வியாழன், 31 ஆகஸ்ட், 2017

பூலித்தேவன் வரலாறு - poolithevar



பூலித்தேவன் வரலாறு - poolithevar

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன. இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது.
மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.
இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.
மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.
இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.
1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், ‘காத்தப்ப பூலித்தேவர்’ என்பதாகும் ‘பூலித்தேவர்’ என்றும் ‘புலித்தேவர்’ என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.
சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.
மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.
சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.
பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.
இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.
காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.
பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.
பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.
உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.
போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.
ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.



முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்

இது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்.
மதுரையில் பாண்டிய மன்னர்களின் ஆட்சி, அவர்களுக்குப் பின் வந்த அவர்களது வாரிசுகளில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்பட்டு, இறுதியில் பாண்டிய வம்சத்தின் ஆட்சி முடிவுற்று, நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கியது. தமிழ்நாடு, சங்க காலத்தில் 24 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அதில் ஒன்று புலியூர் கோட்டம். பூலியூர்க் கோட்டமே புலியூர்க் கோட்டமாக வழங்கியிருக்க வேண்டும். பாண்டிய அரசர்களால், பாண்டிய நாடு 32 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. அதில் ஒரு பாளையம்தான் நெற்கட்டான் செவ்வல் பாளையமாகும். பாண்டிய மன்னர்களினால் பாளையங்களின் அரசராக புலித்தேவரின் முன்னோர்கள் நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.
பாண்டியரின் மறைவுக்குப் பிறகு, நாயக்கரின் ஆட்சி தொடங்கியதும் நாயக்க அரசர்களுக்கு ஒரு சிறு அச்சம் இருந்தது. பாண்டிய வாரிசுகள் மீண்டும் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றிவிடுவார்களே என்று எண்ணி, தனது ஆட்சிக்குட்பட்ட நிலங்களை 72 பாளையங்களாகப் பிரித்தனர். அதில் ஒரு பாளையமாக நெற்கட்டான் செவ்வல் பகுதி இருந்தது. இது போன்று பாளையங்களைப் பிரிக்க நாயக்க அரசுக்கு அவர்களின் அமைச்சர் அரியநாத முதலியார் ஆலோசனை தெரிவித்திருந்தார்.
நெற்கட்டான் செவ்வல் பாளையத்தினை சீரும் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார் சித்திரபுத்திரத் தேவன் என்பவர். இவர் 63 ஆண்டுகள் இப்பகுதியை ஆண்டு வந்தார். இவரின் மனைவி சிவஞான நாச்சியார். இவர் 01.09.1715 அன்று வீரத் திருமகனை குழந்தையாகப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு தாய் தந்தையர் காத்தப்ப பூலித்தேவன் என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். அக்குழந்தை ஆறு வயதானதும், கல்வி கற்றியிட வேண்டி அவருடைய தந்தையார் சிறந்த ஆசிரியரிடம் பாடம் படிப்பதற்கு அனுப்பினார். காத்தப்ப பூலித்தேவன் கல்வியில் சிறந்து விளங்கி இலக்கணம், இலக்கியங்களை நன்கு படித்து, தமிழில் கவிதை, இலக்கணம் போன்றவற்றை எழுதும் விதத்தில் சிறந்த மாணவராக உருவானார். கல்வி கற்ற பின்னர் போர் பயிற்சி கற்கச் சென்றார். இவர் குதிரை ஏற்றம், யானை அடக்குதல், சுருள் வாள் வீச்சு, சிலம்பம், வேல் கம்பு, ஈட்டி எறிதல் போன்ற அனைத்து போர் பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றார்.
பின் இவருக்கு 11 வயதில் அரசர் பட்டம் சூட்டி மகிழ்ந்தார் இவரது தந்தை. 12 வயதில் அரசரான காத்தப்ப புலித்தேவன், மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளுக்குச் சென்று வேட்டையாடுதலை தனது பொழுது போக்காகவும், புலியை வேட்டையாடுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார். புலியை வேட்டையாடி, அதன் தோலில் உடை செய்து அணிந்து கொள்வார். இவரின் வீரத்தினையும், இவரது குலத்தின் பெருமையையும் எடுத்துரைக்கும் ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்குக் கோபுர பகுதியின் உள்ளே புலி ஒன்று புகுந்து, அங்கு இருந்த மக்களை கொன்றும், ஆடு, மாடுகளை வேட்டையாடியும், மக்கள் வீட்டை விட்டு வெளிவரவும், கிராமத்தை விட்டு வெளிவர அச்சம் கொள்ளும் அளவிலும் புலியின் செயல்பாடுகள் இருந்தது. இதனை அறிந்த அரசர் அந்த புலியைக் கொள்ளும் வீரருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று முரசு அடித்து பறைசாற்றினார். இந்த செய்தியை கேள்வியுற்ற புலித்தேவர், புலியை வேட்டையாடுவதில் இவர் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் அல்லவா, உடனே புறப்பட்டார். புலி இருந்த கிராமத்தினை அடைந்தார்.
புலியை எதிர் கொள்ளும் போது, புலி இவரைக் கண்டு தனது உறுமலையும், வாலை தரையில் அடித்தும் புலிப்பாய்ச்சலுக்குத் தயாரானது. புலி இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது இறக்கும் என்பதை அறிந்த புலித்தேவர் புலியை எதிர்கொண்டு நின்றார். பாய்ந்து வந்த புலியிடம் சற்று விலகி புலியின் பின்னங்கால்கள் இரண்டையும் கையால் பிடித்து இழுத்து, புலியை கிறுகிறுவென்று சுழற்றி புலியை தூக்கி தரையில் அடித்துக் கொன்றார். அரசர் உடனே புலித்தேவருக்கு பட்டம், பொன், மாளிகை என அனைத்தும் கொடுத்து சிறப்பித்தார். வெற்றியுடன் தனது பாளையத்துக்குத் திரும்பினார். புலி இடதுபக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்பதை, நமது சங்ககால புலவர்கள் தனது பல பாடல்களிலும், பல அரசரின் வீரத்தினை புலியுடன் ஒப்பிடுகையிலும் குறிப்பிட்டுள்ளனர். புலி தனது இரையை வேட்டையாடும் போது இரையை, தான் இடது பக்கம் வீழ்த்தினால் தனது வீரத்திற்கு பேரிழுக்கு என்றும், தனது வீரத்தில் இழுக்கு ஏற்பட்டு விட்டது என்று எண்ணி எண்ணி உண்ணாது இறந்துவிடும்.
வெற்றி பெற்று திரும்பிய புலித்தேவருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. தனது மாமன் மகளை மணந்து சிறப்பான இல்லற வாழ்க்கை நடத்தி வந்தார். இவர் ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நடந்த அரசுரிமைப் போரை கவனித்து வந்தார்.


ஹைதராபாத்தை ஆட்சி செய்து வந்த நிஜாம் 1748-ம் ஆண்டு இறந்துவிட்டார். பின் இவரின் மகன் நாசர்ஜங் பதவி ஏற்றார். இதனை நிஜாமின் பேரன் முசபர்ஜங் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப்போன்றே ஆற்காட்டில் அன்வாருதீன் தன்னுடைய மாமாவாகிய சந்தா சாகிப்பை எதிர்த்தார். முசபர் ஜங் மற்றும் சந்தா சாகிப் இருவரும் ஒன்றாக இணைந்து பிரெஞ்சுக்காரர்களின் உதவியை நாடினர், இதனால் போர் ஏற்பட்டது. 1749-ம் ஆண்டு பிரெஞ்சுப்படைகள், சந்தா சாகிப், முசபர்ஜங் ஆகிய மூன்று படைகளும் கூட்டாக ஆற்காடு என்னும் இடத்தில், அன்வாருதீன் படைகள் தோற்கடிக்கப்பட்டு அன்வாருதீன் கொல்லப்பட்டார். சந்தா சாகிப் கர்நாடக நவாபாக ஆட்சி ஏற்றார். பிரெஞ்சுப்படையின் தளபதி டியூப்ளேயின் உதவிக்கு வழுதாவூர், வில்லியனூர் மற்றும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள பாகூர் ஆகிய இடங்களை சந்தாசாகிப் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுத்தார்.
போரில் கொல்லப்பட்ட அன்வாருதீனின் மகன் முகமது அலி கர்நாடகத்தில் இருந்து தப்பி ஓடிச்சென்று திருச்சிராப்பள்ளி கோட்டையில் தஞ்சம் புகுந்தார். அக்கோட்டை சந்தாசாகிப்பால் முற்றுகையிடப்பட்டது. முகமது அலி ஆங்கிலேயரிடம் தம்மைக் காப்பாற்றும் படியும், ஆற்காட்டைத் தாக்கும்படியும் கேட்டுக் கொண்டார். ஆங்கில இராணுவ அதிகாரி இராபர்ட் கிளைவ் ஆற்காட்டைத் தாக்கினார். சந்தாசாகிப் ஆற்காட்டைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஒரு படையை அனுப்பினார். ஆனால் இராபர்ட் கிளைவ் திருச்சி மீது படை எடுத்தான், மேலும் ஒரு படை ஆரணி, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் சென்று பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்து இதன் மூலம் முகமது அலி ஆற்காட்டின் நவாபாக பதவி ஏற்றார். இது இரண்டாம் கர்நாடக போர் என்று அழைக்கப்படுகிறது.
தனக்கு உதவிய ஆங்கிலேயர்களுக்கு கைமாறாக ஆற்காட்டின் நவாப்பான முகமது அலி, தனக்கு கப்பம் கட்டிய அரசர்களிடம் வரி வசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் முதல் முறையாக கொடுத்தான். தமிழ்நாட்டில் தென்னகத்தில் வரிவசூல் செய்ய அனுமதி பெற்ற ஆங்கிலேயர்கள் புலித்தேவரிடம் வரிவசூல் செய்ய ஆரம்பித்தனர். ஆற்காடு நவாப்புக்கு வரி கொடுக்காமல் சுதந்திர அரசராக இருந்த மறத்தமிழர் புலித்தேவர் வந்தேரிய பரங்கியனுக்கா வரி கொடுப்பார். வெள்ளையன் வரி கேட்டதும் அன்னியன் எவனும் வரி என்ற பெயரில் ஒரு நெல் மணியைக் கூட என் மண்ணில் இருந்து கொண்டு செல்ல முடியாது என்று உறுமினார் புலித்தேவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக