ஞாயிறு, 17 டிசம்பர், 2017

மணி மேகலை- இன்றைய புதுமைப் பெண்ணகளுக்கு முன்னோடி! காரணம் ?



மணி மேகலை- இன்றைய புதுமைப் பெண்ணகளுக்கு முன்னோடி! காரணம் ?

*சங்ககாலத்தின் இறுதியில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் சமயம் சார்ந்த வரலாற்றைப் படைத்ததில், முதன்மையான முதல் காப்பியமானது, மணிமேகலை!*

அதுகாலம் வரை, புராணங்கள், வாழ்க்கை வழிகாட்டும் கதைகளே ஆண்டுவந்த தமிழ் இலக்கிய உலகில், முதன்முறையாக, ஒரு சாதாரணப் பெண்மணியை, அதுவும் கணிகையர் எனும் நடன மாந்தர் குலத்தில் பிறந்த பெண்ணை கதையின் நாயகியாக, பெரும்பான்மை இந்து சமய நெறிகளுக்கு மாறான பவுத்த மதத்தைப் பின்புலமாகக் கொண்டு, சமயம் சாதி பாடுபாடு, ஆண் மேலாதிக்கம் போன்றவை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் படைத்தார் சீத்தலைச் சாத்தனார் என்றால், அது மிகவும் தைரியமான ஒரு செயல் என்பதைவிட, புரட்சிகரமான செயல் என்பதே, சரியாக இருக்கும்.

சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படும் மணிமேகலை, துறவறத்தைக் கருப்பொருளாகக் கொண்டதாகும்.

*சிலப்பதிகாரம்:*

மணிமேகலையின் முதல் நூலான சிலப்பதிகாரம், இளங்கோவடிகளால் இயற்றப்பட்டு, குடும்ப வாழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட நூலாகும்.

அதில், காவிய நாயகி கண்ணகியின் கணவன், பெருவணிகன் கோவலன், நடன மங்கை மாதவியிடம் மையல் கொண்டு, அவளுடன் சேர்ந்து பின்னர், மனம் பேதலித்து, மீண்டும் மனைவியிடம் சேர்ந்த சமயத்தில், தவறான சூழ்நிலைகளின் பாதிப்பால் கள்வனாகி, கொல்லப்பட்டு, கண்ணகியின் கோபத்தில் பற்றியெரிந்த மதுரை மாநகரின் வெம்மையில் இருந்து விலகி, இறைவருளால் இறந்த கணவனுடன் மேலுலகம் செல்லும் கண்ணகி, கோவலன் வதத்தில் மனம் கலங்கிய மாதவி, அவன் நினைவால் துறவு பூண்டு, கோவலனுக்குப் பிறந்த மகளான மணிமேகலையையும் இளந்துறவியாக்கி, தவ வாழ்வு வாழ்ந்த வரலாறுதான், சிலப்பதிகாரம்.


*மாதவியின் துறவிலிருந்து துவங்குகிறது, மணிமேகலை!.*

சிலப்பதிகாரம் முடிந்த மாதவியின் துறவிலிருந்து துவங்குகிறது, மணிமேகலை. முழுக்க முழுக்க, பவுத்த மதக்கருத்துகளை நேரடியாக செலுத்தாமல், மணிமேகலை எனும் காப்பிய நாயகியின் வாழ்வின் வழியே, வாழைப்பழத்தில் ஊசி நுழைப்பது போல, சமண சமயத்தின் நெறிகளை செலுத்துகிறது, மணிமேகலை.

மத நெறிகளைக் கடந்து, தமிழ் மொழியில் உள்ள ஆளுமை மற்றும் கவித்திறனில் செறிவு கொண்ட நூலாகும், மணிமேகலை. சொல்லப்போனால், மற்ற இதிகாசங்களைப் போல, உயர்வாக வைத்துப் போற்றியிருக்க வேண்டிய இந்நூல் ஏனோ, அதற்கான இடத்தை அடையவே இல்லை.

இதற்குக் காரணமாக, கதையின் களமாக மையப்பொருளாக விளங்கிய சமண சமயம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிந்திக்க தோன்றுகிறது.

ஏனெனில், திராவிட நாடுகளில் முற்காலத்தில் இருந்து, சமண மதங்கள் அதிக ஈர்ப்பைப் பெறவில்லை, அவையெல்லாம் வட இந்தியாவில் மட்டுமே, புகழ்பெற்று விளங்கியதாகவே இருந்தன.


*மணிமேகலையின் வரலாறு:*

மணிமேகலை காப்பியத்தில் நாயகி, கோவலன் மாதவியின் மகளாவாள், நடன குலத்தில் பிறந்தாலும், கோவலனின் மீது மாதவி கொண்ட காதல், அவன் பிரிவில் மனம் வாடி, அதன்பின் அவன் கொலையுண்ட செய்தி அறிந்து மனம் கலங்கி, துறவறம் பூண்டவள், தன் மகளையும் நல்லொழுக்கம் மிக்க பெண்ணாக வளர்த்து, அவளையும் துறவு பூண வைத்து, உலகில் உள்ள எந்த பந்த பாசத்திலும் சிக்காமல் நல்வழியில் நடத்தி வந்தாள்.

பூம்புகார் நகரில் வளரும் மணிமேகலை அங்குள்ள இளவரசனால் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகி, அவனிடம் இருந்து தப்பிக்க செய்யும் முயற்சிகளில் ஒருநாள், கடலின் தெய்வம் மணிமேகலாவால் காப்பாற்றப்பட்டு, மணிபல்லவத் தீவில் சேர்க்கப்படுகிறாள்.

மணிபல்லவத்தீவு என்பது, தற்கால இலங்கை. அங்கே, தன் வாழ்வின் பிறவி இரகசியங்களை அறிகிறாள், மேலும் கடல் தெய்வத்திடம் இருந்து மூன்று வரங்கள் பெறுகிறாள், வேற்று உருவம் பெறுதல், பசியை அடக்குதல், வான் வழி பறத்தல் எனும் அந்த வரங்கள் மணிமேகலையின் வாழ்வில் பல முக்கிய தருணங்களில் அவளை காப்பற்றுகிறது.

பின்னர், அங்குள்ள ஒரு குளத்தில் அவளுக்கு அமுதசுரபி எனும் அட்சய பாத்திரம் கிடைக்கிறது. அள்ளஅள்ளக் குறையாத அந்த பாத்திரத்தின் மூலம், அவளை, உலக மக்களின் பசிப்பிணி போக்க, இறை கட்டளை இடுகிறது. அதன் பின்னர் தனது இருப்பிடம் திரும்பியவள், நிகழ்வை அன்னை மாதவி மற்றும் தோழியிடம் விவரித்து, தன் அட்சய பாத்திரம் மூலம், ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி பசிப்பிணி போக்குகிறாள்.


மீண்டும் இளவரசன் தொல்லை தர, வேறு ஒரு உரு மாற, அந்த உருவில் அவள் இருப்பதை அறிந்த இளவரசனும் அவளைத் தேடி வர, நடந்ததை அறியாத, உருவின் கணவன் இளவரசனைக் கொன்றுவிட, பின்னர் காயசண்டிகை எனும் உருவில் இருக்கும் மணிமேகலை சிறையில் அடைக்கப்பட, தவநெறி சார்ந்த அவளின் செயல்களில் ஈடுபாடு கொண்ட அரசி, மாதவியின் மூலம் உண்மை அறிந்து, அவளை விடுவிக்க, மணிமேகலை சமய நெறிகளில் தேர்ச்சி பெற, வஞ்சி மாநகர் செல்கிறாள்.

தற்கால கரூர் நகரமே, அக்காலத்தில் வஞ்சி மாநகர் என்று அழைக்கப்படும் சேர மன்னர்களின் தலைநகராக விளங்கியது. அங்கு பல சமய நெறிகளைப் பற்றி அறிந்து பின்னர் காஞ்சி மாநகர் சென்று, மக்கள் பசிப்பிணி போக்கி, தனது குருநாதர், அறவண அடிகள் மூலம், சமண நெறிகளை கற்றுத் தேர்ந்து, முழுமையான புத்த மதத் துறவியாகி, தவத்தில் கலந்தாள்.

மணிமேகலையின் வீரமும் மன உறுதியும்! தன்னை ஒரு இளவரசனே பின்தொடர்ந்து வந்து உறவை நாடியபோதும், அதை துச்சமென மதித்து, தன் இலக்கில், தவ வாழ்வில் அவள் உறுதியாக இருந்திருக்கக் காரணம், தனது அன்னையை விட்டு பிரிந்த தனது தந்தையின் காரணமாக ஏற்பட்ட வெறுப்பால் இருக்கலாம் அல்லது அரச குடும்பத்தால் தந்தை கொலையுண்ட பகையாலும் இருக்கலாம்.

ஆயினும் அத்தகைய ஒரு கடினமான உறுதிக்கு, பெரு வணிகக் குலத்தில் பிறந்த அவள் தந்தையின் உறுதியும், நடன மங்கையானாலும் கோவலனே கணவன் எனும் சிந்தை மாறாது வாழ்ந்த மாதவியும் ஒரு காரணமாக இருக்கலாம், அல்லவா!


*புதுமைப் பெண் மணிமேகலை!*

ஆண் பெண் சம உரிமைச் சூழல் உள்ள இன்றைய நவீன காலகட்டத்திலேயே, பெண்களுக்கு இன்னமும் முழு சுதந்திரமும், செயல்படும் ஆற்றலும் இல்லாதபோது, கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் அடிமைப்பட்டிருந்த ஆணாதிக்க சமூகத்தில், மூட நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் முன், பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்த்தால், மணிமேகலை பாத்திரப் படைப்பின் புரட்சி, பெருமை நமக்கு விளங்கும்.

முற்போக்கு சமுதாயத்தில் இன்னமும் சாதி, இன மத மாச்சரியங்கள் ஒழியாத நிலையில், மணிமேகலையை காப்பிய நாயகியாகப் படைத்து, அதிலும் அவளை பெண் துறவியாக்கி, கருணைக்கடலாக, உலகிற்கே, அன்னதானம் அளித்த பூரணியாக, குறையே இல்லாத முழு நிலவாக, மணிமேகலையை படைத்திருக்கிறார், சீத்தலை சாத்தனார்.

மாசற்ற மாதவி! கணவனை கொடுங்கொலை செய்த மன்னனை வீழ வைத்து, மதுரையை சினங்கொண்டு எரித்த கண்ணகி கற்பின் தெய்வம் என்றால், நடன மங்கையர் குலத்தில் பிறந்து கோவலன் பால் மனம் சென்றபின், குலத்தொழிலை விடுத்து, உலக இச்சைகளை விலக்கி, தவவாழ்வு வாழ்ந்தவள், கணவனாக வரித்த கோவலன் கொலையுண்டான் என்றவுடன் துறவு பூண்டு, இந்த உலகின் மீது உள்ள வெறுப்பால், கோவலன் மீது உள்ள அன்பால், தங்களுக்குப் பிறந்த மகளையும், துறவு பூண வைத்து, வரலாற்று நாயகியாக்கினாளே, அவள்தான், காவியத்தலைவி!

*ஒருவேளை, இதுதான், அக்கால, பெண்ணடிமைத்தனமோ !?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக