வெள்ளி, 19 மே, 2017

உதகை தாவரவியல் பூங்கா வரலாறு


உதகை தாவரவியல் பூங்கா வரலாறு

நீலகிரி மாவட்டம் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். இங்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை வெகுவாக கவர்வது உதகை தாவரவியல் பூங்காவாகும். ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்காவிற்கு தனி வரலாறு உள்ளது.

உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா 1840 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் காய்கறி தேவைகளுக்காக முதன் முதலில் ஆங்கிலேய காய்கறிகளான காரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட பல காய்கறிகள் இங்கு விவசாயம் செய்யப்பட்டது.

இங்கு விவசாயம் செய்யப்பட்ட காய்கறிகள் ஆங்கிலேயர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் காலம் செல்லச் செல்ல இந்த முறையை அமுல்படுத்த முடியாமல் சென்றது. இதனைத் தொடர்ந்து 1847 ஆண்டு ஆங்கிலேய ஆளுநர் மார்பிஸ் டிவின்டேல் என்பவர் அந்த இடத்தைப் பூங்காவாக மாற்ற முயற்சி மேற்கொண்டார்.

அதன்படி 1848 ஆம் ஆண்டு பூங்கா உருவாக்கப்பட்டது அப்போது ஆங்கிலேய தாவரவியல் நிபுணரான வில்லியம் கிரஹாம் மெக் ஐவர் என்பவர் பூங்காவை வடிவமைத்ததோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற தாவரவியல் பூங்காவான கியு கார்டனில் இருந்து பல்வேறு மலர் செடிகளை கொண்டு வந்து உதகை தாவரவியல் பூங்காவிற்கு நடவு பணிகளை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து 1896 ஆம் வருடம் முதல் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது வரை மே மாதத்தில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.

மேலும் இந்தத் தாவரவியல் பூங்காவில் ராணுவத்தினரால் பேண்டு வாத்தியம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் பூங்காவை கை தேர்ந்த சிறப்பு வல்லுனர்களால் அமைக்கடவேண்டும் என்பதால் தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் கார்டன் என்றிழைக்கப்படும் இடத்தை இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலிய ராணுவத்தினர் மூலம் உருவாக்கினர்.

மேலும் இந்தப் பூங்காவில் ஜப்பானிய பூங்கா, புதிய பூங்கா, கண்ணாடி மாளிகை, பரந்த புல் வெளி மைதானம் ஆகியவை ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது.

இப்பூங்காவில் நுழைந்த உடன் கண்களுக்கு விருந்தாக அமையும் பரந்த புல்வெளி மைதானம் ஆங்கிலேய புல் என்றழைக்கப்படும் புற்களை இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்து நடப்பட்டது.

இந்தப் பூங்காவை மேலும் அழகு படுத்துவதற்காக இந்திய புவியியல் ஆராய்ச்சி துறை சார்பாக 20 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லாகிப போன மரத்தை பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இப்பூங்காவில் டைனோசார் காலத்து மரமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலேயர்களால் ஊருவாக்கப்பட்ட இப்பூங்காவில் உலகம் முழுவதும் இருந்து பல்வேறு மலர்கள் மற்றும் மரங்கள் இங்குக் காணக்கிடைப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமின்றி தாவரவியல் படிக்கும் மாணவர்களுக்கு அறியப் பொக்கிஷமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக