செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்! என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது!

உலகம் முழுவதும் மக்கள் பார்க்க தடை செய்யப்பட்ட 13 மர்மமான இடங்கள்! என்ன ஆனாலும் பார்க்கவே முடியாது!



அதிகரித்துவரும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருந்த போதும், பூமியின் சில பகுதிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல், மனிதர்களே இல்லாமல் மர்மமாக இருக்கின்றன. கண்டுபிடிக்கப்பட்ட சில பகுதிகள் மனிதர்கள் பார்க்கக் கூடாதென  மூடப்பட்டுள்ளன. இந்த இடங்களை பார்க்க பல நாட்டினரும் விரும்புவதுண்டு. இந்த இடங்களைப் பற்றி நாம் மிக மிக குறைவாகவே அறிந்திருக்கிறார்கள். பலருக்கு இது பற்றிய விவரம் எதுவுமே தெரியாது. அப்படிப்பட்ட, 13 தடைசெய்யப்பட்ட இடங்களைப் பற்றி சொல்வது தான் இது.

Lascaux Caves, France






லாஸ்காக்ஸ் குகை (Lascaux Caves) என்பது உலகெங்கிலும் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கான புதையலாகும். குகை வளாகத்தில் 17,300 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் உள்ளன. பழைய கற்கால (பேலியோலித்திக் – Paleolithic) ஓவியங்களான இவற்றில் கால்நடைகள், மான்கள், காட்டு எருமை மற்றும் பல வரையப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக, குகை 1963 -ம் ஆண்டு முதல் பொது மக்களுக்கு மூடப்பட்டுள்ளது. மனிதர்கள் அங்கு சென்றால் பண்டைய கலைப் படைப்புகளான இந்த ஓவியங்களை அழிக்கக்கூடும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதனால் இந்த தடை!

வடக்கு சென்டினல் தீவு, இந்தியா (North Sentinel Island, India)




சென்டினல் பழங்குடியினரின் தீவு இது. வடக்கு சென்டினல் தீவு அந்தமான் பகுதியில் உள்ள ஒரு சிறிய தீவு ஆகும். தீவில் வசிக்கும் பழங்குடி மக்கள் உலகில் உள்ள வேறு யாருடனும் தொடர்பு வைத்துக்கொள்வது இல்லை.
இம்மக்கள் தனி ஒரு கூட்டமாக இருக்கவே விரும்புகின்றனர். வெளி மனிதர்களை அந்த பகுதியில் கண்டால், தங்களை பாதுகாத்துக்கொள்ள  வேண்டி தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். சென்டினிலீஸ் பழங்குடியினர் 50,000 ஆண்டுகளுக்கும் மேலாக தீவில் வசித்து வருகின்றனர். அந்த தீவு பகுதியில் 500 மீட்டருக்கு அருகே கப்பல், படகு என எதை கண்டாலும் தாக்குவார்கள். இதனால் இந்த தீவுக்கு செல்வதே முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி சென்ற ஆண்டு சென்ற கிறிஸ்தவ மத போதகர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீவில் அதிகபட்சம் 400 பேர் இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. 2004 ம் ஆண்டு சுனாமி தாக்கிய போது, இந்த தீவின் நிலை அறிய அந்த பகுதியில் பறந்த இந்திய ஹெலிகாப்டரை சென்டினல் பழங்குடியினர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.

சுர்ட்சி தீவு, ஐஸ்லாந்து (Surtsey Island, Iceland)




சுர்ட்சி என்பது ஐஸ்லாந்தின் தெற்கு கடற்கரையில் இருக்கும் ஒரு தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இது 4 ஆண்டுகள் நீடித்த எரிமலை வெடிப்பின் விளைவாக உருவானது. பூமியின் புதிய தீவு என்ற நற்பெயரும் இந்த சுர்ட்சி தீவுக்கு உண்டு. இது எரிமலை வெடிப்பில் உருவானது. இந்த தீவு 1963 நவம்பர் 14 அன்று கடலுக்கு வெளியே தோன்றியது. எரிமலை வெடிப்பு 5 ஜூன் 1967 வரை நீடித்தது. அப்போது அதிகபட்ச அளவு 2.7 கி.மீ. (1.0 சதுர மைல்). பிறகு, அலை அரிப்பு காரணமாக தீவின் அளவு சீராகக் குறைந்துவிட்டது. 2012 நிலவரப்படி , அதன் பரப்பளவு 1.3 கிமீ (0.50 சதுர மைல்) ஆகும். மிகச் சமீபத்திய கணக்கெடுப்பு (2007) தீவின் அதிகபட்ச உயரம் கடல் மட்டத்திலிருந்து 155 மீ (509 அடி) என குறிப்பிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தீவு தோன்றிய நாளில் இங்கு உயிரியலாளர்கள் சென்று ஆராய்ச்சி நடத்துகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இது தொடர்கிறது. இதன் மூலம் உயிரினம், விலங்கினம், தாவர இனம் எப்படி இந்த தீவில் எப்படி தோன்றுகிறது என ஆராயப்பட்டு வருகிறது. தற்போது, இது ஒரு சில விஞ்ஞானிகளுக்கும் புவியியலாளர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது இந்த தீவு. மனிதர்களின் தலையீடு தீவில் நடைபெற்று வரும் சுற்றுச்சூழலை சீர்குலைக்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் தடை செய்யப்பட்டுள்ளது.

ஐஸ் கிராண்ட் ஆலயம், ஜப்பான் (Ise Grand Shrine, Japan)





ஜப்பான் அதன் வழிபாட்டு கலாச்சாரத்திற்காக உலகளவில் பிரபலமானது. இங்கு சுமார் 80,000 ஆலயங்கள் உள்ளன. எல்லாவற்றிலும் மிக முக்கியமானது ஐஸ் கிராண்ட் ஆலயம். ஜப்பானில் அதன் கட்டடக்கலை ஆடம்பரத்தால் இது மிகவும் போற்றப்படும் கோயில்களில் ஒன்றாகும். 8 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஷின்டோ மரபுகளை பராமரிப்பதற்காக, இந்த கோயில் ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை புனரமைக்கப்படுகிறது. அதற்கே ஒரு மில்லியன் டாலர் அளவுக்கு செலவிடப்படுகிறது. நீங்கள் அரச குடும்பத்தில் உறுப்பினராக இல்லாவிட்டால், இந்த பண்டைய ஜப்பானிய புனித வழிபாட்டு இடத்துக்குள் நுழைய உங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

North Brother Island, USA






அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள நார்த் பிரதர் தீவு அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கைவிடப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும். மேரி மல்லன் என்ற பெண் டைபாய்டு காய்ச்சலுக்கு உள்ளான முதல் அமெரிக்கராக அடையாளம் காணப்பட்டார். பின்னர் அவரை தனிமைப்படுத்தி, இங்கு ஒரு மருத்துவமனை கட்டி அங்கேயே தங்க வைத்திருந்தனர். அந்த பெண் டைபாய்டு மேரி என அழைக்கப்பட்டார். பின்னர், இந்த இடம் போதைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையமாக மாறியது. இப்போது, வடக்கு சகோதரர் தீவில் ஒரு பறவைகள் சரணாலயம் உள்ளது மற்றும் பொது மக்களுக்காக நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

Dulce Base, USA






நியூ மெக்ஸிகோவில் கொலராடோ எல்லைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் டல்ஸ் பேஸ். 2,600 பூர்வீக அமெரிக்கர்களைக் கொண்ட இந்த நகரம் நம்பமுடியாத பலவகை சோதனைகள் நடைபெறுகிறது. அனைத்தும் நிலத்தடி சோதனைகள் (Underground Experiements). டல்ஸ் பேஸ் அடியில் ஒரு மிகப்பெரிய நிலத்தடி சோதனைக் களம் உள்ளது என்று கூறப்படுகிறது, இங்கு நம்பமுடியாத மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் மனித – விலங்கு கலப்பு உயிரினங்கள் உள்ளன எனவும் கூறப்படுகிறது. இந்த தளம் மிகவும் இறுக்கமான பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தடைசெய்யப்பட்ட சிறந்த இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

Heard Island, Australia






பூமியில் மிகவும் ஆராயப்படாத இடங்களில் ஒன்றான ஹியர்ட் தீவு அண்டார்டிகாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் அமைந்துள்ளது. அரசியல் ரீதியாக, இந்த தீவு ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியாகும். ஹார்ட் தீவில் இரண்டு எரிமலைகள் உள்ளன. இந்த எரிமலைகள் இன்றும் எரிமலைக் குழம்பை கக்கி வருகின்றன. இந்த தீவு முற்றிலும் தரிசாக உள்ளது. முழு தீவும் எரிமலை வெடிப்பின் விளைவாக வெளிவந்த தூசிகள், கற்கள், பாறைகள் மற்றும் சுண்ணாம்புக் கற்களால் ஆனது. இயற்கை சூழலைப் பாதுகாப்பதற்காக, ஆஸ்திரேலிய அரசு தீவுக்குள் நுழைவதை தடை செய்தது.

விதை சேமிப்பு கிடங்கு, (Svalbard Global Seed Vault, Norway)






Svalbard Global Seed Vault அல்லது Doomsday Vault என்பது ஆர்க்டிக் ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள ஒரு விதை வங்கியாகும். இது ஒரு பாதுகாப்பான பெட்டகமாகும். இங்கு பல்வேறு வகையான தாவர விதைகள் பாதுகாக்கப்படுகிறது. ஏதேனும் பேரழிவு அல்லது உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டால் விதைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டது. உலகின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும், விதைகள் டூம்ஸ்டே வால்ட்டுக்கு நீண்ட கால சேமிப்பிற்காக அனுப்பப்படுகின்றன. பெட்டகம் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே திறந்திருக்கும்.

Snake Island, Brazil






பெயர் குறிப்பிடுவது போல, இது பிரேசிலில் ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகளால் சூழப்பட்ட ஒரு தீவு. எந்த மனிதனும் பாம்பு தீவில் மிதிக்கத் துணியவில்லை. அது பிரேசிலில் மிகவும் தடைசெய்யப்பட்ட இடமாகக் கூட கருதப்படுகிறது. உண்மையில், இது மிகவும் ஆபத்தானது. தீவுக்கு வருவதை அரசாங்கம் சட்டவிரோதமாக்கியுள்ளது. தீவில் சுமார் 4,000 தங்க லான்ஸ்ஹெட்ஸ் பாம்புகள் (Golden Lancehead Snakes) இருப்பதாக தகவல் உள்ளது. இவை பூமியின் மிக கொடிய பாம்புகள்.

Area 51, USA






தெற்கு நெவாடாவில் உள்ள Area 51 எப்போதும் ரகசியங்களால் மூடப்பட்டிருக்கும். இது ஒரு அமெரிக்க இராணுவத் தளம், ஆயுதங்கள் மற்றும் விமானங்களுக்கான சோதனை தளம் என்ற நற்பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் அதைப் பற்றி பெரும் ஊகங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் பலரும் இந்த பகுதியில், அதிகாரிகள் வேற்று கிரக வாசிகள் இருக்கும் ஆதாரங்களை பூமிக்கடியில் மறைக்கிறார்கள் என்று நம்புகிறார்கள். இது சாமானியர்களுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டது. அமெரிக்கா கூட Area 51 இருப்பதை ஒப்புக் கொள்ளவில்லை.  இதைப் பற்றி மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள கட்டுரையை படியுங்கள். 
3 லட்சம் அமெரிக்கர்கள் நுழைய விருப்பப்படும் ஏரியா 51 ல் அப்படி என்னதான் இருக்கிறது?

கின் ஷி ஹுவாங்கின் கல்லறை (Tomb of Qin Shi Huang, China)






சீனாவின் முதல் பேரரசர் கின் ஷி ஹுவாங்கின் கல்லறை 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பிரமிட்டின் அடியில் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளது. இது தொல்பொருளாய்வின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். ஆனால் வரலாற்றாசிரியர்களுக்கும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் இது

ஒரு மர்மமாகவே உள்ளது. கல்லறையின் உள்பகுதிகள் இன்னும் ஆராயப்படாதவை. இதே வளாகத்தில் கின் ஷி ஹுவாங்கிற்கு, மரணத்திற்கு பிந்தைய வாழ்க்கையில் தேவைப்படும் பல்வேறு விஷயங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. பண்டைய இடத்திற்கு மரியாதை செய்யும் பொருட்டு, கின் ஷி ஹுவாங்கின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்வதற்கு சீன அரசு தடை விதித்துள்ளது.

Pravcicka Brana, Czech Republic






செக் குடியரசின் மிக அற்புதமான அடையாளங்களில் ஒன்றான பிராவ்சிகா பிரானா ஐரோப்பாவின் மிகப்பெரிய மணற்கல் வளைவாகும். 1982 வரை, இந்த அருமையான இடம் பல பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. பின்னர், அரிப்பைக் குறைப்பதற்காக, மக்கள் இந்த மணல் வளைவைப் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிராவ்சிகா பிரானாவின் இந்த இயற்கை மணற்கல் வளைவு விரைவில் இடிந்து விழும் என்று புவியியலாளர்கள் கருதுகின்றனர்.

Niihau Island, USA






வெறும் 160 பேர் மட்டும் வசிக்கும் நிஹாவ் தீவு பொது மக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை நீங்கள் பார்வையிட வேண்டுமானால் அமெரிக்க கடற்படையில் வேலை பார்க்க வேண்டும் அல்லது தீவில் ஒரு உறவினரைக் கொண்டிருக்க வேண்டும். நிஹாவ் தீவில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக, வெளி நபர்கள் நுழைவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது. இது ஆச்சரியப்படுவதற்கில்லை. இதைப் போல் இன்னும் பல தடை செய்யப்பட்ட இடங்கள் உலகில் உள்ளன.
Thanks Neotamil.
தொகுப்பு -
 புவனாமகேந்திரன்.
 மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக