வியாழன், 29 மார்ச், 2018

மறைக்கப்பட்ட சரித்திரம்: வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்



மறைக்கப்பட்ட சரித்திரம்: வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன் பட்டிணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளம் நிறைந்த குலசேகரபட்டிணம்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டிணம் ஒரு அழகான கடற்கரை கிராமம், முந்தைய காலத்தில் இவ்வூரை குலசேகரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்ததால், அம்மன்னனின் பெயரால் குலசேகரபட்டணம் என அழைக்கப்படுகிறது.

மன்னர்கள் காலம் தொட்டு குலசை கடற்கரை இயற்கை துறைமுகமாக விளங்குவருகிறது. அருகில் உள்ள இலங்கை மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு இங்கு விளையும் நெல், பயிர் வகைகள், கருப்புகட்டி, தேங்காய், உப்பு போன்ற விளைப்பொருட்கள் மற்றும் குதிரைகள் கூட இறக்குமதி செய்துள்ளனர்.

குலசையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் ரூட்
மேலும் குலசை உடன்குடி பகுதியில் இயற்கை வளம் மிகுந்து இருந்ததாலும் பனைத்தொழில் சிறந்து விளங்கியதாலும் குலசையில் பதனீரில் இருந்து சீனி தயாரிக்கும் ஆலையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர்.

இதற்கு கே.பி.எம் ஆலை எனவும், குலசை துறைமுகத்திற்கு கே.பி.எம் போர்ட் எனவும் பெயர் வைத்திருந்தனர்.

இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்திற்காக குலசேகரன் பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு இரயில் இயக்கப்பட்டுள்ளது.
 திசையன்விளையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்குன் குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை வழியாக குலசேகரன்பட்டணம் சென்ரல் ஸ்டேசன், கே.பி.எம் போர்ட், கே.பி.எம் பாக்டரி, ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு காலை 9 மணிக்கு சென்றுள்ளது.
சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது.

இதற்கு கட்டணமாக அப்போது 13 அணாவும், 8 பைசாவும் வசூலித்துள்ளனர்.
தினசரி மூன்று முறை இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது.

இது போன்று திசையன்விளையில் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தைக்கு குலசை கே.பி.எம் பேக்டரியில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் குலசேகரன்பட்டிணம் சென்ட்ரல் ஸ்டேசனில் இருந்து கொட்டாங்காடு வழியாக உடன்குடிக்கு மூன்று முறையும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விளைந்த பொருட்களை குலசேகரன்பட்டணம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது மட்டுமில்லாமல் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளனர்.
ரயில்தடம் இருக்கிறது
கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடக்கிறது.

இன்னும் குலசையில் துறைமுகத்தில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் உள்ள பண்டகசாலை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது இப்பகுதி மக்கள் கடுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இதனால் குலசை உப்பளத்தில் வைத்து ஆங்கிலே அதிகாரி லோன்துரை கொல்லப்பட்டார். அவரது கல்லறையும் குலசையில்தான் உள்ளது.

இதனால் சீனி ஆலை மற்றும் ரயில் சேவையும் ஆங்கிலேயர்கள் நிறுத்திவிட்டனர். பின்னர் வந்த இந்திய அரசும் சீனி ஆலையும், ரயில் சேவையும் தொடர்ந்து நடத்தாமல் விட்டுவிட்டனர். தற்போது சீனி ஆலை இருந்த இடம் மட்டுமே உள்ளது. ஆனால் ரயில் ஓடிய ரயில்வே தடங்களை ஆக்கிரமித்துவிட்டனர். இது குறித்து பல முறை இப்பகுதி மக்கள் ரயில்வே துறையிடம் மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வரலாற்று உண்மை மறைக்கப்பட்டுள்ளது;
இது முற்றிலும் ஒரு வரலாறு உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிக சிறப்பாக தொழில் நடந்துள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கவேண்டிய குலசேகரன்பட்டணம் அப்போது இருந்த அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தன்னுடைய பெருமைகளை இழந்து காணப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் தியாகிகள் நிறைந்து காணப்படும் இப்பகுதிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி மீண்டும் சீனி ஆலையை துவங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். இது போன்று திசையன்விளை-திருச்செந்தூர் ரயில் சேவையும், உடன்குடி - குலசேகரன்பட்டணம் ரயில் சேவையும் தொடர்ந்து இயக்கி இருந்தால் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வளர்ச்சி அடைந்திருக்கும்.

ஆனால் மிகப்பெரிய வரலாற்றை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். இனியாவது மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம், உடன்குடி, கொட்டங்காடு, பிச்சிவிளை, தட்டார்மடம், இடைச்சிவிளை, திசையன்விளை, நாங்குநேரி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை ரயில் இயக்க நடவடிக்கை எடுத்தால் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு ஓரளவு  பயன் உள்ளதாக இருக்கும்.

மேலும் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதால் சீனி ஆலையை மீண்டும துவங்கினால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். எனவே தற்போதுள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு தங்களின் கோரிக்கைை முன்வைக்கிறார்கள். நன்றி: #மீடியா கான்டக்ட்.


குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே(Kulasekarapatnam Light Railway (KLR)

 எங்க ஊரு நல்ல ஊரு


குலசேகரன்பட்டிணம்..எங்க ஊரு ஒரு ஜீவ பூமி. இன்று மற்ற வளர்ச்சி பெற்ற ஊர்களுக்கு மத்தியில் ஒரு பாவ பூமியாக காட்சியளிக்கிறது. எந்தவிதமான முன்னேற்றமும் காணப்படவில்லை. 1952லிருந்து எத்தனையோ காங்கிரஸ்,திமுக,அதிமுக mla,MP க்கள் எங்கள் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படும் போதெல்லாம் அதைச் செய்கிறேன்,இதைச் செய்கிறேன் என்று பொய்யான வாக்குறுதிகளை அள்ளி விட்டது தான் மிச்சம். இது வரை ஒரு துரும்பை கூட எடுத்துப் போட்டதில்லை. எங்க ஊரின் சாபக் கேடு இது. அனல் மின் நிலையம் வருகிறது வருகிறது என கடந்த 10 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “வரும் ஆனா வராது” என்பது போலத் தானிருக்கிறது. ஒரு காலத்தில் துறைமுகம் என்ன, சீனி ஆலை என்ன, ரயில்வே என கொடிகட்டி பறந்த ஒரு நகரம் இன்று பொழிவிழந்து,களையிழந்து மௌனமாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருப்பது தான் மிச்சம். எங்க ஊர் கடல் நீர் கொஞ்சம் கரிப்பு ஜாஸ்தி. எங்களின் கண்ணீரும் அதனுடம் கலந்து விட்டதால் இருக்குமோ?
இந்நிலையில் ராக்கெட் ஏவு தளம் வரப் போவதாக ஒரு இனிப்பான செய்தி நாளிதழ்களில் .. இத்திட்டத்தையும் ஆந்திரா பக்கம் கொண்டு செல்ல அங்குள்ளவர்கள் கச்சை கட்டி நிற்கிறார்கள். எங்க தொகுதி mla,Mp எந்தவொரு முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. ஏற்கனவே பாரி கம்பெனிக் காரன் போட்ட ரயில் ரூட்டையாவது திரும்ப கொண்டு வர எத்தனையோ முயற்சிகள் பல பத்திரிகைகள் வாயிலாக,மனுக்கள் மூலமாக தனிப்பட்ட முறையில் செய்து வருகிறேன். நடக்கிறதா பார்ப்போம்.இனி இன்றைய தலைமுறையினரான இளசுகள் தான் போராட வேண்டும்.
இன்றுஅந்த ரயில் தடங்கள் இருந்த இடம் கூட மறைந்து ஊர் மக்கள் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எனது இளமை பருவத்தில்(1955 களில்) எங்க வீட்டுக்கு அருகிலேயே ரயில் தடங்கள் இருந்ததற்கான சுவடுகள், எரிந்த நிலக்கரி துண்டுகள் ரயில் பாதையின் இரு புறமும் கொட்டி கிடந்ததை பார்த்திருக்கிறேன். வீட்டுக்கு வெகு அருகாமையில் கூட ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம் ஒன்று சிதிலமடைந்து காணப்பட்டது. அதன் புகைப் படம் இங்கு இணைத்திருக்கிறேன். ஹூம் அது ஒரு பொற்காலம்.
சிதிலமடைந்த ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம்
சரி,சரி வாங்க எங்க ஊரு ரயில்வே பற்றி சில சுவார்சியமான தகவல்களத் தெரிந்து கொள்வோம்.
குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே(Kulasekarapatnam Light Railway (KLR) 

குலசை ரயில்வே ஸ்டேஷன்””
சென்னையை தலைமையிடமாக கொண்ட “கிழக்கு இந்திய காய்ச்சி வடிக்கும் தொழிற்சாலை மற்றும்  பாரி அன் கோ “East India Distilleries and Sugar Factories Limited of Madras” எனும் ஆங்கிலேயே நிறுவனம் குலசேகரன்பட்டினத்தில் சர்க்கரை ஆலையை துவங்கியது. இந்த ஆலைக்கு சரக்கு போக்குவரத்துக்காகவும் ஆலைக்கு வேலையாட்கள் வந்து செல்வதற்கு எனவும் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டது. இதன் அடிப்படையில் திருச்செந்தூரிலிருந்து குலசேகரன்பட்டினம் வழியாக திசையன்விளைக்கும், குலசேகரன்பட்டிணத்திலிருந்து உடன்குடிக்கு தனி ரயில்பாதை என மொத்தம் 46.671 கி.மீ அதாவது 28 மைல் தூரத்திற்கு ரயில் பாதை அமைத்தனர். இந்த ரயில்பாதை இரண்டு அடி அகலம் கொண்ட அகலமற்ற ரயில் பாதையாக அமைத்து குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில் என்ற பெயரில் அமைத்தனர். இந்த ரயில் பாதை முழுக்க முழுக்க இந்த நிறுவனத்தின் சொந்த உபயோகத்துக்காகவே நிறுவனத்தின் செலவிலேயே அமைக்ப்பட்டது. இந்த பகுதியில் பணி புரிந்து வந்த ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் வற்புறுத்திலின் பேரில் பொது மக்களின் போக்குவரத்துக்காகவும் இந்த ரயில் பாதை திறந்து விடப்பட்டு ரயில்கள் இயக்கப்ட்டது. இந்த பாதையில் ரயில்கள் 1914 முதல் 1940 வரை இயக்கப்ட்டதாக ரயில்வே வாரிய ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில் திசையன்விளை, இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்கன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை, குலசேகரன்பட்டினம சென்ட்ரல் நிலையம், குலசேகரன்பட்டினம் கே.பி.என் துறைமுகம், குலசேகரன்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை, ஆலந்தலை திருச்செந்தூர், உடன்குடி போன்ற இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்ட்டிருந்தன. இது தவிர இந்த ரயிலின் பிரிவு ரயில் பாதையாக குலசேகரன்பட்டினம சென்ட்ரல் நிலையத்திலிருந்து காட்டான்காடு, வழியாக உடன்குடிக்கும் குறைந்த தூரத்துக்கு ரயில்பாதையும் அமைக்கப்பட்டது. திசையன்விளையில் இருந்து திருச்செந்தூர் மற்றும் உடன்குடி – கே.பி.என் சந்தைக்கு ஆங்கிலேயர்காலத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
ரயில்வே கால அட்டவணை
இந்த வழி தடத்தில் இயங்கப்ட்ட ரயில்கள் அனைத்தும் நிலக்கரியில் மூலமாக இயக்கப்ட்டு இந்த ரயில்களில் பொருத்தப்பட்ட இஞ்சின்கள் 30முதல் 40 குதிரைதிறன் கொண்டது.
இந்த பாதையில் திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இரண்டு ரயில்களும் மறுமார்க்கம் திருச்செந்தூரிலிருந்து திசையன்விளைக்கு மூன்று ரயில்களும் இயக்கப்பட்டன. இது தவிர  திசையன்விளை வாரச் சந்தை நாளான வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உடன்குடிக்கு இருமார்க்க்ங்களிலும் தினசரி நான்கு சேவைகள் ரயில்கள் இயக்கப்பட்டன. திசையன்விளைக்கும் திருச்செந்தூருக்கும் இடையிலான பயணக்கட்டணம் 13 அனாவாக பயணக்கட்டணம் இருந்தது.
திசையன்விளையிலிருந்து திருச்செந்தூருக்கு இந்த ரயிலில் பயண நேரம் மூன்று மணி நேரம் ஆகும். இது போன்ற இரண்டு அடி அகலமற்ற ரயில்பாதை தற்போது டார்ஜிலிங் பகுதியில் ரயில்கள் இன்னமும் இயங்கிகொண்டிருக்கிறது. இந்த காலகட்டங்களில் திருநெல்வேலியிருந்து திருச்செந்தூருக்கு மீட்டர் கேஜ் வழிதடத்தில் தென் இந்திய ரயில்வே நிறுவம் ரயில்களை இயக்கி வந்தது. இந்த வழிதடம் தான் தற்போது அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்ட்டு வருகிறது. இதில் திருச்செந்தூர் ரயில் நிலையம் தென் இந்திய ரயில்வே நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருந்து வந்தது. பின்னர் தென் இந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டு இந்திய ரயில்வேதுறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
ரயில் ரூட்டை குறிக்கும் படம்
குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வேயில் 1935-36-ம் ஆண்டில் புள்ளியியல் தகவல்கள்
ரயில் இஞ்சின்கள் : 4
ரயில் மோட்டார் கார் : 6
பயணிகள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகள் : 24
மூன்றாவது வகுப்பு பயணிகள் மொத்த இருக்கைகள் : 746
சரக்கு ரயில் பெட்டிகள் : 45
சோதனை செய்யும் ரயில் பெட்டிகள் : 2
இரண்டாம் உலகப் போரை தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாகவும் குலசேகரன்பட்டினத்தில் நடைபெற்ற பல்வேறு வேண்டதகாத சம்பங்கள் காரணமாகவும் குலசேகரன்பட்டினம் கே.பி.என் தொழிற்சாலை அதன் உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலையை மூடியது. இதனால் இதை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இந்த ரயில் வழி தடத்துக்கு உரிமையாளரான பாரி அன் கோ’ எனும் நிறுவனம் இந்த ரயில் வழி திட்டத்தை படிபடியாக நிறுத்துவது என முடிவெடுத்தது. இரண்டாவது உலகபோருக்குமுன்பு இந்த நிறுவன அதிகாரிகள் இந்த ரயிலை நிறுத்த முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆங்கிலேய அரசு நிர்வாகம் இந்த ரயில் வழிதடத்தையும் ரயில் சேவையையும் இணைத்து வாங்க முயற்சி மேற்கொண்டது. இந்த திட்டத்துக்கு வங்கிகளும் கடன் கொடுத்து உதவுவதாக வாக்குறுதி அளித்தன. ஆனால் ஏனோ காரணத்தால் இந்த திட்டம் கைவிடப்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இவ்வாறு தொழிற்சாலை மூடிய காரணத்தாலும் இந்த ரயில்வே திட்டதை பொறுப்பேற்று தொடர்நது நடத்த யாரும் வராத காரணத்தாலும் இந்த பகுதியில் இயக்கப்ட்ட ரயில் சேவை முற்றிலும் முடங்கிபோனது. தற்போது இந்த பகுதியில் ரயில்கள் இயக்கப்ட்டதற்கான எந்த ஒரு அறிகுறியும் இன்றி காணப்படுகிறது. இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே நிறுவனம் துவங்கப்பட்ட போது ரயில்வே வாரியமும் இந்த நிறுவனமும் சேர்ந்து போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய அரசு  ஜனவரி 5 1972 தேதி இந்த ரயில்வே திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யப்பட்டு  பயனற்றது என்று கைவிடப்பட்டது. இதன் பிறகு தற்போது இந்த ரயில்கள் இயக்கப்ட்ட வழி தடத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் படிபடியாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இந்த பகுதியில் எந்த சுவடும் இல்லாமல் அனைத்தும் அழிந்துவிட்டது.  தென் இந்திய ரயில்வே நிறுவனம் 1944-ம் ஆண்டு அரசுடமையாக்கப்ட்டது போல் இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே நிறுவனமும் அரசுடமையாக்கப்டிட்டிருந்தால் இந்த பகுதியும் மற்ற இடங்களில் ரயில்கள் தற்போது இயங்கி வருவது போன்று ரயில் அகல ரயில்பாதையில் ரயில்கள் இயங்கிகொண்டிருக்கும். இந்த குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில் தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டதால் இந்திய ரயில்வேதுறை இந்த ரயில் வழித்தடத்தை அரசுடையாக்காமல் விட்டு விட்டது. இது மட்டும் இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய வறட்சி நிறைந்த இந்த பகுதி நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தற்போது இந்த பகுதியில் ரயில் வழித்தடம் பற்றிய நிலை:-
கன்னியாகுமரியிலருந்து தொடங்கி கூடங்குளம், திசையன்விளை திருச்செந்தூர், தூத்துக்குடி, காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை,  ராமநாதபுரம் வழியாக காரைகுடி வரை புதிய ரயில்வே இருப்புபாதை தடம் அமைக்க 2008-09 ரயில் நிதிநிலை அறிக்கையில் தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வு செய்ய அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை புதிய ரயில் இருப்புபாதை அமைக்க தொடக்கநிலை பொறியியல் மற்றும் போக்குவரத்து ஆய்வுபணி முடிவடைந்து திட்ட மதிப்பீடை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே சமர்பித்துவிட்டது. இந்த ஆய்வுப்பணியில் 462.47 கி.மீ தூரம் ரயில்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்கான திட்ட மதிப்பீடு 1965 கோடிகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப்பணி இரண்டு பிரிவுகளாக நடந்தது. காரைக்குடி – ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம் – கன்னியாகுமரி என ஆய்வு செய்து முடிக்கப்பட்டது. இந்த வழி தடத்தில் புதிய ரயில்பாதை அமைக்க எந்த இடங்களில் எத்தனை ரயில்நிலையங்கள் அமைக்கப்படும், எந்த ஊர்கள் எல்லாம் ரயில் மூலமாக இணைக்கப்படும், எவ்வளவு மேம்பாலங்கள் கட்ட வேண்டும், எத்தனை பாலங்கள் அமைக்க வேண்டும் என அனைத்து விதமான கட்டுமான செலவீனங்கள் பற்றி அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வேயின் கட்டுமான பிரிவு சார்பாக சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த தடத்தில் காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை மொத்தம் 462.47 கி.மீ தூரத்தில் 34 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனென்றால் இந்த திட்டம் சுமார் 2000 கோடிகள் கொண்ட பெரிய திட்டமாக இருப்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ரயில்வே வாரியம் தயக்கம் காட்டுகிறது. பொதுவாக ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழு ஒரு புதிய ரயில்வே இருப்புபாதை திட்டத்தை பல கோடிகள் முதலீடு செய்து செயல்படுத்தும் முன்பு அந்த திட்டம் பொருளாதார அளவில் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் திருப்பி கிடைக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டத்தை அறிவிப்பார்கள். குறைவாக வருமானம் வரும் திட்டங்களை ஆய்வு கைவிட்டு விடுவார்கள். இந்த ரயில்வே திட்டம் முக்கிய துறைமுகம், புதிய மின்திட்டங்கள், சுற்றுலா, ஆன்மீக சுற்றுலா, இந்த பகுதியில் உள்ள தொழில்சாலைகள், சரக்கு போக்குவரத்து என பல்வேறு வழிகளில் வரும் பொருளாதார வருமானங்களை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்த தென்பகுதி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ரயில்வே வாரியம் மற்றும் திட்டகுழுவிடம் நேரடியாக சென்று திட்டத்தை விளக்கி அமுல்ப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த வழி தடத்தில் சுற்றுலா மற்றும் பல்வேறு ஆன்மீக தலங்கள் உள்ளன. இந்த தடம் அமைக்கப்படும் பட்சத்தில் தூத்துகுடி துறைமுகத்துக்கு சரக்கு போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக அமையும். இந்த வழி தடத்தில் கூடங்குளம், உடன்குடி போன்ற பகுதிகளில் பல கோடி முதலீட்டுடன் கூடிய புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத் நிறைவேற்றபட்டால் கடலோர மாவட்டங்கள் அதிகமாக பயண்பெறும். இந்த திட்டம் வரண்ட மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகவும் வரபிரசாதமாக அமையும்.
இந்த திட்டத்தில் தமிழக அரசின் பங்கு:-
கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து இது மட்டும் இல்லாமல் திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்து பல்வேறு புதிய ரயில் வழிதடங்களை ஒப்புதல் பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ரயில் பட்ஜெட்டில் கூட கேரள மாநிலம் தங்கள் மாநிலத்தில் சபரிமலை ரயில் திட்டத்துக்கு இது போன்று ரயில்வே துறைக்கு உதவ தயார் என்று அறிவித்துள்ளது. இதை போன்று தமிழக அரசும் 2000 கோடியில் அமைய உள்ள இந்த கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்துக்கு ஐம்பது சதவிகித நிதியை அளித்து இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் இலவசமாக ரயில்வே துறைக்கு கொடுத்தால் இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளில் நிலைவு பெற்று பயன்பாட்டுக்கு வந்து விடும் என்பதில் ஐயம் இல்லை. இவ்வாறு தமிழக அரசு செய்ய வேண்டும் என்று தென்தமிழக பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். இந்த புதிய கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டம் அமைக்கும் போது குலசேகரபட்டிணம் பளுவற்ற ரயில்வே பாதை அமைக்கப்ட்ட வழி தடத்தில் இந்த புதிய ரயில்பாதையை அமைத்து அனைத்து கிராமங்கள் பயன்படும் படியாக அந்த கிராமங்கள் புதிய ரயில்நிலையங்கள் அமைத்து ரயில்கள் இயக்கினால் இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கும்.  இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற தென்தமிழக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என தென் தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 நன்றி:தி ஹிந்து
P.Edward Jeni
Secretary 
Kanyakumari District Railway User’s Association (KKDRUA)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக