வெள்ளி, 10 ஏப்ரல், 2020

அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம்


அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம்

சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம்


சென்னையில் உள்ள மிக, மிக பழமையான அம்மன் கோவில்களில் அருள்மிகு பாதாள பொன்னியம்மன் ஆலயம் மிகுந்த மகத்துவம் கொண்டது. புரசைவாக்கத்தில் இந்த சக்தி தலம் இருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் பொன்னியம்மன் அவதரித்து இருந்தாள்.

முனிவர்களும், ரிஷிகளும் அவளை வழிபட்டு வந்தனர். கால வெள்ளத்தில் அவள் இருந்த இடம் மறைந்து போனது. என்றாலும் பூமிக்கு அடியில் புதையுண்ட நிலையிலும் தன்னை வழிபட்டவர்களின் குடும்பத்துக்கு பொன்னியம்மன் அருள் புரிந்து வந்தாள். ஒரு காலக் கட்டத்துக்குப் பிறகு பொன்னியம்மன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடிவு செய்தார். அதற்கான காலமும் வந்தது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு புரசைவாக்கம் பகுதியின் பெருமளவு இடங்கள் சென்னப்ப நாயக்கர் வசம் இருந்தது. இந்த இடத்தில் ஏராளமான நீர் நிலைகளும், தென்னை தோப்புகளும், மாந்தோப்புகளும் நிறைந்து இருந்தன. அதாவது மிகவும் செல்வ செழிப்பான பகுதியாக புரசைவாக்கம் இருந்தது. சென்னையில் மெல்ல மெல்ல தங்கள் ஆட்சி அதிகாரத்தை பரவ செய்து வந்த ஆங்கிலேயர்கள் சென்னப்ப நாயக்கரிடம் புரசைவாக்கம் பகுதியை குத்தகைக்கு வாங்கி பயன்படுத்தினார்கள். நிறைய காய்கறி தோட்டங்களையும், பழத் தோட்டங்களையும் ஏற்படுத்தினார்கள். இந்த தோட்டங்களுக்கு நிறைய தண்ணீர் தேவைப்பட்டது.

அப்போது புரசைவாக்கத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறைய தண்ணீர் வளம் இருப்பது தெரிய வந்தது. எனவே அங்கு கிணறு தோண்ட முடிவு செய்தனர். உடனே அங்கு கிணறு தோண்டப்பட்டது. அதாவது இப்போது பாதாள பொன்னியம்மனின் கருவறை பகுதிதான் அது. வழக்கமாக அந்த பகுதியில் 6 அடி தோண்டினாலே தண்ணீர் கொப்பளித்தப்படி வந்துவிடும். ஆனால் 30 அடிதோண்டியும் தண்ணீர் வரவில்லை.

என்றாலும் பள்ளம் தோண்டியவர்கள் மனம் தளராமல் மேலும் பள்ளம் தோண்டினார்கள். திடீரென அவர்களது மண்வெட்டியில் பெரிய பாறை ஒன்று தட்டப்படும் சத்தம் கேட்டது. அந்த கல்லை எடுத்து புரட்டினார்கள். மறுவினாடி அந்த பள்ளத்தில் இருந்து தண்ணீர் வெள்ளமாக பீறிட்டு வந்தது. அந்த கல்லை பள்ளத்தில் இருந்து மேலே கொண்டு வந்து பார்த்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. அது அம்மன் சிலை. அந்த அம்மன் சிலைக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. நைவேத்தியமும் செய்து வழிபடப்பட்டது.

அப்போது ஒரு பெண்மணிமீது அருள்வாக்கு வந்தது: ‘‘என் பிரிய பக்தர்களே, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு கோயில் கொண்டிருந்தேன். ஞானிகளும், முனிவர்களும் என்னை வழிபட்டனர். பின்னர் மன்னர்கள் எனக்கு ஆலயம் அமைத்தனர். காலச்சுழற்சியில், இந்த பகுதி அழிந்துவிட, நான் பாதாளத்தில் வாழ்ந்தேன். வெளிப்படவேண்டிய நேரம் வந்ததால் நான் வெளிப்பட்டேன். எனக்கு ஆலயம் கட்டி என்னை வழிபடுங்கள். என் பிள்ளைகளான அனைத்து பக்தர்களையும் காப்பேன் என்றாள்.’’ அதன்படி, முதலில் கீற்றுக் கொட்டகை அமைத்து விக்கிரகத்தையும் ஸ்தாபித்தனர்.

பாதாளத்தில் இருந்து கிடைத்ததால் “பாதாள பொன்னியம்மன்” என்று பெயர் வைக்க முடிவு செய்தனர். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டனர். அன்று முதல் இந்த பொன்னியம்மன், பாதாள பொன்னியம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறாள். நூறு ஆண்டுகட்கு முன்பு, இந்த அம்மனின் உற்சவர் ஊர்வலம் போனால் ஆலயத்திற்கு திரும்பத் ஆறு மாதமாகுமாம். சென்னையைச் சுற்றியுள்ள சுமார் எழுபது கிராமங்களுக்கு இந்த அம்மன் வீதி உலா சென்றதாலேயே இத்தனை காலம் ஆகியதம். கோயிலைச் சுற்றி ஏழு திருக்குளங்கள் இருந்தனவாம். வீதி உலா செல்லும் அம்மன் தங்குவதற்கு வழிநெடுக அறுபத்தி நான்கு மண்டகப்படி இருந்தனவாம்.

அம்மனுக்கு அலங்காரமும் நைவேத்தியமும் அந்தந்த கிராம மக்களே செய்வார்கள். நேர்த்திக் கடன்களையும் செலுத்துவார்கள். சென்னையைச் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு இந்த பாதாள பொன்னியம்மனே குல தெய்வமாக விளங்கியிருக்கிறாள். இந்த ஆலயத்தில் அண்ணன்மார்களுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. முதலில் அவர்களுக்கு பூஜை செய்த பிறகே பாதாள பொன்னி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் கட்டப்பட்டன. அரசமர மேடை நாகர் சிலைகளும், நவகிரக சந்நதியும் கட்டப்பட்டன. கரு வறை கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் காட்சியளிக் கிறார்கள். மிகப்பெரிய நூற்றுக்கால் மகா மண்டபமும் உள்ளது. அம்மன் சிலை கிடைத்த விவரத்தை தூணில் படைப்புச் சிற்பமாக செதுக்கியுள்ளனர். பாதாள பொன்னியம்மன் கற்சிலை வெகு அபூர்வமானது. அம்மன் வலது கையில் சூலமும், இடது கையில் அன்னப் பாத்திரமும் ஏந்தியுள்ளாள். சாந்த சொரூபிணியாகத் திகழ்கிறாள்.

அம்மன் சிலை கிடைத்த இடம் சுற்றிலும் இப்போதும் பள்ளமாகத்தான் உள்ளது. ஆனால் அந்த காலத்திலேயே பொன்னியம்மனை சிறப்பான உயரத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் வெளியில் இருந்து பார்த்தாலும் அம்மன் சிலை அழகாக தெரியும். அம்பாளுக்கு தினமும் காலை ஒரு நேரம் மட்டுமே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஒரு கால பூஜையும் காலை 6.15 மணிக்கு தொடங்கி 6.45 மணி வரை சிறப்பாக நடத்தப்படுகிறது. நல்லெண்ணை, எலுமிச்சம் பழச்சாறு, இளநீர், சந்தனம், மஞ்சள் என்று பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

பிறகு அலங்காரம் செய்து ஆராதனை நடத்தப்படும். முன்பெல்லாம் அம்மனுக்கு பாவாடை அலங்காரமே செய்யப்பட்டது. ஆனால் இப்போது புடவையில் மிக அழகாக அலங்காரம் செய்கிறார்கள். அதுபோல் தினமும் மாலை சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. சிறப்பு நாட்களில் பாதாள பொன்னியம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்கிறார்கள். தற்போது ஆடிமாதம் தினமும் பாதாள பொன்னியம் மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்த ஆலயத்தில் ஆடி மாதம் பிரம்மோற்சவம் நடத் தப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி மாத பிரம்மோற்சவம் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. வருகிற 3-ந் தேதி வரை இந்த பிரம்மோற்சவம் நடத்தப்பட உள்ளது. இந்த 10 நாட்களும் பாதாள பொன்னியம் மனுக்கு 10 விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. 10-வது நாள் ஆடிப்பூரம் விழா நடத்தப்படுகிறது.

அன்று காலை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்யப்படும். 3-ந்தேதி மாலை அம்மன் தாய்வீடு சென்று வருவார். அப்போது அம்மன் வீதி உலாவும் நடைபெறும். பர்னபி ரோடு, ஆம்ஸ் ரோடு, பண்டார சந்து, வெள்ளாளர் தெரு, சரவண பெருமாள் தெரு வழியாக வந்து இறுதியில் அழகப்பா தெரு வழியாக அம்மன் ஆலயம் திரும்பி வருவாள்.

பாதாள பொன்னி அம்மனை சென்னையில் பல லட்சம் மக்கள் தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். இந்த ஆலயம் மிகச் சிறந்த பிரார்த்தனை தலமாக திகழ்கிறது. எல்லாவித பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வும், பரிகாரமும் கிடைக்கும்.

பக்தர்கள் மனம் உருகி வழிபட்டால் மிக எளிதாக பாதாள பொன்னியம்மன் அருளை பெற முடியும். 51 தடவை அல்லது 101 தடவை பாதாள பொன்னியம்மனை சுற்றி வந்து வழிபட்டு, கோரிக்கைகளை கூறினாலே போதும், அதை அவள் நிறைவேற்றி வைத்து விடுகிறாள். இது ஆண்டாண்டு காலமாக பக்தர்கள் அனுபவித்து வரும் நிதர்சனமான உண்மையாகும்.

இதுபற்றி ஆலய அர்ச்சகர் கே.ஜீவானந்தம் கூறுகையில், “பாதாள பொன்னியம்மனை வழிபட வருபவர்கள் நல்ல மனதுடன் வர வேண்டும். உங்கள் மனதை அவளிடம் ஒப்படைத்து விடுங்கள். நம்பிக்கையோடு அவளை வலம் வாருங்கள், நல்லதே நடக்கும்” என் றார். அவரை 7904631212 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பாதாள பொன்னி அம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவம்

சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள பாதாள பொன்னியம்மன் கோவிலில் ஆடிபிரமோற்சவ விழா நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு:-
ஆடி 14- (30.7.2019 செவ்வாய்க்கிழமை) யானை வாகனத்தில் வீதி உலா
ஆடி 15- (31.7.2019 புதன்கிழமை) தொட்டி
ஆடி 16- (1.8.2019 வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் வீதி உலா
ஆடி 17- (2.8.2019 வெள்ளிக்கிழமை) விமானம்
ஆடி 18- (3.8.2019 சனிக்கிழமை) சிம்ம வாகனத்தில் வீதி உலா
3.8.2019 அன்று காலை 9 மணிக்கு புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் புறப்பட்டு காலை 10 மணிக்கு பொன்னியம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெறும். 4.8.2019 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் அம்மனுக்கு கூழ்வார்க்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக