சனி, 14 அக்டோபர், 2017

திராவிடப் புரட்சியாளர்கள் ...

திராவிடப் புரட்சியாளர்கள்  ...
 வரலாற்றில் அறிய  வேண்டிய அரிய தலைவர்கள்


அயோத்திதாசர்




ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைச் சங்கநாதம் இவர்.சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழன்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.


பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்..இரட்டைமலை சீனிவாசன் இவரின் நெருங்கிய உறவினர் ஆவார்.


1891 டிசம் பரில் திராவிட மகா ஜனசபையின் சார்பாக முதல் மாநாடு நடைபெற்றது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் ஆவர்.
கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடையை நீக்க வேண்டும்; கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும்; முன்சீப், மணியக்காரர் வேலை தரப்பட வேண்டும்; இந்துக்கள் பணி புரியும் நீதிமன்றங்களில் செல்வதற்கான தடையையும், பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவதற்கான சமூகத் தடைகளையும் நீக்க வேண்டும்; பறையர் என்பதைக் கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருவதோ கூடாது என்று அம்மாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதில் அயோத்திதாசர் முக்கிய மாகக் கவனம் செலுத்தி னார். கல்விதானே உண்மையான கண் - அதனை இந்துத்துவ வருணாசிரம சமுதாயம் அவித்து விட்டதல்லவா?
அவருக்குக் கிடைத்த ஒரு பவுத்த சிந்தனையாளர்தான் - அமெரிக்க இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்தவர் கர்னல் ஆல்காட்!
1894 இல் சென்னையில் தீண்டப்படாத மக்களுக்காக தனிப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அவருக்கு அயோத்திதாசர் அளித்த விண்ணப்பம் முக்கியமானது. தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகளைத் திறக்க வேண்டிய விருப்பத்தை அதில் வெளியிட்டிருந்தார்.
அந்த விண்ணப்பத்தில் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பஞ்சமர்கள்தான் ஆரம்ப காலத்தில் திராவிடர்களென அழைக்கப்பட்டதை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட பகை உணர்வுகளை எல்லாம் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரியராவது திராவிடராவது என்று பேசும் அறிவு ஜீவிகள் முதலில் அயோத்திதாசரைப் படிக்கட்டும்.அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.- மயிலாடன்

வீரத் தமிழன்னை  டாக்டர் தருமாம்பாள்


13.11.1938 தமிழ்நாட்டின் வரலாற்றில் மறக்க முடியாதா பெருநாள்; ஆம் அன்று வரை ஈ.வெ.ரா. என்று தமிழ்நாட்டு மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தலைவருக் குப் பெரியார் என்ற பட்டம் அளித்துப் பெருமை பெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடைபெற்ற பொன் னாள் அது!

தோழியர் மீனாம்பாள் சிவராசு அவர்கள் தமிழ்க்கொடி உயர்த்திட, பண்டித நாராயணி அம்மையார் மாநாட்டினைத் திறந்து வைக்க, வா.பா. தாமரைக் கண்ணி அம்மையார் வரவேற்புரையாற்ற, மறைமலை அடிகளாரின், மகள், பா. நீலாம்பிக்கை அம்மையார் மாநாட்டிற்குத் தலைமை யேற்க, மூவாலூர் இராமா மிர்தம் அம்மையார், டாக்டர் தருமாம்பாள், ராணி அண்ணா புடைசூழ அந்தப் பட்டம் வழங்கப் பெறலாயிற்று.

அந்த மாநாட்டு உரையில் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில் ஈடுபடப் பெண் களைத் தூண்டினார் என்ற அடிப்படையில் தான் (1938) இந்தி எதிர்ப்புப் போரில் சிறைத் தண்டனையும் பெற் றார்.

முதல் நாள் பெண்கள் மாநாடு; மறு நாள் மங்கையர் போராட்டத்துக்கு அணி வகுப்பு!

மொழிப் போரில் முதன் முதலில் பெண்கள் சிறைக் கோட்டம் நுழைந்தது அப்பொழுதுதான்.

டாக்டர் தருமாம்பாள், தலைமையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், பட்டம்மாள் பாலசுந்தரம், மலர் முகத்தம்மையார், சீதம்மாள் (டாக்டர் தருமாம்பாள் மருமகள், மூன்று வயதுடைய மங்கையர்க்கரசி, ஒரு வய துடைய நச்சியார்க்கினியன், (குழந்தை) ஆகியோர் சிறைப்பட்டனர்.

காவல்துறை அதிகாரி (தாய்மார்களைப் பார்த்து) நீங்கள் இவ்விடத்தைவிட்டு அகலுங்கள்.

தாய்மார்கள்: முடியாது; இந்தி ஒழியும் வரை இவ்விடத்தை விட்டுப் போக மாட்டோம்.

காவல்துறை அதிகாரி: அப்படியானால் சிறைச் சாலைதான்.

தாய்மார்கள்: அழைக்கட்டுமே. அதற்குத்தானே காத்துக் கிடக்கிறோம்.

(கைது செய்யப்பட்டு சிறைக் கோட்டம் சென்றனர் - 6 வாரம் கடுங்காவல் தண்டனை)

டாக்டர் தருமாம்பாள் சித்த வைத்தியத்தில் தேர்ந்த மருத்துவர்; தஞ்சை கரந்தை யில் பிறந்தவர் (1890) இவரது பொது நலத் தொண்டைப் பாராட்டி வீரத் தமிழன்னை என்ற பட்டம் ஒரு விழாவில் டாக்டர் அ. சிதம்பரநாதன் அவர்களால் வழங்கப்பட்டது (1951).

சிறந்த சீர்திருத்தவாதி, பெரியாளையத்தில் வேப் பந்தழை உடுத்தி பெண்கள் நிர்வாணமாகக் கோயிலை வலம் வருவதைத் தடுக்க நேரில் சென்று பிரச்சாரம் செய்தவர்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர் களுக்குத் தோன்றாத் துணையாக இருந்தவர். சென்னை மாணவர் மன்றத் தின் தலைமைப் பொறுப்பை ஏற்று 9 ஆண்டுகள் தாங்கிப் பிடித்தவர்;சென்னை - தங்க சாலையை தருமாம்பாள் சாலை என்று மாற்றியவர் முதல் அமைச்சர் கலைஞர்.

வாழ்க வீரத் தமிழன்னை!
தவமணிராசன்




டேய் சம்பத்,டேய் திரவியம்,டேய் ஜனார்த்தனம் என்று டேய் போட்டுக் கூப்பிடும் ஒரு மனிதர் நமது இயக்கத்தில் இருந்தார். யாரையும் அவமதிப்பது அவர்தம் நோக்கமன்று; கூப்பிடப்படுபவர்களும் யாரும் வருத்தப்பட்டதும் கிடையாது - இன்னும் சொல்லப்போனால் அதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டு புன்னகைத்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தத் தனித்தன்மை வாய்ந்த ஒருவர்தான் தவமணிராசன் ஆவார். 
திராவிடர் மாணவர் கழகத்தைத் தோற்றுவித்தவர் என்று ஒருவரைக் குறிப்பிட வேண்டுமென்றாலும் இவரைத் தான் சுட்ட வேண்டும். கருணானந்தம் (கவிஞர்) இரா. செங்குட்டுவன் (கோபால்சாமி தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் அவர்களின் மாமனார்) சொக்கப்பா, அமீர் அலி, செல்வராஜ், தம்பிராஜ் என்ற ஒரு மாணவர் பட்டாளத்துடன் இணைந்து இந்தச் சாதனையை இவர் நிகழ்த்தினார்.
குடந்தை அரசினர் கல் லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர்ப் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவன் ஒருவன் (பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த மாணவன்) குடித்து விட்டான் என்பதற்காகப் பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார்.
அவ்வளவுதான் பிடித்தது நெருப்பு; பற்ற வைத்தவர் தவமணிராசன். ஒரு இயக்கம் பிறப்பெடுத்தது. அதுதான் திராவிடர் மாணவர் கழகமாக உருப் பெற்றது.
சேலத்தில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது 1944 ஆகஸ்டு 27 என்றால், அதற்கு 6 மாதம் முன்னதாகவே மாணவர்கள் பெயரால் திராவிடர் கழகம் கும்பகோணத்தில் தோன்றி விட்டது (1944 பிப்ரவரி 19,20)
இரண்டு நாள்கள் திராவிடர் மாணவர் கழக மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது; அறிஞர் அண்ணா பங்கு கொண்டார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் இரா. நெடுஞ்செழியன், க.அன்பழகன், கே.ஏ. மதியழகன் போன்றவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினர். அந்த மாநாட்டில்தான் இந்த மாணவர்களும் ஓரளவு நாட்டு மக்களுக்கு அறிமுகமானார்கள் என்று கூற வேண்டும். இவ்வளவுக்கும் சூத்திரதாரி இந்தத் தவமணிராசன் என்ற மாணவர்தான்.
கல்லூரி படிப்புக்குப்பின் ஈரோட்டில் குடிஅரசு குருகுலத்தில் பணியாற்றியவர்களுக்கு இவர்தான் சட்டாம் பிள்ளை. இவர் திருமணத்தில் மணமகள் மணமகன் கழுத்தில் தாலிகட்டிய சம்பவமும் உண்டு. அதன் பின்னர் அரசு ஊழியராகப் பணியாற்றச் சென்ற இடத்தில் சீர்காழியில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசியதால் அரசு வேலை பறி போயிற்று; மீண்டும் விடுதலை குருகுலம்; மறுபடியும் அரசுப் பணி இத்தியாதி.. இத்தியாதி!
தஞ்சாவூரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கப் பொன் விழா மாநாட்டில் (1975) மறக்காமல் தவமணிராசன், கவிஞர் கருணானந்தம், இரா. செங்குட்டுவன் ஆகியோருக்கு அன்னை மணியம்மையார் அவர்கள் சால்வை அணிவித்து விருதும் வழங்கிச் சிறப்பு செய்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார் விருது முதல்வர் கலைஞர் அவர்களால் தவமணிராசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
விடுதலை ஆஃப் செட்டுக்கு மாறியபோது தவமணி அவர்கள் சில காலம் விடுதலை பணிமனையில் தங்கி ஆசிரியர் அவர்களுக்கு உதவியாகவும் இருந்தார்.
அன்னை நாகம்மையார் 
அன்பும், அடக்கமும், அஞ்சாமையும் ஒருங்கே அமையப் பெற்ற அன்னையார் ஈ.வெ.ரா. நாகம்மையார் அவர்கள்.
இவருடைய வாழ்க்கைச் சரிதம் பெண்மக்களுக்குப் பெரும் படிப்பினையை ஊட்டக்கூடியது; ஆண்மக்களுக்கும் அவ்வாறே சாதாரண வாழ்க்கையையுடைய நடுத்தரக் குடி. ஈ.வெ.ரா.வின் அன்னையாருக்கு உறவினர்.

அன்னை நாகம்மையார் சாதாரண குடும்பத்தில் பிறந்த இந்தப் பெண் மணி செல்வச் செழுமையில் திளைத்த ஈ.வெ. ராமசாமி அவர்களை கைப்பிடித்தார். அந்தக் கால கட்டத்திலேயே இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிப் பிடிவாதமாக இருந்து திருமணம் செய்து கொள்வது என்பது சாதார ணமானதல்ல.

வைதிகப் பழக்க வழக் கத்தில் வளர்ந்த இந்தப் பெண் சுட்டெரிக்கும் பகுத்தறிவுச் சூரியனின் வெப்பத்தைத் எதிர் கொள்வதில் மூச்சுத் திணறியவர்தான்.

பெரியாரிடமா நடக்கும்? தம் வழிக்குக் கொண்டுவர பல உபாயங்களை மேற்கொண்டு வெற்றியும் பெற்றார்.

நான் மட்டும்தான் பகுத் தறிவுவாதி - வீட்டில் அப்படி இல்லை என்று சொல்பவர் களுக்கு இது ஒரு பாடம்! குடும்பத்தைத் திருத்தாத நீயா குவலயத்தைத் திருத்தப் போகிறாய்? என்ற கேள்வியை அனாவசியமான தாகக் கருத முடியாதே!

எந்த அளவுக்கு அம்மை யார் தயாரிக்கப்பட்டார்? கள்ளுக்கடை மறியலைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு -காங்கிரஸ் தலைவர் காந்தியாரின் கவனத்தையும், கருத்தையும் கவரும் அளவுக்குத் திற மையை வெளிப்படுத்தியவர்.
அரசியல் வாழ்வு
பின்னாளில் ஈ.வெ.ரா.சொந்த வாழ்வைத்துறந்து பொதுநல வாழ்வில் ஈடுபட்டார். அன்னையாரும் கூடவே அச்சேவையில் இறங்கினார். ஈ.வெ.ரா. பொதுநல வாழ்வில் சிறப்படைந்ததற்கு காரணம் அன்னையாரே. அன்னையாரின் பூரண உதவியின்றேல், ஒத்துழைப்பின்றேல் ஈ.வெ.ரா. சிறப்படைந்திருக்க முடியாது; இது மறுக்கமுடியாத உண்மை.
1920 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகள் அன்னையார் எல்லாக் காங்கிரஸ்களுக்கும், அரசியல் மகாநாடுகளுக்கும் கணவருடன் தவறாமல் போய் வருவதுண்டு. அவர் மாகாண காங்கிரஸ் கமிட்டிக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கும் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினராயிருந்திருக்கிறார்.
1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்தது. ஈ.வெ.ரா.வும் அதில் அதிதீவிரமாக ஈடுபட்டார். அன்னையாரும் தமது சுகவாழ்வைத் துறந்தார். விலையுயர்ந்த நகைகளைத் துறந்தார். மெல்லிய பட்டாடைகளை வெறுத்தார். முரட்டுக் கதராடை உடுத்தினார். நாம் தேசத்தின் ஏழை மக்களின் நன்மைக்கு உழைக்கின்றோம். ஆதலால் நாமும் எளியார் போலவே ஆடையணிகள் பூணவேண்டும் என்னும் கருத்தையே மேற்கொண்டார். அஞ்சாமல் வெளிவந்தார். தமிழ்நாட்டுப் பெண்களுக்கு வழிகாட்டியாக முன்வந்தார். ஒத்துழையாமை இயக்கம் வலுவடைந்தது. அரசாங்கத்துக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பலத்த போராட்டம் இச்சமயத்தில் அன்னையார் முன்னணியில் நின்று போராடினார். இது தமிழ்நாட்டில் ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிற்று. இதனால் அனேக பெண் மக்களும் தைரியமாக இப்போரில் கலந்துகொள்ள முன்வந்தனர்.
1921 ஆம் ஆண்டில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் வெகு மும்முரமாக நடைபெற்றது. அரசாங்கத்தாரால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஈ.வெ.ரா.வும் அவர் தொண்டர்களும் தடையை மீறினர்; கைது செய்யப்பட்டனர். மறுநாள் அன்னையார் ஈ.வெ.ராவின் தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாளுடன் புறப்பட்டார். அரசாங்கத்தின் தடையுத்தரவை மீறினார். ஈரோட்டில் பெருங்கொந்தளிப்பு. தமிழ்நாட்டில் பெருங்கிளர்ச்சி. அரசாங்கத்துக்குப் பெருந்திகைப்பு. உடனே தடையுத்தரவை நீக்கினர் அரசாங்கத்தார். அன்னையாரையும் அவர் தோழர்களையும் கைது செய்யாமல் விட்டனர். கைது செய்திருந்தால் ஈரோட்டின் நிலைமை எப்படியாகி இருக்கும் என்பது அரசாங்கத்துக்குத் தெரியும்.
அச்சமயம், மறியல் சம்பந்தமாக அரசாங்கத்துடன் சமாதான ஒப்பந்தப் பேச்சு நடந்தது. சர். சங்கரநாயர் தலைமையில் ஒரு மகாநாடு கூட்டப்பட்டது. இதற்கு மாளவியா மகாநாடு என்று பெயர், இம்மகாநாட்டில் திரு. காந்தியார், முக்கியமாக ஈரோட்டு மறியலையே குறிப்பிட்டார். ஈ.வெ.ரா. நாகம்மாளின் அபிப்பிராயம் தெரிந்தே முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

சட்டமறுப்பு இயக்கத்தை நிறுத்துவது என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் இருபெண்மணிகளின் கைகளில் (தந்தை பெரி யாரின் இணையர் நாகம்மையார் - தங்கை எஸ்.ஆர். கண்ணம்மாள்) இருக்கிறது என்று காந்தியார் மதிக்கும் அளவுக்கு நிமிர்ந்து நின்றார். வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் தந்தை பெரியார் சிறைப்பட நேர்ந்தபோது, அப்போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு அவர் உயர்ந்தார்.
ஒத்துழையாமை இயக்கம் மறைந்தது. 1924 ஆம் ஆண்டில் வைக்கம் சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஈ.வெ.ரா. ஈடுபட்டார். நாகம்மையாரும் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார். தமிழ்நாட்டிலிருந்து பல பெண்களையும் வைக்கத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போராட்டத்தில் கேரளப் பெண்களும் உற்சாகத்துடன் சேரும்படி செய்தார். தமது கணவர் கைதியான பிறகும், காங்கிரசின் உதவி கிடைப்பதற்கு முன்பும் தனித்து நின்று அப்போராட்டத்தை அஞ்சாமல் நடத்தினார். வைக்கத்தில் தமது வெற்றிக் கொடியைப் பல மாதங்கள் பறக்கும்படி செய்தார். அவர் சேனாதிபதியாக இருந்து வைக்கம் தெருக்களில் பெண்கள் படையை நடத்திச் சென்ற காட்சி சமூக ஊழியர்களைத் தட்டியெழுப்பியது. கொடிய சூரிய வெப்பத்திற்கும், பெருத்த மழைக்கும் பின் வாங்காமல் கோவில் வாசற்படி முன்பு அவர் நின்று சத்தியாக்கிரகம் செய்த காட்சி எல்லோருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டது; அப்போரில் ஈடுபடும்படி செய்தது. தாழ்த்தப்பட்ட மக்களின் உணர்ச்சியை அதிகமாகக் கிளப்பி விட்டது. வைதீகர்களின் மனத்திலும் பெருந்திகிலை உண்டாக்கிற்று.

இதுவரை உலகில் நடந்த சத்தியாக்கிரகங்களில் வெற்றி பெற்றது என்று சொல்லக்கூடியது வைக்கம் சத்தியாக்கிரகம் ஒன்றேயாகும். இவ்வெற்றிக்குக் காரணம் நமது அன்னையாரே.

"வீட்டின் ஒரு மூலையில் பேடெனப் பதுங்கிக் கிடந்த நம் அம்மையார் தீண்டாமை எனும் பேயை வெட்டி வீழ்த்துவான் வேண்டி வைக்கம் சத்தியாகிரகப் போரில் புகுந்து சிறை சென்று அரசாங்கத்தை நடுங்கச் செய்ததுடன் அமையாது வாகைமாலையும் சூடினார்'' என்று திரு.வி.க. முதலியார் அவர்கள் கூறியிருப்பது உண்மை! உண்மை!! உண்மை!!!

அய்ரோப்பிய நாடுகளுக்கு அவரது துணைவர் பெரியார் சுற்றுப் பயணம் செய்தபோது இயக்கத்தையும், குடிஅரசு இதழையும் நிருவகிக்கும் அளவுக்குத் திறமை பெற்றார்.

தம் துணைவரோடு சிங்கப்பூர் சென்று திரும்பிய காலை அன்பின் மிகுதியால் தங்களுக்குப் பரிசு பொருள் என்ன வேண்டும் என்று அம்மக்கள் கேட்ட பொழுது நீங்கள் எல்லாம் இங்கு சுயமரியாதை இயக்கத்தைப் பரப்பி வருகிறீர்களே அந்த அன்பு போதும்! என்று சொல்லும் அளவுக்குப் பக்குவம் பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் என்னும் நிலையை அடையும் அள வுக்கு பிரபலமானார். சுய மரியாதைத் திருமணங்களைத் தலைமை தாங்கி நடத்தும் அளவுக்கு முன் னேறினார்.
வீட்டுக்கு வருவோரை வரவேற்று விருந்தோம்புவ தில் அவர் ஒரு தாய். எந்த நேரத்தில் சென்றாலும் சூடாக எப்படி அந்த சுவை யான தோசை கிடைக் கிறதோ என்று ஆச்சாரியார் ஆயாசப்படும் அளவுக்குச் சிறந்தவர்.


நாகம்மாள் மறைவு




எல்லாம் நன்மைக்கே எனதருமைத் துணைவி, ஆருயிர் காதலி நாகம்மாள் 11.05.1933-ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப் படுவதா? மகிழ்ச்சி அடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா? நஷ்டமா? என்பது இதுசமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.

எப்படி இருந்தாலும் நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருஷ காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை. நான் சுயநல வாழ்வில் மைனராய், காலியாய், சீமானாய் இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டு தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்க முடியாத காரியம். பெண்கள் சுதந்திர விசயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ, போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடத்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.

ஆனால், நாகம்மாளோ பெண்ணடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாவும் சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவும் குறிப்பிட்டிருந்ததோ அவற்றில் ஒன்றுக்கு பத்தாக நடத்துக்கொண்டிருந்தாள் என்பதையும் அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன். நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லாம் நான் சொல்லக்கூடிய ஏதாவது ஒரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.

அதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொது நல சேவையில் ஈடுபட்டபிறகு பொதுநல காரியங்களுக்கும் சிறப்பாக சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நாகம்மாள் நான் காங்கிரசில் இருக்கும்போது மறியல் விஷயங்களிலும், வைக்கம் சத்தியாக்கிரக விஷயத் திலும், சு.ம.இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.

ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற் றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? ஊக்கம் போயிற்றென்று சொல்லட் டுமா? எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவும் விளங்கவில்லையே!

எது எப்படி இருந்தபோதிலும் நாகம்மாள் மறைவு ஒர் அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கை யெய்தினாள். இதிலொன்றும் அதிசயம் இல்லை. நாகம்மாளை அற்ப ஆயுள்காரியென்று யாரும் சொல்லிவிட முடியாது. நாகம்மாளுக்கு 48 வயதே ஆனபோதிலும் அது மனித ஆயுளில் பகுதிக்கே சிறிது குறையான போதிலும் இந்திய மக்களில் சராசரி வாழ்நாளாகிய 23ஙூ இருபத்தி மூன்றரை வயதுக்கு இரட்டிப்பென்றே சொல்லவேண்டும். செத்தால் சிரிக்க வேண்டும், பிறந்தால் அழ வேண்டும் என்கின்ற ஞானமொழிப்படி, நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும் ஒரு நஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும் லாபமாகவும் கருத வேண்டு மென்றே நான் ஆசைப்படுகின்றேன். ஆசைப்படுவது மாத்திரமல்லாமல் அதை உண்மையென்றும் கருதுகிறேன்.

எப்படியெனில், எனது வாழ்நாள் சரித்திரத்தில் இனி நிகழப்போகும் அத்தியாயங்களோ சிறிது விசேஷ சம்பவங்களாக இருந்தாலும் இருக்கலாம். அதை நாகம்மாள் இருந்து பார்க்க நேரிட்டால் அந்த அம்மாளுக்கு அவை மிகுந்த துக்கமாகவும் துயரமாகவும் காணக்கூடியதாய் இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இருக்காது. அத்துடன் அதைக் கண்டு சகியாத முறையில் நானும் சிறிது கலங்கக்கூடும். ஆதலால் நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் குடும்பத்தொல்லை ஒழித்தது என்கின்ற உயர்பதவியையும் அடைய இடமேற்பட்டது.
இது நிற்க, நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும், லாபமான காரியத்துக்கும் பயன்படுத்தி கொள்கின்றேனோ அந்த மாதிரி எனது மறைவையோ, எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்தி கொள்ளமாட்டாள். அதற்கு நேரெதிரிடையாக்குவதற்கே உபயோகித்து கொள்வாள். ஆதலால்  நாகம்மாள் நலத்தைக் கோரியும் நாகம்மாள் எனக்குமுன் மறைந்தது எவ்வளவோ நன்மை.

என்னருமைத் தோழர்கள் பலருக்கு நாகம்மாள் மறைவு ஈடுசெய்யமுடியாத நஷ்டமென்று தோன்றலாம். அது சரியான அபிப்பிராயம் அல்ல. அவர்கள் சற்று பொறுமையாய் இருந்து இனி நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைக் காண்பார்கள். ஆனால் அவர்களும் என்னைப்போலவே நாகம்மாள் மறைவு நலமென்றே கருதுவார்கள். நாகம்மாளுக்கு காயலா ஏற்பட்ட காரணமே எனது மேல்நாட்டு சுற்றுப்பிரயாணம் காரணமாய் ஒரு வருஷகாலம் பிரிந்து இருந்திருக்க நேர்ந்த பிரிவாற்றாமையே முக்கிய காரணம். இரண்டாவது, ரஷ்ய யாத்திரையினால் எனக்கு ஏதோ பெரிய ஆபத்து வருமென்று கருதியது.

மூன்றாவதாக, நமது புதிய வேலைத் திட்டங்களை உணர்ந்த பின், ஒவ்வொரு நிமிஷமும் தனக்குள் ஏற்பட்ட பயம் ஆகிய இப்படிப்பட்ட அற்பகாரணங்களே அவ்வம்மைக்கு கூற்றாக நின்றது. என்றால் இனி இவற்றை விட மேலானதான பிரிவு ஆபத்து, பொருளாதாரக் கஷ்டம் முதலியவை உண்மையாய் ஏற்படயிருக்கும் நிலை அவ்வம்மைக்கு எவ்வளவு கஷ்டமாய் இருக்கும் என்று நினைத்துப் பார்க்கும் தோழர்கள் நாகம்மாள் மறைவுக்கு வருந்த மாட்டார்கள் என்றே கருதுகிறேன். இரண்டு மூன்று வருஷகளுக்கு முன்பு இருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் (சங்கராச்சாரியார் போல) - (அவ்வளவுக்கு ஆடம்பரத்துடன் அல்ல) - (பண வசூலுக்காக அல்ல) - சஞ்சாரத்திலேயே சுற்றுப்பிரயாணத்திலேயே இருக்க வேண்டுமென்றும் நமக்கென்றும் ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்ததுண்டு. ஆனால் இதற்கு வேறு எவ்வித தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும் நாகம்மாள் பெரிய தடையாக இருந்தாள். இப்போது அந்த தடை இல்லாது போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையை தருவதாகுக.
குடிஅரசு - தலையங்கம் - 14.05.1933

நாகம்மாள் தகனம்


தோழர் ஈ.வெ.ரா.நாகம்மாள் அவர்கள் 11-ந் தேதி மாலை 4 மணிக்கு இனிதாங்காது என்ற நிலையில் ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். வந்ததும் கடைசி ஸ்திதியில் செய்யக்கூடிய சிகிச்சைகளை செய்து பார்த்ததும் இரவு 7-45 மணிக்கு அம்மையார் ஆவி நீத்தார்கள். உடனே அம்மையாரின் உடல் சுத்தம் செய்யப்பட்டு நன்கு அலங்கரித்து ஈ.வெ.ரா. அவர்கள் இல்லத்தின் முன் மண்டபத்தில் யாவரும் எளிதில் பார்த்துச்செல்ல வசதியுடன் அழகிய பெட்டியில் அடக்கம் செய்து வைக்கப்பட்டது. உடனே 8-30 மணிக்கு யாவருக்கும் (ஈ.வெ.ரா. உள்பட) சாப்பாடு நடந்தது. ஊர் பிரமுகர்களும், வெளியூர் தோழர்களும் இரவு முழுவதும் வந்து கொண்டே இருந்தார்கள். அநேகமாக எல்லோரும் இரவு முழுவதும் விழித்துக்கொண்டே கேளிக்கையாய் இருந்ததோடு இடைஇடையே டீ வழங்கப்பட்டு வந்தது. முக்கியமாய் யாவரும் கவனிக்க வேண்டியதும், கவனித்ததுமான சம்பவம் யாதெனில் நெருங்கிய உறவினர் முதல் உற்ற தோழர்கள் வரை யாவரும் அழுதல் என்னும் அநாகரிகமான காரியத்தை அறவே ஒழித்து ஆண் பெண் அடங்கலும் ஒற்றுமையாய் பேசிக்கொண்டும் நாளைய காரியங்கள் கவனித்தும் வந்ததே.

மறுநாள் காலை 9 மணி அளவிற்கு தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என்று இரவே துண்டுப் பிரசுரம் ஊரெல்லாம் வழங்கப்பட்டது. அந்தப்படிக்கே மறுநாள் காலையில் எவ்வித சடங்கும் இல்லாமல் ஒரு இரதத்திற்கு ஒப்பான ஒர் அழகிய நாலு சக்கரவண்டியில் அம்மாளின் உடல் மூடப்பட்ட பெட்டி வைக்கப்பட்டு பெட்டியை பட்டாடைகளாலும், புஷ்பங்களாலும், அலங்கரித்து வைத்து பல ஆயிரக்கணக்கான ஜனங்கள் பின்தொடர தகனம் செய்ய குறிப்பிட்டிருந்த இடத்தை நோக்கி வண்டி மெல்ல தள்ளிக்கொண்டு செல்லப்பட்டது. ஊர்வல ஆரம்பத்தில் போட்டோ படக்காரர்கள் பலர் படம் எடுத்தார்கள். வழிநெடுக அநேக கடைகளிலும், முக்கியமாய் சுயமரியாதை வாலிபர் சங்கத்தின் முன்னிலும் (மகாநாட்டிற்கு அழைத்துச் செல்லப்படும் தலைவருக்கு மாலைகள் சூட்டி உபசரிப்பதை போல்) நிறுத்தி நிறுத்தி மாலைகள் போடப்பட்டு புஷ்பங்கள் வாரி வாரி இறைக்கப்பட்டன. தகனம் நடக்கும் இடமாகிய காவேரிக்கரை அணுகியதும் உடனே தகன ஏற்பாடுகள் நடந்து
கொண்டேயிருக்கும் போது தோழர் எஸ். மீனாட்சிசுந்தரம் பி.ஏ., எல்.டி., அவர்கள் தலைமையில் ஒர் கூட்டம் கூடி வந்திருந்த பிரமுகர்களும், இயக்க தோழர்களும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதுடன் தோழர்கள் சாமி சிதம்பரனார், ராவணதாஸ், சேலம் நடேசன், டாக்டர் கிருஷ்ணசாமி, மாயவரம் சி. நடராஜன், ஈ.வி.நஞ்சப்ப செட்டியார், எம்.சிக்கையா, மைதீன் பாட்சா முதலியவர்கள் அம்மையாரின் குணாதிசயங்களைப் பற்றியும், வரலாற்றைப் பற்றியும் பேசினார்கள். பின் தோழர் ஈ.வெ.ரா அவர்கள் பதில் சொல்லி முடித்தவுடன் கூட்டம் முடிந்து எல்லோரும் வீடு திரும்பினார்கள். வெளியூர் பிரமுகர்கள் வந்துகொண்டே இருப்பதுடன், தந்திகளும், கடிதங்களும் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்தது. தகனம் செய்த பின்பு எவ்வித சடங்கும் அது சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை. ஈ.வெ.ரா. சனிக்கிழமை இரவு சுற்றுப்பிரயாணம் செய்வதற்குத் திருச்சிக்குப் புறப்பட்டுவிட்டார்.
குடி அரசு - 14.05.1933


தந்தை பெரியார் அவர்களின் பொது வாழ்வின் முன்னுரை அன்னை நாகம்மையார் - பின்னுரை அன்னை மணியம்மையார்.

ம. சிங்காரவேலர் (1860-1946




சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 151 ஆம் ஆண்டு பிறந்த முக் கிய நாள் இந்நாள் (1860).

இந்தியாவில் பொதுவுடைமைக்குக் கட்சிரீதியாக அடிக்கால் போட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது.

வெறும் வர்க்கப்பேதம் பற்றிப் பேசினால் மட்டும் போதாது; வருக்க உணர்ச்சியை உண்டாக்கினால் மட்டும் போதாது - வருண சமூக அமைப்பை முக்கியமாகத் தகர்க்க வேண்டும் என்ப திலே தந்தை பெரியார் அவர்களுடன் கை கோத் தார். நூல்களைத் தேடித் தேடி படிக்கும் நூலகத் தேனீ அவர். அவர் வீட்டில் அவர் வைத்திருந்த நூலகம் பற்றி பெரிதாகப் பேசப் பட்டது.

அவருடைய சிந்தனை களுக்கு வடிகாலாக தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் விளங்கியது. தங்குத் தடையின்றி அவர் கருத்துகளை குடி அரசில் எழுதிட முழு உரிமையையும் அளித்தார், தந்தை பெரியார்.

தம் கருத்துக்கு மாறாக இருந்தவற்றைக்கூட வெளியிட தந்தை பெரியார் சுதந்திரம் அளித்தார் என் றால், தந்தை பெரியார் அவர்களின் கருத்துச் சுத ந்திர  பெருமித உணர்வை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிங்காரவேலனாரின் கருத்துக்கு மறுப்புக் கட்டுரையையும்கூட பகுத்தறிவு இதழில் (30.9.1934) தந்தை பெரியார் எழுதியதுண்டு. அப்படியொரு ஆரோக்கிய நிலையைப் பயிர் செய்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார்.

ம.சி. என்று சுருக்க மாகக் கூறப்படும் சிங்கார வேலரின்   வாழ்க்கை யில் பல முக்கியமான நிகழ்வு கள் உண்டு. 1902 உலகப் புத்தமத மாநாட்டுக்கு லண்டன் பயணம்; 1918 சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தோற்றுவித்தது; 1925இல் காஞ்சீ புரம் காங்கிரஸ் மாநாட்டில் கொடியேற்றியது; 1928இல் ஜாம்ஷெட்பூரில் ஏ.அய். டி.யூ.சி. தலைவர் முகுந் தலால் சர்க்காருடன் கிளர்ச்சியில் ஈடுபட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது;

1932இல் (டிசம்பர் 28,29) ஈரோட்டில் தந்தை பெரியார் அவ ர்களுடன் இணைந்து சமதர்மத் திட்டத்தை சுய மரியாதைத் தொண்டர்கள் முன் வைத்தது.  1935-இல் புதுஉலகம் இதழ் துவக்கப்பட்டது போன்ற நிகழ்ச் சிகள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

1925ஆம் ஆண்டில் யானை கவுனிப் பகுதியிலிருந்து சென்னை மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். மனச்சாட்சியின்படி என்று உறுதிமொழி எடுத் துக் கொண்டார்.

சுயமரியாதைச் சிறுவர் களுக்கு வாய்ப்பாடம்  என்று குடிஅரசில் (15.1.1933) 10 அம்சங் களைக் குறிப்பிடுகின்றார்.

அதில் ஒன்று ஒரு வருஷத்துக்குள் குடி அரசுக்கு பத்து சந்தாக் களைச் சேர்க்கிறேன் என் பதுதான் அதில் முதல் கட்டளையாகும்.

பொதுவுடைமை - சுய மரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்ற சிங்காரவேலரைப் போற்றுவோம். குறிப்பாக கம்யூனிஸ்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு அவரின்  பகுத்தறிவுக் கொள் கைகளை நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்களின் முடி வுக்கே விட்டு விடுவோம்!
- மயிலாடன்.





சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பார்_அட்_லா அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1940).
இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்குமுன் லண்டன் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்-தில் படித்து, பார்_அட்_லா படித்து வந்தார் என்றால், அது என்ன சாதாரணமா?


சென்னை வழக்கறிஞராக பணியைத் தொடங்கிய சில நாட்களிலேயே தஞ்சையில் வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். 1912 ம் ஆண்டில் பிராமணர்களே எல்லாத்துறைகளிலும் முதலிடம் வகித்து வந்தனர். பிராமணர்களின் ஆதிக்கம் அளவுக்கு அதிகமாக ஓங்கியிருந்தது. வர்ணாசிரமக் கொள்கையை பிராமணர்கள் தீவிரமாக கடைப்பிடித்தனர். இந்த நிலையை மாற்ற பிராமணரல்லாதார் சிலர் சிந்திக்கத்தொடங்கினர். அன்றைய காங்கிரசிலும் பிராமணர்களின் கையே ஓங்கியிருந்தது. திராவிட இனத்தாரின் தனிச்சிறப்பை உணர்ந்த பிராமணரல்லாதார் ஒன்று கூடி தென்னிந்திய மக்கள் பேரவையைத் தோற்றுவித்தனர். பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக உருவாயிற்று. இந்த தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் பின்னாளில் நீதிக்கட்சியாக அனைவராலும் அழைக்கலாயிற்று.


நீதிக்கட்சி மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களுக்கு வழிகோலியது. வகுப்புவாரி பிரதிநித்துவம் ஏற்பட முக்கிய பங்காற்றியது.
எங்கு பார்த்தாலும், பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்ததைக் கண்ட பன்னீர்செல்வம் அவர்கள் நீதிக்கட்சியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டார். பிறகு தந்தை பெரியாரின் தலைமையை ஏற்று சுயமரியாதை இயக்கத்தில் தம்மைப் பிணைத்துக் கொண்டார்.


காங்கிரசுக் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தைப் பொறுக்கமுடியாமல் 1926-ம் ஆண்டு ஈ வெ ரா பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். பெரியாரின் நெருங்கிய நண்பர் எஸ் இராமநாதன் அதே ஆண்டிலேயே சுயமரியாதை இயக்கத்தைத்[2] தொடங்கியிருந்தார். சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடையே பரப்புவதை தன் நோக்கமாகக் கொண்டிருந்த இவ்வியக்கத்தின் தலைவர் பெரியாரும், செயலாளர் எஸ் இராமநாதனும் பொறுப்பேற்றிருந்தனர். 1926 ல் நடந்த மதுரை நீதிக்கட்சிமாநாடுகளிலும் பெரியார் கலந்து கொண்டார் ஆயினும் (நீதிக்கட்சியின் போக்கு பிடிக்காத்தால்) பெரியார் நீதிக்கட்சியில் சேரவில்லை. நீதிக்கட்சியிலிருந்து பலர் சுயமரியாதை இயக்கத்துடன் இணைத்துக்கொண்டனர். சிலர் நீதிக்கட்சியை அரசியல் கட்சியாகவும் சுயமரியாதை இயக்கத்தை சமூக இயக்கமாக நினைத்து இரண்டிலும் ஈடுபாடு கொண்டனர். பன்னீர் செல்வம் தன்னை தீவிரமாக சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கத்தின் தீவிர நாத்திக (கடவுள் மறுப்பு) கொள்கைக்கு உட்னபடாதவராயினும் பிராமண எதிர்ப்பு , சமூக சீர்திருத்தக் கருத்துகளுக்கு மதிப்பளித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.


1929 இல் செங்கற்பட்டில் கூடிய சுயமரியாதை மாகாண மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் துணைத் தலை-வராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாம் நாள் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாத வாலிபர் மாநாட்டுக்கு (18.2.1929) தலைமை வகித்து சங்கநாதம் செய்தார் பன்னீர்செல்வம்.
தஞ்சாவூர் மாவட்டத் தலைவராக இருமுறை இருந்து அரும்பணியாற்றினார்.அவர் அந்தப் பொறுப்பில் இருந்தபோதுதான் திருவையாற்றில் பார்ப்பனர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்து தமிழில் புலவர் படிப்புக்கும் வழி செய்தார்.


தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசாமடம், ஒரத்தநாடு ஆகிய இடங்களில் இருந்த விடுதி-களைச் சீர்திருத்தி, பார்ப்பனர் அல்லாத மாணவர்களும் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த இரு விடுதிகளும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்கள் தங்கிப் படித்து கல்வி பெறும் நல்வாய்ப்பினைக் கொடுத்தது.


நீதிக்கட்சி அமைச்சரவையில் அமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். தஞ்சாவூர் நகராட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார்.நீதிக்கட்சி தோற்று பெரிய நெருக்கடிக்கு ஆளானபோது, கட்சிக்குப் புதிய தலைவர் தேவை அதுவும் பெரியார்-தான் அதற்குத் தகுதியானவர் என்று கூறி 28.11.1938 இல் கூடிய நீதிக்கட்சிக் கூட்டத்தில் முத்தையா செட்டியார் முன்மொழிய, அதனை வழி-மொழிந்-தவர் செல்வம் ஆவார்.


சென்னையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டுக்குத் (29.12.1938) தலைமை வகிக்க-வேண்டிய பெரியார் சிறையில் இருந்ததால், பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அவருக்கு அணிவிக்கவந்த மாலையைக் கையில் வாங்கி, என் தோளுக்கு வந்த மாலையை தலைவர் பெரியார் தாளுக்குச் சூட்டுகிறேன்! என்று கூறி, அங்கு வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்துக்கு அணிவித்து மகிழ்ந்தார்.
இறுதிவரை தன்தலைவரை(பெரியாரை) எவ்விடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இயக்கப்பணியாற்றினார்.
இங்கிலாந்தில் உள்ள இந்திய அமைச்சருக்கு ஆலோசனைக் குழு உறுப்பினராக செல்வம் தேர்வு செய்யப்பட்டார். அவர் சென்ற அனிபா விமானம் ஓமான் கடலில் விழுந்தது. அரிய செல்வத்தை நாடு பறிகொடுத்தது! (வயது 52).அவர் மறைவையொட்டி காலம் சென்ற பன்னீர்செல்வமே என்று தந்தை பெரியார் குடிஅரசில் எழுதிய அந்தக் கட்டுரையை இன்று படித்தாலும் கண்ணீர், வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் _ அது ஒரு சகா இரங்கல் இலக்கியம். என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும், இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில்லையே என்று கருதலாமா, இது பேராசை அல்லவா என்று தான் கருதினேன். 10 வயதிலேயே லண்டனுக்கு அனுப்பிப் படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்துவிட்டு இந்தியா வந்து சேர்ந்து சரியாக 20-ஆவது வயதில் இறந்து போனதற்காகவும் பதறவில்லை; கதறவில்லை. பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டிடுகிறது. தமிழர்களைக் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணும் தோறும் நெஞ்சம் பகீரென்கிறது. இவருக்குப் பதில் யார் என்றே திகைக்கிறது . . . என்று பெரியார் தன்னுடைய குடியரசு இதழில் தலையங்கம் எழுதியிருப்பது சுயமரியாதை இயக்கத்தில் பன்னீர் செல்வம் அவர்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்துக்கான சான்று.

பனகல் அரசர்


  • ராமராயநிங்கார் வேளமா சமூகத்தைச் சேர்ந்த நிலச்சுவான்தார்கள் குடும்பத்தில் 1866 ஆம் ஆண்டு பிறந்தார். திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும் சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பையும் முடித்தார். 1899 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.
  • ராமராயநிங்கார் 1912 இல் இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்கு நில உரிமையாளர்கள் மற்றும் ஜமீன்தார்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப் பட்டார்; 1915 வரை உறுப்பினராக நீடித்தார். 1914 ஆம் ஆண்டுநடேச முதலியார் தொடங்கிய சென்னை திராவிடர் சங்கத்தில் சேர்ந்தார். ஷாஹூ மகாராஜின் பிராமணரல்லாதோர் இயக்கத்திலும் இணைந்து செயல்பட்டார்.
  • 1917 இல் டாக்டர் டி. எம். நாயரும்தியாகராய செட்டியும் சேர்ந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் நீதிக்கட்சியை தொடங்கிய போது அதில் சேர்ந்தார். 1919 இல் பிராமணரல்லாதோருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாதாட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் ராமராயநிங்கார் அங்கம் வகித்தார்.[
  • 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடை பெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். சுப்பராயலு ரெட்டியார்தலைமையில் அமைந்த முதலாம் நீதிக்கட்சி அரசவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார்.
  • ஏப்ரல் 11, 1921 இல், சுப்பராயுலு ரெட்டியார் உடல் நலக் குறைவு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பின் ராமராயநிங்கார் முதல்வராகப் பதவியேற்றார். அவரது அமைச்சரவையில் கல்வி மற்றும் சுங்கத் துறை அமைச்சராக ஏ. பி. பாட்ரோ, வளர்ச்சித் துறை அமைச்சராக கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அதே ஆண்டு அரசு பணிகளில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்தார். தலித்துகள் “பறையர்” என்று குறிக்கப் படாமல் “ஆதி திராவிடர்” என்று குறிக்கப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார். ஆனால் அதே வருடம் பக்கிங்காம்-கர்நாடிக் ஆலையில் நடை பெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போது தலித்துகளின் மீது அவரது அரசு கடுமையாக நடந்து கொண்டது. இதனால் தலித்துகளின் தலைவர் மயிலை சின்னத்தம்பி ராஜா நீதிக்கட்சியை விட்டு வெளியேறினார்.
  • 1923 ஆம் நடை பெற்ற இரண்டாம் சட்ட மன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று ராமராயநிங்கார் மீண்டும் முதல்வரானார். ஆனால் கட்சியில் நிலவிய அதிருப்தி கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது. சி. ஆர். ரெட்டிநடேச முதலியார், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, சுப்பராயன் என பல தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டதால், நீதிக்கட்சி குறைவான இடங்களையே பிடிக்க முடிந்தது. சட்டமன்றம் கூடிய முதல் நாளே சி. ஆர். ரெட்டி தலைமையில் எதிர்க் கட்சிகள் ராமராயநிங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. நியமிக்கப் பட்ட உறுப்பினர்களின் துணை கொண்டு அவர் அத்தீர்மானத்தைத் தோற்கடித்தார். அதே ஆண்டு ஆங்கிலேய அரசு அவருக்கு “பனகல் அரசர்” என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.
  • பனகல் அரசர் தன் இரண்டாம் அமைச்சரவையில் தமிழர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்றெழுந்த கோரிக்கையை ஏற்று சிவஞானம் பிள்ளையைவளர்ச்சித் துறை அமைச்சராக்கினார். தெலுங்கர்களுக்கென ஆந்திர பல்கலைக்கழகமும், தமிழர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழகமும்இவரது ஆட்சி காலத்தில் தொடங்கப் பட்டன. 1925 ஆம் ஆண்டு இந்து ஆலயங்களின் நிர்வாகத்தை அரசின் கட்டுப்பாடில் கொண்டு வருவதற்காக இந்து அறநிலையச் சட்டத்தை இயற்றினார். சென்னைநகரினை விரிவு படுத்துவதற்காக, நகரின் கிழக்கில் இருந்த பெரிய குளத்தை வறளச் செய்து நிலமாக்கினார். சென்னை நகரின் தி. நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அவ்வாறு நீர் பரப்பிலிருந்து மீட்சி செய்யப் பட்டவையே. இவரது ஆட்சி காலத்தில் தான் நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவி செய்யும் சட்டம் இயற்றப் பட்டது. 1926 ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் சட்டமன்றத் தேர்தலில் பனகல் அரசரின் நீதிக்கட்சி தோல்வியடைந்தது. வெற்றி பெற்ற சுயாட்சி கட்சி ஆட்சி அமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் கோஷன் இரண்டாம் பெரிய கட்சியின் தலைவர் பனகல் அரசரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால் சிறுபான்மை அரசு அமைக்க விருப்பமில்லாததால் பனகல் அரசர் மறுத்து விட்டார்; சுப்பராயன் தலைமையில் சுயேட்சைகளின் அரசு அமைந்தபோது, எதிர்க் கட்சித் தலைவரானார்.
  • பனகல் அரசர், டிசம்பர் 16, 1928 இல் மரணமடைந்தார்.அவரது நினைவாக தி. நகரின் மையப் பகுதியில் உள்ள பூங்கா “பனகல் பூங்கா” என்றும் சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட வருவாய்த் துறை அலுவலகம் “பனகல் மாளிகை” என்றும் அழைக்கப் படுகின்றன.

தென்னாட்டு லெனின் 



டாக்டர் டி.எம். நாயர்

  • தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் புகழ் மகுடம் சூட்டப்பட்டவர் டாக்டர் டி.எம். நாயர் (தாரவாட் மாதவன் நாயர்) நாயர் தலைசிறந்த பகுத்தறிவுவாதி; சொந்த ஊர் கேரள மாநிலம் பாலகாட்டுக்குப் பக்கத்தில் உள்ள தாரவாட் என்பதாகும்.
  • அவருடைய தந்தையார் மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியவர். அவருடைய அண்ணன் அந்தக் காலத்திலேயே பாரிஸ்டர் பட்டம் பெற்று டெபுடி கலெக்டராகப் பணியாற்றியவர்.
  • டாக்டர் டி.எம். நாயர் அவர்களோ சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்து முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக் கழகத்தில் (1894) மருத்துவத் துறையில் M.B; Ch.B. பட்டம் பெற்று, அதன்பின் காது, மூக்கு, தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான கல்வியையும் பயின்று எம்.டி. பட்டம் பெற்றவர் (1896).
  • மரபு வழி பெருமையிலும், கல்வி வழி பெருநிலையிலும் உயர்ந்த டாக்டர் நாயர் பெருமான், பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றத்திற்காக உழைத்த பாங்கும், பெற்றியும் இருக்கிறதே அவற்றை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் போதவே போதாது.
  • காங்கிரஸ்காரராகப் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) பிற்காலத்தில் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட மூல வித்தாக இருந்த மூவரில் ஒருவராகவும் திகழ்ந்தார். (டாக்டர் சி. நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர்தான் அந்த மும்மணிகள்).
  • ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துகளும், தலையங்கங்களும் படித்தோர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக அக்கிரகார அம்மணியாகவே (பிராமிணி) ஆகிவிட்ட அய்ரீஷ் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஜஸ்டிஸ் ஏட்டின்மூலம் கொடுத்த சூடுகள் கொஞ்சநஞ்சமல்ல. ஆண்டி செப்டிக் என்ற மாத இதழையும் நடத்தி வந்தார்.
  • பார்ப்பனர்களைப் பற்றி டாக்டர் நாயர் கூறிய அந்தப் பொன்மொழி_ அனுபவ மொழி மிகவும் புகழ் பெற்றதாகும்.
  • எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை (Clannishness) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதுதான் அந்தப் புகழ் ஓச்சம் பொருள்மொழியாகும்.
  • பார்ப்பனர் அல்லாதாரின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக தமது சொந்த செலவில் லண்டன் சென்றார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஆங்கிலேயரையே கிறங்க வைத்தது. லண்டன் டைம்ஸ், கார்டியன் போன்ற ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
  • இரண்டாவது முறையாக டாக்டர் நாயர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளிப்பதற்காக லண்டன் சென்றார். சென்ற இடத்தில் நோய் வாய்ப்பட்டு டாக்டர் நாயர் மரணத்தைத் தழுவினார். இதில் கொடுமை என்னவென்றால், அப்பொழுது லண்டனில் இருந்த காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்கள் ஒரு மரியாதைக்காகக்கூட நாயர் உடலுக்கு மரியாதை செலுத்தச் செல்லவில்லை. (வாழ்க பார்ப்பனர்களின் இனவெறி!).
  • நாயரின் மறைவுச் செய்தி கேட்டு செனனைத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பார்ப்பனர்கள் தேங்காய் உடைத்து மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
  • இந்தச் சான்றிதழ், அளவுகோல் ஒன்று போதாதா பார்ப்பனர் அல்லாதாருக்கு டாக்டர் நாயர்பெருமான் பாடுபட்டதன் அருமைக்கும், பெருமைக்கும்?

: டாக்டர் டி.எம். நாயர் எத்தகைய பெருமகன்?


லண்டனில் காலை சிற்றுண்டிக்குப் பிறகு நாங்கள் ஏ.ஆர். (ஏ. இராமசாமி) முதலியார் உடைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு, போர்ட்லண்ட் சாலை செல்லும் பாதாள ரயிலைப் பிடித்து, காலை சுமார் 10 மணிக்கு டாக்டர் நாயர் தங்கியிருந்த இடத்தை அடைந்தோம். ... கதவைத் திறந்த நர்ஸ் வேறொரு அறையில் எங்களை உட்காருமாறு கூறினார். நாங்கள் உட்கார்ந்தோம்.
       
மேட்ரன் உள்ளே வந்து, டாக்டர் நாயர் இன்று விடியற்காலை 5 மணிக்கு திடீரென்று இறந்துவிட்டார் என்று சொன்னார். அது எங்களுக்கு ஒரு இடி எங்களைச் செயலிழக்க வைத்த பேரிடி எங்கள் நம்பிக்கை, எங்கள் வழிகாட்டி, எங்கள் தத்துவஞானி, எங்கள் தலைவர் இறந்துவிட்டார்! எங்கள் கதி என்ன ஆவது? ழி.ஙி.. (பிராமணரல்லாதார்) இலட்சியம் என்ன ஆவது? இந்த இயக்கத்தின் வருங்காலம் என்ன ஆவது? ஆண்டவனே! இப்படியா ஆகவேண்டும் ... எங்கள் துர்பாக்கியம், 3 கோடி மக்களின் தலைவிதியை எந்த ஒரு மனிதர் தாங்கி நின்றாரோ அவர் மறைந்தார் இலட்சியத்திற்காக ஒரு தியாகியானார் அதற்குப் பலியானார் உன்னதமான சாவு! 3 ஆண்டுகள் கடுமையான, ஓய்வேயில்லாத, இடைவிடா உழைப்பு அவரைக் கொன்று விட்டது.  (பிராமணரல்லாதாரின்) எல்லாக் குறிக்கோள்களும் இன்னும் நிறைவேறாத நிலையில்! அய்யோ! அவர் போய்விட்டாரே! விடுதலையைக் கண்ணால் காண இன்னும் வெகு தூரம் செல்லவேண்டுமே! அது இன்னும் மறுக்கப்படுகிறது கைக்குக் கிடைக்காமலிருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முயற்சிப்போம் முயற்சி செய்து வெற்றி அடைவோம்! எங்களுக்குக் கிடைத்தாக வேண்டிய புகழுக்குரிய வெற்றியாக அது அமையாவிட்டாலும், வெற்றியை அடைந்தே தீருவோம்! தைரியத்தோடு இருக்க இதுவே நேரம்.

- கே.வி. ரெட்டிநாயுடு தனது நாட்குறிப்பில்

இவர்தான் ஆற்காடு ஏ. இராமசாமி


ஆற்காடு இரட்டையர்கள் என்ற பெருமைக்குரியவர்களுள் ஒருவரும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கியவரும், லண்டனில் டாக்டர் நாயர் மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றக் குழுமுன் (கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுடன் இணைந்து) நீதிக்கட்சியின் சார்பில் சாட்சியம் அளித்தவருமான ஆற்காடு ஏ. இராமசாமி முதலியார்.

வெள்ளுடை வேந்தர்



  • தலைப்பாகையுடன் கூடிய வெள்ளுடை, சட்டைப் பையில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பாக்கெட் கடிகாரம், அதில் ஒரு பேனா, மூக்குக் கண்ணாடி, நெடிய தோற்றம், கம்பீரமான பார்வை இவற்றின் ஒட்டு மொத்தமான வடிவம்தான் வெள்ளுடை வேந்தர் திராவிடப் பெருந்தகை பிட்டி தியாகராயர். அவரின் 159 ஆம் பிறந்தநாள் இந்நாள் (1852).
  • இவரைப் பற்றி அண்ணா கூறுகிறார்:
  • சர் தியாகராயர் தோன்றி திராவிடப் பெருங்குடி மக்-களுக்கு தலைமை பூண்டு, அவர்களின் தன்னுணர்-விற்கு வழி கோலி, அவர்களின் வாழ்வில் இருந்து வந்த அடிமைத்தனத்தை அகற்ற பாடுபட்டுச் சமுதாயத் துறை, பொருளாதாரத் துறை, அரசியல் துறை ஆகியவற்றில் நல்லிடம் பெற உழைத்தார். நமது பண்டைப் பெருமைகளை-யும் அவரால் உணர முடிந்-தது. அன்று தியாகராயர் திராவிடப் பெருங்குடி மக்கள் முன்னேற வேண்டு-மென்று பாடுபட்டதன் பலனை இன்று காண்கிறோம்.
  • அவர் காலத்திலே தூவிய விதை நன்றாக வளர்ந்திருக்கின்றது. அவர் அன்று பறக்கவிட்ட சமு-தாயப் புரட்சிக்கொடியின்கீழ் நின்றுதான் நாம் இன்று பணியாற்றி வருகிறோம் என்று குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.
  • 1959 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றபோது அண்ணா அவர்கள் கூறியதும் குறிப்பிடத்தக்கது:
  • நம்முடைய தோழர்கள் எல்லாம் நகர மன்றத்திலே நுழைகின்ற நேரத்தில், உச்சியிலிருந்து பாதம் வரையில் தொங்கக்கூடிய நல்லதோர் மலர் மாலையைத் தயாரித்து, நகர சபைக் கட்டடத்திற்கு எதிரிலேயே கவனிப்பாரற்று நிற்கிற- தமிழர்களைக் கைதூக்கி விட்ட சர். தியாகராயர் சிலைக்கு அணிவித்து அவ-ரது பொன்னடிகளைத் தொழ வேண்டும்.
  • மகானே! நீங்கள்தான் தமிழர் சமுதாயத்திற்கு முதன்முதல் அறிவூட்டினீர்கள். வாழும் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்தீர்கள். உங்களது வழிவந்த நாங்கள் நீங்கள் பட்ட தொல்லைகளைவிட அதிகமாக அவ-திப்பட்டோம். நீங்களாவது செல்வச் சீமான்; நாங்கள், பஞ்சைப் பராரிகள்! ஆனால் சீமான்கள் உங்களை மதிக்க மறந்தார்கள்; ஏழைகளாகிய நாங்கள் உங்களை மறக்கவில்லை என்று வீரவணக்-கம் செய்துவிட்டு உள்ளே நுழைந்து கடமையாற்ற வேண்டுகிறேன் என்றார் அறிஞர் அண்ணா.
  • அண்ணாவின் இந்தப் படப்பிடிப்பு நூற்றுக்கு நூறு சரியானது.
  • 1882 இல் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராக உள்ளே நுழைந்த தியாகராயர் 1925 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து பணிபுரிந்த சாதனையாளர் அவர். மாநகர சபையில் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் தலைவர் அவர்தான். மூன்றுமுறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் அவரே சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்கு வித்திட்ட வித்தகரும் அவரே தன்னைத் தேடி வந்த முதல் அமைச்சர் பதவியை வேண்டாம் என்று கூறி கடலூர் ஏ.சுப்பராயலு ரெட்டியாரை முதல் அமைச்சராகும்படிச் செய்தார்.
  • இந்தப் பண்பாட்டின் உயர் ரத்தினத்தை நினைவு கூர்வோம்! தூயத் தொண்-டின் இலக்கணத்தை வரித்துக் கொள்வோம்.

சி. நடேசனார்



  • திராவிட இயக்கத்திற்குக் கால்கோள் நாட்டிய சி. நடேசனார் அவர்கள் ஆவார்.
  • 1912ஆம் ஆண்டு மெட்ராஸ் யுனைட்டெட் லீக் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டு அதன் செயலாளராகவும் அவர் இருந்தார்.
  • தன்னுடைய சொந்த முயற்சியில், சொந்த செலவில், சொந்த இடத்தில் இத்தகைய அமைப்பு நடத்தியவர் இவர். 1913 இல் அந்தச் சங்கத்தின் பெயர் திராவிடர் சங்கமாக மாற்றப்பட்டது.
  • பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் சென்னையில் தங்கிப் படிக்க வேண்டுமானால் அவர்களுக்கு விடுதிகள் கிடையாது. பார்ப்பனர்கள் நடத்தும் விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் தங்கிட அனுமதியில்லை. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக்கொள்ளலாம்.
  • (அன்றைய மவுண்ட் ரோடு, ஜியார்ஜ் டவுனில் உள்ள பார்ப்பனர் உணவு விடுதிகளில் தொங்கும் விளம்பரப் பலகையில் பஞ்சமர்களும், நாய்களும், பெருவியாதியஸ்தர்களும் உள்ளே பிரவேசிக்கக் கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது என்பதை நினைக்-கத் தக்கதாகும். குடிஅரசு, 25.5.1935)
  • இந்த நிலையில் பார்ப்பனர் அல்லாதார் சென்னை-யில் தங்கிப் படிக்க ஒரு விடுதியினை (திராவிடர் சங்க விடுதி (DRAVIDIAN ASSOCIATION HOSTEL) ஒருவர் தொடங்கினார் நடத்தினார் என்றால் அது சாமானிய மானதுதானா? பார்ப்பனர் அல்லாத படித்த மக்கள் மனம் என்னும் மேடையில் சிம்மாசனம் அமைத்து, அவரை அமர வைத்துப் போற்ற வேண்டும் அல்லவா!
  • சென்னை சட்டமன்றத்-தில் அவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை (5.2.1921) இன்று நினைத்துப் பார்த்தாலும், அவரின் சமூக-நீதிச் சாசனம் மணியாய் ஒலிக்கும்.
  • அவரவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார உரிமை கிடைக்-கும் வரையில் இனிமேல் அரசாங்க உத்தியோகங்கள் யாவும் பார்ப்பனர் அல்லாதாருக்கே கொடுக்க வேண்டும் என்றும், எல்லா டிபார்ட்டுமென்டுகளிலும், எல்லா-வித-மான கிரேடு உத்தியோகங்களும் பார்ப்பனர் அல்லாதாருக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் இந்தக் கவுன்சில் அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது என்பது தான் அந்தத் தீர்மானம்.
  • நடேசனார் சட்டமன்றத்தில் 1920_26, 1935_1937 கால கட்டங்களில் இறக்கும் வரை உறுப்பினராக இருந்த பெருமைக்குரியவர் ஆவார்.  நன்றி திராவிடப் புரட்சியாளர்கள் ப்ளாக்கர். ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக