ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?



மொத்த மனித இனம் அழிந்த நொடியிலிருந்து... உலகில் என்னவெல்லாம் நடக்கும்?

ஒரு ஐந்து நொடிகளை ஒதுக்கி நீங்களாகவே கற்பனை செய்து பாருங்கள்... ஒட்டு மொத்த மனித இனமும் அழிந்த நொடியிலிருந்து இந்த உலகில் என்னவெல்லாம் நடக்கும்...

முதல் சில நொடிகள் :

- பெரும் அமைதி சூழும். மொத்த சத்தங்களும், இரைச்சல்களும் அடங்கிப் போயிருக்கும்.
- பறவைகளும், வீட்டுப் பிராணிகளும் அச்சத்தோடும், ஆச்சர்யத்தோடும் இறந்து கிடக்கும் உடல்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்.



சில நிமிடங்கள் :

- பறவைகள் கூட்டம், கூட்டமாகப் பறக்கத் தொடங்கும்.
- பொந்துகளிலிருந்து எலிகளும், பாம்புகளும் வெளிவரத் தொடங்கும்.
- பூச்சிகள் அதிகம் பறக்கத் தொடங்கும்.
- புழுக்கள் நெளியத் தொடங்கியிருக்கும்.



சில மணி நேரங்கள் :

- கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
- இறந்துக் கிடக்கும் மனித உடல்களைப் புழுக்களும், கழுகுகளும் இன்னபிற உயிரினங்களும் உண்ணத் தொடங்கும்.
- கொஞ்சம், கொஞ்சமாக உலகம் இருளில் மூழ்கத் தொடங்கும்.
- ஓடிக் கொண்டிருந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றாக நிற்கத் தொடங்கும்.



சில நாள்கள் :

- வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்கள், பூனைகள், கூண்டில் அடைக்கப்பட்ட பறவைகள் உண்ண உணவில்லாமல், குடிக்க நீரில்லாமல் இறக்கத் தொடங்கும்.
- பண்ணைகளில் வளர்க்கப்பட்ட மாடுகள், கோழிகள் போன்றவை இறந்திருக்கும்.
- உலகின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியிருக்கும். சோலார் மற்றும் காற்றாலைகள் மட்டுமே மெதுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.


சில மாதங்கள் :

- வீட்டுப் பிராணிகள் மொத்தமும் இறந்துப் போயிருக்கும்.
- வீட்டில் வளர்க்கப்பட்ட பக், ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார் போன்ற நாய்கள் இறந்துப் போய்... நாட்டு நாய்கள் மட்டும் கூட்டம், கூட்டமாக வலம் வந்துகொண்டிருக்கும்.
- பராமரிப்பின்றி சோலாரும், காற்றாலைகளும் செயலிழந்து மொத்த உலகமும் இருளில் மூழ்கிப் போயிருக்கும்.
- பெரும்பாலான மனித உடல்கள், எலும்புகளாக மட்டுமே மிச்சமிருக்கும்.
- அணு உலைகளைக் குளிர்ச்சி செய்ய ஓடிக் கொண்டிருந்த குளிர்ந்த நீர் அனைத்தும் வற்றிப் போய், அணு உலைகளிலிருந்து ஆபத்தான கதிர்வீச்சுகள் வெளியேறத் தொடங்கியிருக்கும்.
- அந்தக் கதிர்வீச்சுக்குப் பல உயிரினங்கள் பலியாகியிருக்கும்.
- அணு உலைகள் மற்றும் பல தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள், ரசாயனங்கள் போன்றவை ஒன்றோடொன்று உரசி ஆங்காங்கே தீ விபத்துகள் நடைபெறும். அதை அணைக்க ஆளில்லாமல் பல தூரங்களுக்கு நெருப்பு பரவும்.
- விவசாய நிலங்களில், பராமரிப்பின்றி பயிர்கள் செத்துக் கொண்டிருக்கும்.
- அனைத்து சப்வேக்களிலும் நீர் புகுந்திருக்கும்.
- ஆங்காங்கே வெள்ளம் புகுந்திருக்கும்.

சில வருடங்கள் :

- வானில் சுழன்று கொண்டிருக்கும் பல செயற்கைக்கோள்களும் விழுந்து பூமிக்கருகே வெடித்துச்  சிதறும்.
- மொத்த நகரங்களும், கட்டடங்களும் செடி, கொடிகளால் சூழப்பட்டிருக்கும்.
- பாலைவனத்தை ஒட்டியிருக்கும் நகரங்கள் மொத்தமும் மணலால் மூடப்பட்டிருக்கும்.
- மொத்த கடலும் நாசமாகியிருக்கும்.
- எல்லா நீர்நிலைகளிலும் குப்பைகள் நிறைந்து காணப்படும். இதனால் பல உயிரினங்கள் இறக்கும்.
- புகை மற்றும் காற்று மாசுக்கள் குறைந்து வானம் தெளிவாகத் தெரியும்.
- கம்ப்யூட்டர், செல்போன், டிவி என மொத்தமும் செயலிழந்து மிகப்பெரிய "இ-வேஸ்ட்"  கிடங்காக பூமி மாறிப்போயிருக்கும்.

சில நூறாண்டுகள் :

- 300 ஆண்டுகள் கழித்து மனிதன் உருவாக்கிய ஈஃபில் டவர், புர்ஜ் துபாய் போன்ற பல கட்டுமானங்கள் சரிந்து விழுந்திருக்கும்.
- இரும்புப் பாலங்கள் துருப்பிடித்து தளர்ந்து விழும்.
- ஏரிகளை, சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்கள் அழிந்து அங்கு மீண்டும் அந்த ஈரநிலங்கள் உயிர்பெற்றிருக்கும்.
- மிருகங்கள்தான் இந்த உலகை ஆளும்.
- இன்று அழியும் தருவாயிலிருக்கும் பல மிருகங்கள், இனப்பெருக்கம் ஆகி கூட்டங்களாக வலம் வந்து கொண்டிருக்கும்.
- குப்பைகள் ஆங்காங்கே ஒதுங்கி நீர்நிலைகள் சரியாகத் தொடங்கியிருக்கும்.
- இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டு சீராக வாழத் தொடங்கியிருக்கும்.

10 ஆயிரம் வருடங்கள் :

- மனித இனம் வாழ்ந்ததற்கான தடங்கள் இல்லாமல் போயிருக்கும்.
- சீனச் சுவர் போன்ற சில கற்களால் ஆன இடங்களும், மலைகளும் மட்டுமே மனித இனம் வாழ்ந்ததற்கான சாட்சிகளாக நின்று கொண்டிருக்கும்.

பல ஆயிரம் வருடங்கள் :

- மொத்த பூமியும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு புதியதோர் உலகாய் செயல்படத் தொடங்கியிருக்கும். ஏலியன்கள் கூட பூமியைப் பார்க்க வந்திருப்பார்கள். இந்த பூமியின் அனைத்து விஷயங்களையும் ஆராய்ச்சி செய்து பல முடிச்சுகளை அவிழ்த்திருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு ஒன்றின் விடை மட்டும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் . அது பிளாஸ்டிக். காரணம் பிளாஸ்டிக் அழிய 5 கோடி ஆண்டுகள் ஆகும்.


பூமி தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. மனித இனம் தோன்றி 2 லட்சம் ஆண்டுகள்தான் ஆகின்றன. மனித இனத்திற்கு முன்பும் இந்த பூமி இருந்தது. மனித இனத்திற்குப் பின்பும் இந்த பூமி இருக்கும். மற்ற உயிரினங்களிலிருந்து மனித இனம் சற்று மாறுபட்டிருக்கலாமே தவிர, மேம்பட்டு இல்லை என்பதை மனித இனம் உணர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக