திங்கள், 12 ஆகஸ்ட், 2019

சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் வரலாறு


சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோயில் வரலாறு

தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோயிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.1022 ( கோவிலமைப்பு ). இக்கோவிலில் ஆடித் தவசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது
பொருளடக்கம்
1 மரபு வழி வரலாறு
1.1 காவற் பறையன்
1.2 உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
1.2.1 "ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :"
2 ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்
3 அன்னையின் அருள்ட்சொருபம்
4 அன்னையின் சிறப்பு
5 அன்னைக்கு பூஜைகள் :
6 கோயிலும், அதன் பகுதிகளும்
7 ஆடித் தபசு
7.1 பாம்புப் புற்று
7.1.1 எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
8 சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :
9 தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :
10 மேற்கோள்கள்
11 துணைநூல்
12 இவற்றையும் பார்க்கவும்
13 வெளி இணைப்புகள்
மரபு வழி வரலாறு[1]
இந்த அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள். கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்சபூத தலங்களில் மண்தலம் (ப்ரித்திவி) ஆகும்.[சான்று தேவை]
காவற் பறையன்
மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான். கரிவலம்வந்தநல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல். தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப் பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான். அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
உக்கிரபாண்டிய அரசர் கோவில் கட்டி ஊர் உண்டாக்கியது
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் ( கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில் ) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. ( கோடு - கொம்பு ) உக்கிரபாண்டியர் கோயிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத் தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோயில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோயிலிலே கொடி ஏற்றம் நிகழும்.
"ஸ்ரீ கோமதி அம்மனைப்பற்றிய சில முக்கியமான் மரபு வழி தகவல்கள் :"
ஸ்ரீ கோமதி அம்மன் - மஹா யோகினி சக்தி பீடம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம் , சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின . அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும் .
அன்னையின் அருள்ட்சொருபம்
ஸ்ரீ கோமதி அம்மன் கோவில் , சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது . தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது . ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து , வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக , இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் . மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும் . அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன . அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும் , யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.
அன்னையின் சிறப்பு
அன்னை பராசக்தி கோமதி அம்பிகை ஹரியும் ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த , ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது . இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது . இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள் . 11ஆம் நாள் இறைவன் , இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார் . மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக , தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள் . அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது . இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பயனடைகிறார்கள் . மேலும் மனநிலை சரியில்லாதவர்கள் , பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வது கண்கூடு . இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின் நம்பிக்கை . குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது . இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது . பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும் , குண்டலினி சக்தியாகவும் , பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார் . எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும் , ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது . செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது .
அன்னைக்கு பூஜைகள் :
கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது . சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது . அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது . பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது . வொவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது . திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும் , செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும் , வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது . வொவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது . தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது . சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும் , உச்சி வேளையிலும் , சாயங்கால பூஜையிலும் , இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும் , 4 வேலைகள் அபிஷேகம் நடக்கிறது . இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும்,முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது .
கோயிலும், அதன் பகுதிகளும்
கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கருப்பக் கிரகம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் ( மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும் ) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர். தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.
சங்கரலிங்கப்பெருமானின் மற்றொரு சிறப்பு. ஆண்டுதோறும் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் 21, 22, 23 தேதிகளில் சூரிய ஒளி மானுடர்கள் சென்று தரிசனம் செய்யும் வாசல்கள் வழியாகவே நீள வாக்கில் சென்று, லிங்கத்தின் வலப்புறமாக விழத்துவங்கி சிறிது சிறிதாக நகர்ந்து சிவலிங்கத் திருமேனி முழுவதும் வியாபிக்கும். சிலசமயம் நான்கு நாட்கள் கூட விழும். இது போன்ற கோயில்கள் தமிழ் நாட்டில் சில உள்ளன. நான்கு நாட்கள் சூரியக் கதிர்கள் தவறாமல் விழும் களக்காடு கோவிலை உதாரணமாகக் கூறலாம்.
சங்கரனார் கோயில் ஓர் அழகிய கோயில். மகா மண்டபத்தைச் சுற்றி பல திருவுருவங்கள் நான்கு பக்கங்களிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. உருவங்கள் சிறிதெனினும் சிற்பச் செறிவு பாராட்டத்தக்கது. அவையாவன : துவாரபாலகர், யோக நரசிம்மம், கார்த்த வீரியன், தசகண்ட இராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், துவாரபாலகர் 2, ரிஷபாரூடர், உபதேச தஷ்ணமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐம்முகப் பிரம்மா, ஸிம்ஹவாஹன கணபதி, ஸ்ரீ இராமர், மன்மதன், வெங்கடாசலபதி, செண்பக வில்வவாரகி, சங்கரநாராயணர், சந்திர சேகரர், துவார பாலகர் 2 , உக்கிரபாண்டிய அரசர், ஸிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்க்காதேவி, ஸ்ஹண்முகர், மகிஷாசுர மர்த்தினி, கபாலி, கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தக்ஷசம்ஹார மூர்த்தி, உச்சிட்ட கணபதி, ராமர், லட்சுமணர், பரமேஸ்வரர், மயூராரூடர், மஹா விஷ்ணு, வீரபத்திரர், பைரவர், த்ரிவிக்கிரமர், வாமனாவதாரம், ஹம்சாரூடர், துவாரபாலகர். மேலும், இம்மதிலைச் சுற்றி தென்பக்கம் தக்ஷிணாமூர்த்தி, மேல்பக்கம் நரஸிம்மமூர்த்தி, வடபக்கம் பிரம்மாவும் எழுந்தருளியுள்ளார்கள்,
திருக்கோயில் கர்ப்பக்கிரஹத்தில் சங்கரலிங்கப் பெருமான் சிறிய உருவமாயெழுந்தருளியிருக்கிறார். கூடவே மனோன்மணி தேவியும் வீற்றிருக்கின்றாள். மண்டபத்தில் தெற்கு பார்க்க நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் செய்தருள்கின்றார்.சிவகாமியம்மையாரும் தாளம் போடுகின்றனர். காரைக்காலம்மையார் கூடவே இத்திருக்கூட்டத்தைக் கண்டு ஆனந்தத்தில் மூழ்கி பாடிக்கொண்டிருக்கின்றாள்.,
ஆடித் தபசு
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், . அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்..ஆடித்தவசு குறித்த விவரமான கட்டுரை தனியாக இடம்பெற்றுள்ளது.
பாம்புப் புற்று
கோவிலின் உள்ளே சங்கரலிங்கப்பெருமான் சந்நிதியைச் சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் பாம்புப் புற்று அமைந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. அங்குள்ள சுவாமியின் பெயர் வன்மீக நாதர் என்று அழைக்கப்படுகிறது. ( அருள்மிகு சங்கரநாராயண சுவாமி தல வரலாறு - 2002 ) மேலும் இவ்விடத்தில் சுரங்கப்பாதை உள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வில் யாரும் இன்றுவரை ஈடுபடவில்லை என்றும் 90 வயதுக்கு மேல் உள்ளோர் கூறுகின்றனர்.
புற்றுமண் கோமதி அம்மன் சுற்றுப் பிரகாரத்தில், அம்மன் அபிஷேகத் தீர்த்தத் தொட்டிக்கு எதிரில் உள்ள கிணறு போன்ற தொட்டியில்தான் சேமிக்கப்பட்டுள்ளது. இறையன்பர்கள் நேர்த்திக்கடனாக வெள்ளி-செவ்வாய்க் கிழமைகளிலோ அல்லது திருவிழாக்காலங்களிலோ, சங்கரன்கோவிலுக்கு தெற்கே அமைந்துள்ள தெற்குப்புதூர் என்னுமிடத்திலிருந்து புதுமண் - புற்றுமண் என்று பனைஓலையிலான பெட்டிகளில் சுமந்து கொண்டுவந்து மேற்படித் தொட்டியில் கொட்டிச் சேமிப்பர். புற்றுமண் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இதுதான் உண்மையான வரலாறு. புற்றுமண் சர்வரோக நிவாரணி என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை.
எச்.ஆர்.பேட்.ஐ.சி.எஸ். திருநெல்வேலி கெசட்டியரில் எழுதியுள்ளது ( தல வரலாறு பக்கம் 20 )
திருநெல்வேலி மாவ்ட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோயில் என்னும் ஊரானது சங்கரநயினார்கோயில் என்றே பலகாலம் அழைக்கப்பட்டு வந்தது. சங்கரன்கோவிலாக மாற்றப்பட்டத்திற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சி துவக்கப்பட்டுள்ளது. ஆதியில் இக்கோயில், ஸ்ரீசங்கரலிங்கசுவாமி உடனுறையும் ஸ்ரீகோமதி அம்பிகை என்ற ஆவுடையம்மன் ஆகிய இரு சந்நிதிகளை மட்டுமே உடைத்தாயிருந்தது. இதனைப்பற்றிய குறிப்பு திருநெல்வேலி கெசட்டியர் ( Tinnevally Gazetter Vol ! என்ற நூலில், எச்.ஆர். பேட் ஐ..சி.எஸ் எழுதி அரசாங்கத்தார் வெளியிட்டது. பக்கம் 413 - 414 -ல் காணப்படுகிறது.
உக்கிரபாண்டியர் காப்பறையனோடு வந்து புற்றையும் பாம்பையும் சிவலிங்கத்தையும் கண்டு கோயில் கட்டினார். ஊரை உருவாக்கினார் இதுதான் சங்கரநயினார் கோவிலின் தொடக்கம். இங்கேதான் சிவபெருமான் தமது மனைவியார் கோமதியம்மைக்கும், சிவன்தான் பெரியவன், திருமால்தான் பெரியவன் என்று போரிட்ட சங்கனுக்கும் பதுமனுக்கும் தமது சங்கரநாராயணத் திருக்கோலத்தைக் காட்சி தந்தருளினார். சிவ வழிபாட்டிலிருந்து திருமால் வழிபாட்டிற்கு மாற்றப் பெற்றுள்ளனவாக நாம் கேள்விப்படுகிற கோவில்கள் பல இருக்கின்றன. வட ஆர்க்காட்டில் உள்ள திருப்பதிப் பெரிய கோவிலும், இராமநாதபுரம் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள பெருமாள் கோவிலும் இங்கே குறிப்பிடத்தக்கன. இந்த முயற்சி வீர வைணவர்களாக இருந்த விஜயநகர மன்னர் காலத்தியது. ஆனால், இம்முயற்சிக்குச் சங்கரநயினார் கோயிலில் முன்னாலேயே இரண்டு தெய்வங்களும் இருக்கின்றன என்ற தந்திரமான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எது எப்படியாயினும் சங்கரலிங்கப் பெருமானின் மனைவியாகிய கோமதியம்மையின் அருள் விளக்கமே இக்கோயிலின் மேன்மைக்கெல்லாம் காரணம் என்பதுதான் உண்மை.
தக்கணை தவமிருந்து முக்தி பெற்றது, வீர்சேனை பிணி தீர்ந்தது, சயந்தன் வினை தீர்ந்தது, கானவன் வீடுபேறடந்தது, கன்மாடன் நற்பேறடைந்தது போன்ற தகவல்களும் தலபுராணத்தில் காணக்கிடக்கின்றன. பத்திரகார முனிவன், இந்திரன், அகத்தியர், பைரவர், சூரியன், அக்கினி ஆகியவர்களும் சங்கரனாரையும் கோமதியம்மையாரையும் வழிபட்டுத் திருவருள் பெற்றுள்ளதாகவும் தல புராணம் கூறும்.
அருகில் உள்ள கரிவலம்வந்தநல்லூரை ஆட்சி செய்த பிரகத்துவச பாண்டியன் சங்க்கரனாரை வழிபட்டு விசய குஞ்சரபாண்டியன் என்ற வாரிசைப் பெற்றதாகவும் வரலாறு உண்டு.
சரித்திர வரலாறு -கல்வெட்டு
தச்சநல்லூர் சாமி வேதமூர்த்தி மடாலயத்தில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சில ஆலயத் திருப்பணிகள் அரசர்கள் காலத்தை விளக்கும் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதன்படி திருவாளர் கு.நல்லபெருமாள் பிள்ளையவர்களால் எழுதப்பெற்றுச் செந்தமிழ்ச் செல்வி பத்தாவது சிலம்பு 200-வது பக்கத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் கட்டுரைக்குச் சம்பந்தமான பகுதியை மட்டும் கீழே காணலாம்.
சாலிவாகன சகாப்தம் 945 ( கி.பி. 1022 ) கொல்லம் ஆண்டு 199-ல் மதுரைப் பாணியரசர், சேகரம் உக்கிர பாண்டிய அரசர், மானூருக்கு வந்து அதற்குச் சமீபமாக உக்கிரங்கோட்டையும் போட்டு அரசாண்டார். அக்காலத்தில் சங்க்கரநயினார்கோயில் ஆலயம் திருப்பணி உண்டானது. சகாப்தம் 1095 கொல்லம் ஆண்டு 349-இல் சீவலமாற பாண்டிய அரசர் வள்ளியூருக்கு வந்து சாமி தரிசனம் செய்து திருப்பணியும் கட்டி பிற்பாடு சங்க்கரநயினார் கோயிலுக்குப்போய், பெரிய பிரகாரம் முதலிய திருப்பணி செய்தார். பிற்பாடு மானூரைப் பிரபலம்பண்ணி வைத்து பெரிய குளமும் வெட்டினார். இவர் நாளையில் கரூர் சித்தர் திருநெல்வேலி முதலிய இடங்களைச் சபித்தது.
உக்கிரபாண்டியர் இக்கோயிலைக்கட்டிய காலத்திலேயே கருவை நகரை ஆண்ட பேரரசராகிய பிரசுத்துவச பாண்டியரும் இங்கே பல திருப்பணிகள் செய்தார் என்பதும், அவர் மகன் விசய குஞ்சர பாண்டியன் என்பதும், சங்கரநயினார் கோயில் இருக்கும் இடம் கருவை நகர்க் கோயிலுக்கு நந்தவனமாக இருந்ததென்பதும் தல புராணத்தால் அறிந்திடும் வரலாறுகள்.
சீவலமாறர்
சீவலமாற பாண்டியரே இத்தலபுராண ஆசிரியர். இவர் இவ்வூரிற் பலகாலம் தங்க்கியிருந்தனர். .அவர் பெயரால் ஊருக்குத் தென்மேற்கே இப்போதுள்ள சீவலப்பேரி என்ற குளத்தினாலும், கிழக்கே இரண்டு மைலுக்குள் உள்ள சீவலராயன் ஏந்தல் என்ற ஊராலும் நிலைநாட்டப்பெறும். இவர் பெயர் கங்கை கொண்டான், மானூர், தென்காசி, சீவலப்பேரி ஆகிய தலங்களிலும், சம்பந்தப்படுகிறது.
கோமதியம்மை திருமுன்பு சக்கரம்
இன்றைக்கு ஒரு 183 ஆண்டுகளுக்கு முன்னர் (2002-ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது ). கி.பி. 1785-இல் இறைவர் திருவடியடந்த மாபாடியம் சிவஞான முனிவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது திருவாவடுதுறையிற் பத்தாவது குருமூர்த்தமாக எழுந்தருளியிருந்தவர் மேலகரம் வேலப்ப தேசிகராவார். இரைவர் திருவடிக்கு மெய்யன்பராதலினாலே அவரிடம் குட்டம், குன்மம் போன்ற நீங்க்கா நோய்களையும் போக்கும் அருட் சக்தி பதிந்து விளங்கியது அவர் சங்கரன்கோயிலுக்கு வந்து மேலை வீதியிலுள்ள தமது திருமடத்தில் எழுந்தருளியமையை அறிந்த நெற்கட்டுஞ்ச்செவலின் குறுநில மன்னராகிய சிவக்னான பூலித்தேவர் குருமூர்த்தியைக் கண்டு பணிந்து அவர் திருவருளால் தமக்கிருந்த குன்ம நோய் நீங்க்கப் பெற்று ஞானதேசிகருக்கு விளைநிலம் முதலானவை சிவ பூஜை, குரு பூஜை, மகாசேசுர பூஜைகளின் பொருட்டு சாசனம் செய்து கொடுத்தார்.
வேலப்ப தேசிக மூர்த்திகள் கோமதியம்மையின் திருமுன்பு ஒரு மந்திரச் சக்கரத்தைப் பதித்தருளினார். அச்சக்கரத்திற்குக் கோமதியம்மை தந்தருளிய வல்லமையினாலே இன்றும் அதனருகில் வரும் ஆடாத பேயும் ஆடுகின்றது. தீராத நோயும் தீர்ந்து போகின்றது. இந்தத் தேசிக மூர்த்திகள் சங்கரன்கோவிலிலே வழிபாடியற்றி இருக்கும்போது ஒரு புரட்டாசி மாத மூல நாளிலே சங்கரனார் திருவடிமலர் சேர்ந்து பேரின்பம் எய்தினார். மேற்கு வீதியில் உள்ள திருவாவடுதுறை மடத்தில் வீற்றிருந்து இன்றும் அருள்பாலித்து வருகின்றார். ஆண்டுதோறும் குருபூஜையும் சமபந்தி போஜனமும் இன்றும் தவறாமல் நடைபெற்று வருகின்றது., . .
சங்கரன்கோவில் சிறுகுறிப்பு :
1. இறைவன் பெயர் : ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி மற்றும் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி 2. இறைவி பெயர் : ஸ்ரீ கோமதி அம்பிகை (வேறு பெயர்கள் : சங்கரி, ஆவுடைய நாயகி , மனோன்மணி , வாளைகுமாரி மற்றும் மஹாயோகினி ) 3. உற்சவர் : ஸ்ரீ உமா மகேஸ்வரர் . 4. விநாயகர் : சித்தி விநாயகர் , சர்ப்ப விநாயகர் , புன்னைவன விநாயகர் . 5. முருகர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சஹித ஸ்ரீ ஷண்முகர் . 6. பைரவர் : மஹா கால சர்ப்ப பைரவர் 7. ஸ்தல துர்க்கை : ஸ்ரீ விஷ்ணு துர்க்கை (தெற்கு நோக்கி தரிசனம்) 8. தீர்த்தம் : நாக சுனை தீர்த்தம் , சங்கர தீர்த்தம் , கௌரி தீர்த்தம் , இந்திர தீர்த்தம் , அகஸ்திய தீர்த்தம் , சர்வ புண்ணிய கோடி தீர்த்தம்(அம்பிகையின் அபிஷேக தொட்டி ) 9. ஸ்தல விருட்சம் : புன்னை மரம் 10. மேலும் இங்கு ஸ்ரீ சங்கர நாராயணர் சந்நிதியில் ஒரு வெள்ளி பேழையில் ஸ்படிக லிங்கமான ஸ்ரீ சந்திர மௌலீச்வர லிங்கம் உள்ளது . இதற்க்கு காலை வேளையில் தினமும் அபிஷேகம் உண்டு . இந்த லிங்கத்தை மறைந்த சிருங்கேரி பெரியவர் இந்த கோவிலுக்கு வழங்கினார் . மேலும் மறைந்த காஞ்சி மஹா பெரியவர் இங்கு தங்கி சுவாமியையும் அம்பாளையும் தரிசனம் செய்துள்ளார்கள் . 11. பாண்டி நாட்டு பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிரிதிவி அதாவது மண் ஸ்தலமாகும் . 12. திருவிழாக்கள் : ஆடி தபசு பிரம்மோத்சவம் (12 நாட்கள்) , சித்திரை பிரம்மோத்சவம் (10 நாட்கள்) , ஐப்பசி திருக்கல்யாண திருவிழா (12 நாட்கள்), மார்கழி திருவாதிரை திருவிழா (10 நாட்கள்) , நவராத்திரி விழா (9 நாட்கள்) , விநாயகர் சதுர்த்தி , ஸ்கந்த சஷ்டிவிழா , வசந்த விழா , எண்ணெய் காப்பு உற்ச்சவம். வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு . 13. ஸ்ரீ சாஸ்தா பீடம் , சப்த மாதாக்கள் , ஸ்ரீ சரஸ்வதி , ஸ்ரீ பிரம்மா , ஸ்ரீ சனீச்வரன் தனி சன்னதி , நாகராஜர் தனி சன்னதி , நாகராஜர் புற்றுகோவில் , யானை மாடம் (கோமதி என்ற யானை இங்கு வளர்கிறது) , தனி நடராஜர் சன்னதி ,போன்றவை இங்கு உள்ளன . 125 அடி ராஜ கோபுரம் கோவிலின் நுழைவு வாயிலாக அமைந்துள்ளது . 14. மேலும் உள்ள சிறப்பு : இங்கே சுவாமி கோஷ்டத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஸ்ரீ நரசிம்ஹர் கோயில் கொண்டுள்ளார். தாயார் ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் . ஸ்ரீ லக்ஷ்மி நாராயணருக்கும் சன்னதி உள்ளது . ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சன்னதியின் பின்புறம் சித்திர வடிவமாய் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கொண்டுள்ளார் ..
தலம் அமைதுள்ள இடம் ஊர் மற்றும் பயண விவரங்கள் :
சங்கரன்கோவில் ராஜபாளயதிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலைக்கும் , கோவில்பட்டியிலிருந்து தென்காசி-கொல்லம் சாலைக்கும் இணைப்பாக (ஜன்க்ஷனாக) உள்ளது. சென்னையிலிருந்து செங்கோட்டை ரயில் பாதையில் ராஜபாளையம் ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில் நிறுத்தும் நிலையமாக உள்ளது . இந்த வழியே பொதிகை தொடர்வண்டி நின்று செல்கிறது . மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரைக்கும் , மதுரையிலிருந்து செங்கோட்டைக்கும் மூன்று + மூன்று மொத்தம் 6 தடவை பயணிகள் ரயில்போக்குவரத்து உள்ளது . சங்கரன்கோவிலில் இருந்து மதுரை விமான நிலையம் 139 கிலோமீட்டர் தொலைவிலும் , திருவனத்தபுரம் சர்வதேச விமான நிலையம் 163 கிலோமீட்டர் தொலைவிலும் ,தூத்துக்குடி உள்நாட்டு விமான நிலையம் 96.2 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக