூலி' என்றும், கேரளாவில் 'மகாரிஷ்' என்றும் கோவாவில் 'நாயகின்' என்றும் தேவதாசியர் அழைக்கப்படுகின்றனர்.
அக்காலத்தில் இந்து கோவில்களில் மட்டுமல்லாது பௌத்த கோவில்களிலும் தேவரடியார் சேவை புரிந்து வந்திருக்கிறார்கள். குஜராத்தில் நான்காயிரம் விகாரைகளில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடல் மகளிர் பணியாற்றி வந்ததாகவும் அவர்கள் ஆடல் பாடல்களில் சிறந்து விளங்கியதாகவும் சான்ஜிகுவா என்ற சீன யாத்திரிகர் பதிவு செய்திருக்கிறார்.
கி. பி. 1024 இல் கஜினி முகமது டில்லி சோமநாதர் ஆலயத்தை சூறையாடியபோது அங்கே 500 நடன மகளிர் இருந்ததாக ஒரு செய்தி உள்ளது.
சுசீந்திரம் கோவிலில் 72 தேவதாசியர் பணியாற்றி வந்ததாக புக்னன் என்ற பயணி குறிப்பிட்டுள்ளார். திருச்செந்தூரில் 121 தேவதாசி குடும்பங்கள் இருந்ததாகவும் அவர்கள் மறக்குடித்தெரு என்ற வீதியில் வசித்து வந்ததாகவும் அக்கோவிலின் தாமிரப் பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். வைசாலி மன்னர் பல்லால தேவர் காலத்தில் திருவண்ணாமலைக்கு அருகே உள்ள தேவிகாபுரம் என்ற கிராமத்தில் தேவதாசியரே வசித்து வந்ததாகவும், ஆந்திராவின் நாகலாபுரத்தில் நூற்றுக்கணக்கான தேவதாசியர் வாழ்ந்து வந்தனர் என்றும் 'தேவதாசியர் மரபு' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் காலத்திலேயே தேவரடியார் மரபு தமிழகத்தில் தோற்றம் பெற்றது என்று கூறப்படுகின்ற போதிலும் வரலாற்றாய்வாளர்கள் அதை மறுக்கின்றனர். பல்லவர் காலத்தில் இருந்தே தேவரடியார் மரபு கோவில்களில் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக இவர்கள் கூறுகின்றனர்.
பல்லவர் காலத்திலும், ராஜராஜசோழன் காலத்திலும் அதன் பின்னரும் இந்த ஆடல் மகளிர் இரு பிரிவினராக அறியப்பட்டனர். ஒரு பிரிவின் பெயர் ராஜதாசி. மற்ற பிரிவு தேவதாசி. அரசவையில் நடனமாடும் பெண்கள் தேவதாசிகளாக இருந்தாலும் அவர்கள் ராஜதாசிகள் என்றே அழைக்கப்பட்டனர். ராஜதாசியாவதற்கு நல்ல நடன தேர்ச்சியும் குரல்வளமும் அழகும் இருக்க வேண்டும். ஆனால் அரசன் முன்னிலையில் நடனமாடும் பெண்கள் கோவில்களில் நடனமாட முடியாது என்றொரு கட்டுப்பாடு இருந்தது. அன்றைய சமூக அமைப்பில் கடவுளுக்கு அடுத்த இடத்தில் அரசன் இருந்ததால் அரசனை மகிழ்விக்கும் பெண்கள் ஆண்டவன் முன்னிலையில் நடனமாட முடியாது என்ற கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம்.
பல்லவர் காலத்தின் பின்னர் தென்னாட்டில் களப்பிரர் வருகை இடம் பெறுகிறது. களப்பிரர் காலத்தை இருண்ட காலம் எனக் குறிப்பிடுவார்கள். சமயம் நலிவுற்றதால் இருண்ட காலம் எனக் குறிப்பிடப்படுவதாக சொல்லப்பட்டாலும் இதற்கு ஒரு எதிர்வாதமும் இருக்கிறது.
கன்னடர்களே களப்பிரர் என அழைக்கப்பட்டனர். தமிழகத்தை களப்பிரர் மன்னர்கள் ஆட்சி செய்தபோது சைவ, வைணவ சமயங்கள் நலிவுற்றன. களப்பிரர் அரசர்கள் பௌத்த மற்றும் சமய சமயங்களையே ஆதரித்தனர். அவை தமிழர் மத்தியில் எழுச்சி பெற்றன. இவ்விரு சமயங்களும் பெண்களை மகிமைப்படுத்தவில்லை. முக்தி மார்க்கத்துக்கு இடர் என அவை போதித்தன. எனவே தேவதாசி முறை களப்பிரர் காலத்தில் ஊக்குவிக்கப்படவில்லை. ஆறாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மன் அரசனின் காலத்திலும் அதன் பின்னருமே சைவமும் வைணவமும் புத்தெழுச்சி பெற்றதோடு வாடிக் கிடந்த கோவில்களும் மீண்டும் கலைக்கூடங்களாக மாறின.
சேரி பரத்தை, காதற் பரத்தை, காமக் கிழத்தி என்பதாக அழைக்கப்பட்ட பரத்தையர், பல்லவர் காலத்திலேயே அங்கீகாரம் பெற்றனர். அவர்கள், தத்தை, விகுருதை, பிரத்தியை, பக்தை, இருதை, அலங்காரி, உருத்திரகணிகை என ஏழு வகையாகப் பிரிக்கப்பட்டனர். உருத்திரகணிகை குலத்தவரே கோவில்களில் பணியாற்றும் தகுதி பெற்றனர்.
(தொடரும்)
பல்லவர் காலத்தில் எழுச்சி பெற்ற தேவதாசிகள்
WEDNESDAY, DECEMBER 24, 2014
Posted by Mani Srikanthan at 4:07 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -3
அருள் சத்தியநாதன்
மனித வரலாற்றின் ஆரம்பத்தில் தாய்வழிச் சமுதாயமே, இந்தியாவில் மட்டுமல்லாது, உலகின் பல பாகங்களிலும் நிலவியிருந்தது. மனிதர்கள் நதிக்கரை நாகரிகத்தை ஏற்று விவசாய மற்றும் காணி உடமை சமூக வாழ்க்கைக்கு வந்த பின்னரேயே அது தந்தை வழி சமுதாயமாக மாறியது.
தாய்வழிச் சமுதாயத்தின் போது வேட்டைக் கலாசாரமே நிலவியது. வேட்டையாடுவதற்கும் வேட்டை உணவை பதப்படுத்துவதற்கும், உண்ணும் வகையில் தயார் செய்வதற்கும் பெண் தேவைப்பட்டாள். மழைகாலத்தில் வேட்டையாடுதல் குறைந்து போய், சேமித்த உணவுகளை உண்டு இளைப்பாறினர். இக்காலப்பகுதியிலேயே ஆண் - பெண் உறவு அதிகம் நிகழ்ந்தது. அச்சமயத்தில் உறவு முறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படவில்லை. தாயும் மகனும், தந்தையும் மகளும் என்பதாக உறவுகள் இடம்பெற்றன. ஒரு பெண்ணுடன் எவர் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பதால், அவளுக்குப் பிறக்கும் குழந்தைகள் தாய்வழியாகவே அறியப்பட்டன. இத்தனை குழந்தைகளும் இந்தப் பெண்ணுக்குப் பிறந்தவை என்றே அறியப்பட்டதே தவிர, இக்குழந்தைக்கு இவரே தந்தை என்று கூறப்படவில்லை. அப்படி அழைப்பது பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால் தாய்வழிச் சமூக முறை நடைமுறையில் இருந்தது. தாயின் உடமைகள் அவளது மகளுக்கு உரிமையாயின.
 மனிதர்கள் வேட்டை கலாசாரத்தை விட்டு நதிக்கரை விவசாய கலாசாரத்துக்கு மாறியதும் காட்சிகள் மாறுகின்றன. நதிக்கரை சமூகச் சூழலில் வரையறைக்குட்பட்ட சில வேலைகளை மனிதன் தொடர்ச்சியாக செய்துவர வேண்டியிருந்தது. நிலத்தைப் பதப்படுத்தல், நடுதல், காத்தல், அறுவடை, சேமிப்பு மற்றும் மீன் பிடித்தல் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை தினமும் ஒரே இடத்தில் செய்ய வேண்டியிருந்ததால் அதற்கு ஆண்கள் நெடுநேரம் வீட்டுக்கு வெளியே இருக்க நேரிட்டது. எனவே, இருப்பிடம் தொடர்பான வேலைகளையும் குழந்தை வளர்ப்பையும் பெண் பார்த்துக் கொண்டாள். இப்படி சாப்பிடுவதற்கான பொருள்தேடும் முக்கிய பணி ஆண்வசம் சென்றதால் பெண்வழிச் சமுதாயம் மெது மெதுவாக ஆண்வழிச் சமுதாயமாக மாறத் தொடங்கியது.
ஆங்கிலத்தில் keep the fire burning என்று சொல்வார்கள். நெருப்பை அணைந்து விடாமல் பாதுகாப்பது என்பது அக்காலத்தில் முக்கியமான விஷயம். இந்த வாக்கியத்தின் பொருள் இன்றைக்கு பல்வேறு அர்த்தங்களைக் கொண்டதாக மாறிப் போயிருந்தாலும் பண்டைய காலத்தில் நெருப்பு மக்கள் வாழ்வில் முக்கிய இடம் வகித்தது. காட்டு விலங்குகளை விரட்டும், உஷ்ணத்தைத் தரும், சமைக்க உதவும், சமிக்ஞையாகவும், இரவில் பாதுகாப்புத்தரும் ஒன்றாகவும் அவர்கள் வாழ்வில் நெருப்பு விளங்கியது. இதனால்தான் பண்டைய இன்றைய மதங்களில் நெருப்புக்கும் ஒளிக்கும் ஒரு முக்கிய இடம் தரப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில் கஷ்டப்பட்டு பற்ற வைக்கும் நெருப்பை அணையாமல் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருந்தது. குளிர்காலத்தில் இரவு பகலாக நெருப்பு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படி நெருப்பை அணைந்து விடாமல் பார்த்துக் கொள்வதற்கு பெண் வீட்டில் இருக்க வேண்டியிருந்தது. ஆண் வேலைத்தளங்களில் இருக்க, நெருப்பை அணையவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் உணவுகளை நெருப்பில் சமைக்கவும் அவற்றை வாட்டி பாதுகாப்பாக வைக்கவும் பெண் வீட்டில் தங்க வேண்டியதாகிவிட்டது. தாய்வழிச் சமுதாயம், தந்தைவழிச் சமுதாயமாக மாறுவதற்கு வேறுபல காரணங்கள் இருந்தாலும் இதுவே அடிப்படையான காரணமானது.
பெண் வீட்டில் தங்கவும், அவளுக்கென பல பொறுப்புகள் வந்து சேர்ந்தன. அதன் பின்னரேயே ஒரு ஆண் தனக்கென ஒரு பெண்ணை துணைவியாக வைத்துக் கொண்டு தங்கள் இருவரைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக் கொள்ளும் குடும்ப முறை தோன்றியது. தந்தையும் மகளும் சேரும் வழக்கம் ஒழிந்தது. குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகள் படிப்படியாக உருப்பெற ஆரம்பித்தன.
இப்படி உருவாகத் தொடங்கிய குடும்ப மற்றும் சமூகக் கட்டமைப்புகள் ஆண்களுக்கு சாதகமானவையாகவும் பெண்களை அடிமைப்படுத்தும் வகையிலும் அமையத் தொடங்கின. மனித குழுவில் தலைமை இடத்தை வகித்த பெண், குடும்ப கட்டமைப்பு வந்ததும் தமது உரிமைகளை இழக்கத் தொடங்கினாள். இப்படி ஆணுக்கு விட்டுக் கொடுத்ததற்கு அவளது இயல்பான தாய்மைக் குணமும் காரணமாக இருந்திருக்கலாம்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், நெறி நூல்கள், சமயங்கள், வழிபாட்டு முறைகள் என்பன பெண்களுக்கு சம உரிமை அளிக்கவில்லை. மாறாக பெண்ணை தாழ்த்தின, இழிவு படுத்தின, உணவை உற்பத்தி செய்யும் ஆணுக்கே குடும்பத்திலும், சமூக மட்டத்திலும் சமய வழிபாட்டு முறைகளிலும் முதலிடம், முதல் மரியாதை வழங்கப்பட்டது.
உணவை உற்பத்தி செய்யும் அல்லது வீட்டுக்கு வருவாயையும் பாதுகாப்பையும் வழங்கும் ஆணுக்கு பெண் கட்டுப்பட்டவள். திருமணமான ஒரு பெண் இன்னொரு ஆணுடன் தொடர்பு வைத்திருக்க முடியாது. அது ஒரு குற்றச் செயல். அவள் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு அந்த ஆணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்ற சமூக சட்டம், ஆசிய குடும்பங்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் இந்த சட்டமே இன்றைக்கும் நடைமுறையில் உள்ளது.
சமூக சட்டங்களும் மத கோட்பாடுகளும் பெண்களைத் தாழ்த்தி இழிவுபடுத்துவதாகவே அமைந்துள்ளன. இளமையில் பெற்றோர் கட்டளைப்படியும், குமர்பருவத்தில் கணவன் கட்டளைப்படியும், கணவனுக்குப் பின் பிள்ளைகள் கட்டளைப்படியும் நடக்க வேண்டும் என்று கூறும் மனுநீதி, பெண்கள் தன்னிச்சையாக ஒருபோதும் நடக்கக் கூடாது என்கிறது. டொமஸ்தனிஸ் என்ற கிரேக்க அறிஞர், உடல் பசியைப் போக்க விலைமகளிரும், குழந்தை பெற்று வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள மனைவியும் வேண்டும் என்று கூறுகிறார். மோசஸ் பெண்களை அசுத்தமானவள் என்கிறார். ஏவாள் செய்த மோசடியால்தானே ஏதேன் தோட்டத்தில் இருந்து பூவுலகுக்கு இருவரும் சபிக்கப்பட்டு விரட்டப்பட்டார்கள்! சமண மதத்தில் பெண்கள் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது. பௌத்தத்தில் பிட்சுணிகளுக்கு சம அந்தஸ்து கிடையாது.
கற்பு நெறி ஆண்களுக்குக் கிடையாது. ஆண் இரண்டுக்கும் மேற்பட்ட மனைவியரை வைத்துக் கொள்ளலாம். விபசாரிகளிடம் செல்லலாம். அதெல்லாம் கௌரவமான விஷயங்கள்தான். ஆனால் பெண் கணவனைத் தவிர வேறு யாருடனும் உறவு வைத்துக் கொள்ள முடியாது.
கணவனை இழந்த பெண்ணின் நிலை பரிதாபமானது. அவள் சமூக வாழ்வில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறாள். வெள்ளை ஆடை அணிந்து மூளியாக இருக்க வேண்டும். தலைக்கு மொட்டை போட்டு தனி வாழ்க்கை வாழ வேண்டும். ஒருவேளை சாப்பிட்டு தவ வாழ்க்கையில் காலத்தை செலவிட வேண்டும் என்பது போன்ற கடுமையான சட்டங்கள் இன்றைக்கு இல்லாவிட்டாலும்கூட, கணவனை இழந்த கிறிஸ்த பெண்கள்கூட விதவைக் கோலத்தில் சமூக முக்கியத்துவத்தை இழந்தே வாழ்கின்றனர்.
இவை அனைத்தும் தன் சமூக அந்தஸ்தை இழந்த பெண் எப்படி படிப்படியாக ஆண் ஆதிக்கத்துக்கு உட்பட்டு தன் உரிமைகளை இழந்தாள் என்பதையே சித்தரிக்கின்றன. ஆண் ஒரு பெண்ணோடு வாழ்ந்து முடிக்கும் ஒரு பிறவி அல்ல என்பதால், இரண்டு பெண்டாட்டிகளை வைத்துக் கொள்வதும் தாசி வீடு சென்று வருவதும் கௌரவமான நடத்தைகளாக சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவனது இந்த இச்சையின் இன்னொரு வடிவமாக எழுந்ததே தேவதாசி முறை. இது ஆணுக்கு ஒரு கௌரவமான காதல் ரசம் சொட்டும் பொழுது போக்காக அமைந்தது. நாம் நாடகம், திரைப்படம், கிளப் என்று போய் பொழுது போக்குகிறோம். மன்னர் காலத்தில் தனவந்தர்கள் மற்றும் செல்வாக்கானவர்களுக்கு பொழுது போக்காக சிருங்கார சுவையுடன் அமைந்ததே தாசி வீடும், தேவதாசியினரும்.
தாசியை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. நாட்டியம், பாடல் என அவள் கலைகளைக் கற்றிருக்க வேண்டிய அவசியம் கிடையாது. கோவில்களில் நடனமாடுவதற்காக தெரிவு செய்து விடப்பட்ட தேவதாசியினர் நடனமாடக் கூடியவர்களாகவும் பாடக்கூடியவர்களாகவும் இசைக் கருவிகளை இசைக்கத் தெரிந்தவர்களாகவும் விளங்கினர். கவர்ச்சியான, எடுப்பாக ஆடைகள் அணிய அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அறுசுவை உணவுகளை சமைக்கவும், மது வகைகளை கையாளவும், வரவேற்று அன்புடன் பேசவும் உபசரிக்கவும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதே சமயம், இக்கலைகளைத் தெரிந்தவர்களாக அந்தப் பெரிய மனிதர்களின் மனைவிமார் இருக்கவில்லை. எனவே வாழ்க்கையை, தமது ஓய்வு நேரத்தை சிருங்காரமாகக் கழிப்பதற்கு, கணிகை வீட்டுக்குச் செல்வதைவிட, தேவதாசி வீட்டுக்குச் செல்வதையே இவர்கள் விரும்பினர்.
தேவதாசிகளின் முதல்பணி, தாம் சார்ந்திருக்கும் கோவில்களில் நடனமாடுவதும் ஏனைய கோவில் பணிகளைச் செய்வதும்தான். எனவே கோவில்களே அவர்களுக்கு தங்க இடம் வழங்கியிருந்தது. ஆனால் ஆடலும் பாடலும், வசீகரமும், மயக்கும் கலைகளும் தெரிந்திருந்த தேவதாசிமார் நகரின் பொருத்தமான இடங்களில் சொந்த அல்லது வாடகை வீடுகளில் தங்கியிருந்தனர். ஏறக்குறைய ஒரு வி.ஐ.பி. மாதிரியான வாழ்க்கைதான். அவருக்கு பணிவிடை செய்ய சேவகர்கள் இருந்தனர். ஒரு பிரத்தியேக உதவியாளர் கூடவே இருப்பார். இத்தகையோர் பெரும் செல்வந்தர்களாகத் திகழ்ந்தனர். இந்த வரிசையில் நாகரத்தினம் அம்மாள் இறுதியாக வாழ்ந்த செல்வந்த தேவதாசி எனலாம்.
கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்களே தேவதாசிகள் என்பது உண்மையானாலும் ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழ் சமுதாயத்தில் மிக நீண்ட காலமாக நிலவி வந்த பரத்தைக்குல மரபின் இன்னொரு வடிவமாகவே, தேவதாசியர் இதைத் தொடர்ந்து மறுத்து வந்தாலும், தேவதாசியர் மரபை வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
(தொடரும்)
தாய் வழிச் சமுதாயம் தந்தை வழியாக மாறியபோது...
SUNDAY, NOVEMBER 9, 2014
Posted by Mani Srikanthan at 1:42 AM
2 comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி வரலாறு -2
தேவதாசி என்பது வடமொழிச் சொல். தெய்வ சேவகம் செய்பவள் அல்லது தெய்வ அடிமை என்று அர்த்தம். இதன் தமிழ் வடிவமே தேவரடியாள். பிற்காலத்தில் இது தேவடியாள் என மருவியது. மட்டமான சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. தேவதாசி முறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற சிந்தனை 1925 அளவில் தமிழ் நாட்டில் (மதராஸ் பிரஸிடென்ஸி) இயக்கமாக உருவெடுத்தபோது, தேவதாசிமாரை இழிவுபடுத்துவதற்காக தேவடியாள் என்றும் அவர்கள் அனைவரும் விபசாரிகள் என்றும் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.
தேவதாசி முறையின் அடிப்படைத் தத்துவம், இறை சேவகம் செய்யும் பொருட்டு திருமணமாகாத இளம் பெண்களை, அவர்கள் வயதுக்கு வருமுன்னர் அல்லது வயதுக்கு வந்த உடனேயே, கோவில்களுக்கு அர்ப்பணித்து விடுவதாகும். தேவருக்கு (கடவுளுக்கு) ஊழியம் செய்பவள் என்ற பெயர் இக்காரண அடிப்படையிலேயே உருவானது. இப்படி அர்ப்பணிப்பதை தமிழகத்தில் 'பொட்டு கட்டி விடுவது' என்பார்கள். கோவிலுக்கு காளையை நேர்ந்து விடுவது மாதிரித்தான் இதுவும்.
இப்பெண்கள் பெரும்பாலும் தேவதாசி குடும்பத்திலிருந்துதான் கோவில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். அரிதாகவே இக்குலத்துக்கு வெளியே இருந்து பெண்கள் நேர்ந்து விடப்பட்டார்கள். தேவதாசி மரபினர் இக்கோவில்களில் இருந்து சம்பளம், படிகள், உணவுப் பொருட்கள், வசிப்பிடம், காணி எனப் பல பொருளாதார ரீதியான பலன்களைப் பெற்று வந்தனர். இது தொடர வேண்டுமானால் அவர்கள் தமது குடும்பங்களில் இருந்து தொடர்ச்சியாக பெண்களைக் கோவில்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்க வேண்டும். எனவே தாம் வளர்க்கும் தத்துப் பிள்ளைகளை பொட்டு கட்டி கோவில் சேவகத்துக்கு அனுப்பி வந்தனர். இது அக்குடும்பங்களுக்கான வருமானத்தைத் தடையின்றி கிடைக்க வழி செய்தது.
இத்தேவதாசிகள் தம்மை தாசிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. தாசிகளில் இருந்து வேறுபட்ட சமூகத்தவர் என்பதையே விடாப்பிடியாகக் கூறி வந்தனர். தந்தை பெயர் தெரியாமல் தமக்குப் பிறக்கும் பிள்ளைகளை தத்துப் பிள்ளைகளாகவே வளர்த்தனர்.
இத்தேவதாசிகள், தமது குரல் வளம், நாட்டியத்திறன், சங்கீத ஞானம், உடல்வாகு என்பனவற்றைப் பயன்படுத்தி, ஊரில் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் பணக்காரர்களின் ஆசை நாயகிகளாக விளங்குவதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். அக்காலத்து பெரிய மனிதர்களும் தேவதாசிகளை தமது வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்வதை கௌரவமாகவே கருதினார்கள். மேலும் தேவதாசிகளை ஆசை நாயகிகளாக வைத்துக் கொள்வதை அவர்களது மனைவிமாரும் எதிர்க்கவில்லை. கணவனை எதிர்ப்பது அன்றைக்கு சம்பிரதாயம் அல்ல. அன்றைக்கு அப்படி ஒரு ஆணாதிக்கம் நிலவி வந்தது. மேலும், தேவதாசி ஒரு போதும் மனைவி அந்தஸ்தைக் கோரமாட்டார் என்பதையும் ஆசை நாயகியாக இருந்து பணம், பொருள் பெறுவதோடு அவளது 'இடையூறு' நின்று விடும் என்பதையும் மனைவிமார் புரிந்து வைத்திருந்தனர். கடந்த இதழில் பார்த்த நீதிபதி நரஹாரிராவின் மனைவியும் இந்தப் புரிதலுடன்தான் நாகரத்தினம் அம்மாளோடு பழகி வந்தாள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
1862 முதல் 1889 வரையிலான கால கட்டத்தில் தேவதாசிகள் தொடர்பான வழக்குகளில், தேவதாசிகளை விபசாரிகளில் இருந்து வேறுபடுத்தி அவர்கள் ஒரு தனிப்பட்ட குழுவினர் என்பதாக சென்னை நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கியிருந்தது. நடத்தை கெட்ட பெண்கள் தேவதாசிகள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படவில்லை. தேவதாசிகள் மற்றும் விபசாரிகள் ஆகிய இருபாலாரையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவது தொடர்பாக சட்ட குழப்பங்கள் நீடித்த போதும், நீதிமன்றங்களும் அரசாங்கமும் தேவதாசிகளை ஒருபோதும் சாதாரண விலைமாதுகளாகக் கருதியதில்லை. இதற்குக் காரணம், நீண்ட காலமாகவே தேவரடியாள் முறை தென்னிந்திய சமூக மரபில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்ததும் அரசு இதை தவறானதும் தண்டனைக்குரியதாகவும் பார்க்காததுமாகும். அன்றைய சமூக வாழ்வின் இயல்பான விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருந்ததாலும் சாதீய கட்டமைப்பு மிக வலுவாக இருந்த அந்தக் காலகட்டத்தில் செல்வந்தர்களும், உயர் அதிகாரிகளும், உயர் சாதியினரும் தேவதாசிகள் என்ற வசதியை நன்கு பயன்படுத்தி வந்தனர். உயர் குடியினருக்கு அது ஒரு கௌரவமான விஷயம். அவர்களுக்கான விசேஷ அந்தஸ்து என்றும் அவர்கள் கருதினர். இதனால்தான், தேவதாசி முறை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானபோதெல்லாம், இந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தேவதாசி விவகாரத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து விட்டார்கள்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெரு முயற்சியின் விளைவாகவே தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. எனினும் இந்த தேவதாசி முறை மிகப் பழமையானது. சங்க காலத்தில் விலை மகளிர் முறை தமிழகத்தில் காணப்பட்டது. இத்தனை நீண்ட பாரம்பரியம் கொண்ட தேவதாசி முறையை ஒழித்துக்கட்டப் பாடுபட்ட முத்துலட்சுமி, 1926 இல் சென்னை சட்ட மன்றத்தில் அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம், இந்தியாவிலேயே முதல் பெண் சட்டசபை அங்கத்தவர் என்ற பெருமை பெற்றார். இவர் ஒரு மருத்துவர். வெளிநாடுகளில் பயின்று தன் மருத்துவ அறிவை சேவையாகக் கருதி பணியாற்றிய சமூக சீர்திருத்தவாதி. இன்னும் ஆழமாகப் போனால் அவர் ஒரு தேவதாசியின் மகள் என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் தேவதாசி முறையில் உள்ள வேதனைகளை அவர் நன்கு அறிந்திருந்தார்.
இந்து சமய கலாசாரத்தில் பல கொடிய, சமூக விரோத மற்றும் காலத்துக்கு ஒவ்வாத சடங்கு சம்பிரதாயங்கள் இருந்தன. அவற்றை ஆங்கிலக் கல்வி கற்று வந்த புதிய சிந்தனையாளர்கள் எதிர்த்தார்கள். சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்திஜி, அம்பேத்கர், ராஜா ராஜ்மோகன் ராய் என்று பலர் தோன்றி சீர்திருத்தங்களுக்காகப் போராடினார்கள். இவர்களைவிட மூத்த சிந்தனையாளர் என்று கௌதம புத்தரைச் சொல்லலாம்.
இவர்களில் ராஜா ராஜ்மோகன் ராய், 1772 - 1833 காலப் பகுதியில் வாழ்ந்தவர். ஆங்கிலக் கல்வி கற்ற அவர், அக்காலத்தில் இந்தியாவெங்கும் நிலவிய விதவைப் பெண்கள் தங்களைத்தாமே எரித்துக் கொள்ளும் உடன்கட்டையை எதிர்த்தார். கணவனை இழந்த மனைவி, கணவனின் சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்வது அன்று வழமையில் இருந்து வந்த கொடூரமான பழக்கமாகும். இப்படி கணவனுடன் தானும் அதே சிதையில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்வது அன்று வழமையில் இருந்து வந்த கொடூரமான பழக்கமாகும். இப்படி கணவனுடன் தானும் அதே சிதையில் பாய்ந்து மாய்த்துக் கொள்வதன் மூலம் கணவருடன் தானும் சேர்ந்தே சுவர்க்கம் புக முடியும் என அந்த அப்பாவி விதவைகள் நம்பினார்கள். எரியும் நெருப்பில் புகுந்து தன்னை மாய்த்துக் கொள்வதற்கு எந்தவொரு விதவையாவது தயங்கினாலோ அல்லது மறுத்தாலோ, அவளது வீட்டார் பலாத்காரமாக அவளை சிதைக்குள் தள்ளிவிட்டனர். தென்னாட்டை விட வடநாட்டில் இக்கொடுமை பரவலாக இடம்பெற்று வந்தது. தென்னகத்தில் உடன்கட்டை என அழைக்கப்பட்ட இவ்வழக்கம் வடக்கில் சதி என அறியப்பட்டது.
சதி வழக்கத்தை எதிர்த்து இரண்டு நூல்களை எழுதிய இவர், இதை ஒழிக்க பாடுபட்டார். வைதீக இந்துக்கள் இவரைக் கடுமையாக எதிர்த்தனர். சமயத்தின் புனித கடமைகளை நிந்திப்பதாக சாடினார். கிறிஸ்தவ ஆங்கிலேயர்களுடன் ஒன்றிணைந்து இந்து மதத்தை ஒழிக்க சதி செய்வதாக தூற்றப்பட்டார். ஆனால் ராம்மோகன் ராய் விட்டுக்கொடுக்காமல், சதியை சட்ட ரீதியாக ஒழித்துக்கட்ட போராடினார். இதற்கு எதிராக வைதீக இந்துக்களினால் தொடுக்கப்பட்ட வழக்கை அக்காலத்தில் அதி உச்ச நீதிமன்றமாக விளங்கிய லண்டன் பிரிவி கவுன்சில் வரை சென்று வாதாடி, தீர்ப்பை தனக்கு சாதகமாக முடித்தார் ராஜா ராம்மோகன்ராய்.
இத்தனை போராட்டங்களின் பின்னரேயே உடன்கட்டை ஏறல் என்பது இந்தியாவில் முற்றாகத் தடை செய்யப்பட்டது.
இந்த பின்னணியில்தான் தேவதாசி முறையையும் பார்க்க வேண்டும். தேவதாசி மற்றும் பரத்தையர் சமூகம் என்பது தமிழகத்தில் சங்க காலத்துக்கும் முற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்த வழக்கம் இந்தியாவுக்கு சுமேரியாவில் இருந்து வந்திருக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. கி.மு. 3500க்கு முன்னர் சுமேரியர்களிடம் இந்த வழக்கம் இருந்ததாம். அக்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு பெண்ணை கடவுளுக்கு அர்ப்பணிக்கும் ஒரு வழக்கம் இருந்திருக்கிறது. இவர்கள் கோவில்களில் பணிவிடை செய்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்பெண்களுக்கு அந்நாட்டு அரசரின் மகளே தலைவியாக இருப்பாள். அவளை 'பதேசி' என்று அழைப்பார்கள். இச்சுமேரிய வழக்கம், கி.மு. ஆயிரத்து தொள்ளாயிரத்தில் இந்திய வேதப் பண்பாட்டு அம்சமாகக் கலந்திருக்க வேண்டும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். எகிப்திய நாகரிகத்திலும் பெண்கள் கோவில் பூசகர்களாக விளங்கியிருக்கின்றனர். ஆனால் இந்திய வேத பண்பாட்டின் கீழ் பெண்களின் பங்கு கட்டுப்படுத்தப்பட்டிருந்ததால், அர்ச்சகர்களாக அவர்களால் விளங்க முடியவில்லை. எனினும் தேவ சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட தேவரடியார்களாக விளங்கி வந்திருக்கிறார்கள்.
தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் எனக் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுந்த போது, பெங்களுரு நாகரத்தினம்மா தலைமையிலான தேவதாசிகள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அச்சங்கம் தமது நிலைப்பாடுகளை அறிக்கைகளாக முன்னிறுத்தினர். 'வேசி' என தாம் அழைக்கப்படுவதை அவர்கள் முற்றிலுமாக நிராகரித்தனர். தேவரடியாருக்கும் பொதுமக்களிற்கும் இடையே வித்தியாசம் இருப்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.
தாம் இந்துப் பண்பாட்டின் ஒரு பகுதி என்றும் தேவதாசி குலம் இந்துப் பண்பாட்டின் உருவாக்கம் எனவும் அவர்கள் வாதிட்டனர். கோவில்களில் இறை சேவையாற்றுவதற்காக, மனைவாழ்க்கையைத் துறந்து கடவுள் சேவைக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களை பொது மகளிர் என கேவலப்படுத்துவது தவறானது என்று அவர்கள் சுட்டிக் காட்டினர். இவர்களுக்கு ஏராளமான சென்னை மாகாண கோவில் தர்மகர்த்தாக்கள், பெரிய மனிதர்கள், காங்கிரஸ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட செல்வாக்கான மனிதர்கள் ஆதரவு அளித்தனர்.
1920களில் சென்னை அரசாங்க சட்ட உறுப்பினராக விளங்கிய சர். சி.பி. ராமஸ்வாமி ஐயர், காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி உட்பட பிரபலமான மனிதர்கள் தேவதாசி முறை தொடர வேண்டும் என்றே விரும்பினர். கர்நாடக இசை, பரதநாட்டியம் ஆகிய கலைகளை பாதுகாக்கவும் வளர்க்கவும் தேவதாசிகளின் சேவை அவசியம் என அவர்கள் கருதினர். தேவதாசிகளை வைப்பாட்டியாக வைத்துக்கொள்பவர்களைப் பொறுத்தவரை அவ்வாறான தேவதாசியருக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே தேவதாசி வழக்கத்தை தகர்ப்பது சுலபமான காரியமாக இருக்கவில்லை.
(தொடரும்....)
உடன் கட்டையை ஒழித்த ராஜா ராம்மோகன்ராய்
 அருள் சத்தியநாதன்
THURSDAY, OCTOBER 30, 2014
Posted by Mani Srikanthan at 10:41 AM
No comments: Links to this post
Labels: தேவதாசி வரலாறு
தேவதாசி நாகரத்தினம்மா -1
- அருள் சத்தியநாதன்
மேடுகள் பள்ளங்களாவதும் பள்ளங்கள் மேடுகளாவதும் இயற்கை. ஒரு காலத்தில் போற்றி ஆராதிக்கப்படுபவை இன்னொரு காலத்தில் இகழ்ந்து புழுதியில் வீசப்படும். பெண்கள் இழுத்துப் போர்த்தியபடி இதுதான் எங்கள் கலாசாரம் என்று சொல்வதைக் கேட்ட அமெரிக்க உல்லாசப் பயணிகள், இதே பெண்கள்தானா இதே இந்தியாவின் கஜூராஹோ காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள்? காம சூத்திரத்தை இந்திய வத்ஸாயர்தானே படைத்தார்! என்று மலைப்புடன் கேட்டிருக்கிறார்கள்.
இன்று இந்திய, தமிழ் கலாசாரங்கள் எவற்றை எல்லாம் அருவருப்புடனும் சகிப்புத்தன்மையின்றியும் பார்க்கின்றனவோ அவை அனைத்தும் ஒரு காலத்தில் இந்திய மண்ணில் ஆராதிக்கப்பட்டிருக்கின்றன. தேவதாசி முறையும் அவற்றில் ஒன்று.
பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு வந்த பின்னரேயே அந்நாட்டில் நிலவி வந்த ஆண் சார்பான பாலியல் சுதந்திரம் கட்டுப்பாட்டுக்கு வந்தது. ஒரு ஆண் பல தாரங்களை வைத்துக் கொள்வதும் தாசி வீட்டுக்கு சென்று வருவதும் இந்திய சமுதாயத்தில் முற்றிலும் ஏற்கப்பட்ட விஷயமே. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரை வைத்துக் கொள்வதும் அல்லது தாசி வீட்டுக்கு சென்று வருவதும் அன்றைய ஆண்களுக்கு கௌரவமான விஷயங்கள். தாசி வீடு சென்று வருவதும் சாதாரண விஷயம் என்பதை கோவலன் கதை மூலமாக சிலப்பதிகாரம் நிறுவுகிறது. தேவதாசி முறை சட்டரீதியாக ஒழிக்கப்படும்வரை செல்வந்தர்கள் தேவதாசி வீட்டுக்கு செல்வதை கௌரவத்தின் சின்னமாகவே கருதி வந்தார்கள்.
சிலப்பதிகாரத்தில் வர்ணிக்கப்படும் இந்திரவிழா, வருடா வருடம் அரசனால் ஏற்பாடு செய்யப்படும் வசந்த விழா. ஆடல் பாடல், பாலியல் சார்ந்த கேளிக்கைகள் என்பதாக வடிவமைக்கப்பட்டிருந்த விழா அது. கோவலன் அங்கே மாதவியைக் காண்கிறான். அவளது அழகிலும் கலைத் திறமையிலும், அறிவிலும் கோவலன் மயங்கிப் போகிறான். அவளே கதி எனக் கிடக்கிறான். இது சிலப்பதிகாரம் சொல்லும் கதை. மாதவி வீடே கதி எனக் கிடக்கும் கோவலனை கண்ணகி திட்டித் தீர்த்ததாகவோ சபித்ததாகவோ சிலப்பதிகாரத்தில் செய்தி இல்லை. ஏனெனில் ஆண் தாசி வீடு போய்வருவதும் ஒன்றும் விமர்சனத்துக்குரியதல்ல. தன் மனைவி மட்டுமே என வாழ்ந்தால்தான் அன்றைய ஆணுக்கு பிரச்சினைகள் தோன்றி இருக்குமோ, என்னவோ!
ஆனால் மாதவி செல்வாக்கான ஒரு பெண்ணாகத் திகழ்ந்திருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம். இத்தகைய தேவதாசிமார் அல்லது கணிகைகள் சமூக செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார்கள். அரசர்கள், திவான்மார், ஜமீந்தார்கள், மந்திரிமார் போன்ற சமூக அந்தஸ்துடைய பெரும் புள்ளிகள் மத்தியில் செருக்கும் செல்வாக்குமாக இப்பெண்கள் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்கள். சமூகமும் இதற்கு அங்கீகாரம் அளித்திருக்கிறது.
இவ்வாறு செல்வாக்குடன் திகழ்ந்த தேவதாசிதான் நாகரத்தினம் அம்மா. இவர் தேவதாசி குலத்தில் பிறந்து தேவதாசியாக வாழ்ந்தவர். தேவதாசி முறை ஒழிப்பு மசோதா தமிழக சட்ட சபையில் மருத்துவர் முத்து லட்சுமியால் கொண்டுவரப்பட்ட போது, அம்மசோதாவை தடுக்கும் வகையில் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டவர் இந்த நாகரத்தினம்மா. இம்மசோதா சட்டமாக நிறைவேற்றப்படுவதை கடுமையாக எதிர்த்தார் காங்கிரஸ் தூண்களில் ஒருவரான தீரர் சத்தியமூர்த்தி. தேவதாசிகள் சமூகத்தில் இருக்க வேண்டும் என வாதாடினார் அவர். அவர் மீது நாகரத்தினம்மா கொண்டிருந்த செல்வாக்கே இம்மசோதாவை அவர் எதிர்க்கக் காரணம்.
தேவதாசி குலம் நலிந்து நலிவடைந்து கொண்டிருந்த அதன் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்த நாகரத்தினம்மா, மிகுந்த செல்வாக்கோடு இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர், இவர் பெங்களுருவைச் சேர்ந்த கன்னடப் பெண். நன்றாகத் தமிழ் பேசக்கூடிய இவர் சென்னையிலேயே வாழ்ந்தார். செல்வமும் செல்வாக்குமாக வாழ்ந்த நாகரத்தினம்மா, தேவதாசி ஒழிப்பு சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் தேவதாசிகளின் நிலை பரிதாபகரமானது. பலர் தெருவுக்கு வந்தனர். சாப்பாட்டுக்கே வழியற்ற நிலையில் நிர்க்கதியாயினர். இன்றைக்கும் பல தேவதாசிகள் வயதான நிலையில் தமது குடும்பத்தை நம்பி வாழ்க்கையை ஒட்டி வருகின்றனர்.
தேவதாசிமாருக்கு நன்றாக நடனமாட வரும். சங்கீதம் பாடக்கூடியவர்களாகவும் இசைக் கருவிகளை இசைக்கக் கூடியவர்களாகவும் இருந்தனர். திறமையுள்ளவர்கள் சிருங்கார நாடகங்களை மேடையேற்றினர். எனவே, இன்று ஒரு நடிகைக்கு இருக்கக்கூடிய கௌரவமும் கவர்ச்சியும், அபிமானமும், கூத்துக்கள் மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த அக்காலக்கட்டத்தில், இந்த வித்தை தெரிந்த தேவதாசிகளுக்கு இருந்ததை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
நாகரத்தினம்மாளுக்கு நல்ல சாரீரம். இசைக் கருவிகளையும் இசைக்க முடியும். நடனமும் வரும். கேட்பவரைக் கவர்கின்ற மாதிரி பேசத் தெரிந்தவர். அவரது பேச்சும் உடல் மொழிகளும் எதிரில் இருப்பவரை வசியம் செய்யக் கூடியதாக இருந்ததால், அவரை நாடி பெரிய மனிதர்கள் வந்தார்கள். இப்பெரிய மனிதர் தொடர்புகளால் அவருக்கு நிறைய பணம் வந்தது. நகைகள், இரத்தினங்கள் வைரங்கள், உயர் வாசனைப் பொருட்கள், ஏராளமான விலையுயர்ந்த சேலைகள் என நாகரத்தினம்மா ராஜவாழ்க்கை வாழ்ந்தார். வீடு, காணி எனப் பல சொத்துகளைச் சேர்ந்திருந்தார்.
இவ்வாறு 'பெரிய இடத்துப் பெண்|ணாக வாழ்ந்த நாகரத்தினம்மா தன் வாழ்வின் பிற்பகுதியில் இன்னொரு பரிமாணத்தை சென்றடைந்தார். திருவையாரில் சங்கீதமூர்த்தியான தியாகையரின் கல்லறை கேட்பாரற்றுக் கிடந்தது. முற்புதர்களும், பாம்பும் புற்றுகளும் நிறைந்த கழிப்பிடமாகக் காட்சியளித்த நாதப் பிரம்மமான தியாகையரின் கல்லறையைப் புதுப்பித்து, அழகிய சமாதி கோவிலாக மாற்றியமைத்தது. வேறு யாருமல்ல, தேவதாசியான நாகரத்தினம்மாவேதான்! கேட்பாரற்றுக் கிடந்த இந்த இடத்தை தன் பெயருக்கு வாங்கி, அதைக் கோவிலாக்கிய இவர், பிற்காலத்தில் திருவையாற்றில் திருப்பணி செய்து நாதப்பிரம்மத்துக்கு சங்கீத அஞ்சலி செய்தையே தன் கடமையாகக் கொண்டிருந்தார். இதனால் அவரைத் தூற்றியவர்களும் போற்றத் தொடங்கினர் என்பது விசித்திரமான உண்மை.
தியாகையர் தன் வாழ்நாளில் பெண்களை நாடிச் சென்றதாக ஆதாரபூர்வமான செய்திகள் இல்லை. பரத்தையர் அல்லது தேவதாசிகள் பற்றி அவர் நல் அபிப்பிராயம் கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், கர்நாடக இசையை தூக்கி நிறுத்தி, மகோன்னதமான கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் திருவையாறு கல்லறையைப் புதுப்பித்து அழிவில் இருந்து காப்பாற்றி அவ்விடத்தை ஒரு இசைக் கோவிலாக மாற்றியவர் ஒரு தேவதாசி என்பதை எப்படி வியாக்கியானம் செய்வது?
நாகரத்தினம்மா பெங்களுருவில் வாழ்ந்தபோது அவரது போசகராக விளங்கியவர் பெயர் நரஹரி ராவ். இவர் மைசூர் நீதிமன்ற நீதிபதியாக விளங்கினார். மைசூர் மகாராஜா, திவான்கள் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
நரஹரி ராவும் அவர் மனைவி சீதம்மாவும் விருந்தோம்பலில் பிரசித்தி பெற்றவர்களாக இருந்ததுடன், கோட்டை வெங்கடரமணஸ்வாமி கோவிலுக்கு அருகில் (பெங்களுரு மருத்துவக் கல்லூரிக்கருகில்) இருந்த அவர்களுடைய அரண்மனை போன்ற வீடு ஏழை மாணவர்களுக்கும் சங்கீத வித்வான்களுக்கும், ஏன், உதவி தேவைப்பட்டவர்கள் அனைவருக்குமே உதவ எப்போதும் திறந்தே இருந்தது. எப்போதும் யாராவது ஒருவர் உண்ண இருந்துகொண்டே இருந்ததால், அந்த வீட்டின் அடுப்பு ஒருபோதும் அணைவதேயில்லை என்று பெயர் பெற்றது.
அத்தகைய தர்மாத்மாவும் உயர் அதிகாரியுமான ஒருவருடைய ஆதரவைப் பெற நாகரத்தினம்மா மிகுந்த பாக்கியம் செய்திருந்தாள் என்றே கூற வேண்டும். ஒரு முன்னணி நீதிபதியும் ஒரு தேவதாசியும் சிநேகமாக இருந்ததில் அவர் மனைவிக்கு ஆட்சேபமில்லை. என்பதுதான் பெரிய அதிசயம் என்பது கவனிக்கத்தக்கது. மாதவி - கோவலன் நட்பை கண்ணகி ஆட்சேபிக்கவில்லை என்பதுடன் ஒப்பிடலாம். அத்துடன் நாகரத்தினம் அடிக்கடி நீதிபதியின் வீட்டிற்கு அவர் மனைவியுடன் அளவளாவுவதற்கு வருமளவிற்கு சீதம்மாவுடன் நாகரத்தினத்துக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நீதிபதி ராவே, நாகரத்தினம்மாவின் வீட்டிற்கு முடிந்த போதெல்லாம் சென்று விடுவார். வழக்கு மன்றத்தில் அன்றைய வேலை முடிந்தவுடன், அவர் தன் கோச் வண்டியில் நாகரத்தினம்மாவின் வீட்டிற்கு விரைவார். நீதிமன்றத்தின் இலச்சினைகள் பொருத்தப்பட்டு, சீருடைய மற்றும் கையில் கோலுடன் காட்சிதரும் பணியாள் பின் தொடர நெரிசல் மிகுந்த நகரப் பேட்டையிலிருந்த நாகரத்தினத்தின் வீட்டு வாசலில் வந்து நிற்கும் நீதிபதியின் வண்டி பொதுமக்களின் கவனத்தைக் கவர்ந்தது. இது தொடர்பான பலவிதமான வதந்திகள் திவான் கே. சேஷாத்ரி அய்யர் செவிகளையும் சென்று அடைந்தது. ஏற்கனவே அரண்மனை, தேவதாசிகளுக்கு அளித்து வந்த ஆதரவைக் குறைத்து வந்ததால், நரஹரி ராவ் நாகரத்தினத்திற்கு அளித்த வெளிப்படையான ஆதரவு நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு இழுக்கு விளைவிப்பதாக இருக்குமென்று திவான் கருதினார். ஒருநாள் அவர் ராவிடம் இதுபற்றிக் கண்டனம் தெரிவித்து, நாகரத்தினத்திற்கு ராவ் ஆதரவு அளிப்பதைப் பற்றித் தமக்கு ஆட்சேபனை இருக்கவில்லையென்றாலும் அவருடைய அலுவலக இலச்சினைகளை அத்துடன் சம்பந்தப்படுத்தாமல் இருப்பது புத்திசாலித்தனமென்று எடுத்துக் கூறினார்.
நீதிபதி ராவும் இந்தக் கருத்தை ஏற்றார். ஏற்கனவே அவர் பெங்களுருவின் நெரிசல்களிலிருந்து ஒதுங்கி, தான் நாகரத்தினத்தின் சங்கீதத்தை இடையூறு ஏதுமில்லாமல் கேட்கக் கூடிய ஓர் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். நகரத்தின் அன்றைய எல்லைகளிலிருந்து சற்று விலகியிருந்த அடர்ந்த காட்டினிடையே அமைந்த சிறிய குன்றை அவர் தேர்ந்தெடுத்தார். அங்கு நாகரத்தினத்திற்காக ஒரு வீட்டை எழுப்பி, திவான் சேஷாத்ரி அய்யர் உட்பட நீதிமன்றத்தின் பல நீதிபதிகளையும் நாகரத்தினத்தின் கச்சேரிகளைக் கேட்க உடன் அழைத்துச் சென்றார். சில நேரங்களில் அவருடைய பேத்திமாரும் அவருடன் சென்றனர். அந்தக் குன்றும் அதில் வாழ்ந்த நாயகியும் அவர் மனத்துக்கு மிக்க சந்தோஷத்தை அளித்தார்கள் என்பதால், (இன்றும் அதே பெயரைத் தாங்கி நிற்கும்) 'மவுண்ட்ஜோய்' - ஆனந்தக் குன்று - என்ற பெயரை அந்த இடத்திற்கு அளித்தார். அந்தக் குன்றுடன் அவர் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்ததால் உள்ளுர்வாசிகளும் அதற்கு ஒரு பெயரைக் கொடுத்தனர் - நரஹரி ராயகுட்டா (நரஹரி ராவின் குன்று) என்று.