செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

விடுதலைப் போராட்ட வீரர் கடலூர்அஞ்சலையம்மாள்



விடுதலைப் போராட்ட வீரர் கடலூர்அஞ்சலையம்மாள்

கடலூரில் 1890-ல் பிறந்த அஞ்சலையம்மாள், பெண்ணடிமைத்தனம் முற்றிலும் ஒழிந்து போகாத காலகட்டத்தில் ஓர்  பெண்மணி தன்னை விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டு பல முறை சிறை சென்றதென்பது வரலாற்றுச் சாதனையாகும்.

1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே அஞ்சலையம்மாளின் பொது வாழ்க்கைத் தொடங்கி விட்டது.

1927 ஆம் ஆண்டு நீலன் சிலையகற்றும் போராட்டம்,
1930-உப்பு சத்தியாகிரகப்போர்,
1933-கள்ளுக் கடை மறியல்,
1940- தனிநபர் சத்தியாகிரகம் எனப் பல போராட்டங்களில் ஈடுபட்டு கடலுர், திருச்சி வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் நான்கரை ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்றவர்.

1932 ஆம் ஆண்டு வேலூர் பெண்கள் சிறையில் அஞ்சலையம்மாள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து சிறையிலேயே குழந்தை பெற்றார். (மகன் ஜெயவீரன் இன்றும் கடலூர் முதுநகரில்  வாழ்ந்து வருகிறார்).

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிற்கு அருகிலுள்ள பெரியநற்குணம் என்ற சிற்றூரில் "முருகப்படையாட்சி" என்பவரை அஞ்சலையம்மாள் திருமணம் செய்து கொண்டார். இவரும் விடுதலைப் போரில் பங்கேற்று பல முறை சிறை சென்றுள்ளார்.

இவர்களின் மூத்த மகள் "அம்மாப்பொண்ணு" ஒன்பது வயதிலேயே நீலன் சிலையகற்றும் போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர். அவரை காந்தியடிகள் வார்தாவுக்கு அழைத்துச் சென்று "லீலாவதி" எனப் பெயர் சூட்டி சபர்மதி ஆசிரமத்தில் வளர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலையம்மாள் சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பலமுறை சட்டமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்.

ஒரு முறை கடலூருக்கு காந்தியடிகள் வந்த போது அவரைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஞ்சலையம்மாள் பர்தா அணிந்து கொண்டு மாறு வேடத்தில் காந்தியடிகளை குதிரை வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளார். அதனால் காந்தியடிகள் அஞ்சலையம்மாளை "தென்னாட்டின் ஜான்ஸிராணி" என அழைத்தார் என்பது தனி சிறப்பு.

அதிகார வர்க்கத்தை மட்டுமே சுதந்திர போராட்ட தியாகிகளாக அடையாளப்படுத்திய அரசு, இந்த வீரப்பெண்மணியை ஏனோ போற்ற மறந்து விட்டது. இந பஸ்்த சுதந்திர தினத்தில்
நம் வீர தமிழச்சியை தலை தாழ்த்தி வணங்கி மரியாதை செலுத்துவோம்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக