புதன், 26 செப்டம்பர், 2018

யார் அந்த மருதநாயகம்?


யார் அந்த மருதநாயகம்? நீங்கள் அறிந்து  கொள்ள வேண்டிய வரலாற்றின் இரகசிய உண்மைகள்!

மருதநாயகம் என்றால் பலருக்கும் நடிகர் கமல் நீண்ட காலமாக திரைப்படமாக எடுக்க தவித்து வரும் ஒரு படமாக மட்டுமே தெரியும். ஆனால், அதையும் தாண்டி, இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்ட அந்த உண்மையான மருதநாயகம் யார் என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரியும்.

உண்மையில், இந்திய சுதந்திர போராட்டத்தில் மருதநாயகம் என்ற பெயரை காண்பது அரிது. காரணம், மருதநாயகம் என்ற பெயர் அந்த வரலாற்று பக்கங்களில் பெரிதாக எழுதப்படவில்லை.
இந்திய விடுதலைக்காக மருதநாயகம் என்ன செய்தான்? ஆங்கிலேயர் படையிலும், பிரெஞ்சு படையிலும் படை தலைவனாக இருந்த ஒருவனுக்கும், இந்திய விடுதலை போராட்டத்திற்கும் என்ன சம்மந்தம்? அந்த காலத்திலேயே கொரில்லா சண்டை பயிற்சி பெற்று மாவீரனாக திகழ்ந்தவன், எப்படி உயிரிழந்தான்?
உண்மையில் யார் தான் இந்த மருதநாயகம்?

1700-களில் வாழ்ந்தவன் மருதநாயகம். இவரது இயற்பெயர் மருதநாயகம் என்றிருந்தாலும், இஸ்லாமத்தின் மீது கொண்ட பேராவல் காரணத்தால் தனது பெயரை முகமது யூசப் கான் என மாற்றிக் கொண்டான்.
இந்த பெயரை நீங்கள் இந்திய விடுதலை வரலாற்றில் கேள்விப்பட்டிருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.
மருதநாயகம் பிறந்தது ராமநாதபுரம் மாவட்டத்தின் பனையூர் என்ற இடத்தில். தனது இளம் வயதிலேயே இஸ்லாம் மதத்திற்கு மாறிய மருதநாயகம் எனும் யூசப் கான் பிரஞ்சு படையில் வேலை பார்த்து வந்தவர். தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், உருது, போர்ச்சுகீசிய மொழிகளும் கற்று தேர்ந்த மாவீரன் யூசப் கான்.
இந்தியாவின் பெரும் பகுதிகளில் பிடித்து ஆட்சி செய்ய ஆங்கிலேயர்கள், பிரெஞ்சு காரர்கள் மத்தியில் பெரிய போட்டி நடந்து வந்தது. அந்த நாடு பிடிக்கும் யுத்தத்தில் யூசப் கானின் வீரத்தை கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், தனது படையில் யூசபை சேர்த்துக் கொண்டார்.
சிலர் பிரெஞ்சு படையில் தன்னை வளர்த்துக் கொள்ள, தனது வீரத்திற்கு ஏற்ற இடம், வேலை இல்லை என்பதால் யூசப் கான் ஆங்கிலேயர் படையில் இணைந்தான் என்றும் கூறுகிறார்கள்.
தனது படையில் யூசப் கான் இணைந்த பிறகு, அவருக்கு ஐரோப்பிய பயிற்சிகளை வழங்கினார் ராபட் கிளைவ்.
1752ல் நடந்த ஆற்காடு முற்றுகை போரில் யூசப் கான் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி தரவே, சிப்பாய் படை தளபதி எனும் 'கான்சாகிப்' பட்டம் முகமது யூசப்கானிற்கு வழங்கப்பட்டது.
1755ல் பாளைய்காரர்களிடம் இருந்து சரியாக கப்பம் வசூலித்து கொடுத்த காரணத்தால், 1759ல் நெல்லையின் கவர்னராக முகமது யூசப் கானை ஆங்கிலேய அரசு நியமித்தது.
சென்னையை 1758-ல் முற்றுகையிட்ட பிரெஞ்சு படையை கொரில்லா தாக்குதல் மூலம் தோற்கடித்தான் முகமது யூசப் கான். இந்த வெற்றியின் பரிசாக யூசப் கானிற்கு கமாண்டோ கான் எனும் பதவி உயர்வு கிடைத்தது.
முகமது யூசப் கான் மதராச பட்டினம் சென்ற போது, கொள்ளைக்காரர்கள் மீனாட்சி அம்மன் கோயிலை சூறையாடியது அறிந்து, அவர்களிடம் இருந்து சண்டையிட்டு அந்த நிலங்களை கோவில் நிர்வாகத்திற்கு மீண்டும் அளித்தார் முகமது யூசப் கான்.
அதுமட்டுமின்றி, அங்கே குளங்கள் வெட்டி, கோட்டைகளை புதிப்பித்து பல நல்ல காரியங்கள் செய்ததால். முகமது யூசப் கானிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்தது.

முகமது யூசப் கானிற்கு மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை அறிந்த ஆங்கிலேய அரசு கோபம் கொண்டது. இதை தடுக்க, மருதநாயகம் ஆற்காடு நவாபின் பணியாள் என ஆணையிட்டது. இதன் காரணத்தால் முகமது யூசப் கான் எரிச்சல் அடைந்தார்.
மேலும், மக்கள் மத்தியில் ஆங்கிலேய அரசிற்கு எதிராக கிளர்ச்சி ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி கைது செய்ய அறிவித்தது.
1763-ல் 27,000 பேர்களை படையில் சேர்த்து ஆங்கிலேய படைக்கு எதிராக சண்டையிட்டு மதுரையில் வெற்றிக்கொடி கட்டினார் முகமது யூசப். இதன் காரணமாக மேலும், முகமது யூசப் மீது அதிக கோபம் கொண்ட ஆங்கிலேய அரசு, தகுந்த நேரம் பார்த்து காத்திருந்தது.
1764-ல் ஆற்காடு இளவரசர் மற்றும் ஆங்கிலேய அரசும் யூசப் கானின் கோட்டையை முற்றுகையிட்டு போரிட்டது. வீரர்களுக்கு செல்லும் நீர், உணவை தடுத்து அவர்களை சோர்வடைய செய்து தந்திரமாக வெற்றி அடைந்தார்கள் ஆங்கிலேயர்கள்
கடைசியாக அக்டோபர் 10, 1764ல் கைது செய்யப்பட்டு, 16ம் நாள் தூக்கில் இடப்பட்டார் முகமது யூசப் கான் என அழைக்கப்பட்டு வந்த மருதநாயகம்.
எங்கே இறந்த பிறகும் தந்திரமாக உயிரெழுந்து வந்துவிடுவானோ என்ற அச்சத்தாலும், நாங்கள் மருதநாயகத்தை வீழ்த்திவிட்டோம் என்பதை அனைத்து ஊராரும் அறியவும் மருதநாயகத்தின் உடல்களை துண்டு துண்டாக வெட்டி பல இடங்களில் புதைத்து ஆங்கிலேய அரசு.
 
புதைத்த இடங்கள்!
தலை - திருச்சி; கைகள் - நெல்லை பாளையங்கோட்டை; கால்கள் - தேனீ பெரியகுளம்; உடல் - மதுரை சம்மட்டி புரம் என பல பகுதிகளில் மருதநாயகத்தின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்டன.
இவரின் கால் தேனியின் வடகரை தர்ஹாவில் புதைக்கப்பட்டுள்ளது பலரும் இன்னும் அறியாத வண்ணம் உள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக