ஞாயிறு, 17 ஜூன், 2018

வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்ட வீரனா? ஆஷ் தலித்களின் பாதுகாவலனா? சில வரலாற்று தகவல்கள்...


 வாஞ்சிநாதன் விடுதலைப் போராட்ட வீரனா? ஆஷ் தலித்களின் பாதுகாவலனா? சில வரலாற்று தகவல்கள்...

இதுவும் மிக நீண்ட கட்டுரை கண்டிப்பாக படியுங்கள்..

1906 இந்திய வரலாற்றில் முக்கியமானது. அந்நிய பகிஷ்கரிப்பு இயக்கம் நடந்த ஆண்டு.
சுதேசி இயக்கம் வீறு கொண்டு எழுந்த ஆண்டு.
இதன் ஒரு பகுதியாகவே தூத்துக்குடியில் சுதேசி இயக்கம் உருவானது.
இதன் முன்னணி தலைவர் வ.உ.சி.

சுதேசி இயக்கத்தின் வெளிப்பாடே வ.உ.சி உருவாக்கிய சுதேசி கப்பல் கம்பெனி.( சுதேசி ஸ்டீம் நாவிகேசன் லிமிடெட்)
இந்தக் கப்பல் கம்பெனியை நிர்மூலமாக அழித்தவன் ஆஷ்துரையே.
1908 மார்ச் 12 வ.உ.சி யை கைது செய்தவனும் ஆஷ்துரைதான்.
இதையொட்டி நடைபெற்ற போராட்டமே நெல்லை எழுச்சி என்பது வரலாற்று பதிவு

குற்றால அருவியில் காலையில் இந்தியர்கள் குளிக்க அனுமதியில்லை என்று உத்தரவு போட்டவனும் ஆஷ்துரைதான்.
குற்றால கோவில் டிரஸ்ட்கள் இதை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்
வெள்ளையர்கள் குளிக்கும் போது அவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்று சபார்டினேட் ஜட்ஜ் தீர்ப்பு வழங்கினான்.

இத்தகைய அரசியல் பின்னணியில் உருவானது தான் பாரத மாதா சங்கம்.அதன் உறுப்பினர் வாஞ்சி நாதன்.
பாரத மாதா சங்கப் பிரகடனம் என்ற பிரசுரமும் வெளியடப்பட்டது.
அதில் வெள்ளை அரசு குறித்த அக்கிரமங்கள் பட்டியலிடப்பட்டது
இந்தப் பிரசுரம் "பறங்கி அச்சு இயந்திர சாலை, அழகர் கோவில்,மதுரை" எனவும் அச்சிடப்பட்டு
அழகர்கோவில் திருவிழாவுக்கு வந்தவர்களிடம் விநியோகிக்கப்பட்டதாக கூறுகிறது போலீஸ் குறிப்பு.


இந்த அமைப்பின் முக்கியமான ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட பிரமச்சாரி. திருவல்லிக்கேணி கூட்டுறவு சொசைட்டியில் வேலை பார்த்து பாரதியின் நண்பரானவர். பாரதியின் இந்தியா பத்திரிக்கையில் கட்டுரை எழுதியவர். ஆஷ் கொலை வழக்கின் முதல் குற்றவாளியும் இவர் தான்.

ஆஷைக் கொலை செய்ய 10-04-1910 அன்று தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீட்டில் சங்கர கிருஷ்ணய்யர்,சுப்பிரமணிய ஐயர் ஆகிய மூவரும் காளி படத்தின் முன்பு குங்குமத்தை நீரில் கரைத்துக் குடித்துவிட்டு,
இந்த குங்குமம் வெள்ளையனின் ரத்தம். இது போல் வெள்ளையனின் ரத்தம் குடிப்போம் என்று சபதம் எடுக்கின்றனர்.
இந்த மூவரும் கூட ஆஷ் கொலை வழக்கின் குற்றவாளிகள் தான்.

சப் கலெக்டராக இருந்த ஆஷ்துரை,நெல்லையின் கலெக்டராக 1910 ஆகஸ்ட் 2 ல் பதவியேற்கிறான்.
புனலூர் காட்டிலாகாவில் பணியாற்றிய வாஞ்சி நாதன் ஆஷைக் கொல்ல துப்பாக்கி சுடும் பயற்சிக்காக பாண்டிச்சேரிக்கு செல்கிறான். அங்கு வாஞ்சிக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வ.வே.சு ஐயர் அளிக்கிறார்.

ஆஷை சுட்டுக்கொல்ல வாஞ்சி பயன்படுத்திய துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட தானியங்கி துப்பாக்கி. வ.வே.சு ஐயருக்கு அந்த துப்பாக்கியை அனுப்பியவர் பாரீஸிலிருந்த மேடம் காமா.

மேடம் குஸ்தம் பிகாஜி காமா பம்பாயைச் சேர்ந்தவர்.1901 ல் இங்கிலாந்தில் அவர் இருந்த போது அங்கு இந்திய விடுதலைக்கு ஆதரவான அபிநவ் பாரத சமிதியில் உறுப்பினரானவர். அவரை இங்கிலாந்து அரசு கண்காணித்ததால் பாரீஸ் சென்றார்.பாரீஸ் இந்தியர் கழகத்தை உருவாக்கினார். அங்கிருந்து பொம்மைகளில் ஒளித்து வைத்து ரிவால்வர்களை அனுப்பி வைத்தவர். மேல்படிப்புக்காக பாரீஸ் சென்ற வ.வே.சு ஐயருக்கு பாரீஸ் இந்தியர் கழகத்தோடு தொடர்பு ஏற்பட்டு,அந்தத் துப்பாக்கியோடு 1910 புதுச்சேரி வந்தார் வ.வே.சு ஐயர்.

துப்பாக்கி சுடும் பயிற்சியும் முடிந்தது
வாஞ்சிநாதன் 1911 மே 15 செங்கோட்டை வந்து சேர்ந்தான்
வாஞ்சிநாதனும் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சங்கர கிருஷ்ணனும் திருநெல்வேலி புறப்பட்டனர்
1911 ஜீன் 14,15,16 நெல்லை கைலாசபுரம் ராமலிங்க ஐயர் உணவு விடுதியில் மூன்று நாளும் தங்கியிருந்தனர்.

ஐயரா இருக்காங்களேன்னு டென்சன் ஆகாதீக.
அடுத்து தான் முக்கியமான செய்தி இருக்கு.

நெல்லையில் வாஞ்சிநாதனும்,சங்கர கிருஷ்ணனும் தங்கியிருக்க உதவியவர் அன்றைய டிவிஎஸ்எஸ் பேங்க் எழுத்தர் அரவங்குளம் முத்துச்சாமி. 1911 ஜீன் 17 நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து மணியாச்சி ரயில் காலை 9.30 க்கு புறப்பட்டது.

கொடைக்கானலில் படிக்கும் தங்களது நான்கு குழந்தைகளையும் பார்ப்பதற்காக அந்த ரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் பயணமாயினர் ஆஷ் தம்பதியர். இரண்டாம் வகுப்பில் வாஞ்சியும் சங்கர கிருஷ்ணனும் பயணமாயினர். காலை 10.35க்கு ரயில் மணியாச்சி வந்து சேர்ந்தது.
தூத்துகுடியிலிருந்து செல்லும் சிலோன் போட் மெயிலுக்கு அவர்கள் மாற வேண்டும். அதற்காக பயணித்த ரயிலில் அமர்ந்திருந்தனர். போட் மெயில் 10.48க்கு மணியாச்சி வந்து சேர்ந்த்து.

ஆஷ் தம்பதியரை வரவேற்று உடன் நின்றவர் மணியாச்சி ஸ்டேசன் மாஸ்டர் அருளானந்தம் பிள்ளை. அவரின் குழந்தைகள் ஆரோக்கியசாமியும்,மரியதாஸூம் உடன் பெட்டியில் இருந்தனர்.க்லெக்டரின் பியூன் காதர்பாட்சா பிளாட்பாரத்தில் நின்றிருந்தார்.

பச்சைக்கோட் அணிந்திருந்த வாஞ்சி கலெக்டர் இருக்கும் பெட்டியில் ஏறுகிறான்.குறி பார்த்து சுடுகிறான்.குண்டு மார்பில் பாய்கிறது.தனது தொப்பியால் துப்பாக்கியை தடுக்க வீசுகிறான் ஆஷ். ஆனால் பயனில்லை.சமபவம் நடக்கும் போது சிலோன் போட் மெயிலும் வந்து சேர்கிறது.
ரயில் நிலையம் பரபரப்பாகிறது.

வாஞ்சியை கலெக்டர் பியூன் காதர்பாட்சா பிளாட்பாரத்தில் இறங்கி ஓடும் போது பிடிக்க இருவரும் கட்டிப் புரள்கின்றனர்.துப்பாக்கியை காட்டி மிரட்டிவிட்டு வடக்கு நோக்கி ஓடுகிறான் வாஞ்சி.சங்கரகிருஷ்ணன் வயல்காட்டிற்குள் ஓடி தப்பிக்கிறான்.

காதர்பாட்சாவும் பயணிகளும் விரட்ட கழிப்பறைக்குள் புகுந்து கதவை மூடிக் கொள்கிறான்.துப்பாக்கியை தன் வாய்க்குள் வைத்து அழுத்த தலையின் பின்பகுதி வரை குண்டு துளைத்தது.வாஞ்சி மரணம் அடைந்தான்.

உயிருக்கு போராடிய ஆஷ்ஷை,அவன் பயணித்த மணியாச்சி ரயிலிலேயே அவசரமாக நெல்லைக்கு திருப்பி அனுப்பினார்கள்.ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ரயில் கங்கைகொண்டான் அருகே 11.30க்கு வந்த போது ஆஷ் உயிர் பிரிந்தது. வாஞ்சியின் உடல் ஒரு சரக்கு ரயிலில் மதியம் 3.45 க்கு நெல்லை வந்தது. அவன் சட்டைப் பையில் இருந்த கடிதம் தான் வாஞ்சியை செங்கோட்டை ரகுபதி ஐயர் மகன் என அடையாளப்படுத்தியது.

1911 ஆகஸ்ட் 1 சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் தம்புவிடம் இ.பி.கோ.121Aன்படி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் பட்டியல் இதுதான்.

1.நீல்கண்ட பிரமச்சாரி
2.கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் சங்கர கிருஷ்ண ஐயர்
3.தென்காசி மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை
4.தென்காசி முத்துக்குமாரசாமி பிள்ளை
5.தூத்துக்குடி சுப்பையா பிள்ளை
6.செங்கோட்டை ஜெகநாத ஐயர்
7.செங்கோட்டை ஹரிஹர ஐயர்
8.புனலூர் ராமசாமி பிள்ளை
9.திருவாங்கூர் தேசிகாச்சாரி
10.செங்கோட்டை மகாதேவ ஐயர்
11.செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை
12.செங்கோட்டை அழகப்ப பிள்ளை
13.எட்டயபுரம் வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர்

இவர்கள் தவிர போலீஸ் தேடுதலுக்கு பயந்து கத்தியால் தொண்டையை அறுத்துக் கொண்டு 1911 ஆகஸ்ட் 5 ல் செத்த புனலூர் வெங்கடேஸ்வர ஐயர்.
1911 ஜீன் 28 ல் விசம் குடித்து தற்கொலை செய்து கொண்ட செங்கோட்டை பாரதமாதா சங்கத்தின் பொறுப்பாளர் தர்மராஜ ஐயர்.

1911 செப்டம்பர் 11 முதல் 1912 பிப்ரவரி 2 வரை விசாரணை நடந்து பிப்ரவரி 15 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சர்.ஆர்னால்ட் ஒயிட் தீர்ப்பு வழங்கினான்.
இது கொலையின் வரலாறு
ஆனால் வாஞ்சியின் சட்டைப் பையில் இருந்து எடுக்கப்பட்ட கடிதம் தான் இன்று வரை சர்ச்சைகளுக்கு காரணமாக இருக்கிறது.

பிரசவ வலியால் துடித்த தலித் பெண் யார்?
வாஞ்சி அதைத் தடுத்தானா?
ஆஷ் அவனை அடித்தானா?
இந்தக் கதையின் மூலம் எங்கு உருவாகிறது?
குற்றாலத்தில் தலித்களை குளிக்க ஆஷ் அனுமதித்தானா?


அதையும் பார்க்கலாம்.

ஆஷ் கலெக்டராக இருந்த போது குற்றாலத்தில் தலித் மக்கள் குளிக்க அனுமதியளித்து ஆணை பிறப்பித்தார் என்பது தவறான தகவல். ஏனெனில் காந்தி குற்றாலத்திற்கு 1934 ல் வருகிறார். அன்றைய ஜில்லா போர்டு உறுப்பினர் குமாரசாமி தலைமையிலான ஒரு குழு சந்திக்கிறது

குற்றாலம் அருவியில் தலித்கள் குளிக்க முடியாது என்று காந்தியிடம் கூறுகிறார்கள்.காந்தி விசாரிக்கிறார்.அருவிக்கு கோவிலின் வாசல் வழியே தான் செல்ல வேண்டும்.கோவில் வாசல் வழியே செல்ல தலித்களுக்கு அனுமதி இல்லை என்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர்.

என்று தலித்கள் இங்கு குளிக்க அனுமத்க்கப்படுகிறார்களோ அன்று நான் குளித்துக் கொள்கிறேன் என்று குற்றாலத்தில் குளிக்காமலேயே காந்தி புறப்படுகிறார். இந்திய விடுதலைக்குப் பிறகே தலித்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

நிலைமை இப்படி இருக்க ஆஷ் குளிக்க உத்தரவிட்டார் என்பதற்கான எவ்வித வரலாற்று ஆவணமும் இல்லை. அவரும் காந்தியைப் போல் அது தவறு என்று நினைத்திருக்கலாம்

செங்கோட்டை அஹ்ரகாரத்தின் வழியாக பிரசவ வழியால் துடித்த தலித் பெண்ணை தூக்கிச் செல்லும் போது வாஞ்சி உள்ளிட்ட இளைஞர்கள் தடுத்தார்கள் என்றும் ஆஷ் சாட்டையால் அடித்து விரட்டினார் என்று சொல்லப்படுவதும் உண்மையல்ல.

ஏனெனில் செங்கோட்டை அன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட பகுதி.நெல்லை ஆட்சியரான ஆஷிற்கு அங்கு வேலையே கிடையாது.மேலும் செங்கோட்டையின் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே அக்ரஹாரம் இருக்கிறது.அதன் வழியாக எவரும் வரவேண்டிய அவசியமும் இல்லை. அந்நியன் திரைப்படத்தில் வரும் ரன்டக்க ரன்டக்க பாடலின் தொடக்க காட்சிகள் அந்த அக்ரஹாரத் தெருவில் தான் எடுத்திருப்பார்கள்.

அப்படியானால் அந்த சம்பவம் எதை வைத்துக் கோர்க்கப்படுகிறது என்கிற விவரம் தேவையாகிறது. பாளையங்கோட்டையில் ஆஷ் கல்லறை இருக்கும் இங்கிலீஷ் சர்ச் சார்ந்த தெரு வழியே ஒரு தலித் பெண்ணின் சவ ஊர்வலம் செல்கிறது.இதை அன்று இருந்த திருநெல்வேலி விபூதி சங்கம் என்ற அமைப்பு தடுக்கிறது. இதையொட்டிய கலவரத்தை அப்போது சப் கலெக்டராக இருந்த ஆஷ் அடக்கியதாக ஒரு குறிப்பு இருக்கிறது.

ஆஷ் சமூகநீதி காத்த காவலர் என்ற அளவிற்கான ஒப்பீடெல்லாம் அவசியமற்றதும் ஆதாரமில்லாததுமே.ஒரு வெள்ளை அதிகாரிக்கு உரிய சர்வ அடக்குமுறைகளோடும் ஆஷ் இருந்தான் என்பதே உண்மை. அவன் வாஞ்சியால் சுடப்படாவிட்டாலும்,சுட்டுக் கொல்லப்பட வேண்டிய ஏகாதிபத்திய ஏவலாளி தான்.

வாஞ்சியின் கடிதம் அவனது சடலத்தின் சட்டைப் பையில் இருந்து எடுக்கப்படுகிறது. அதில் ஆங்கிலேயர்கள் சனாதன தர்மத்தை மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள் என்றும், கோமாமிசம் திண்ணும் மிலேச்சன் என்றும் வாசகங்கள் உள்ளது.இதில் கவனிக்க வேண்டிய விசயம் யாதெனில் பாரதமாதா சங்கம் வெளியிட்ட பிரசுரத்தில் இது போன்ற வாசகங்கள் எவ்விடத்திலும் இல்லை.

எனது பார்வை யாதெனில் வாஞ்சி நாதனின் நோக்கம் தேசவிடுதலை என்பதை விட, தனது சாத்திர சம்பிரதாயத்தில் பற்றி நின்று செய்த செயலாகவே இருக்கிறது.இந்தக் கடிதம் ஒரு அமைப்பின் கருத்தாகவும் இல்லை.அவனின் கருத்தாகவே உள்ளது. எனவே அவர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர் என்ற பில்டப்புகளும் தேவையில்லை.

பலருடைய திட்டத்தை அமுல்படுத்த முயன்ற ஒருவன் தனது நோக்கத்தை புகுத்திய செயலாகவே அந்தக் கடிதம் இருக்கிறது.

எனவே வாஞ்சி போற்றப்பட வேண்டிய விடுதலைப் போராட்ட வீரர்களின் வரிசையில் வைக்கப்பட வேண்டிய நபரும் அல்ல
ஒரு நாட்டையே அடக்கி ஆள வந்த ஏகாதிபத்திய வெள்ளையனின் கலெக்டர் என்ற அதிகாரத்தை செலுத்திய ஆஷ் எவ்வகையிலும் சமூக நீதிக்காவலன் என்பதும் ஏற்புடையதுமல்ல.

முற்றும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக