வெள்ளி, 28 செப்டம்பர், 2018

என்னாது, பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? - தெரிந்த கதை தெரியாத உண்மை


என்னாது, பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? - தெரிந்த கதை தெரியாத உண்மை

இந்த வாரம் நமது தெரிந்த கதை, தெரியாத உண்மையில், பிரம்மச்சரிய கடவுளான ஆஞ்சநேயருக்கு மகன் உண்டா? இல்லையா எனத் தெரிந்து கொள்வதற்கு முன் ஆஞ்சயநேயரின் பிறப்பு ரகசியம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். “அஞ்சனாதேவி” என்ற பெண் குரங்கிற்கும், ”கேசரி” என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் பிறந்தவர்தான் இந்த அனுமன்.

வியக்கத்தக்க கருத்துக்களை கொண்டது இந்து புராணங்கள். அவைகள் படிப்பதற்கு மிகவும் புதிராகவும், சுவாரசியமாகவும் இருக்கும். மாகாபாரதத்தில் தேவர்களின் அருளால் பாண்டவர்களை கருவில் சுமந்தார் குந்திதேவி. அதேப்போல, கந்தாரியோ 101 குழந்தைகளை கருவில் சுமந்தார். அதுப்போலதான், ஆஞ்சநேயரின் மகனான மகர்ட்வாஜாவும் வியக்கத்தக்க கருவின் மூலமாக தான் பிறந்தார். ஆஞ்சநேயரின் மகன் கருவானதை பற்றியும், ஆஞ்சநேயர் அவனை சந்தித்தது பற்றியும் இரண்டு விதமான கதைகள் கூறப்படுகிறது. ஆனால் இந்த இரண்டு கதைகளும் சொல்வது ஒன்றைத்தான். ஆஞ்சநேயருக்கு ஒரு மகன் இருந்தான் என்பதே. மகர்ட்வாஜா ஆஞ்சநேயருக்கு மகனாக மட்டும் இல்லாமல் மிகப்பெரிய போர் வீரனாகவும் இருந்தான்.

வால்மீகி ராமாயணத்தில் மகர்ட்வாஜா பற்றி சொல்லப்படும் போது, ஒருமுறை ஆஞ்சநேயேர் நதியில் குளித்து கொண்டிருந்தார். அவர் உடம்பில் ஏறியிருந்த சூட்டினால், அவருடைய விந்தணு ஆற்றில் கலந்துள்ளது. அது மகர் என்ற மீன் போன்ற உருவத்தில் இருந்த ஒர் உயிரினத்திடம் சென்றது. அதனால் ஒரு கருவையும் பெற்றது. பின்னர் ராவணனின் உறவினர்களான அஹிராவணாவும். மஹிராவணாவும் நதிக்கரையில் பாதி குரங்கு, பாதி மீன் வடிவில் ஒரு குழந்தையை பார்த்தனர். அதை எடுத்து, அதற்கு போர் பயிற்சி கொடுத்து சிறந்த வீரனாக்கினர். அதுவே மகர்ட்வாஜா என்று சொல்லப்படுகிறது .

கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான ராமாயணத்தில், அனுமனின் மகன் ”மச்சானு” என அழைக்கப்பட்டான். ஆஞ்சநேயருக்கும் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிற்கும் (சுவர்ண என்றால் தங்க மச்சா என்றால் கடற்கன்னி என்று அர்த்தம்) பிறந்தவன் தான் மச்சானு. சில பதிப்புகளில், விந்தணு தண்ணீரில் சென்ற அதே கதை தான் கூறப்பட்டுள்ளது. ஆனால், அது சென்றது மகாராவிற்கு பதில் இராவணனின் கடற்கன்னி மகளான சுவன்னமச்சாவிடம் என்று கூறப்படுகிறது

இராமர் இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்த சமயத்தில், அந்த பணிகளை செயல்படாமல் இடையுறு செய்ய இராவணன் தன்னுடைய கடல்கன்னி மகளான சுவன்னமச்சாவினையும் அவளது கூட்டாளிகளையும் பாலம் கட்டும் இடத்திற்கு அனுப்புகிறான். வானரப்படைகள் கடலில் இடும் பாறைகள் இரவில் காணாமல் போயின.இந்த மர்மத்தை கண்டுப்பிடிக்க அனுமன் கடலின் அடியில் பாய்ந்து செல்கிறார். அங்கே இராவணனின் அழகிய மகளான சுவன்னமச்சாதான் காரணம் எனத் தெரிந்துக் கொள்கிறார்

இராவணனின் மகள் சுவன்னமச்சாவினை பார்க்கிறார் அனுமன் அவள் உத்திரவுப்படி மற்ற கடல் கன்னியர் கடலில் வீசப்பட்ட பாறைகளை தூக்கி வேறு இடத்தில் சேர்த்துக்கொண்டு இருந்தனர். அதை, அனுமன் தடுக்கும்போது ஆரம்பத்தில் அனுமனுக்கு போக்குகாட்டிக் கொண்டு இருந்த சுவன்னமச்சா இறுதியில் அனுமனின் நல்ல உள்ளம் தெரிந்துக் கொண்டு அனுமன்மேல் காதல் கொண்டாள். அனுமனும் சுவன்னமச்சா அழகில் மயங்கி இருவரும் ஒன்றாக இணைந்தனர். அதில் பிறந்த மகன்தான் மச்சானு என்றும் சொல்லப்படுகிறது .

மேலும்,கம்போடியா மற்றும் தாய் பதிப்புகளான இராமாயணத்தில், இராவணனின் படையுடன் நடந்த ஒரு போரின் போது, இடுப்புக்கு மேல் குரங்கை போலவும் இடுப்புக்கு கீழ் மீனை போல் இருந்த, சக்தி வாய்ந்த ஒரு எதிரியை எதிர்கொண்டார் அனுமன். விளையாட்டாய் அதனை வென்றுவிடலாம் என்று நினைத்தார். ஆனால், அந்த உயிரினமோ கொஞ்சமும் சோர்வின்றி அவரோடு போரிட்டது. முடிவே இன்றி சண்டை நீண்டுக்கொண்டே போக, இவ்வளவு வீரத்தோடு சண்டையிடும் நீ யார்? உன் பெற்றோர் யார்? எனக் கேட்டார் அனுமன். அந்த உயிரினம் சொன்ன பதில், அனுமனையே அதிரச் செய்தது தன்னுடைய தாய் சுவன்னமச்சா எனவும் தந்தை வல்லமைமிக்க வானர வீரரான வாயுபுத்திரன் அனுமன் என்று கூறியதைக் கேட்டு வியந்த ஆஞ்சநேயர், தான் தான் ஆஞ்சநேயர் என்றும் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் கூறினார்.

இருப்பினும், தியானத்தில் கண்களை மூடிக்கொண்ட ஆஞ்சநேயர் மகர்ட்வாஜா பிறப்பின் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை கண் முன் கொண்டு வந்தார். தன் மகனை அடையாளம் கண்டுக்கொண்ட ஆஞ்சநேயர் உடனே நடு வானில் பாதி வழியில் சென்று கொண்டிருந்த தன் ஆயுதத்தை நிறுத்தினார். தன் மகனான மகர்ட்வாஜாவை அணைத்துக் கொண்ட ஆஞ்சநேயர் தன் ஆசீர்வாதங்களையும் அளித்தார். எது எப்படி இருந்தாலும், தந்தையும் மகனும் ஒருவருக்கொருவர் யாரென தெரியாமல் போரில் மோதிக் கொண்ட போதுதான் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஆஞ்சநேயர் தெரிந்து கொண்டார்.

உ‌ஜ்ஜை‌னி நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 15 ‌கி.மீ. தொலை‌வி‌ல் சா‌ன்வெ‌ர் எ‌ன்ற இட‌த்‌தி‌ற்கு அரு‌கில் ஒரு அனுமன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் சிறப்பே இங்கிருக்கும் அனுமன் சிலை தலை கீழாக இருப்பதுதான். இதனால் இந்த கோவில் உல்டா அனுமன் என்று சொல்லப்படுகிறது. எதுக்கு இந்த கோவிலைப் பற்றி பார்க்கிறோம்னா, மயில்ராவணன் இராமனையும் லட்சுமணையும் மயக்க நிலையில் பாதாள உலகத்திற்கு கடத்திச் சென்றபோது அனுமன் இந்த வழியாகத்தான், பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌ச் செ‌‌ன்று அவ‌‌ர்க‌ள் இருவரையு‌ம் ‌மீ‌ட்டு வ‌ந்தா‌ராம். அ‌ப்படி அனும‌ன் தலை‌கீ‌ழாக‌ப் பாதாள உலக‌த்‌தி‌ற்கு‌‌ப் புற‌ப்ப‌ட்ட இட‌ம் இதுதா‌ன் என சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் இருக்கும் இரண்டு பா‌ரிஜாத மர‌ங்க‌ள் ‌மிகவு‌ம் பழமையானவை. இ‌ந்த மர‌ங்க‌ளி‌ல் அனும‌ன் குடி‌யிரு‌ப்பதாக ஐதீகம் உண்டு. இங்கே அனுமனின் மகனாக கருதப்படும் மகரத்வஜனுக்கு ஒரு சந்நிதி இருக்கிறது. மேலும், இராம‌ன், ‌சீதை, ல‌ட்சுமண‌ன், ‌சிவ‌ன் ம‌ற்று‌ம் பா‌ர்வ‌தி ஆ‌கியோ‌ரி‌ன் ‌சிலைகளு‌ம் உ‌ள்ளன.

புதன், 26 செப்டம்பர், 2018

யார் அந்த மருதநாயகம்?


யார் அந்த மருதநாயகம்? நீங்கள் அறிந்து  கொள்ள வேண்டிய வரலாற்றின் இரகசிய உண்மைகள்!

மருதநாயகம் என்றால் பலருக்கும் நடிகர் கமல் நீண்ட காலமாக திரைப்படமாக எடுக்க தவித்து வரும் ஒரு படமாக மட்டுமே தெரியும். ஆனால், அதையும் தாண்டி, இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட அந்த உண்மையான மருதநாயகம் யார் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

உண்மையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் மருதநாயகம் என்ற பெயரை காண்பது அரிது. காரணம், மருதநாயகம் என்ற பெயர் அந்த வரலாற்று பக்கங்களில் பெரிதாக எழுதப்படவில்லை.
இந்திய விடுதலைக்காக மருதநாயகம் என்ன செய்தான்? ஆங்கிலேயர் படையிலும், பிரெஞ்சு படையிலும் படை தலைவனாக இருந்த ஒருவனுக்கும், இந்திய விடுதலை போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த காலத்திலேயே கொரில்லா சண்டை பயிற்சி பெற்று மாவீரனாக திகழ்ந்தவன், எப்படி உயிரிழந்தான்?
உண்மையில் யார் தான் இந்த மருதநாயகம்?

1700-களில் வாழ்ந்தவன் மருதநாயகம். இவரது இயற்பெயர் மருதநாயகம் என்றிருந்தாலும், இஸ்லாமத்தின் மீது கொண்ட பேராவல் காரணத்தால் தனது பெயரை முகமது யூசப் கான் என மாற்றிக் கொண்டான்.
இந்த பெயரை நீங்கள் இந்திய விடுதலை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மருதநாயகம் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டத்தின் பனையூர் என்ற இடத்தில். தனது இளம் வயதிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறிய மருதநாயகம் எனும் யூசப் கான் பிரஞ்சு படையில் வேலை பார்த்து வந்தவர். தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், உருது, போர்ச்சுகீசிய மொழிகளும் கற்று தேர்ந்த மாவீரன் யூசப் கான்.
இந்தியாவின் பெரும் பகுதிகளில் பிடித்து ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு காரர்கள் மத்தியில் பெரிய போட்டி நடந்து வந்தது. அந்த நாடு பிடிக்கும் யுத்தத்தில் யூசப் கானின் வீரத்தை கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், தனது படையில் யூசபை சேர்த்துக் கொண்டார்.
சிலர் பிரெஞ்சு படையில் தன்னை வளர்த்துக் கொள்ள, தனது வீரத்திற்கு ஏற்ற இடம், வேலை இல்லை என்பதால் யூசப் கான் ஆங்கிலேயர் படையில் இணைந்தான் என்றும் கூறுகிறார்கள்.
தனது படையில் யூசப் கான் இணைந்த பிறகு, அவருக்கு ஐரோப்பிய பயிற்சிகளை வழங்கினார் ராபட் கிளைவ்.
1752ல் நடந்த ஆற்காடு முற்றுகை போரில் யூசப் கான் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி தரவே, சிப்பாய் படை தளபதி எனும் 'கான்சாகிப்' பட்டம் முகமது யூசப்கானிற்கு வழங்கப்பட்டது.
1755ல் பாளைய்காரர்களிடம் இருந்து சரியாக கப்பம் வசூலித்து கொடுத்த காரணத்தால், 1759ல் நெல்லையின் கவர்னராக முகமது யூசப் கானை ஆங்கிலேய அரசு நியமித்தது.
சென்னையை 1758-ல் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை கொரில்லா தாக்குதல் மூலம் தோற்கடித்தான் முகமது யூசப் கான். இந்த வெற்றியின் பரிசாக யூசப் கானிற்கு கமாண்டோ கான் எனும் பதவி உயர்வு கிடைத்தது.
முகமது யூசப் கான் மதராச பட்டினம் சென்ற போது, கொள்ளைக்காரர்கள் மீனாட்சி அம்மன் கோயிலை சூறையாடியது அறிந்து, அவர்களிடம் இருந்து சண்டையிட்டு அந்த நிலங்களை கோவில் நிர்வாகத்திற்கு மீண்டும் அளித்தார் முகமது யூசப் கான்.
அதுமட்டுமின்றி, அங்கே குளங்கள் வெட்டி, கோட்டைகளை புதிப்பித்து பல நல்ல காரியங்கள் செய்ததால். முகமது யூசப் கானிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

முகமது யூசப் கானிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை அறிந்த ஆங்கிலேய அரசு கோபம் கொண்டது. இதை தடுக்க, மருதநாயகம் ஆற்காடு நவாபின் பணியாள் என ஆணையிட்டது. இதன் காரணத்தால் முகமது யூசப் கான் எரிச்சல் அடைந்தார்.
மேலும், மக்கள் மத்தியில் ஆங்கிலேய அரசிற்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி கைது செய்ய அறிவித்தது.
1763-ல் 27,000 பேர்களை படையில் சேர்த்து ஆங்கிலேய படைக்கு எதிராக சண்டையிட்டு மதுரையில் வெற்றிக்கொடி கட்டினார் முகமது யூசப். இதன் காரணமாக மேலும், முகமது யூசப் மீது அதிக கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு, தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தது.
1764-ல் ஆற்காடு இளவரசர் மற்றும் ஆங்கிலேய அரசும் யூசப் கானின் கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டது. வீரர்களுக்கு செல்லும் நீர், உணவை தடுத்து அவர்களை சோர்வடைய செய்து தந்திரமாக வெற்றி அடைந்தார்கள் ஆங்கிலேயர்கள்
கடைசியாக அக்டோபர் 10, 1764ல் கைது செய்யப்பட்டு, 16ம் நாள் தூக்கில் இடப்பட்டார் முகமது யூசப் கான் என அழைக்கப்பட்டு வந்த மருதநாயகம்.
எங்கே இறந்த பிறகும் தந்திரமாக உயிரெழுந்து வந்துவிடுவானோ என்ற அச்சத்தாலும், நாங்கள் மருதநாயகத்தை வீழ்த்திவிட்டோம் என்பதை அனைத்து ஊராரும் அறியவும் மருதநாயகத்தின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்து ஆங்கிலேய அரசு.
 
புதைத்த இடங்கள்!
தலை - திருச்சி; கைகள் - நெல்லை பாளையங்கோட்டை; கால்கள் - தேனீ பெரியகுளம்; உடல் - மதுரை சம்மட்டி புரம் என பல பகுதிகளில் மருதநாயகத்தின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டன.
இவரின் கால் தேனியின் வடகரை தர்ஹாவில் புதைக்கப்பட்டுள்ளது பலரும் இன்னும் அறியாத வண்ணம் உள்ளது.