ஞாயிறு, 3 மே, 2020

அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!

அக்னி நட்சத்திரத்தில் அனல் அடிப்பது ஏன்?!


மே 4 திங்கட்கிழமையான நாளை அக்னி நட்சத்திரம் தொடங்க இருக்கின்றது. இது மே 29 வரை தொடரும். அக்னி நட்சத்திரமென்றாலே கொளுத்தும் வெயில் நினைவுக்கு வந்து நம்மை பயமுறுத்தும். சுப விசேசங்கள் எதுவும் நடைபெறாது.. வழக்கத்தைவிட இந்த வருடம் வெயில் தாக்கம் அதிகமாய் இருக்கும் என வழக்கம்போல் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் பிறந்த கதை என புராணங்கள் சொல்லும் கதையை பார்ப்போம்.
புராண காலத்தில் 12 வருடங்கள் இடைவிடாமல் நெய்யூற்றி சுவேதகி யாகம் செய்தார்கள். தொடர்ந்து நெய் உண்டதால் அக்னி தேவனுக்கு மந்த நோய் உண்டானது. அக்னி பகவான் உடம்பில் சேர்ந்த கொழுப்பைக் குறைக்க, நாம் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி செய்வதுப்போல ஒரு காட்டை அழித்து அந்த நெருப்பைத் தின்றால்தான் தீரும் என்ற நிலை ஏற்பட்டது. 
எனவே அக்னி பகவான் காண்டவ வனத்தைத் தேர்ந்தெடுத்தான்.

அவ்வனத்தில் உள்ள அரக்கர்களும், எல்லா விதமான உயிரினங்களும், தாவரங்களும், அக்னிதேவன் தங்களை உண்டுவிடாமல் காப்பாற்ற வேண்டுமென வருணதேவனிடம் முறையிட்டன. “அக்னி உங்களை ஒன்றும் செய்யாமல் நான் காக்கிறேன்’ என வருண பகவான் வாக்களித்தான். 
இதையறிந்த அக்னி தேவன், கிருஷ்ணரிடம் ஓடிச்சென்று, “நான் காண்டவ வனத்தை அழிக்க முடியாமல் வருணன் கனமழை பெய்விக்கிறான். என் உடம்பிலிருக்கும் நெய்யினால் ஏற்பட்ட கொழுப்பை கரைப்பது?! என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டான். கிருஷ்ணன் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் அம்புகளை சரமாரியாக எய்து வானை மறைத்து சரக்கூடு கட்டினான். 

அப்போது அக்னி தேவன் தன் ஏழு நாக்குகளால் வனத்தை எரிக்க முற்பட்டான். அப்போது கிருஷ்ணர், “21 நாட்கள்தான் உனக்கு அவகாசம். அதற்குள் உன் பசியைத் தீர்த்துக் கொள்’ என்றார். 
அதன்படி அக்னி காண்டவ வனத்தை அழித்து விழுங்கி, தன் பசி தணிந்த அந்த 21 நாட்கள்தான் அக்னி நட்சத்திர தினம் எனப்படும்ம் கத்திரி வெயில் என்றும் கூறுகின்றனர். 

அக்னி நட்சத்திர நாளில் முருகனையும், மீனாட்சி அம்மையையும் வழிபடுவது நல்லது. பரணிக்குரிய துர்க்கையையும், ரோகிணிக்குரிய பிரம்மனையும் வழிபடுவதுடன், கிருத்திகைக்குரிய தேவதை அக்னியையும் வழிபட்டால் நற்பலன் கிடைக்கும். இந்நாளில் சுப விசேசங்கள் செய்வதை தவிர்த்து இறைவழிபாட்டில் சிந்தனையை செலுத்த வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக