ஞாயிறு, 23 ஜூன், 2019

திருக்குறுங்குடி

#திருக்குறுங்குடி .....


திருநெல்வேலில இருந்து 45 கிலோமீட்டர், கன்னியாக்குமரியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்துல இருக்க ஒரு சின்ன ஊர்.

        முழுக்க முழுக்க விவசாயம்தான் ஊரோட பிரதான தொழில். ஊர சுத்தி நெல் வயலும், வாழைதோப்பும் தான்..
 
கொடுமுடியாறு அணை, ஆறு, குளம், கால்வாய் என ஊரே பசுமையாய் காட்சி தருகிறது.

நல்ல அகலமான தெருக்களுக்கு நடுவுல இருக்கு "அழகிய நம்பிராயர் கோவில்"

ஊருக்கு நடுவே அந்த காலத்திலே 6அடி உயரத்திற்க்கு மண் இட்டு கோவில் எழுப்பியிருக்கிறார்கள்.

கோவில் முழுக்க கல்தூண்கள், கற்கள் கொண்டு எழுப்பப் பட்டதால், எவ்வளவு வெயில் அடித்தாலும் கோவில் உள்ளே குளுமையாகவும், நல்ல காற்றோட்டத்துடன் இருக்கிறது.

30 அடி உயர மதில்சுவர், தெப்பகுளம், கோவில் உள்ளே 20 அடி ஆழத்தில் நீர் ததும்பும் கிணறு என மிகப்பெரும் உள்கட்டமைப்பு வசதியோட கோவில் வடிமைக்கப்பட்டுள்ளது.

கோவில் என்பது மதத்தை பற்றி மட்டும் சொல்லாமல் அந்த கால மக்களின் திறமை பண்பாடு, அறிவியல், உறவுமுறை, வாழ்வியல் என பல விஷயங்கள அந்த கோவில் சிற்பங்கள் பேசுது..

சாமி சிலைகளை விட சாதாரண குடிமக்கள் சிற்பங்கள்தான் அதிகம்.

குறவப்பெண், அரக்கன், முனிவர், போர்வீரன், பணிப்பெண் என சமகால சரித்தித்தை சொல்கிறது.

மனிதர்கள் மட்டுமின்றி யானை, சிங்கம், யாளி, குதிரை, பாம்பு, ஒட்டடகம், குரங்கு, ஆமை, மயில்,  அன்னம், கிளி என பறவை பட்சிக்கும் சிற்பங்கள் உள்ளன.

குதிரையின் மூக்கனாங்கயிறு, மனிதகால் நகம்,  கால்நரம்புகள்,  தலைமுடி என தத்ரூபமாய் இருக்கிறது.

ஒவ்வொரு சிலைகளும் 7 அடி உயரத்தில் அதிசயிக்க வைக்கிறது. அந்நாளைய அணிகலன், ஆபரணம், கூடைகள் என வரலாறு சொல்லி செல்கிறது.

கால் தண்டை, வில்அம்பு என தொட்டு பார்க்கும்போதே அதன் உயிர்பை உணரலாம்.

பாகுபலி கிராபிக்ஸ் பார்த்து வாய்பிளந்த நாம் இதுபோன்ற உண்மையான பிரமாண்டத்தின் அருமை உணர்வதில்லை..

ஒவ்வொரு சிற்பத்தின் பிண்ணனியிலும் சில கதைகளும் பல விஞ்ஞான உண்மைகளும் ஒளிந்திருக்கின்றன.

இப்போதுள்ள அரசு நிர்வாகம் போல் அல்லாமல், அந்நாளைய ஆலய பணிகளை மன்னனும் மக்களும் செய்வேனே செய்ததால்தான், இத்தனை ஆயிரம் ஆண்டுக்குப் பின்னும் கம்பீரமாய் நிற்கிறது.

கோவிலின் வயது 5000 ஆண்டு என்கிறார்கள், பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழனின் சிற்ப்பக்கலையும், விஞ்ஞான அறிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

கோவில் கோபுரத்திலும் சிற்ப்பங்களுக்கு பஞ்சமில்லை.

எத்தனை மன்னாதி மன்னன், அறிஞன், ஞானி, சித்தர்கள் என பல ஆயிரம் தலைமுறையை பார்த்து கொண்டு இன்றும் நிற்கிறது.

வாழ்ந்தவன், தாழ்ந்தவன் அழிந்தவன் என இன்று நம்மையும் பார்த்துக் கொண்டு இருக்கிறது.

இந்த காலத்திலும் நம்ம பக்கத்தில் இருக்கும் இதுபோன்ற பொக்கிஷங்கள் பெருமைகளை உணர்ந்து அடுத்த சந்ததிக்கு உணர்த்துங்கள்.

இதுமாதிரியான பழமை வாய்ந்தவை எல்லாம் நம் நாட்டின் ஒளிகுன்றா செல்வங்கள்..

பறையர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் - வீரமாத்தி


தங்களின் குலதெய்வமான சாம்பான் பற்றிய கதையைக் கூறுங்கள்

ஒட்டுமொத்தப் பறையர்களின் குலதெய்வம் சாம்பான். எங்களுடைய குலத்தின் பெயர் சாம்பான் குலம். அதனால் சாமியின் பெயரும் சாம்பான். நான்கு, ஐந்து தலைமுறைக்கு முன்பு இருந்து இக்கோவில் இங்கு உள்ளது. சாம்பான் எங்கள் முதாதையர் என்று மட்டும்தான் தெரியும். வரலாறு தெரியாது. (ஓலைச்சுவடிகள்  இருந்தது பராமரிப்பில்லாமல் செல்லரித்து விட்டன. வீரப்பூரில் இருந்து திருவிழாவிற்கு வரும் பெண்கள் சாம்பான் பற்றிக் கதைப் பாடலைப் பாடுவார்கள்.) அவர் நினைவாக, கற்களை அடுக்கிக் கும்பிட்டு வந்தோம். சிலை மொழுக்கென்று உருவமில்லாமல் இருக்கும். நாங்கள்தான் கோயில் கட்டியிருக்கிறோம்.

சாம்பான் என்ற உங்கள் மூதாதையரை எந்த அடிப்படையில் லிங்கமாக மாற்றினீர்கள்?

கோவில் கட்ட முடிவெடுத்தவுடன் சிவன் கோவில் ஐயரிடம் சென்று “ஆடை அலங்காரம் பண்ணுவதற்கு வசதியில்லாமல் சிலை மொழுக்கென்று (கல்) இருக்கிறது” என்று சொன்னோம். அவர் வந்து பார்த்துவிட்டு, இது சாம்பவமூர்த்தியோட சேர்ந்த சிலை, அதனால் ஏற்கனவே இருக்கும் சிலையைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, அதன் மேலேயே சிவலிங்கம் செய்து வைத்துவிடலாம் என்று கூறினார். சரி, இவர் இப்படிச் சொல்கிறார். நாம் வேறு ஐயரைப் பார்க்கலாம் என்று மற்றொரு ஐயரிடம் விசாரித்தோம்.

அவர் “முன்பு சிலை செய்கிற அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாத்தால் இப்படி வைத்திருக்கிறார்கள். இப்ப நாகரீகமான காலத்தில் சிற்பங்களைச் செதுக்கி அழகு அழகா வைக்கிறார்கள். அதனால் சிலையை லிங்கமாக வடித்து வைத்தால் கோவில் பிரகாசமாக இருக்கும். ஜாதி நல்லா விருத்தியாகும்” என்று சொன்னார். சாம்பானும், சாம்பசிவ மூர்த்தியும் வேறு வேறு இல்லை, இரண்டும் ஒன்றுதான் என்று சொன்னார். அதற்குப் பிறகு தான் சிவலிங்கம் செய்து நிலைநாட்டி இருக்கிறோம்.

கும்பாபிஷேகம் நடந்துள்ளதா? நடத்தியவர்கள் பார்ப்பனர்களா? இல்லை உங்கள் ஜாதியினரா?

கும்பாபிஷேகம் நடந்து பத்து மாதம்தான் ஆகிறது. ஐயரை அழைத்து யாகசாலை கட்டி, ஓமகுண்டம் வளர்த்து ஓர் இரவு முழுவதும் தங்கி, பரிகாரம் பண்ணிவிட்டுப் போனார்கள். 48 நாள் விளக்குப் போட்டோம். ஆறு, ஏழு ஐயர்கள் வந்திருந்தனர். அரிசி, பணம், தேங்காய் பழம், துணி அனைத்தையும் தட்டில் வைத்துக் கொடுத்தோம். எங்கள் இனத்தைச் சார்ந்த வெளியூரில் வேலை செய்பவர்கள் ஐயருக்கு பட்டு வேட்டி, துண்டு காணிக்கை கொடுத்து வழியனுப்பினார்கள். கும்பாபிஷேகம் எங்கள் இனத்தவர் நடத்தவில்லை.

எத்தனை வருடத்திற்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்துவீர்கள்?

கும்பாபிஷேகம் முடிந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. மூன்று வருடங்கள் தொடர்ந்து கும்பாபிஷேகம் பண்ண வேண்டும் என்று ஐயர் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் திருவிழா நடத்தவேண்டும்னு சொல்லியிருக்காங்க.

சாம்பானைக் கும்பிடும் மக்கள் தொகை எவ்வளவு? வேறு எந்த ஜாதியைச் சார்ந்தவர்கள் கும்பிடுவார்கள்? அல்லது பறையர்களுக்கு மட்டுமான கடவுளா?

சாம்பான் கும்பிடுபவர்கள் சுமார் ஆயிரம் தலைக்கட்டு குடும்பங்கள் கணியூரில் இருக்கிறார்கள். எங்கள் பங்காளிகள் கோயம்புத்தூர், வேட்டைக்காரன்புதூர், பழநி, மானூர், தாராபுரம் கொளிஞ்சவாடி, சுண்டப்பாளையம், மதுரை, சென்னை, திருச்சி என பல ஊர்களில் வசிக்கிறார்கள். பறையர்களிலேயே மற்றவர்கள் எங்களையும் சேர்த்தே குறிப்பார்கள். ஆதியில் இருந்தே நாங்கள் தான் சாம்பான் குலம். ஆனால் எங்களைப் பள்ளு, பறையரோடு சேர்த்துக் கொள்கிறார்கள். எஸ்.சி என்று சொல்லி எல்லோரையும் ஒன்றாக்க் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களைவிட மேம்பட்டவர்கள். எங்களுடைய முறைபாடு வேறு, அவர்களுடைய முறைபாடு வேறு. ஒட்டுமொத்தப் பறையர்களின் குல தெய்வம் சாம்பான்தான்.

பறையர் ஜாதியில் எந்த உட்பிரிவு சாம்பானைக் கும்பிடுவார்கள்? மற்ற உட்பிரிவுக்கும், மற்ற ஜாதியினருக்கும் இக்கோவிலில் எந்த அளவுக்கு உரிமை உள்ளது?

கிழக்கத்து குலம், தாசர் குலம், விருமன் குலம், கருத்தான்குலம், அழகநான் குலம் என இருபதுக்கும் மேற்பட்ட குலங்கள் இருக்கின்றன. அனைவருக்குமே சாம்பான் பொது தெய்வம். மற்ற ஜாதியினர் இக்கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டுச் செல்லலாம். எந்த உரிமையும் இல்லை.

நீங்கள் எந்த உட்பிரிவுடன் மண உறவுகளை வைக்கிறீர்கள்? அவர்கள் எந்த சாமியைக் கும்பிடுவார்கள்? அதனுடைய பெயர் கதை என்ன?

தாசர் குலத்தைச் சார்ந்தவர்கள் கிழக்கத்த குலம் மற்றும் கருத்தான் குலத்துடன் மண உறவு வைத்துக் கொள்வோம். அவர்களுடன் பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்குவோம். இவ்வாறே விருமன் குலத்துக்காரர்கள், சின்னக்காவை கும்பிடும் இராமர் குலத்துக்காரர்களோடு மணஉறவு வைத்துக் கொள்வோம்.

ஆதியில் கணியூரில் வீரமாத்தியைக் கும்பிடும் விருமன் கூட்டத்தில் திருமண வயதில் பெண்கள் நிறைய இருந்ததாகவும், ஆண்கள் குறைவாக இருந்ததாகவும் - அதனால் கீரனூர் பெரியஆண்டவர் கோவில் சப்பாணியைக் குலதெய்வமாகக் கொண்ட அழகநான் குலத்துக்காரர் களுக்குப் பெண்ணும் கொடுத்து, மண்ணும் கொடுத்து கணியூரில் இருக்க வைத்ததன் நினைவாக விருமன் குலத்து வீரமாத்தி கோவிலில் அழகநான் கூட்டத்துடைய சப்பாணி சிலையை வைத்திருப்பதாகவும் முன்னோர்கள் சொன்னார்கள். அதனால் இந்த இரண்டு குலமும் ஒருத்தர் இல்லாமல் ஒருத்தர் சாமி செய்ய முடியாது.

80, 90 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மண் எடுத்துக் கொண்டு வந்து சிலை செய்திருக்கிறார்கள். வீரமாத்தியின் பூர்வீகம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்று எங்கள் தாத்தா கூறியிருக்கிறார். தற்போது கோவில் மாற்றம் அடைந்துவிட்டது. வீரமாத்தியோடு வீரப்பனையும் வைத்துக் கும்பிடுகிறார்கள். அதனால் நாங்கள் அங்கிருந்து மண் எடுத்துவந்து வீரப்பன், வீரமாத்தி என்று இரண்டு சிலைகளை வைத்து கும்பிடுகிறோம்.

உங்களது தினசரி வாழ்க்கையில் குலதெய்வத்திற்கும், பூசாரிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

பூசாரிக்கு அனைத்து உரிமைகளும் இருக்கு. கோவில் நிர்வாகத்தில் இருந்து வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வு வரை அனைத்திலும் குலதெய்வத்துக்கும், பூசாரிக்கும் பங்கு இருக்கிறது. குழந்தைகளுக்கு முதல் முடி இறக்குவது, காது குத்துவது, கல்யாணம் போன்றவற்றைக் குலதெய்வக் கோவிலில் பண்ணுவோம். தற்போது பெண் பார்க்கும் நிகழ்ச்சியைக் கூட குலதெய்வக் கோவிலில் வைக்கிறார்கள்.

பூசாரி ஒரே குடும்பத்தினர்தான் பரம்பரையாக பரம்பரையாக வந்துள்ளார்களா? வேறு பிரிவிலிருந்து நியமிப்பிர்களா?

ஒரே குடும்பத்தைச் சார்ந்த பங்காளிகளுக்குள் தான் பரம்பரை, பரம்பரையாகப் பூசாரியை நியமிப்போம். இது முன்னோர் காலத்திலிருந்து நடைமுறையில் இருக்கிறது. வேறு பிரிவில் நியமிக்க மாட்டோம்.

குல தெய்வ கோவில் உள்ள ஊர் அல்லது இடம் எது? கோவிலாக இருந்தால் கட்டிட அமைப்பு எப்படி உள்ளது? பஸ் வசதி உண்டா?

பறையர் குல தெய்வமான சாம்பான் கோவில் ஊருக்குள் சுற்றுச்சுவர் கட்டி, கோபுரத்துடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் தரை மொசைக் போடப்பட்டுள்ளது. கோபுரத்தில் பார்வதி, துர்க்கை, முருகன், தட்சிணாமூர்த்தி லிங்கேஸ்வரன் சிலைகளும் கோவிலுக்கு உள்ளே சிவலிங்கமும் வைத்து இருக்கிறார்கள். இக்கோவிலைக் கட்டுவதற்கு அரசாங்கப் பதவியில் உள்ள எங்கள் ஆட்கள் ஒவ்வொருவரும் நன்கொடையாக பத்தாயிரம், இருபதாயிரம் என்கிற ரீதியில் கொடுத்து உதவினார்கள்.

இராமர் குல தெய்வமான சின்னக்கா நடுத்தெருவிலும், மற்றொரு குலதெய்வமான வீரமாத்தி ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஆற்றோரத்தில் இருக்கிறது. சுற்றுச்சுவர் இருக்கிறது. காண்கிரிட் போட்டிருக்கிறோம், கோபுரம் கிடையாது. சிலை வைத்திருக்கிறோம். கடத்தூரில் இருந்து பஸ் இருக்கிறது. வாய்க்கால் பஸ் ஸ்டாப். அதற்கும் அருகில் கோவில் உள்ளது. இராமர் குலத்து தெய்வமான சின்னக்கா சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்தக் காலத்தில் கட்டியது. மிகவும் பழுதடைந்து விட்டது. அக்கோவிலைக் கட்ட தற்போது ஒரு குடும்பத்திற்கு ஐயாயிரம் (5000) வீதம் வசூலித்துக் கொண்டிருக்கிறோம். இராமர் குலத்துக்காரர்களிடம் மட்டுமே பணம் வசூலிக்கப்படும்.

கோவிலுக்கு என்ன என்ன காணிக்கைகள் செலுத்துவார்கள்? திருவிழாவிற்கு எவ்வளவு செலவாகும்? அந்த செலவை எப்படி சமாளிப்பீர்கள்?

காணிக்கை பெரிசா ஒண்ணும் கிடையாதுங்க. பூசாரியின் தட்டிலும், உண்டியலிலும் காசு, பணம் போடுவார்கள். அவ்வளவு தான். திருவிழா நடத்துவதற்கு ஒரு இலட்ச ரூபாய்க்கு மேல் ஆகும். மொத்தச் செலவையும் கணக்கிட்டு மாங்கல்ய வரி (தலக்கட்டு வரி) என்ற பெயரில் ஒரு குடும்பத்திற்கு ஐந்நூறு, ஆயிரம் என்று போடுவோம். சென்ற வருடம் நாங்கள் விதித்த வரி ஒரு குடும்பத்திற்கு 1200 ரூபாய். இது இல்லாமல் ஊருக்குள் இருக்கும் மற்ற ஜாதியினர் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்வோம்.

இம்மக்கள் எவ்வளவு வரைக்கும் படிக்கிறார்கள்? வேலைவாய்ப்பு எப்படி உள்ளது? முதலில் இருந்ததற்கும் தற்போதைக்கும் என்னவிதமான வேறுபாடு?

நாங்கள் பெரும்பாலும் விவசாயக் கூலிகள். ஒன்றிரண்டு பேர் விவசாயம் செய்கிறார்கள். ஆனால் எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்திருக்கிறோம். அன்றைக்கு ஒரு சிலேட்டு பலகை கூட வாங்க முடியாத சூழ்நிலை இருந்ததால் நாங்கள் படிப்பை விட்டோம். அன்று அக்கம் பக்கம் கடன் கேட்டால் கூட கொடுப்பதற்குக் காசு இருக்காது. காசு பழக்கம், நாணயம் மிக குறைவு. (ஓட்டைக்காசு, குதிரைக்காசு, ரவுண்ட்காசு, ஒரணா, ரெண்டனா தான்  இருக்கும்) அனால் இன்று சின்னப் பையனிடம் கூட 100 ரூபாய் நோட்டு புழங்குகிறது. கடன் வாங்கியாவது படிக்க வைக்கின்றோம். அன்று கல்வியறிவு இல்லாததால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தோம். இன்று கல்வி கற்றதால் பொருளாதாரம் மேம்பட்டிருக்கிறது.

சமூக அந்தஸ்த்து எந்த அளவில் உள்ளது?

முன்னோர் காலத்தைவிட எவ்வளவோ பரவாயில்லை. முன்னோர் காலத்தில் வீட்டுக்குள் விட மாட்டார்கள். பொதுக் கோவிலான மாரியம்மன் கோவிலுக்கு உள்ளே விடமாட்டார்கள். முளைப்பாரி, மாவிலக்கு, பூவோடு எடுத்துச் சென்றால் கோவிலுக்கு வெளியே நிறுத்தி அனுப்பி விடுவார்கள்.

1972 ம் ஆண்டு கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வழக்குப் போட்டு வாதாடி ஜெயித்து, கோவிலுக்குள் சென்றோம். தற்போது கோவிலுக்கு உள்ளே சென்று தீர்த்தம் ஊற்றுகிறோம். கர்ப்பக்கிரகத்தைத் தவிர்த்து கோவிலின் அனைத்துப் பகுதிகளுக்கும் போகிறோம். எந்தவிதமான பாகுபாடும் கிடையாது. நாங்கள் உள்ளே நுழைவதை ஆட்சேபித்த பெரியவர்கள் இறந்துவிட்டார்கள். தற்போது உள்ளவர்கள் கொஞ்சம் மாறியிருப்பதால் கோயிலுக்குள் செல்ல எந்த ஆட்சேபணையும் இல்லை. (இவர்கள் குறிப்பிடும் கோவில் சித்திரை மாதம் சாட்டப்படும் ஊர்ப் பொதுக் கோவிலான மாரியம்மன் கோவில்)

கோவில்களில் பெண்களின் உரிமைகள், பங்கு என்ன? பூசாரிகளாக இருக்கிறார்களா?

கோவிலில் பெண்களுக்கு ஒரு உரிமையும் இல்லை. கோவில் நிர்வாகத்தில்  அனைத்து முடிவுகளையும் ஆண்கள் தான் எடுப்போம். பெண்கள் கருத்தைக் கேட்க மாட்டோம். ஏதோ 100க்கு 2 பேர் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். அவ்வளவுதான். நாங்கள் தடங் காட்டுவதை பெண்கள் செய்வார்கள். முளைப்பாரி எடுக்கிறது, மாவிளக்கு எடுக்கிறது, பால்குடம் கொண்டு வருவது போன்ற சடங்குகளைச் செய்வார்கள். பெண்களைப் பூசாரிகளாக நியமிக்க மாட்டோம். பெண்தெய்வம் இருக்கும் கோவிலுக்கும் ஆண்தான் பூசாரி. பெண்கள் சாமி கும்பிட்டுவிட்டுப் போகலாம்.

கல்யாணத்திற்குப் பின் தந்தையின் குல தெய்வத்தை வணங்குவார்களா? கணவனின் குலதெய்வத்தை வணங்குவார்களா? தலக்கட்டுவரி எந்தக் குடும்பம் சார்பில் வசூலிக்கப்படும்?

கல்யாணத்திற்குப் பின் கணவரின் குலதெய்வத்தையே வணங்குவார்கள். கணவர் குலதெய்வம் சார்பில் தான் கட்டாயமாக தலக்கட்டுவரி வசூலிக்கப்படும். பிறந்தவீட்டுக் குலதெய்வத்திற்கு அக்குலத்தில் பிறந்த பெண்கள் ஒன்ற சேர்ந்து (பெண் பிறந்த மகள்கள்) பணம் சேர்த்து ஒரு சீட்டு மாதிரி போட்டு கோவில் செலவுகளுக்குப் பணம் கொடுப்பார்கள். அதோடு இல்லாமல் தந்தையின் குலதெய்வத்திற்கு ஆண்களுக்கு 1000 ரூபாய் தலக்கட்டு வரி போட்டால் திருமணமாகிப்போன பெண்ணுக்கு 500 ரூபாய் போடுவோம். அவர்களும் விருப்பப்பட்டுக் கொடுப்பார்கள்.

குலதெய்வக் கோவில்களில் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்கப்படுகிறதா?

சாம்பான் சாமிக்கு ஒட்டுமொத்த பறையர்களிடம் வரி வசூல் செய்வோம். பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வசூலிக்க மாட்டோம். நன்கொடையாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்வோம். சின்னக்கா மற்றும் வீரமாத்தி சாமிக்கு அந்தந்த குலத்துக்காரர்களிடம் மட்டும் வரி வசூல் செய்வோம். மற்றவர்களிடம் வாங்கமாட்டோம்.

குலதெய்வக் கோவில் விழா தொடங்குவது முதல் முடியும் வரை என்னென்ன செய்வீர்கள்?

வருடம் ஒரு தரம் ஆடம்பரமாக, விமரிசையாகக் கொண்டாடுவோம். பறையர் குலத்திற்கு அடிப்படையாக இருக்கும் இராமையாக்கவுண்டன் புதூரில் இருக்கும் அரண்மனைக்குச் சென்று சாமி கும்பிடுவோம். அவர்கள் தீர்த்தம், திருநீறு, பச்சரிசி, கிடாய் அனைத்தும் கொடுப்பார்கள். அதை வாங்கிக்கொண்டு வந்து தீர்த்தம், திருநிறு போட்டுத்தான் சாம்பான் கோவிலே சாமி சாட்டுவோம்.

திருவிழா நடப்பதற்கு ஒரு வாரம் முன்பே விளம்பரம் கொடுத்துவிடுவோம். எட்டு நாள் சாட்டு, அனைவரும் சுத்தபத்தமாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கணும்னு கேட்டுக்குவோம். செவ்வாய்க்கிழமை சாட்டு. அனைவரும் வந்து கொடிநட்டு, தண்ணீர் ஊற்றி, சாமி கும்பிடுவோம். முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்துக்கொண்டு வந்து ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் விழாவை நிறைவு செய்வோம். சப்பரத்தில் சாமியை வைத்து எங்கள் குடியிருப்புப் பகுதிகளில் வலம் வந்து நிறுத்தி விடுவோம்.

சின்னக்கா, வீரமாத்தி கோவில்களில் சாட்டெல்லாம் கிடையாது. இக்கோவில்களின் பேழை (பெட்டி) சிவசம்பூகன் கோவிலில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு தரம் ஆடி பதினெட்டு அன்று பேழைகளைக் கொண்டு போய் அதிலிருக்கும் கத்தி, அருவாள் போன்றவற்றை ஆற்றில் கழுவி எடுத்துக்கிட்டு வந்து, இக்கோவிலில் வைப்போம். பறையர் குலத்தில் மட்டும் வீட்டுக்கு 100 ரூபாய் வீதம் வசூலித்து, அன்று அனைவரும் சாப்பாடு செய்து போடுவோம். கிடாய் வெட்டுவார்கள். அன்று ஒரு நாள் மட்டும் விஷேசம் நடைபெறும்.

நன்றி கீற்று.

திங்கள், 3 ஜூன், 2019

#திருநெல்வேலி #Tirunelveli


#திருநெல்வேலி #Tirunelveli 

திருநெல்வேலி, திருநவேலி  என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும்  அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம்.  தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் வயல்வெளிகளையே  வேலியாக கொண்டதத்தால் இப்பெயர் பெற்றது.  சரி வரலாற விட்டுட்டு நம் நெல்லை ஏன் ஸ்பெஷல்ங்கிறத  பார்ப்போம்.
      1. #நெல்லையின்_சிறப்புகள்
திருநெல்வேலி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் திருநெல்வேலி ஆகும். இம்மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற நகரங்கள் : திருநெல்வேலி , சங்கரன்கோவில் , தென்காசி , அம்பாசமுத்திரம் ஆகும். செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி தினமாக கொண்டாடப்படுகிறது.

பெயர் விளக்கம்:

16 ஆம் நுற்றாண்டு நுல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர் மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள்.

பெயர்க்காரணம் :

நெல்வயல்களே வேலியாக உடைய ஊர் என்கிற பொருளிலேயே 'திருநெல்வேலி' என அழைக்கப்படுகிறது.

அமைப்பு :

இவ்வூரின் அமைவிடம் 8.73°N 77.7°நு ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது.
இரட்டை நகரங்கள்:

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது.
பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

இரட்டை நகரங்களை இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலமும் அங்கிருந்து தெரியும் நகரின் காட்சியும்
மக்கள்தொகை :

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கேடுப்பின்படி 30,72,880 பேர் உள்ளதாகவும், இதில் 15,18,595 ஆண்களும் 15,54,285 பெண்கள் உள்ளனர். இங்கு 82.9 சதவீதம் பேர் படித்தவர்கள்.

Creation : #Tirunelveli_Municipality_Page
சிறப்புகள் :

பழம் பொருட்கள் கண்டுபிடிப்பு :

சேரன்மாதேவிக்கு அருகே தோண்டி எடுக்கப்பட்ட கல் ஆயுதங்கள், ஜெர்மன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சீவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த பகுதியான மருகால்தலையில் உள்ள பாறைக் குடைவுகளில் பாலிமொழியில் அசோகன் கல்வெட்டுகளும், பௌத்தர்களின் படுக்கைகளும் காணப்படுகின்றன.
மொகலாயர் காலத்தில் கட்டப்பட்ட நாராயணம்மாள் சத்திரம் இவ்வூரில் இருக்கிறது.
திருச்சிற்றம்பலம் என்னும் ஊரில் முதுமக்கள் தாழிகள் ஏராளமாக உள்ளன. உக்கிரபாண்டியன் கட்டிய கோட்டையும், அகழியும் இன்றும் உக்கிரன்கோட்டையில் காணலாம்.
வீரகேரளம்புதூரில் ஊற்றுமலை ஜமீன்களின் அரண்மனை இன்றுள்ளது. மலையடிக் குறிச்சியிலும் முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழின் தோற்றம் :

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்று}ரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் பாணினியையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.

Creation : #Tirunelveli_Municipality_Page

அல்வா :

திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சங்கரன்கோவில் பிரியாணி:

தமிழ்நாட்டின் சங்கரன்கோவில் பகுதியில் இந்த வகை ஆட்டிறைச்சி பிரியாணி மிகவும் பெயர் பெற்றது.
இங்குள்ள ஆடுகளின் வளர்ப்பும் அரிசியின் தரமும் இதன் சிறப்புகளாக உள்ளன.
தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் வளர்க்கப்படும் கன்னி என்ற வகையைச் சேர்ந்த ஆடுகள் சுவையில் சிறந்தவை.
சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமே அல்லாமல் வெளி ஊர் மற்றும் வெளிமாநில மக்களின் நல்லாதரவைப் பெற்றது.

Creation : #Tirunelveli_Municipality_Page
பத்தமடை பாய் :

திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Creation : #Tirunelveli_Municipality_Page
பூலித்தேவன் நினைவகம் :

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான்.
இத்தகைய மாவீரனை சங்கரன்கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவரோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும்செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி நிறுவனங்கள் :

மாநகராட்சி -1, திருநெல்வேலி
நகராட்சிகள் 6
ஊராட்சி ஒன்றியம் 19
பேரூராட்சிகள் 39
சட்டசபை தொகுதிகள் :11

திருநெல்வேலி
பாளையங்கோட்டை
சேரன் மாதேவி
அம்பா சமுத்திரம்
தென்காசி
ஆலங்குளம்
வாசுதேவநல்லூர்
சங்கரன் கோவில்
இராதாபுரம்
நாங்குநேரி
கடையநல்லூர்

Creation : #Tirunelveli_Municipality_Page

கல்வி :

பள்ளிகள் : தொடக்கப்பள்ளிகள் 1,460 , நடுநிலை 411 , உயர்நிலை 90 , மேல்நிலை 129 , கல்லு}ரிகள் 14 உள்ளன.
தொழில் கல்வி நிறுவனங்கள்-3
அரசு மருத்துவக் கல்லு}ரி@ அரசு சித்த மருத்துவக் கல்லு}ரி
தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-7
தொழிற் நுட்பக் கல்லு}ரிகள் 5
ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-8

மருத்துவம் :

மருத்துவமனைகள்-10, மருந்தகம்-3, தொடக்க மருத்துவ நலநிலையம் 55, துணை தொ.ம.நலநிலையம்-385.

ஆற்றுவளம் :

மேற்குத் தொடர்ச்சி மலை இருப்பதால் பல சிற்றாறுகளும், பேராறுகளும் இங்கு உற்பத்தியாகி நீர்வளத்தைத் பெருக்கியுள்ளன.

தாமிரபரணி :

பொதியமலையில் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு, களரியாறு, சேர்வை ஆறு ஆகிய வற்றின் நீரால் தாமிரபரணி தோன்றுகிறது. இந்த ஆறு ஆழ்வார் திருநகரிக்கு 20 கி.மீ தொலைவிலுள்ள புன்னைக் காயல் என்னுமிடத்தில் மன்னார் குடாக் கடலுடன் கலக்கிறது.
தென்மேற்கு பருவமழையாலும், வடகிழக்குப் பருவ மழையாலும் இந்த ஆற்றுக்கு நீர் வருகிறது. இதனால் பயனடையும் பரப்பு 1750 ச.கி.மீ. மைல்களாகும். இந்த ஆற்றின் நீளம் 121 கி.மீ.தான். இதிலும் 24 கி.மீ தொலைவு மலைமீதே பாய்கிறது. மலைக்குக் கீழே இதன் ஓட்டம் 97 கி.மீ தான்.

சிற்றாறு :

இதன் நீளம் 62 கி.மீ. இந்த ஆற்றினால் தென்காசி-திருநெல்வேலி வட்டங்களில் 27,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. குற்றாலமலை அருவியிலிருந்து ஆறாக உருபெறுகிறது. இது தவிர நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாநதி முதலிய பல சிற்றாறுகள் இம்மாவட்டம் முழுவதும் உண்டு.

Creation : #Tirunelveli_Municipality_Page

அணைகள் :

மணிமுத்தாறு அணை :

அணையின் மொத்த நீளம் 3 கி.மீ அதாவது 9820 அடியாகும். அதன் நடுவேயுள்ள கல் அணையின் நீளம் 1230 அடி தேக்கம் கூடிய நீரின் பரப்பு மூன்றே கால் ச.மைல் சாதாரணமாக 406 கோடி கன நீரைத் தேக்கலாம். இதன் மூலம் 65,000 ஏக்கர் நிலம் நீர்பாசன வசதி பெறுகின்றன.

பாபநாசம் அணைகள் :

பாபநாசம் மலை மீது மேலணை-கீழணை என்ற 2 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலணை 2 மலைகளுக்கிடையில் கட்டப் பட்டுள்ளது. இங்கு 120 அடிவரை நீரைத் தேக்கி வைக்கலாம்.
மேலணையிலிருந்து இரு திறப்புக் குழாய்களின் வாயிலாக வெளி வரும் நீர் 40 அடி தொலைவில் விழுகிறது. அதன் அழுத்தத்தால் அந்த நீர் 10 கி.மீ. தொலைவிலுள்ள கீழணையில் தேக்கி வைக்கப்பட்டு, 8 அடி விட்டமுள்ள இரு குழாய் களின் வாயிலாக நீரைக் கொண்டு சென்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஸ்ரீமுகப்பேரி அணை :

தென்காசி வட்டத்திலிருந்து வரும் கறுப்ப நதி மூன்று மைல்கள் தூரம் ஓடி, பிறகு அனும நதியோடு இணைகிறது. இவ்விடத்தில் மோட்டை அணையும், ஸ்ரீமுகப்பேரி அணையும் உள்ளன. இராமாநதித்திட்டத்தின் மூலம் 1,500 ஏக்கரும், கருணையாற்றின் திட்டத்தால் 7,500 ஏக்கரும் பாசனம் பெறுகின்றன.

கடநா நதி (கருணை ஆறு)அணை :

சம்பங்குளத்தில் உள்ளது கடநா நதி அணை.

மலைவளம் :

திருநெல்வேலியிலுள்ள பணகுடிக்கு அருகில் இருந்து ஆரம்பிக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மும்பை வரை செல்கிறது. சிவகிரியில் உள்ள மலையில் 20 மலை முகடுகள் உள்ளன. இவற்றின் சராசரி உயரம் 1500 மீட்டர் ஆகும்.

Creation : #Tirunelveli_Municipality_Page

அகத்தியமலை :

பொதிகை மலை என்பது இதுதான். இதன் உயரம் 1800 மீ. இங்குதான் தாமிரபரணி உற்பத்தியாகிறது. அகத்தியர் மலை மலைமுகடுகளால் போர்த்தப்பட்டே காட்சி தரும். இரண்டு பருவக்காற்றாலும் இம்மலை நன்மை அடைகிறது.

ஐந்தலை பொதிகை :

அகத்திய மலைக்குத் தெற்கே இம்மலை இருக்கிறது. சமவெளியிலிருந்து கிழக்கே நோக்கினால், வரிசையாக அணிவகுத்து நிற்கும் உருவத்தோற்றம் தென்படும். இங்கே தான் நாகமலையும் அதன் பக்க மலைகளும் உள்ளன. திருக்குறுங்குடிக்கப்பால் இம்மலைபகுதி 1800 மீ வரை உயர்ந்து காணப்படுகிறது. இதுவே திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் இறுதிக் கட்டமாகும்.

திருநெல்வேலியில் குறிப்பிடத்தக்கவர்கள் :

வீரபாண்டிய கட்டபொம்மன் - பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி), ஊமைத்துரை - பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி), வ.உ.சிதம்பரனார் - ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி).

Creation : #Tirunelveli_Municipality_Page

ஆன்மிகத் தலங்கள் :

காந்திமதி நெல்லையப்பர் கோவில் :

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்.
இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

முப்பீட தலங்கள்:

அம்பாசமுத்திரம் - திருமூலநாதர் திருக்கோயில்
ஊர்காடு - திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்
வல்லநாடு - திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

பஞ்ச ஆசன தலங்கள்:

ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
செண்பகராமநல்லு}ர் - இராமலிங்கர் திருக்கோயில்

Creation : #Tirunelveli_Municipality_Page

தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்:

சங்கரன்கோவில் - சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
கரிவலம்வந்தநல்லு}ர் - பால்வண்ணநாதர் - அக்னி தலம்
தாருகாபுரம் - நீர் தலம்
தென்மலை- காற்று தலம்
தேவதானம் - ஆகாய தலம் (இது தற்போதைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது)

காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்:

சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்:

களக்காடு- சத்யவாகீசர்
பத்தை - குலசேகரநாதம்
பத்மனேரி - நெல்லையப்பர்
தேவநல்லு}ர் - சோமநாதம்
சிங்கிகுளம் - கைலாசநாதம்

நவ சமுத்திர தலங்கள் :

அம்பாசமுத்திரம்
ரவணசமுத்திரம்
வீராசமுத்திரம்
அரங்கசமுத்திரம்
தளபதிசமுத்திரம்
வாலசமுத்திரம்
கோபாலசமுத்திரம்
வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

Creation : #Tirunelveli_Municipality_Page

பஞ்ச பீட தலங்கள் :

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.
கூர்ம பீடம் - பிரம்மதேசம்
சக்ர பீடம் - குற்றாலம்
பத்ம பீடம் - தென்காசி
காந்தி பீடம் - திருநெல்வேலி
குமரி பீடம் - கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

காட்டு வளம் :

காடுகளின் பரப்பு 40,253,16 ஹெக்டேர்கள். இம்மாவட்டத்தின் காடுகள் அனைத்தும் மலைகளில்தான் காணப்படுகின்றன.
மரங்களில் கோங்குதான் விலை மதிப்புடையது. இங்கு காடுகள் காணப்படும் வட்டங்கள்: நாங்குநேரி, அம்பா சமுத்திரம், தென்காசி வட்டங்கள். செங்கோட்டை வட்டத்துக் காடுகளில் இரயில் பாதை போடப்பயன்படும் 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்கு உதவும் மரங்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் காடுகளில், மயிலை, நெடுநாரி, மதகிரிவேம்பு, நங்குல், செங்குரஞ்சி மரங்களும், பிரம்பு வகை களும், தேக்கு, கோங்கு தோதகத்தி, நாங்கு மரங்களும் அடர்த்தியாக உள்ளன.
நாங்குநேரி வட்டத்தில் ஒடை மரங்களும், மகிழ மரவகைகளும், எட்டி, வெள்ளத்துவரை போன்ற மரவகைகளும் உண்டு.
செங்கோட்டை காடுகளில் காகிதக் கூழ் செய்ய உதவும் ஈடா ரீட் மரங்கள் ஆண்டுதோறும் 10,000 டன் அளவுக்குப் பயிராக்கப்படுகின்றன. மரங்களைத் தவிர பிசின் மரம், மஞ்சக்கடம்பன், கரையானால் அரிக்க முடியாத விடத்தேரை ஆகிய மரங்களும் மிகுதியாக வளர்கின்றன.

காட்டு விலங்குகள் :

செங்கோட்டை காடுகளில் யானை, காட்டெருமை இன்னும் பல வகையான விலங்குகள் காணப்படுகின்றன.
சங்கரன் கோவில், அம்பா சமுத்திரம் நாங்குநேரி காடுகளில் காட் டெருதுகள் காணப்படுகின்றன.
புலிகள் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும் உள்ளன. சிறுத்தைக் குறைவு. தேனுண்ணும் கரடி வகை அதிகம்.
தலை சிறுத்த சாம்பர் மானும், குற்றாலம், திருக்குறுங்குடி பகுதிகளில் மலையாடுகளும் உள்ளன.
எலிமான்கள் போன்ற இவை கண்களுக்குத் தெரிவதில்லை. மான் போன்ற தோற்றம் கொண்ட மறிமான்களும், காட்டு நரிகள், நீண்டவால் குரங்குகள் போன்றவையும் காணப்படுகின்றன.

Creation : #Tirunelveli_Municipality_Page
பறவைகள் :

மணிப்புறா, கிளி, பெரிய அலகு கொம்புப்பறவை ஆகியவை இம்மலைகளில் காணப் படுகின்றன.
சனவரி-பிப்ரவரியில் சாம்பல் நிறமுடைய பெலிக்கன் பறவைகள் இலங்கையில் இருந்து வந்து நாங்குநேரி வட்டத்திலுள்ள விஜய நாராயணபுரம் குளத் திற்கு அருகில் தங்கி தாயகம் செல்கின்றன.
பருத்தி வாத்து என்ற ஒருஇனம் இங்கு நிரந்தரமாக வாழ்கிறது.
உள்ளான்களும், மரஉள்ளான்களும் தாழ்ந்த மலைக் குன்றுகளில் அதிகமாக வாழ்கின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையில் பல்வேறு விதமாகப் பூச்சிகள் வாழ்கின்றன.

Creation : #Tirunelveli_Municipality_Page

நிலவளம் :

திருநெல்வேலி மாவட்டம் ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு திகழ்கிறது.
மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதிகள் குறிஞ்சி நிலமாகவும், முல்லை நிலமாகவும் உள்ளன. மருதநில வளத்தைத் தாமிரபரணி பாயும் ஆற்றுப் பகுதிகளில் காணலாம். புன்செய் பயிர்கள் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி வட்டங்களில் விளைகின்றன. இவை கரிசல் காடுகள்.
மணற்பகுதிகளாக உள்ள பாலைப் பகுதிகளை 'தேரிக் காடுகள்' என்று அழைக்கின்றனர். நாங்குநேரி வட்டத்தின் தென் பகுதிகளில் இவற்றைக் காணலாம். இங்கு சில மணற் குன்றுகள் 200 அடிக்கும் மேல் உள்ளன.

Creation : #Tirunelveli_Municipality_Page

தருவைகள் :

பாலைவன ஊற்றுகளை போல இம்மணற்குன்றுகளில் தேங்கும் நீர் நிலத்தடி நீரோடு சேர்ந்து சிற்றேரிகளாக காட்சி தருகின்றன. இவற்றை இப்பகுதி மக்கள் 'தருவை'கள் என்று அழைக்கின்றனர்.

கனிமங்கள் :

சுண்ணாம்புக்கல் :

சிமெண்ட் தயாரிப்புக்குத் தேவையான இப்பொருள் நாங்குநேரி வட்டத்திலுள்ள வள்ளியூர், களக்காடு, முதலிய ஊர்களில் கிடைக்கிறது.

கார்னர்டு மணல் :

உப்புத்தாள் செய்ய உதவும் இவ்வகை மணல் கடலோரப் பகுதிகளில் கிடைக்கிறது.

அல்லனைட் :

அணுசக்திக்கு தேவையான இம்மூலப்பொருள் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது.

மோனசைட் :

இது உலோகச் சத்து நிறைந்த பொருள். கடற்கரை மணலில் கிடைக்கிறது. விளக்குத்திரி, மென்மையான எரியும் கம்பிகள், சில மருந்துகள் ஆகியவை செய்வதற்கு இது பயன்படுகிறது.

மைக்கா :

நாங்குநேரி வட்டம் மூலக்கரைப்பட்டியில் சிறிதளவு கிடைக்கிறது.

கிராபைட் :

உருக்கு வேலைக்கு உதவும். சிறுகலங்கள் செய்வதற்கும், சிலவகை எண்ணெய் தயாரிக்கவும் இது பயன்படுகிறது. அம்பை வட்டத்திலுள்ள சிங்கம்பட்டிப் பகுதியிலும், சங்கரன் வட்டத்துக் குருவிக்குளம் பகுதியிலும் இது மிகுதியாகக் கிடைக்கிறது.

வேளாண்மை :

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அம்பாசமுத்திரம் வட்டங்களில் நெல்லும், சங்கரன் கோயில் வட்டத்தில் பருத்தியும், மிளகாயும் மிகுதியாக விளைகின்றன. இம் மாவட்டத்து நெல் வகைகளுள், ஆனைக் கொம்பன் என்னும் வகை குறிப்பிடத்தக்கது.
19-ஆம்நு}ற்றாண்டில் பருத்தி விளைச்சல் அதிகம் இருந்தது. தற்போது குறைந்தளவே சாகுவடி செய்யப்பட்டு வருகிறது.
தென்காசி வட்டத்தில் உளுந்து, சோளம் ஆகிய வையும் சங்கரன் கோயில் நாங்கு நேரி வட்டங்களில் மிளகாயும், தென்காசி வட்டத்தில் மிளகும் விளைகின்றன. இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இவை எல்லாக் காலங் களிலும் இங்குக் கிடைக்கின்றன.
இராதாபுரம், திசையன்விளை, வள்ளியூர் பகுதிகள் பனைமரங்கள் மிகுதி.

பணப்பயிர்கள் :

1884-ஆம் ஆண்டு இங்கு காப்பித் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டன.
1902-ஆம் ஆண்டு நாங்குநேரி வட்டத்தில் 27 காப்பி எஸ்டேட்டுகள் இருந்தன.
1915-இல் 13 தோட்டங்கள் மட்டும் தனியார் வசம் இருந்தன. சில தோட்டங்களில் பழங்களை விளைவித்தனர். இங்கு சீன-ஜப்பானிய வகைகள் பயிரிடப்பட்டன.
குற்றாலத்திற்கு மேல் மலைப்பகுதியில் இருக்கும் தெற்குமலை எஸ்டேட்டுகளும், ஹோப் எஸ்டேட்டுகளும் குற்றாலத்துத் தேனருவிக்குச் செல்லும் வழியில் உள்ள தெற்குமலை எஸ்டேட்டுகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

சுற்றுலாத் தலங்கள் :

இம்மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக கீழேகண்ட இடங்களைக் குறிப்பிடலாம் :-
அ) பாபநாசம் நீர்வீழ்ச்சி ஆ) மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி இ) குற்றாலம்

பாபநாசம் நீர்வீழ்ச்சி :

அம்பாசமுத்திரம் இரயில் நிலையத்திலிருந்து 8கி.மீ. தொலைவில் உள்ளது. அகத்திய மலையில் தோன்றும் சிற்றாறு மேலணையிலிருந்து 40 அடி தொலைவில் விழுகிறது.

மணிமுத்தாறு நீர்வீழ்ச்சி :

குற்றாலத்திலிருந்து 48கி.மீ தொலைவில் உள்ளது. மலைமீது அருவி இருக்கிறது. இங்கு குளிக்கும் வசதியுள்ளது. ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வீழ்கிறது. அருவியின் உயரம் 25 அடி. குளிக்கும் இடத்தில் அருவியின் உயரம் 17அடி. அருவிக்குக் கீழே 80 அடி ஆழத்துக்கு நீச்சல் குளத்தைப் போன்ற அமைப்புள்ளது. இங்கு மணிமுத்தாறு அணையையும் காணலாம்.
பெரிய மணிமுத்தாறு அணையில் பூங்கா, சிலைகள், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, செயற்கைக்குகை, கோழிப்பண்னை, மீன்பண்ணை, விதைப்பண்ணை முதலியவை உள்ளன. மலைமீது மாஞ்சோலைத் தோட்டங்களைக் காணலாம்.

குற்றாலம் :

திருக்குற்றாலம், தென்காசியிலிருந்து 3கி.மீ தொலைவில் உள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்கள் அருவியைப் பார்ப்பதற்கு ஏற்று காலமாகும்.
இவ்வுரைச் சிறப்பித்து 'குற்றால குறவஞ்சி' என்ற இலக்கியம் எழுந்துள்ளது.
குற்றாலத்தில் அருவியாக விழும் ஆற்றின் பெயர் சிற்றாறு ஆகும். இந்த ஆறு திரிகூட மலையில் தோன்றி, வரும் வழியில் முதலில் நு}று அடி உயரத்திலிருந்து விழுகிறது.

தேன் அருவி :

தேன் அடைகள் மிகுந்து காணப்படுவதால் இப்பெயர் உண்டாயிற்று

ஐந்தருவி :

சிற்றாற்றின் ஒரு பிரிவு ஐந்து அருவிகளாக விழுகிறது. அதனால் இதனை ஐந்தருவி என அழைக்கின்றனர். ஆற்றுநீர், ஐந்து அருவிகளாக விழும் காட்சி கண்களுக்கு இனிமையாகும்.

முண்டந்துறை புலிகள் புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 42 கி.மீ தொலைவில் உள்ளது. இப்புகலிடம் புலிகளின் பாதுகாப்பு கருதி உண்டாக்கப்பட்டது. மேலும் இங்கு சிறுத்தை, சாம்பார் மான், பன்றிக் கரடி, நீலகிரி வகை குரங்கு, சிங்கவால் குரங்கு போன்றவைகளைக் காணலாம். முண்டந்துறையைக் காண ஏற்ற காலம் அக்டோபரிலிருந்து ஜனவரி வரை செல்லலாம். தங்குவதற்கு ஏற்ற வசதிகள் உண்டு. முன்னரே பதிவு செய்ய வேண்டும்.

களக்காடு விலங்குப்புகலிடம் :

திருநெல்வேலியிலிருந்து 47 கி.மீ தொலைவில் உள்ளது. தாவர வியலாளர்களுக்கும், விலங்கியலாளர்களுக்கும் ஏற்ற இடம்.
இங்கு பலவகையான தாவரங்களும், புலி, சிறுத்தை, குள்ளநரி, காட்டு நாய்கள், ராஜநாகம் மலைப்பாம்பு, பலவகைப்பாம்புகள் ஆகியவை காணப்படு கின்றன.
இப்புகலிடத்தைக் காண்பதற்கு ஏற்ற மாதங்கள் :
மார்ச்சிலிருந்து செப்டம்பர் வரை@ இங்கு சிங்கவால் குரங்குகள் பாதுகாக்கப்படுகின்றன.
இம்மாவட்டத்தில் மேலும் காணத்தகுந்த இடங்களாக இருக்கும் பறவைகள் புகலிடங்கள் கூந்தக்குளம் பறவைகள் புகலிடம், மற்றும் அரியகுளம் பறவைகள் புகலிடம் முதலியவை.
தொகுப்பு : UvariSri

தாமிரபரணி :

திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா  நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன்  பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  இந்த தண்ணியோட  ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம்  வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம்.

திருநெல்வேலி அல்வா :

இருட்டுக்கடை , திருநெல்வேலி
திருநெல்வேலிக்கு பெருமை சேக்குற இன்னொரு விஷயம் அல்வா. உலகத்துல எத்தனையோ வகையில அல்வா இருக்கலாம். ஆனா திருநெல்வேலி அல்வா எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ரும். அதே போல திருநெல்வேலிலயும் எத்தனையோ  அல்வா கடைகள் இருக்குது. ஆனா நெல்லையப்பர் கோவில் வாசல்ல இருக்குற இருட்டுக்கடை அல்வா கடைக்கு இருக்குற மவுசு யாருக்கும் இல்லை. அந்த கடைல நூறு அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோபுரத்தை பாத்துக்கிட்டே சாப்பிடும் சுகமே தனி...!

#திருநெல்வேலி தமிழ் :

    தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை,  குமரி  என்று பல பகுதி மக்களால் அவைகள்  பேசப்படுகின்றன. அவைகளை விட நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் புழங்கும் தமிழ்  தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, மக்கா, தொடங்கி ஏல போன்ற சொற்கள் நெல்லை தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. நெல்லைத்தமிழ் பேசுவோரின் வார்த்தைகளிலும், குணத்திலும் அன்பும் வீரமும் பொங்கி வழிவதை காண முடியும்.

#OXFORD நகரம்:

     நெல்லை பாளையங்கோட்டை தென்னிதியாவின் 'OXFORD' என்று புகழப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கியது இந்நகரம். இன்றும் சாலை தோறும் கல்விச்சாலைகளை இங்கு காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி கல்லூரிகள் இருப்பது இயல்பு. அனால் பள்ளி கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான்,..!

#சுற்றுலா:

   

#குற்றாலம்.
நெல்லை மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், திருநெல்வேலி யில் இருந்து எந்த திசையில் சென்றாலும் வெறும் 50 கிலோ மீட்டர்  தூரத்தில் ஒரு  சுற்றுலா தளம் வந்துவிடும்.  உதாரணத்திற்கு ,
கிழக்கே - திருச்செந்தூர் .
மேற்கே - பாபநாசம்,குற்றாலம்.
தெற்கே - கன்னியாகுமரி (89 km).
வடக்கே - கழுகுமலை.
இப்படி சுற்றி சுற்றி சுற்றுலா தலங்களை கொண்டதாக விளங்குகிறது நெல்லை மாவட்டம்.

#ஆன்மீக தலங்கள் :

   

குறுக்குத்துறை
புண்ணிய நதி தாமிரபரணி  பாயும் பூமி ஆதலால் புண்ணிய தலங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் பஞ்சமில்லை. நவ கைலாச கோவில்கள் நெல்லை மாவட்ட தாமிரபரணி கரையோரம் வரிசையாக  அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிருஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என்று ஆன்மீக மனம் நெல்லை பிராந்தியம் முழுவதும் வீசிக்கொன்டே இருக்கிறது.....